Skip to main content

கொரியா இணைப்பை நோக்கிய இறுதி முயற்சி! கொரியாவின் கதை 22

Published on 17/11/2018 | Edited on 27/11/2018
koreavin kathai

 

தென்கொரியாவின் 19 ஆவது ஜனாதிபதியான மூன் ஜாயே-இன் 1953 ஆம் ஆண்டு பிறந்தவர். தென்கொரியாவில் உள்ள கொரியா இணைப்பு மனநிலையைப் புரிந்துகொண்டவர்.

 

தென்கொரியா தேர்தல்களில் கொரியா இணைப்பை விரும்பும் 40 சதவீதத்திற்கு அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள்தான் வெற்றிபெறும் வாய்ப்பை பெறுவார்கள். முந்தைய சர்வாதிகார அரசுகள் அனைத்தும், மக்கள் ஆதரவை முழுமையாக பெறமுடியாதவை. அதற்காகவே தேர்தல்களில் மோசடியை கையாண்டவை.

 

1998 ஆம் ஆண்டு ஜனாதிபதியான கிம் டாயே-ஜங் தென்கொரியா மக்களின் விருப்பதை உணர்ந்து வடகொரியாவுடன் இணைக்கமான உறவை விரும்பி அதற்காகவே சன்ஷைன் கொள்கையை உருவாக்கினார். தென்கொரியா உருவான பிறகு வடகொரியா சென்ற முதல் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்றார்.

 

இரண்டு கொரியாக்களுக்கும் இடையில் நிலவிய பதற்றத்தை முதன்முதலில் தணித்து சுமுகமான இணைப்பு முயற்சிக்கு தொடக்கப்புள்ளியை வைத்தவர் கிம். அவரைத் தொடர்ந்து ரோஹ் மூ-ஹ்யுன் ஜனாதிபதி ஆனபோதும் அதே அணுகுமுறையைக் கையாண்டார். இரு நாட்டு எல்லையைத் தாண்டி நடைபயணம் மேற்கொண்ட முதல் ஜனாதிபதியானார். மக்கள் சந்திப்புக்கும் வழி ஏற்படுத்தினார். வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் அடக்குமுறைகளை முதன்முதலில் பகிரங்கமாக எதிர்த்த ஜனாதிபதியாகவும் ரோஹ் இருந்தார்.

 

koreavin kathai

 

அதன்பிறகு, ஜனாதிபதியான லீ மியுங்-பாக், அவரைத் தொடர்ந்து ஜனாதிபதியான பார்க் ஜியன்-ஹியே ஆகியோர் அமெரிக்காவை திருப்தி செய்யும் வகையில் வடகொரியாவை புறக்கணித்தனர்.

 

அமெரிக்காவின் ஆதரவாளராக தங்களைக் காட்டிக்கொண்ட லீ லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறையும் 1300 கோடி கொரியா வொன் அபராதமும் விதிக்கப்பட்டார்.

 

அவருக்கு அடுத்தபடியாக அமெரிக்காவை அனுசரித்துப்போன பார்க் ஜியன்-ஹியேவும் பதவியில் இருக்கும்போதே நாடாளுமன்றத்தால் பதவி பறிக்கப்பட்டார். பின்னர் லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் கைதாகி, 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஆயிரம் கோடி கொரியா வொன் அபராதமும் விதிக்கப்பட்டார்.

 

இந்நிலையில்தான் 2017 தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் மூன் ஜாயே-இன். தொடக்கத்தில் முன்னாள் ஜனாதிபதியான ரோஹ் மூ-ஹ்யுன்னுடன் இணைந்து மனித உரிமைகளுக்காக வழக்காடும் வழக்கறிஞர் குழுவில் இருந்தார். மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், மாணவர்கள் போராட்டம் ஆகியவற்றுக்கு எதிரான அரசு நடவடிக்கைகளை எதிர்த்து வாதாடினார்கள். 2009 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரோஹ் தற்கொலை செய்துகொள்ளும்வரை நண்பராகவே தொடர்ந்தார்.


 

koreavin kathai



 

ரோஹ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவருடைய பிரச்சார மேனேஜராக பொறுப்பேற்றார். ரோஹ் ஜனாதிபதியானதும் அவருடைய நிர்வாகத்தில் செயலாளராகவும், நெருங்கிய உதவியாளராகவும் பல பொறுப்புகளை கவனித்தார். கடைசியாக ஜனாதிபதியின் தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்தார்.

 

இரண்டாவது முறையாக வடகொரியாவுடன் அமைதிப் பேச்சு நடபெற்றபோது, அதை ஏற்பாடு செய்தவர், அதற்காக உழைத்தவர் மூன் ஜாயே-இன்.

 

எனவேதான், பெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். தென்கொரியா ஜனாதிபதி ஆகிறவர்கள் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், வடகொரியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடந்துகொள்ள விரும்பமாட்டார்கள்.

 

அந்த வகையில் மூன் ஜாயேவும் வடகொரியாவுடன் இணக்கமான இணைப்பு முயற்சியை தொடரவே விரும்பினார். இவர் ஜனாதிபதி ஆன சமயத்தில் வடகொரியா ஜனாதிபதியாக கிம் ஜோங்-உன் பொறுப்பேற்றுவிட்டார்.

 

koreavin kathai


 

தனது தாத்தா கிம் இல் சுங், அப்பா கிம் ஜோங்-இல் ஆகியோரைத் தொடர்ந்து ஜனாதிபதியான கிம் ஜோங்-உன் வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை வெளிப்படுத்தும் வகையில் கண்டம்  விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணைகளை வெற்றிகரமாக செலுத்தினார். இது ஜப்பானையும், அமெரிக்காவையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

 

வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக கண்டித்தார். வடகொரியாவுக்கு வரம்பு மீறிய எச்சரிக்கைகளை விடுத்தார். அந்தச் சமயத்தில்தான், கொரியா தீபகற்பம் அணு ஆயுத அச்சுறுத்தலற்ற பகுதியாக மாற அமைதி முயற்சியை தொடங்க விரும்புவதாக தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜாயே-இன் அறிவித்தார்.

 

அவருடைய அறிவிப்பை உடனடியாக வரவேற்றார் கிம் ஜோங்-உன். இரண்டு கொரியா ஜனாதிபதிகளின் இந்த இணக்கமான அறிவிப்புகள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அதிரவைத்தது. அவர் சமநிலைக்கு வருவதற்குமுன் அமெரிக்காவுடனும் பேசத் தயார் என்று அடுத்த அறிவிப்பை வெளியிட்டு ட்ரம்ப்பை சிக்கலான சூழலில் தள்ளிவிட்டார்.

 

அடுத்தடுத்து நடந்த வரலாற்று நிகழ்வுகளை இறுதியாகப் பார்ப்போம். அதற்குமுன் வடகொரியா வரலாற்றை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

 

(இன்னும் வரும்)

 

முந்தைய பகுதி:


தென்கொரியாவில் பதவி பறிக்கப்பட்ட முதல் பெண் ஜனாதிபதி!!! கொரியாவின் கதை #21
 

 

அடுத்தபகுதி:


வடகொரியாவின் கதை!! கொரியாவின் கதை #23

 

 

 

 

Next Story

கிம் ஜாங் உன் போட்ட திடீர் உத்தரவு; மீண்டும் பரபரப்பில் வடகொரியா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kim Jong Un's sudden order; North Korea is in a frenzy again

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ. 62 லட்சம் போனஸ்; ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்த நிறுவனம்!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Rs.62 lakh bonus for having a child in private company at south korea

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது தென் கொரியா. சிறிய அளவில் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி. இந்த நாட்டின் அண்டை நாடான வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை வீசி அச்சுறுத்தி வருகிறது. ஒரு பக்கம் இப்படியொரு பிரச்சனை என்றால், மறுபக்கம் தென்கொரியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, முன்னெப்போதும் இல்லாத அளவு பிறப்பு விகிதம் சரிந்து இருப்பதே ஆகும். 

கடந்த ஆண்டு தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘2022 ஆம் ஆண்டு சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4 சதவீதம் குறைவு ஆகும்’ என்று தெரிவித்திருந்தது.

திருமணங்கள் குறைந்து கொண்டே வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாக அந்த நாடு வருத்தம் கொள்கிறது. வேலைப் பளு உள்ளிட்ட பல காரணங்களால் தென் கொரிய இளம் தலைமுறையினர், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாகப் பல்வேறு விழிப்புணர்வுகளையும் தென்கொரியா அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது, ‘குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் விதமாகத் தங்கள் நிறுவன ஊழியர்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு ரூ. 62.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் இது கொடுக்கப்படும். ஆண், பெண் என இருவருக்குமே இந்த சலுகை கிடைக்கும். நமது நிறுவனத்தின் இந்த முயற்சி குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்தி, நாட்டின் எதிர்கால பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக அமையும்’ என்று கூறியுள்ளது. 

பல விசித்திரமான சட்டங்களைக் கொண்டு வரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.