Skip to main content

என் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி! - ஆட்டோ சங்கர் #21 

Published on 27/10/2018 | Edited on 17/11/2018
auto sankar 21



"இப்ப ரவி எங்கே?''

"எனக்கு கடுப்பாப் பூடுச்சு! கத்தியாலே சதக் சதக்னு ரெண்டு குத்து! ஆள் அவுட்''

குடல் உடம்புக்கு வெளியே சரிந்துகிடக்க பரிதாபமாய் செத்துப் போயிருந்தான் ரவி. பிணத்தை எரிக்கலாம் என்றால் மறுநாள் பாரத் பந்த் (இலங்கைத் தமிழருக்காக). வழி எங்கும் போலீஸ் மயம்! காரை மடக்கி செக் செய்வார்களே என்று பயம். விபச்சாரப் பெண்கள் தங்கி இருந்த   வீட்டின் பின்புற பாத்ரூம் ஓரத்தில் ஆழக் குழிதோண்டி அம்மணமாக புதைத்தார்கள். நடமாட முடியாத நிலைமையில் இருந்ததால் சங்கர்   மேற்பார்வை மட்டும்!

பின்னால் போலீஸ் புகாரில் ரவியின் கழுத்தை மோகன் இறுக்கினதாகவும், பாபு ரவி நெஞ்சில் ஏறி அமர, ரவியின் வயிற்றில் எனது வலது காலால்   எட்டி உதைத்தேன் என்றும் ஜோடிக்கப்பட்டது.

வலதுகால் உடைந்து பேண்டேஜ் சுற்றிக் கொண்டிருந்தவர் நடமாடுவதே ஏதோ, அடுத்தவர் ஒத்தாசையில்! எட்டி உதைப்பது எங்ஙனம் சாத்தியம்? துடித்துப்போன நான் அந்த சமயத்தில் சிகிச்சை பெற்றதை கோர்ட்டில் சொல்ல வரும்படி டாக்டரிடம் கெஞ்சினேன். ஆனால் டாக்டர் சந்திரன் வரமறுத்தார். பயப்படாதே! பயப்படாதே! என்று திரும்பத் திரும்ப தன் பேஷண்டுக்கு சொல்லிவிட்டு அவர் பயந்து நடுங்கினார்.

நான் பங்கு பெறாத அந்தக் கொலையும் என்னை கொல்வதில் பங்குபெறப் போகிறது! 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அப்போது எனக்கு சகட யோகம்! பின்னால் சங்கடம் மட்டுமே யோகமாக வரப்போகிறது என்று கண்டேனா? ஆடித்தீர்த்தேன்! பக்கபலமாகப் பெண் எம்.எல்.ஏ. ரத்தத்தின் ரத்தமாக இருந்தது பேரதிர்ஷ்டமாகப் போயிற்று. சாராயம், தோராயமாக   திருவான்மியூரை நாறடித்தது என்றால், மிச்சம் மீதி இருந்த பரிசுத்தத்தை விபச்சாரம் வேரோடு களைந்து எடுத்தது. இந்த ரெண்டு   வழிகளில் ஏரியா எக்கச்சக்கமாகக் கெட்டது போதாதென்று மேலும் கொஞ்சம் கெடுப்பதற்காகவே முளைத்ததோ அந்த வீடியோ 'கேம்ஸ்' கடை!?

 

auto sankar lady 21



அந்த (சாக்)கடை நான் துவங்கினது அல்ல. ஒரு பெண்மணி! கௌரவமான பெண்மணி. அவரை ஜனங்களுக்கு அதிகமாகத்   தெரியாது. அவர் கணவரை? மிஸ்டர் மில்க் அவர்! போலீசில் ரொம்ப மற்றும் ரொம்ப உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார். இப்போதும்தான்! கணவரது பேச்சுக்கு எதிராய் ஒரு வீடியோ கேம்ஸ் கடையை அந்த அம்மையாரே நடத்தினார்!

திருவான்மியூரில் வயசுக்கு வந்த ஆடவர்களில் அநேகம் பேர், ஒன்று அந்த வீடியோ கேம்ஸில் இருந்தனர். அல்லது எனது வீ.டி. கேம்ஸில்! பூட்சுக்குள் சிக்கின மண் துகள் மாதிரி என்னை அந்த வீடியோ கடை உறுத்திக் கொண்டே இருந்தது. கடை   கூட  அல்ல. அந்த முதலாளி பெண்மணியும்தான்.

எப்படியாவது அந்த அம்மையாரின் நட்பு கிடைத்தால் தேவலையே என எல்லா எண்ணங்களிலும் விரும்பினேன். என்னதான் சாராயத்திலும், விபச்சாரத்திலும் லாபம் எக்குத்தப்பாகவும், தப்புப் தப்பாகவும் குவிந்து கொண்டிருந்தது என்றாலும்,   வெளியே யாராவது கேட்டால் கௌரவமாக சொல்லிக் கொள்ளமுடியாத தொழிலாக இருக்கிறதே என்ற சங்கடம் எப்போதும் உண்டு. எப்படியாவது செல்வாக்கு பெற்று ஒரு எம்.எல்.ஏ. ஆகிவிட வேண்டும் என்று மனசு துடித்தது. என்றைக்காவது ஒரு நாள், சட்டமன்றத்துக்குள் நுழைந்தே தீருவேன் என்று மற்றவர்களிடம் அடிக்கடி மந்திரம் ஜபித்தேன்!

 

bookstore ad



தேர்தலுக்குள் நுழையுமுன் அரசியல் மட்டத்திலும் அதிகார மட்டத்திலும் சகலரின் சிநேகமும் சம்பாதிக்க வேண்டும் என்பது   குறிக்கோளாக இருந்தது. அந்த நட்புக்காக உ.பொ.ஆ. அர்ப்பணிக்கவும் தயாராக இருந்தேன். நீக்கப்பட்ட தெலுங்கு தேச கட்சியின் பெண் எம்.பி. ஒருவரது பெயரை, தன் பெயரின் முன்பகுதியாகக் கொண்டவர் அந்த அம்மையார்.

பெயரின் பின் பாதியில் தேவி உண்டு! அதென்னவோ எனக்கும் தேவி என்ற பெயருக்கும் அவ்வளவு ராசி; அப்புறமாய் அதைப்   பார்ப்போம். முதலில் அந்த அம்மையார்! படகு சைஸ் காரில் அவர்கள் இறங்கி வருகிற தோரணையும், சரக போலீஸ்காரர்கள்   காண்பிக்கிற பயபக்தியும் பார்த்துப் பார்த்து ஆவல் பொங்கிற்று எனக்கு.

அந்த அம்மையார் சிநேகம் பெற வேண்டுமே, எப்படி? இந்த "எப்படி' என்ற வார்த்தை மாம்பழத்து வண்டாக மனசைக் குடைந்தது. தம்பி மோகன் சொன்னான் "அண்ணா...! நமக்குதான் அந்த பெண் எம்.எல்.ஏ. செல்வாக்கு இருக்குதே...! போட்டிக்கு நாமும் ஒரு கடை போடுவோம்... இவங்க கடையை ஆளுங்களை வச்சு அடிச்சு நொறுக்குவோம்!''

"சேச்சே...''

"எனக்குத் தேவை அவங்களோட கடை இல்லை... அவங்கதான்!''

அப்புறம் ஒரு நாள், பதட்டத்துடன் ஓடிவந்தான் மோகன்... ஓடிவந்ததில் மூச்சு வாங்கினது. கண், காது, மூக்கு என எல்லாவற்றிலும் காற்றை வெளியே விடுவான் போலிருந்தது.

"அண்ணே... விஷயம் தெரியுமா? அந்த வீடியோ கடையிலே யாரோ நாலைஞ்சு பேர் புகுந்து அடிச்சு நொறுக்கறாங்களாம்!''

சட்டென சுறுசுறுப்பு என்னுள் சவாரி செய்தது.
 

"சீக்கிரம் வண்டி எடு''  

 அடுத்த பகுதி:

அதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி! - ஆட்டோ சங்கர் #22 

முந்தைய பகுதி:

ஆஸ்பத்திரியில் ஆட்டோ சங்கர்! - ஆட்டோ சங்கர் #20 


 

 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

இருவரின் பகை; நடுங்க வைத்த 17 கொலைகள்! 

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

madurai rowdyism in 20 years

 

செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி வெள்ளைக்காளி தாயார் ஜெயக்கொடி, மனைவி திவ்யா ஆகிய இருவரும் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெயக்கொடியும், திவ்யாவும், காவல் துறையினர் வெள்ளைக்காளியை பொய்ப் புகார் கூறி என்கவுண்டர் செய்யத் திட்டமிடுகிறார்கள். மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்படி அழைத்துச்செல்லும்போது தப்ப முயன்றதாகக் கூறி போலீசார் என்கவுண்டர் செய்யவிருப்பதாகக் கூறினார்கள். அத்தோடு அவரைக் காப்பாற்ற வேண்டுமென நீதிமன்றத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.

 

இவர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு 15 நாட்களுக்குப் முன் (செப்.4) பெங்களுரிலுள்ள கம்மனஹள்ளி சுக்சாகர் ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த வி.கே.குருசாமி என்பவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த வி.கே. குருசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளைக்காளியின் குடும்பத்தினர் திருச்சியில் பேட்டி கொடுக்கும்வரை தீவிர சிகிச்சையில்தான் இருந்தார் குருசாமி.

 

யார் இந்த வெள்ளைக்காளி, வி.கே. குருசாமி? இவர்களுக்குள் என்ன பகை?


காவல்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே குருசாமியும், ராஜபாண்டியும். பிழைப்புக்காக மதுரை வந்தவர்கள். மதுரையிலேயே செட்டிலாகி விட்டார்கள். வி.கே.குருசாமி தி.மு.க.வில் சேர்ந்து மதுரை மாநகராட்சி மண்டல தலைவராகவும், ராஜபாண்டி அ.தி.மு.க.வில் சேர்ந்து மாநகராட்சி மண்டல தலைவராகவும் உயர்ந்தார்.

 

madurai rowdyism in 20 years
வி.கே. குருசாமி

 

கடந்த 2003-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபாண்டி ஆதரவாளரான சின்னமுனுசாமி என்பவர் வி.கே.குருசாமிக்கு பெரும் குடைச்சலாக இருந்துள்ளார். எனவே கீரைத்துறையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பிரச்சனை பண்ணி, அதைப் பெரிதாக்கி சின்னமுனுசாமியை அக்டோபர் 30-ஆம் தேதி வி.கே,குருசாமியும் அவருடைய ஆட்களான பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமுர்த்தி, வழுக்கை முனுசு, கணுக்கண் முனியசாமி ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், சின்ன முனுசாமியின் தம்பி காளீஸ்வரன் என்ற வெள்ளைக்காளி, தன் அண்ணனைக் கொன்ற வி.கே.குருசாமியின் குடும்பத்தையே கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இதற்கிடையில் வி.கே.குருசாமி ஆதரவாளரான வழுக்கை முனுசை, ராஜபாண்டி ஆதரவாளரான சப்பாணி முருகன் கொலை செய்கிறார்.

 

madurai rowdyism in 20 years
ராஜபாண்டி

 

இதற்கடுத்து இருதரப்பிலும் மாறி மாறி கொலைகள் நடந்தன. 2008-ஆம் ஆண்டு, வி.கே குருசாமி தரப்பில் மாரிமுத்து, ராமமூர்த்தி, 2013-ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியைக் கொன்றனர்.

 

2015-ஆம் ஆண்டு ராஜபாண்டி ஆதரவாளரான மொட்டை மாரியை குருசாமி தரப்பினர் போட்டுத்தள்ளினார்கள். 2016-ல் வி.கே.குருசாமியின் மருமகன் காட்டுராஜாவை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் வெட்டிக் கொலைசெய்தனர்.

 

2017-ல் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜபாண்டியின் மகன் தொப்பி என்ற முனியசாமியை சாம்பலே கிடைக்காதவாறு எரித்துக்கொன்றனர். அதைத் தொடர்ந்து வி.கே.குருசாமி ஆதரவாளரான சடையாண்டியை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் கொலைசெய்தனர். இந்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு மதுரை சிக்கந்தர்சாவடியில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீசார் சுட்டுக் கொலைசெய்தனர். இதில் வெள்ளைக்காளி தப்பிவிட்டார். வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் வி.கே.குருசாமி வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தையே கொலை செய்ய முயல, வீட்டைப் பூட்டி போலீசாருக்கு தகவல் சொல்ல, போலீசார் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடிகளை வெளியேற்றி சிலரை கைதும் செய்தனர்.

 

madurai rowdyism in 20 years
வெள்ளைக்காளி

 

குருசாமி மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் வெளியேவந்த குருசாமியும் மகன் மணிகண்டனும் ராஜபாண்டி தரப்பை எதிர்க்க ஆளில்லாததால் சென்னை, பெங்களூரு என்று தலைமறைவாக வாழத்தொடங்கினார்கள்.

 

பல்வேறு வழக்குகள் இருப்பதால் அதில் ஆஜராவதற்கு அடிக்கடி மதுரை வரும் குருசாமி, வழக்கம்போல் கடந்த செப்.2-ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி, 3-ஆம் தேதி மதுரையிலிருந்து விமானம் மூலமாக பெங்களூரு சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாள்தான் அவரை இரண்டு காரில் பின்தொடர்ந்த ராஜபாண்டி தரப்பினர் பெங்களுரில் வைத்து கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணம் வெள்ளைக்காளியும் அவருடைய கூட்டாளிகளும்தான் என்று சொல்லப்படுகிறது.

 

கடந்த 20 ஆண்டுகளில் குருசாமி தரப்பில் 10 பேரும், ராஜபாண்டி தரப்பில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜ பாண்டி இறந்துவிட்டார். இதனால், குருசாமியை பழி வாங்கும் பணியை தற்போது புழல் சிறையிலுள்ள வெள்ளைக்காளி முன்னெடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வெள்ளைக்காளியை என்கவுன்ட்டரில் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவரது தாயும் மனைவியும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துவருகின்றனர். அதன் ஒரு அம்சமாகத்தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஆகியவை நடந்தன.

 

"வருடக்கணக்கில் தொடரும் பழிக்குப் பழி தொடர் கொலைகளின் பின்னணியில் யார் இருப்பது என்று பார்த்து, அந்தக் கும்பலை சிறையில் தள்ள வேண்டும், அமைதி திரும்ப வேண்டும்' என்கிறார்கள் மதுரைவாசிகள்.