Skip to main content

ஒரு நைட்டு... ஒருத்தருக்கு வந்த கனவு... இன்னைக்கு உலகமே மாறிப்போச்சு! லேரி பேஜ் | வென்றோர் சொல் #14

Published on 26/08/2020 | Edited on 21/01/2021

 

Larry page

 

இரவு உறங்கும் போது அனைவரும் கனவு காண்பதென்பது மனித இயல்புகளுள் ஒன்று. அந்தக் கனவால் அதிகபட்சமாக என்ன செய்ய முடியும்? நல்ல கனவாக இருந்தால் நாள் முழுக்க நம்மை உற்சாகமாக வைத்திருக்க முடியும். விரும்பத்தகாத கொடுங்கனவாக இருந்தால் அன்றைய பொழுது முழுவதும் நம்மை வருத்தத்தில் வைத்திருக்க முடியும். ஆனால் ஒரு மனிதன் கண்ட கனவு இவ்வுலகத்தின் இயங்கியலையே மாற்றியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா???. அது 'கூகுள் நிறுவனர் லேரி பேஜ்' கண்ட கனவுதான். உலக சாதனையாளர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்னவென்று கேட்டால் எனக்குள் இருந்த தேடல் என்பார்கள். உலக மக்களுக்கு இந்தத் தேடலையே இன்று எளிமையாக்கிக் கொடுத்தவர் லேரி பேஜ். இதுவரை உலக வரலாறானது கி.மு, கி.பி என எழுதப்பட்டு வருகிறது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட இருக்கின்ற மாற்றத்தின் விளைவையடுத்து, உலக வரலாறு இனி கூ.மு, கூ.பி (கூகுளுக்குமுன், கூகுளுக்குபின்) என எழுதப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

அமெரிக்காவில் ஓரளவிற்கு பொருளாதார வளமிக்க குடும்பத்தில் பிறந்தவர் லேரி பேஜ். தாய், தந்தை இருவருமே கல்லூரிகளில் கணினித்துறையில் வேலை பார்த்ததால் கணினிகள் குறித்த அறிவும், அவற்றைக் கையாளும் திறமையும் மிக இளம் வயதிலேயே அவருக்கு வாய்க்கப்பெற்றது. பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பை முடித்து கணினி அறிவியலில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபடுகிறார். இணையம் மற்றும் அதன் லிங்க் சார்ந்த விஷயங்களில் ஆராய்ச்சி மேற்கொள்கிறார். அந்த ஆராய்ச்சியில் அவருடன் பணியாற்றிய 'செர்ஜி பின்னுடன்' இணைந்துதான் பின்னாட்களில் கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது. 

 

"ஒரு நாள் இரவு எனக்கு ஒரு கனவு வந்தது. அது சற்று வினோதமானது. அதில் மொத்த இணையதளத் தரவுகளையும் என் வீட்டில் இருந்த சிறிய கணினியில் பதிவிறக்கம் செய்வதுபோல் இருந்தது. உடனே எழுந்து அது குறித்து யோசித்தேன். அதைச் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றியது. இணைய பக்கங்களின் லிங்க்-குகளை சேகரிக்க ஆரம்பித்தேன். என்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சி இது குறித்தானதுதான். ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி தேடும் போது அது ஆயிரம் லிங்க்-குகளில் உள்ளது. ஆனால் மக்களால் வெறும் 10 லிங்க்-குகளை மட்டும்தான் பார்க்க முடியும். வெறுமனே லிங்க்-குகளை சேகரிப்பதை விட அதைத் தரவரிசைப்படுத்தினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. அந்த சமயத்தில் நிறைய தேடுபொறிகள் இருந்தன. அவைகளை விட சிறந்தவொன்றை உருவாக்கலாம் என்று நானும், என் நண்பனும் முடிவெடுத்தோம். அதைத்தான் இன்று உலகம் 'கூகுள்' என்ற பெயரில் பயன்படுத்துகிறது....." 

 

தற்போதைய காலகட்டத்தில் கூகுள் ஒரு நாள் முடங்குகிறது என்றால் உலகின் இயல்பு வாழ்க்கை இரண்டு நாள் முடங்கிவிடும். இது மிகைப்படுத்தப்பட்ட வரி அல்ல. காலை எழுவதிலிருந்து இரவு உறங்குவது வரை இணையம் சார்ந்த நம் அனைத்துச் செயல்பாடுகளிலும் கூகுள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டிருக்கும். ஜிமெயில், டிரைவ், மீட், ட்ரான்ஸ்லேட்டர், சாட், டுயோ, ஜிபே, யூ-டுயுப் உட்பட பலவற்றை இவ்வரிசையில் அடுக்கிக்கொண்டே போகலாம். உங்கள் தாய்மொழி மட்டும் தெரிந்தாலே இன்று உலகில் 109 மொழிகள் பேசக்கூடிய மக்களுடன் நீங்கள் உரையாடலாம் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய வரலாற்று மாற்றம்? இப்போது கூறுங்கள்... லேரி பேஜ் கண்ட கனவு உலகின் இயங்கியலை எவ்வளவு மாற்றியிருக்கிறதென்று!!!

 

லேரி பேஜ் தன்னுடைய வெற்றியின் ரகசியம் குறித்து பேசும் போது, "எனக்கு 12 வயதாக இருக்கும் போது நிக்கோலா டெஸ்லாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தைப் படித்தேன். படித்து முடித்தவுடன் இவ்வளவு பெரிய ஆராய்ச்சியாளன் எப்படி வாழ்க்கையில் தோற்றுப்போனான் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அன்று அவருக்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். அவற்றுள் முக்கியமானது தன்னுடைய கண்டுபிடிப்புகளை மக்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்காதது என்பதுதான். இது கற்றுக்கொடுத்த பாடம் எனக்கு இன்று வரை உதவுகிறது....." என்கிறார்.

 

http://onelink.to/nknapp

 

ஒரு தகவல் வேண்டுமென்றால் நூலகம் நூலகமாக, ஆவணக்காப்பகம் காப்பகமாக, அறிஞர்கள் வீட்டு வாசல் வாசலாக அலைந்து பெற்ற காலம் மாறி, விரல் சொடுக்கிடும் நேரத்தில் எந்தவொரு தகவலையும் உலகின் எந்தவொரு மூலையிலும் இருந்து பெற்றுவிட முடியுமென்றால் இந்நூற்றாண்டு நமக்கு எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்!!! கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்.....!

 

”இது எங்க விளையாட்டு, நீ ஏன் விளையாடுற?” - கேட்டவர்கள் முகத்தில் விழுந்த குத்து! மேரி கோம் | வென்றோர் சொல் #18

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.