![jay-zen-manangal-vs-manithargal- 12](http://image.nakkheeran.in/cdn/farfuture/S09Jxnsy2bXIcMHPmi0A34d71aGJSJasRPlKmhB_2ps/1694667501/sites/default/files/inline-images/jayzen12.jpg)
சிறைக்கு சென்று வந்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியே ஜெய் ஜென் விவரிக்கிறார்
நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடைய உறவினரை வெட்டினார். வெட்டப்பட்டவருக்கு ஆழமான காயம் ஏற்பட்டது. இரண்டு வருட சிறை தண்டனைக்குப் பிறகு அவர் வெளியே வந்தார். சிறைக்குச் சென்று வந்ததால் அனைவரும் அவரை வித்தியாசமாகவே நடத்தினர். அவர் என்னிடம் வந்தார். மிகுந்த மன அழுத்தத்தில் அவர் இருந்தார். தன்னை சந்திப்பவர்களிடம் தான் சிறையில் இருந்ததை சொன்னவுடன் தன்னை அவர்கள் ஒதுக்குவதைக் கண்டு அவர் வேதனையடைந்தார்.
இதனால் அவருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தான் சிறை சென்ற விஷயத்தை அவர் மறைக்க ஆரம்பித்தார். ஒரு இடத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. ஆனாலும் அவர் சிறை சென்ற விஷயம் தெரிந்தவுடன் அந்த வேலையும் பறிபோனது. தான் உண்மையைச் சொல்ல வேண்டுமா, பொய் சொல்ல வேண்டுமா என்கிற குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. பள்ளியில் அவருடைய குழந்தைக்கும் இதனால் அவமானமே கிடைத்தது. ஒருமுறை சிறை சென்றுவிட்டால் காலம் முழுவதும் அவர் குற்றவாளி தான் என்பது போல் உலகம் அவரை நடத்தியது.
சிறையிலேயே இன்னும் அதிக காலம் இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. வேறு மாநிலத்திற்கு சென்று வேலை பார்க்கலாம் என்றாலும் அங்கு அவருக்கு மொழிப் பிரச்சனை ஏற்பட்டது. அவரை சுயதொழில் தொடங்கச் சொல்லி நான் அறிவுறுத்தினேன். மனைவியின் உதவியுடன் அவர் சுயதொழில் தொடங்கினார். பல்வேறு சேவைகள் அடங்கிய பெட்டிக்கடை ஒன்றை அவர் அமைத்தார். ஆச்சரியமாக அந்தக் கடை உடனடியாக நல்ல வருமானத்தைத் தர ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் அவர் கடன்கள் அனைத்தையும் அடைத்தார். நல்ல வருமானம் ஈட்டினார். கிட்டத்தட்ட சாதனையாளராக மாறினார் என்றால் மிகையாகாது.
இப்போது அதே உலகம் அவர் குறித்து பாசிட்டிவாக பேசத் தொடங்கியது. அவருக்கு ஆறுதல் கூறியது. அவரை இன்ஸ்பிரேஷன் என்று அழைத்தது. நம்முடைய எண்ணத்தில் தான் நாம் தவறு செய்கிறோம். அதை உடலின் மூலமாக இன்னொருவர் மீது செலுத்துகிறோம். எண்ணத்துக்கு எந்த தண்டனையும் இல்லை. உடலுக்கு தான் தண்டனை. அந்த தண்டனை தான் ஜெயில். தன்னுடைய வாழ்க்கையில் பட்ட அனுபவங்களை வைத்து தன்னுடைய குழந்தைக்கு அவர் அறிவுரை கூறினார். இதன் மூலம் குழந்தைக்கும் வாழ்க்கை குறித்த நல்ல புரிதல் ஏற்பட்டது. கோபத்தை நாம் சரியாக நிர்வகிக்காவிட்டால் வாழ்க்கையில் பெரிய இழப்பு ஏற்படும்.