Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் ‘மாயப் புறா’ - ஓர் அன்பின் தொடர்கதை! #01

Published on 18/01/2022 | Edited on 20/01/2022

 

 

Maaya Pura - part 01

 


காலச்சக்கரம் இல்லாமலே நினைவுச் சக்கரத்தை சுற்ற விட்டு, 1985 ஆம் வருடத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன். வாருங்கள் வாசகர்களே. 


 ‘அலையென விரியும் நீர் போல்  நினைவுகளும்  வட்டப் பாதையில் சுழல்கிறது’

 
மெட்டுக்கட்ட இளையராஜாக்கள் இல்லாமலே, பறவைகள் பாடிய இசையைக் கேட்டபடியே, அந்த கிராமம் மாலை  வெயிலை போர்த்தியிருந்தது. அது பாரதிராஜா படங்களில் வருவது போன்ற அழகிய கிராமம்.  வீடுகள் எல்லாம் தோரணம் கட்டியது போல், வரிசைக் கட்டி நின்றன.  மூன்றாம் பிறைகளை ஒன்றின் மேல் ஒன்றாய்  அடுக்கியது போல், சிறு சிறு ஓடுகள் வேய்ந்த வீடுகள் கண்களை கவர்ந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே பூத்துக் குலுங்கிச் சிதறிய பவள மல்லியும், பாரிஜாதமும் விண்மீன் சிதறலாய் பளபளத்து, சாலையோரங்களில் கம்பளம் விரித்துத் தென்றலை வரவேற்றன. வீட்டு வாசல்கள் தோறும், சாணம் மெழுகிய மழமழ தரையில் கோலப் பூக்கள் மலர்ந்திருக்க, அவற்றை வண்டுகள் மொய்த்து ஏமாந்து பறந்துகொண்டிருந்தன. வாடிவாசல் திறந்தவுடன் சீறிப் பாய்வது போல,  மேய்ச்சலை முடித்து தண்ணீருக்கு  காத்திருந்த மாடுகள், தாகத்துடன் வீடு தேடிப் புழுதி பறக்க சீறிப் பாய, புழுதியில் விளையாடிய குழந்தைகள் அவற்றைப் பார்த்து, அலறி அடித்து வீட்டுக்குள் ஓடினர். இதை வீட்டுத் திண்ணையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஒரு மீசைக்கார பெருசு, "எவன்டா அவன்... காளையை கயிறு இல்லாம ஓட்டறது”ன்னு சத்தம் கொடுத்தார். 


"ஏ பெருசு, சும்மா கூவாத. காளைகள் பின்னாலேயே ஆளு வர்ரோம்ல்ல." என்று காளைகளுக்குச் சொந்தக்காரர் பதில் கொடுத்தார்.  அப்போது ஆற்றில் கலக்கும் கால்வாய் போல், ஒரு சந்திலிருந்து வாத்து கூட்டம் ஒன்று வெளிப்பட்டு, ‘குவாக்... குவாக்’ என்று கோரஸ் பாடியபடியே, பிரதான தெருவில் அன்ன நடை போட்டு அணிவகுத்தது. அவை தெரு நாயைக் கண்டு, மூலைக்கு ஒன்றாக பிரிந்து ஓட, வாத்துக்கு சொந்தக்காரி... அங்கிட்டும், இங்கிட்டும் வேகமாக ஓடி வாத்தை மடக்கி அணைகட்டிக் கொண்டிருந்தாள்.

 

இவ்வளவு களேபரத்துக்கும் நடுவில் "பீங்..பீங்.." என்ற  ஹாரன் சத்தத்தோடு அந்த அம்பாசிடர் வந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்துப் பெட்டி வண்டியை இரும்பால் செய்து நான்கு சக்கரங்கள் வைத்த மாதிரி அது பரிதாபமாகக் காட்சி தந்தது. எப்படியோ சாமர்த்தியமாக காளைகளுக்கும், வாத்துகளுக்கும் இடையில் காரை ஓட்டினார் டிரைவர். ஏற்கனவே இவர் கிராமத்தில் கட்டவண்டி ஓட்டியிருப்பாரோ என்று காருக்குள் இருந்த செல்வம் நினைத்தார். அவர்தான் காரின் சொந்தக்காரர். அவருடன் பின் இருக்கையில் அவருடைய திருமதியான தங்கமும் அமர்த்தலாக அமர்ந்திருந்தாள்.

 

உஜாலாவுக்கு மாறியிருந்த வேட்டியும், சட்டையும் செல்வத்துக்கு கம்பீரத்தைக் கொடுத்தது. சற்று பருத்த தேகம். அடர்ந்த மீசை. ஏர்க் கலப்பையில் உழுத நிலத்தின்கோடுகள் போல, முகத்தின் ரேகைகள் அவர் ஒரு நிலக்கிழார் என்பதைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தன.  வளைத்துப் போட்ட கொண்டையில், வளைத்து வைத்த மல்லிகைச் சரத்துடன், கல் வைத்த லட்டு கம்மல், எட்டுக் கல் பேசரி, மூக்குத்தி, இரட்டை வடம்  சங்கிலி என  தங்கம் தங்கமாய் பளபளவென்று ஜொலித்தார்.  உம்மென்று இருந்த தங்கம், மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்...

 

"வீட்டில் துணி ஊற வச்சிருக்கேன். காராமணி பய மாட்டுக்குத் தண்ணி காட்டுவானான்னு தெரியலை. இதுல என்னய வேற இழுத்துக்கிட்டு அலையறீங்க. உங்க தங்கச்சிக்கு நீங்க மட்டும் போய் பத்திரிக்கை வச்சா ஆகாதா? அப்படியே பாசமலர் சிவாஜியும்  சாவித்ரியும்  பாருங்க. ஒன்னுவிட்ட தங்கச்சி தானே? தபால்ல கூட பத்திரிக்கைய அனுப்பியிருக்கலாம். ஏகப்பட்ட வேலை கெடக்குது” என்று பக்கவாத்தியம் இல்லாமல் ராகம் பாடினாள். 30 வருடங்களாகக் கேட்கும்  பல்லவி என்பதால், செல்வத்தின் காதுகள், அலட்டிக்கொள்ளாமல் மெளத்தையே எதிரொலித்தது. 

 

தம்பதிகள், அவர்களின் மகன் சந்திரனின் திருமணத்திற்குப் பத்திரிக்கைக் கொடுப்பதற்காக மானூர் என்னும் அழகிய கிராமத்தை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தனர். போகும் போதே பக்கத்து டவுனில் சில பர்சேஸிங்கையும் முடித்துக்கொண்டு, மானூரை  நெருங்கும் போது, பொழுது சாயத் தொடங்கியிருந்தது. மானூரில்தான் செல்வத்தின் தங்கை அலமேலு வீடு இருக்கிறது. கிராமத்துப் புழுதி, சாம்பிராணி போட அதையெல்லாம் அனாயசமாகக் கடந்து கார் போய்க்கொண்டே இருந்தது. மானூர் என்ற பெயரை, ஊர் எல்லையில் சுமந்து நின்ற கல் பலகையைப் பார்த்ததும் கார் நிதானித்தது.  “ஏம்மா, வெத்தல பாக்கு பழமெல்லாம் எடுத்து வச்சிருகீல்ல?” என்று உஷாராகக் கேட்டுக்கொண்டார் செல்வம். “ம்” 

 

அந்த திண்ணை வைத்த ஓட்டு வீட்டி முன் கார் நின்றது. வீடு மெளனத் தவம் பூண்டிருந்தது. கார் சத்தம் கேட்டதும் எதிர் வீட்டு சன்னல் திறந்து, ஆர்வமாக கவனித்தது.  வீட்டு வாசலில் யாரும் இல்லை. ஆனால் கதவு திறந்தே இருந்தது. படியேறிச் சென்ற செல்வம்... கதவருகே சென்று "அலமேலு... அலமேலு...அம்மாடி... " என்று குரல் கொடுத்தார். 


 
செல்வத்தின் குரலே எக்கோ அடித்ததே தவிர பதில் குரல் வரவில்லை. வேறு வழியில்லாமல் செல்வமும் தங்கமும் தெருத் திண்ணையைத் தாண்டி உள்ளே சென்றனர். வீடு அழகாக சுதமாக இருந்தது. கொல்லைப்புறக் கதவும் திறந்திருப்பது தெரிந்தது. "பூங்கதவே, தாழ் திறவாய்"... என்ற பாடல் மெலிதாக அவர்களை  வரவேற்றது.

 

“இதென்னடி இது வாசலையும் கொல்லைக் கதவையும் திறந்து போட்டுட்டு... கொஞ்சம் கூட பயமில்லாம” என சந்தடி சாக்கில் முனகினாள் தங்கம்.

 

“தே.. சும்மா இரு” என்ற செல்வம் மீண்டும் உரத்த குரலில்... "அலமேலு.... அலமேலு“..என்று அழைத்தார்.

 

கொல்லைப்புறத்தில் டிரான்ஸ் சிஸ்டருடன் பாட்டுக் கேட்டுக் கொண்டே பால் கறந்து கொண்டிருந்த சங்கவி சுதாரித்தாள். சங்கவியின் காதுகளில் லேசாக இவர்கள் அழைத்தது விழுந்தது. அந்தப் பசு பால் கொடுக்கிறதோ இல்லையோ தலையாட்டி பாட்டை ரசித்துக் கொண்டிருந்தது. "யாரது" பதில் குரல் கொடுத்துவிட்டு "பூங்கதவின் தாழ்திறக்க ஆரம்பித்துவிட்டாள்" சங்கவி. 


 
"சங்கவி... செல்வம் மாமா வந்திருக்கேன் மா"- என்று புனல் கட்டாத குறையாய் செல்வம் குரல் உயர்த்த...


 
"வாங்க மாமா, வாங்க அத்தை" என்று ஆரவாரமாய் வரவேற்றபடி கன்றுக்குட்டியாய் துள்ளிக் குதித்து வந்தாள் சங்கவி. அவர்களைப் பார்த்த பூரிப்பில் முதலில் கைகால் ஓடவில்லை. பிறகு ஓடிப்போய் குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள். மிக நீண்ட  நாட்களுக்குப் பிறகு இப்போது தான் சங்கவியைப் பாரக்கிறாள் அத்தை. நீல நிறத்தில் பூப் போட்ட  டி.சி.பாவாடை. சிவப்பு நிற  ஜாக்கெட், மஞ்சள் நிறத் தாவணி, நீண்ட கூந்தலில் ஊஞ்சலாடிய மஞ்சள் கனகாம்பரப் பூ, காதில் லேசாக ஆடிய ஜிமிக்கி, ஒற்றைக் கல் மூக்குத்தி, தூக்கிச் சொருகிய பாவாடை என்று ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் முந்தானை முடிச்சி ஊர்வசி போலிருந்தாள். அவள் அழகை தங்கம் ரசித்துப்பார்த்தாள். அவள் பார்வை கண்டு நாணிய சங்கவி "அம்மாவும், அப்பாவும் தோட்டத்துல வெண்டைக்காய் பறிக்கப் போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க" என்று மெதுவாகச் சொன்னாள். 


 
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சங்கவியின் அப்பா பெருமாளும், அம்மா அலுமேலுவும் வந்துவிட்டார்கள். அண்ணனைப் பார்த்ததும் அலுமேலுவின் வாய் இரண்டு இன்ச் நீண்டது. "வாங்கண்ணா, வாங்க அண்ணி” என வாஞ்சையாய் வரவேற்றாள், “நல்லாயிருக்கீங்களா அண்ணி"என அலமேலு  படபடவென விசாரித்தாள்.

 

"என்னத்தை நல்லாயிருக்கிறது. கை, காலெல்லாம் வலி உயிர் போகுது. காடு, கழனின்னு ஒரே அலைச்சல்.  இதுல கல்யாண வேலையும் பார்க்கனும், வீட்டு வேலையும் பார்க்கனும்னா... ஒண்டி பொம்பளை என்ன பண்ணுவேன். இந்தக் கூறு கெட்ட மனுசனுக்கு புரியமாட்டேங்குது” என்று எப்படா வாய்ப்பு கிடைக்கும் என்று இராமாயணத்தை ஆரம்பித்தாள் தங்கம்.


 
“நல்லா இருக்கீங்க மப்ள?” என பெருமாள் மகிழ்வோடு செல்வத்தை விசாரித்தார். 

 

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே வறுத்து அரைத்த காபி கொட்டையின் மணத்துடன் பில்டர் காபி சில்வர் டம்ளரில் அனைவரின் கரங்களிலும் நுரைத்துத் ததும்பியது. “பரவாயில்லையே, இவ்வளவு சீக்கிரம் காபி போட்டுட்டியே” என்று தங்கம் பாராட்டினார். 


 
வெற்றிலைப் பாக்கு வைத்து பத்திரிக்கை கொடுத்துவிட்டு செல்வமும் தங்கமும் கனகா குடும்பத்தினரை வரச்சொல்லி அழைத்தனர். "ஏம்மா... அலமேலு அண்ணிக்குத்தான் மேலுக்கு முடியலையே, கல்யாண வேலைக்கு ஒரு பத்து நாள் முன்னாடியே வந்திருந்து ஒத்தாசை பண்ணுமா” என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் செல்வம். 

 

"அதுக்கென்ன வெண்டைக்காய் அறுவடை முடிந்ததும் வரேன்"என்று பெருமாளைப் பார்த்துக்கொண்டே சொன்னாள் அலமேலு.

 

அலமேலுவின்  குறிப்பை புரிந்து கொண்ட  செல்வம் "மாப்பிள்ளை, தங்கச்சியை அனுப்பி வைங்க"என்று உரிமையுடன் சொன்னார்.

 

"மச்சான் தாராளமாக  அழைச்சிட்டுப் போங்க, நானாவது நிம்மதியா இருப்பேன்" என்று கிண்டலாக சொன்னார் பெருமாள். 

 

"சரி, போற வழியில் இன்னும் சிலருக்கு பத்திரிகை வைக்கனும்.  நாள் குறைவா இருக்கு. நாங்க கிளம்பறோம்” என்று கிளம்பினார் செல்வம். அலமேலு சாப்பிட்டுப் போகச் சொல்லி கட்டாயப்படுத்தியும், வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட்டனர்.

 
 
வாசல் வரை சென்ற தங்கம், "வரும் போது சங்கவியையும் அழைச்சிட்டு வா." என்று  அலமேலுவிடம் அழுத்திச் சொன்னாள். அவர்கள்  கிளம்பியதும்  சம்மணம்  போட்டு  அமர்ந்து கொண்டு, லாந்தர் , பெரிய விளக்கு, சின்ன விளக்கு என்று எல்லா விளக்கின் சிமினிகளையும் கோலமாவு போட்டு துடைத்துக் கொண்டிருந்தாள் சங்கவி. கொல்லைபுறம் போய் கைகால்களை அலம்பி வந்த அலமேலு,  தன் அண்ணன் பெருமையை "டமாரம்" அடிக்க ஆரம்பித்தாள் அலமேலு. "அம்மா... நானும் கல்யாணத்துக்கு வரனுமா?" என்று தயக்கத்துடன் கேட்டாள் சங்கவி.


  
"ஆமாம். போய்த்தானே ஆகனும்.  கல்யாண வீட்ல கூட மாட நாம நிக்கவேணாமா? அதுவும் இல்லாம ’விளஞ்ச கதிரு’ அறுவடையாகனுமே’ என்று சங்கவிக்குப் புரிகிற மாதிரியும் புரியாத மாதிரியும் சொன்னாள் அலமேலு. திருமணம் நெருங்கிவிட்ட நிலையில், வாங்கி வைத்த சீர் செனத்தி சாமன்களுடன் தங்கம் வீட்டிற்கு சங்கவி சகிதம் அலமேலுவும் பெருமாளும் பயணப்பட்டனர்.  இந்தப் பயணம் அவர்கள் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றுவிடப் போகிறது என்பதை அறியாமல். 

 

( சிறகுகள் அசையும் )

 


 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)