Skip to main content

அழகும் வசதியும் நிறைந்த மாப்பிள்ளை; மறுப்பு தெரிவித்த பெண் - டிடெக்டிவ் யாஸ்மின் புலனாய்வு: 15

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

 lady-detective-yasmin-case-explanation-15

 

விசித்திரமான ஒரு வழக்கு குறித்து நம்மோடு துப்பறிவாளர் யாஸ்மின் பகிர்ந்துகொள்கிறார்

 

ஒரு பெண் எங்களிடம் வந்து கேஸ் கொடுத்தார். அவருடைய குடும்பம் நல்ல வசதி படைத்தது. அவருடைய கணவரின் தொழிலை மகன் கவனித்து வந்தான். அவருடைய மகன் மிகவும் அழகாக இருப்பான். அவன் தனக்கு சுமாரான தோற்றம் கொண்ட பெண்ணே வேண்டும் என்று அடம்பிடித்ததால் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையே அவனுக்கு பார்த்தனர். அந்தப் பெண்ணுக்கு வசதி, படிப்பு என்று அனைத்தும் குறைவுதான். ஆனால் நிச்சயம் செய்யும் சமயத்தில் பெண் வீட்டார் இந்தத் திருமணம் வேண்டாம் என்று கூறினர். அவர்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. 

 

அதற்கு முன் தங்களுடைய மகனுக்கு உயர்ந்த செல்வாக்கு பெற்ற குடும்பத்தில் திருமணம் செய்து வைத்து, அது சரியாக வராததால் மீண்டும் அதுபோன்று திருமணம் செய்துவைக்க அவருடைய குடும்பத்தினர் அஞ்சினர். எதனால் பெண்ணின் குடும்பத்தினர் திருமணம் வேண்டாம் என்று கூறினர் என்று பையனின் குடும்பத்தினர் தெரிந்துகொள்ள விரும்பினர். பெண்ணின் குடும்பம் மிகவும் சாதாரணமான ஒரு குடும்பம். அவருடைய பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர். பெண்ணுக்கு எக்ஸ்போர்ட் கம்பெனியில் மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஆனால் அவர் நல்ல பெண்ணாக இருந்தார். இவர்கள் ஏன் இந்த சம்பந்தத்தை நிராகரிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம்.

 

அவருடைய கம்பெனிக்கு இயல்பாகச் செல்வது போல் சென்று அந்தப் பெண்ணிடம் பேசினேன். தனக்கு வந்த வரனில் தனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறினார். "அந்தப் பையனுக்கு இது இரண்டாவது திருமணம். அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் பணக்காரப் பெண் தங்களுக்கு ஒத்துவராததால், என்னைப் போன்ற சாதாரண பெண்ணைத் திருமணம் செய்து வைத்தால் அனைத்திலும் அடங்கி இருப்பேன் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட திருமணம் எனக்கு வேண்டாம். என்னை விரும்பி, புரிந்துகொண்டு செய்யப்படும் திருமணமே எனக்கு வேண்டும்" என்று அந்தப் பெண் கூறினார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது.

 

இந்த விஷயங்களை பையனின் குடும்பத்தினரிடம் சொன்னேன். "பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பது எனக்குத் தெரியும். வசதியில்லாதவர்கள் எனக்கு அடங்கிப் போவார்கள் என்று நினைத்தது என்னுடைய தவறுதான். ஆனால் அவரை அடக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நல்ல வாழ்க்கைத் துணை வேண்டும் என்பதுதான் என்னுடைய தேவை" என்று அந்தப் பையன் கூறினார். அவர் மீதும் எனக்கு மரியாதையே ஏற்பட்டது. இரண்டு பக்கமுமே நியாயம் இருப்பதுபோல் தோன்றியது. மீண்டும் அந்தப் பெண்ணிடம் நான் பேசினேன். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

 

 

 

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.