Skip to main content

ஈகோவை தூண்டியதால் குடியை நிறுத்திய அதிகாரி - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 09

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

 jay-zen-manangal-vs-manithargal-09

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்தும் அனுபவங்கள் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ என்னும் தொடரின் வழியே நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனிநபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒருவர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும், பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள். உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து போன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார்.

 

என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார். இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

செல்லமாக வளர்ந்த பெண்; புகுந்த வீட்டில் எதிர்பார்த்தால் என்னவாகும்? - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 30

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
jayzen manangal vs manithargal 30

அந்தப் பெற்றோர் தன் திருமணமான பெண்ணை கவுன்சிலிங்கிற்கு அழைத்து வந்திருந்தனர். பெண்ணை மிகவும் செல்லமாக வளர்த்ததாக பெற்றோர் கவலைப்பட்டனர். படிப்பில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாமல் வீட்டு வேலைகள் செய்யாமல், பொழுதுபோக்கில் அதிக நேரம் செலவழித்து  கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாத அளவுக்கு பெண்ணை வளர்த்திருந்திருக்கிறார்கள். பெண்ணுக்கு சுயாதீனமும், வாழ்க்கையின் யதார்த்தங்களையும், பொறுப்புகளையும் கற்றுக்கொடுக்கவில்லை.

இப்படி வளர்ந்த பெண்ணுக்கு அவளுடைய திருமண வாழ்க்கை சவாலாக இருக்கிறது. கணவர் கலெக்டர் ஆபீசில் வேலை செய்கிறார். கணவரும் கவுன்சிலிங்கிற்கு வந்திருந்தார். நல்ல முதிர்ச்சியாக பார்க்கும் மனிதராக இருந்தார். என்ன நடந்தது என்றால், திருமணத்திற்கு பின், அந்தப் பெண் தன் அம்மா வீட்டில் எப்படி வளந்திருந்தாரோ அதேபோல வாழ்க்கையைத் தொடர்ந்து இருக்கிறாள். காலையில் மிக லேட்டாக எந்திரிப்பது. இவள் எந்திரிக்கும் முன் கணவர் எல்லா வேலையும் செய்து சமைத்துவிட்டு இரண்டு குழந்தைகளையும் கிளப்பி சென்றுவிடுவார். மனைவி எழுந்து அடுத்து மாலை வரும் வரை டிவி பார்ப்பது போன்ற ரொம்ப சௌகரியமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். ஓரளவுக்கு உதவி செய்து கணவர் நன்றாக பார்த்துக் கொண்டாலும் ஒரு கட்டத்தில் அவரால் முடியவில்லை. ஏழு வருட காலமாகப் பொறுத்திருந்து முடியாமல் அவர் விவாகரத்து வாங்கும் நிலைக்கு போய்விட்டார். இந்த நிலையில்தான்  கணவரும் அங்கு வந்திருந்தார். 

அந்தப் பெண் எதற்காக கவுன்சிலிங் வந்தோம்? என்ன பிரச்சனை? என்ற மனநிலையில்தான் இருந்தார். ஆனால் கணவர் எல்லாம் வெறுத்த நிலையில் இருக்கிறார். அவர் ஆரம்ப நிலையிலேயே இதெல்லாம் தவறு இப்படி இருக்க கூடாது என்றாவது சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அதிகப்படி பொறுத்து கொள்ளுதல் என்பதால் இவ்வளவு காலம் பொறுத்திருந்த ஆற்றாமை ஒரு நாள் அதன் வெளிப்பாடு வந்து விட்டது. முடியவில்லை என்று பிரிவை நோக்கி வந்து விட்டார். எங்களுக்குள் குழந்தை பிறந்ததே தவிர எங்களுக்குள் எந்த வித ஈடுபாடும் இல்லை. அவள் எந்த வித ஈடுபாடும் இல்லாமல் தான் என் கூட வாழ்ந்து வருகிறார் என்றார். அந்தப் பெண்ணிற்கு இன்னும் புரியவும் இல்லை. வேலை செய்ய ஆள் வைத்துக் கொள்ளலாம் என்கிறாரே தவிர தான் ஈடுபாடு காட்ட வேண்டும் என்பது இன்னும் அந்தப் பெண்ணுக்கு புரியவில்லை. 

பெற்றோர் வீட்டினுடைய வரவு செலவு கூட பெண்ணுக்கு சொல்லாமல் அதையெல்லாம் எதுக்கு சார் சொல்லணும் என்றுதான் இருந்தனர். அந்தப் பெண்ணின் அம்மா உணர்ந்தாரே தவிர, அவரது அப்பா ஒத்துக் கொள்ளவே இல்லை. முதல் விஷயமாக அந்தப் பெண்ணுக்கு வரவு செலவு என்பதை பார்க்க வேண்டும் என்றுதான் சொன்னேன். சொன்னதுமே அந்தப் பெண்ணுக்கு கண் கலங்கிவிட்டது. எதார்த்தத்தை கூட கண்ணில் காட்டாமல் ஒரு கஷ்டத்தை காட்டாமல் வளர்த்திருக்கின்றனர். அப்பாவோ நான் சின்ன வயசில் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்திட்டேன். அதனால் தான் இப்படி வளர்த்து இருக்கிறேன் என்றபோது கஷ்டப்பட்டு வளர்ந்தீர்கள் அதனால்தான் இப்போது நல்லா இருக்கிறீர்கள். அதேபோல உங்க பெண்ணும் நாளைக்கு நன்றாக இருக்க வேண்டும் என்றால் கஷ்டத்தை காட்ட வேண்டும். இப்போது 25 வருடமாக கஷ்டத்தை காட்டாமல் திடீரென்று கஷ்டத்தை புரிந்து கொள் என்றால் அந்தப் பெண்ணாலும் எப்படி முடியும் என்று புரிய வைத்தேன். அடுத்த முப்பது நாள் சமைக்கப் போவது நீங்கதான் என்றும் சொல்லபட்டது. 

அடுத்ததாக, அந்தப் பெண்ணுக்கு 5 கவுன்சிலிங், பெற்றோர்களுக்கு மூன்று செஷன்கள் வைக்கப்பட்டது. வாழ்க்கையின் கஷ்டங்கள் என்னவென்று புரிய வைக்க அந்தப் பெண்ணை வீடியோ கால் மூலமாக ஒரு  வீட்டு வேலை செய்யும் பணி பெண்ணை அழைத்து அவரின் வாழ்க்கை பற்றி சொல்ல சொல்லி இந்தப் பெண்ணை கேட்க மட்டும் வைத்தேன். அவர்கள், தன்னுடைய ஐந்து பெண்களை எப்படி வளர்த்தேன். எவ்வளவு பொருளாதார கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விளக்கினார். அடுத்த செஷனில் ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியைக் கூப்பிட்டு அவர் இயல்பான வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று அவருடைய கஷ்டங்களை பகிர வைத்து அந்தப் பெண்ணை கேக்க வைத்தேன். 

நேரடியாக எந்த வித அறிவுரைகளையும் போதிக்காமல் மற்றவர்கள் மூலமாக அந்தப் பெண்ணை ஜஸ்ட் காதால் மட்டும் கேட்க வைத்தேன். வாழ்க்கை என்றால் எப்படி இருக்கும், நம் வாழ்க்கை போலவே எல்லார் வாழ்க்கையும் இல்லை என்ற கஷ்டங்களை புரிய வைத்தேன். இப்படி மற்ற இயல்பானவர்கள் பேச பேச அந்தப் பெண்ணுக்கு அழுகை மட்டுமே வந்தது. அந்தப் பெண் உணர்ந்து நான் ஏதோ தப்பு செய்து விட்டேன் என்றும், அப்பா அம்மா ரொம்ப கெடுத்து வளர்த்திருக்கிறார்கள் என இப்போது தெரிகிறது என்றும் கூறினாள்.

பெற்றோர்கள் செல்லமாக வளர்க்க வேண்டும் என்றால் கஷ்டத்தை காட்டாமல் வளர்க்க வேண்டும் என்பது அர்த்தம் இல்லை. கஷ்டத்தையும் காட்ட வேண்டும், செல்லமாகவும் வளர்க்க வேண்டும். செல்லமாக வளர்ப்பது என்பது நீங்கள் பிரியமாக பிள்ளையிடம் காட்டும் அன்பு. அது உங்கள் சொந்த தனிப்பட்ட பிரியம். ஆனால், வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன என்று அதை காட்டுவது அந்தப் பிள்ளைகள் வாழ வேண்டிய வாழ்க்கைக்கு ஆதாரமானது, அவசியமானது. இப்படி நிறைய செய்த பின்புதான் பெற்றோர்களுக்கும் புரிய வைக்க முடிந்தது. அந்தப் பெண்ணும் புரிந்து கொண்டு, கணவனிடம் சென்று மன்னிப்பு கேட்டு இன்று இருவரும் சேர்ந்து இப்பொழுது மீண்டும் ஒன்றாக வாழ்கிறார்கள்.

Next Story

மொத்த குடும்பமும் ஒருவர் மேல் சொன்ன விசித்திர குற்றச்சாட்டு - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 29

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
jay zen manangal vs manithargal 29

தான் கொடுத்த கவுன்சிலிங் பற்றி ’மனங்களும் மனிதர்களும்’ என்னும் தொடரின் வழியே ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

பேசாமலே அமைதியாக இருப்பதே குறையாக ஒருவர் மீது பழி சுமத்த, அதனால் பாதிக்கப்பட்டு என்னை ஒருவர் பார்க்க வந்தார். இதுபோன்று தேவைக்கு மட்டுமே பேசி கூச்ச இயல்புடைய, தனிமையை நாடுகிற ஒருவர், உள்முகச் சிந்தனையாளராக இருப்பர். அவரை ஆங்கிலத்தில் இண்ட்ரோவேர்ட் என்று சொல்வர். இவர்களை பெரும்பாலும் பேசாமல் ஒதுங்கி போகும் வகை என்றே தவறாக நினைப்பார்கள். ஆனால், தேவையின்றி எதுக்கு பேசவேண்டும் என்று அமைதியாக இருக்கும் குணமுடையவர். தான், பேசாமல் இருப்பதால் யாருக்கும் எந்த வித குறையும் இல்லை எனும்போது அவரை எப்படியாவது பேசவைக்க வேண்டும் என்று முயல்வது சரி ஆகாது.

என்னைப் பார்க்க வந்தவருக்கு இதே விஷயம் தான். அவர் முதலில் வந்து பேச்சை ஆரம்பிக்கவே பத்து நிமிடம் எடுத்துக்கொண்டார். அமைதியாக மென்மையாகத்தான் அவருடைய நடவடிக்கை இருந்தது. மெல்ல ஆரம்பித்தார். அவர் எந்த வித கெட்ட பழக்கம் இல்லாத, நண்பர்கள் என்று சுற்றுவது என தேவையில்லாத விஷயங்கள் என்று இல்லாமல், தான் உண்டு தன் குடும்பம் உண்டு என இருக்கும் மிக சிறந்த நபராக இருக்கிறார். தன் மனைவி நூறு தடவை சிரித்தால் கூட  மூன்று தடவை சிரிக்கும் அளவான மனிதர். அவருக்கு திருமணம் ஆன வரைக்கும் எந்த விதப் பிரச்னையும் இல்லை. என் மகன் இப்படி தான் அமைதியான டைப் என்று அவரது பெற்றோரும், என் அண்ணன் இப்படி தான் என்று தங்கையும் பேசவில்லையா சரி போ என்று இயல்பாக அவரது குணத்தை ஏற்று கொண்டு விட்டார்கள். ஆனால், எப்போது திருமணம் ஆகி மனைவி, மாமனார், மாமியார் என்று குடும்பம் ஆனதும், அவர்கள் மாப்பிள்ளை பேசமாட்டாரா என்று கேட்க கேட்க இவர்களது பெற்றோருக்கும் இவருக்கும் அது பிரச்னையாக ஆகி, இவரை பேசு பேசு என்று தொந்தரவு செய்கின்றனர். இவ்வளவு நாள் பேசாத நான் திடீரென்று எப்படி பேசமுடியும். இப்போ நான் என்ன சார் செய்யணும் என்றார்.

அவர் பேசும்போது கூட தனக்கு மணிரத்னம் படங்கள் தான் பிடிக்கும் என்றார். தேவைக்கு மட்டும் அழகாக ரெண்டு வார்த்தைகள். காதலித்தால் கூட பிடிச்சிருக்கு என்று சிறிய சிறிய டயலாக். அது போதுமே பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு. அதை விட்டுவிட்டு உன்னை ஏன் பிடித்திருக்கிறது தெரியுமா என்று, அதற்கு ஏன் சார் ஒருமணி நேரம் பேசவேண்டும் என்றார். இவரிடம் பேசுவதை விட இவரது குடும்பத்திடம் தான் பேசவேண்டும் என்று அவர்கள் அனைவரையும் வரசொல்லி பேசினேன். முதலில் எல்லோரும் இவர் பேசமாட்டேங்கிறார் என்று தான் ஒவ்வொருவரும் வேறு வேறு விதமாக சொன்னார்கள். அவர்களிடம் கவுன்சிலிங் ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்களிடம் ஒரு கதையைச் சொன்னேன். ஒரு காட்டில் சிங்கம் இருக்கிறது. மனிதர்கள் நாம் அது இருக்கும் இடத்திற்கு சென்று அதன் வழியில் குறுக்கே வரும்போது தனது உணவு என நினைத்து கொன்று தின்று விடுகிறது. சிங்கத்தை மக்கள் பாதுகாப்புக்காக வனத்துறை அதிகாரிகள் பிடிக்க வருகின்றனர். ஆனால், போன இடத்தில ஒரு அதிகாரியை  காணவில்லை. சிங்கத்தையும் காணவில்லை. அவரைத் தேடி சென்றால், ஒரு மரத்தின் கீழே கரடி முன்பு நின்று கையில் கம்பு வைத்து சிங்கம் என்று ஒத்துக்கொள் என்று அடித்து கொண்டிருக்கிறார். மற்ற அதிகாரிகள் என்னவென்று விசாரிக்க, சிங்கம் கிடைக்கவில்லையே, இருப்பதை சிங்கம் ஆக்கி விடுவோம் என்றான்.  இந்தக் கதையை சொல்லி, இவர் பேசமாட்டார், என்பதைத் தள்ளிவைத்து விட்டு இவரிடம் வேற என்ன பிரச்சனை இருக்கிறது என்றேன்.

மாமனார், மாமியார் என்று அனைவரும் ஒரு குறையும் இல்லை என்று சொல்லிவிட்டனர். அடுத்து எதிர்பாராமல் அவரை பற்றி குறையாக சொல்லிக்கொண்டிருந்த, திட்டிக்கொண்டிருந்த தங்கையே, சரி அண்ணனிடம் வேற குறை இல்லை நல்லவர் என்று எல்லாருமே சொல்கிறீர்களே, பின் பேசவில்லை என்று ஏன் குறையாக அதை மட்டும் சொல்ரீங்க என்றார். அண்ணன் பக்கமும் நியாயம் இருப்பதை உணர்ந்து கொள்கிறார். அதுவரை எல்லாரும் பேசிக்கொண்டிருந்தார்கள் அதன் பின் மாமனார், மாமியார் மனைவி மட்டுமே அடுத்தடுத்து பேசுகிறார்கள். நான் அவரது மனைவியிடம் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கூட பணி புரியும் ஆண்களிடம் ஏதேனும் பிடிக்காத விஷயம் இருக்கிறதா என்று கேட்டேன், யோசித்து தேவையில்லாமல் பேசுவார்கள், எல்லை தாண்டி பேசுவார்கள், பெண்களிடம் வாய்ப்பு அமையுமா என்ற பாணியில் பேசுவார்கள் என்றார். சரி இந்தக் குணமெல்லாம் உங்கள் கணவரிடம் இருக்கிறதா என்றேன். அவசரமாக கண்டிப்பாக இல்லை அவர் நல்லவர் என்றார்.

எதெல்லாம் பேச்சு இல்லை என்று புரியவைத்தேன். அவர் என்னிடம், சரி சார். தேவையில்லாததற்கு பேசவேண்டாம். ஆனால் நல்ல விஷயத்திற்கு  பேசலாமே, ஒரு நாள் கிழமையில் கூட தீபாவளி வாழ்த்து சொன்னால் அரைமணி நேரம் கழித்து தலையை மட்டும் ஆட்டிவிட்டு போவார் என்றார். அதுவரை அமைதியாக இருந்தவர் , என்ன சார் நல்ல விஷயம். புதிதாக ஏதும் நடந்து இருக்கிறதா. அவரவர் வாழ்க்கையில் படிப்பு, தொழில் என்று ஏதேனும் புதிதாக நடந்து இருக்கிறதா. குடும்பம் என்றால் தேவையில்லாதது தான் பேசவேண்டும் என்று இருக்கிறதா சார்?. பொதுவான பேச்சுவார்த்தைக்குத்தான் இந்தக் குடும்பத்தில் 15 பேர் இருக்கிறார்களே. நான் எதுக்கு சார் என்றார். யாரவது வீட்டிற்கு வந்தால் வாங்க பெரியப்பா வாங்க மாமா என்று அத்தனைப் பேரும் அத்தனை முறை கூப்பிடுவதன் அவசியம் என்ன சார். வாங்க என்று ஒரு முறை சொன்னால் வந்து  விட போகிறார். அவர் இளம் வயதுக்காரர் என்றாலும், அவர் பேச்சில் அத்தனை முதிர்ச்சி. ஒவ்வொரு வருடமும் தீபாவளி வரத்தான் செய்கிறது, எல்லாரும் ஒரே மாதிரி சந்தித்து, சாப்பிட்டு, அந்த நேரம் மட்டும் எதையாவது அவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதே போல் நானும் பேசவில்லை என்று மட்டும் எல்லாரும் என்னை சொல்கிறார்கள். இந்தக் கடைசி ஐந்து வருடம் என்ன புதிதாக செய்து இருக்கிறீர்கள்? என்ன நடந்து இருக்கிறது என்றார். நானும் எதுவும் இந்த ஐந்து வருடத்தில் செய்யவில்லை. பின்னே எதுக்கு நான் பேசவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் பேசி இருப்பார். அதையே அவர் இவ்வளவு பேசுகிறாரே என்று  எல்லாரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

எதையாவது ஒன்றை சாதிக்க வேண்டும் சார், அதை குடும்பத்துடன் பகிர வேண்டும். நான் பேசவேண்டும் என்றால்  நான் எதையாவது செய்ய வேண்டும், அதற்கு பின் தான் என்னால் பேசமுடியும். எனக்கும் நிறைய பேசவேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது என்று கண் கலங்குகிறார். அதைப் பார்த்து எல்லாருக்கும் புரியவில்லை. நாம் வாழ்க்கையில் சும்மா இருப்பதால் தான் சார் பேசி கொண்டு இருக்கிறோம். அதைக் குடும்பம் என்றோ அன்பு என்றோ சொல்லி கொள்கிறோம். அவர் கடைசியாக தன் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற அன்று, ஒரு பதினைந்து நிமிடம் பேசியதாகவும், அதுதான் கடைசியாக தான் பேசிய சிறந்த பேச்சு. அதுபோல எதையாவது செய்துவிட்டுத்தான் பேசவேண்டும் என்றார். சும்மா எதையாவது பேசிக்கொண்டு இருப்பதற்கு பெயர் அன்பா சார் என்றார். இதுவரை நான் இந்தக் கேள்வியை கேட்கவில்லை இப்போது இவர்களிடம் கேட்கிறேன் சார். இவ்வளவு பேசுகிறார்களே யாரவது அவர்களிடம் இருக்கும் பிரச்னையை பேசுவார்களா என்றதும் எல்லாரிடத்திலும் அப்படி ஒரு அமைதி. மற்றவர் பிரச்சனை, ஊர் பிரச்சனை முதல் சினிமாவில் நடிகர்கள் வரை பேசுவார்கள். அதில் நானும் கலந்து கொள்ளவில்லை என்று வேறு என் மீது வருத்தம் கொள்வார்கள் என்றார்.

குடும்பத்தில் நிறைய பேர் இந்தத் தவறு செய்கின்றனர். ஒருவர் மட்டும் பேசாமல் இருந்தால் அவரை எப்படியாவது பேச வைத்து விடவேண்டும் என்று படாத பாடுபடுவர். அது தவறு. அவரால் அந்தக் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள்  கிடைக்கும் வரைக்கும், அவரால் வேறு தொந்தரவு இல்லை எனும்போது அவரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. இங்கு அனைவரும் கவுன்சிலிங் முடியும்போது அவரது மாமனார் தான் முதன் முதலில் புரிந்து எழுந்து நின்று பேசினார். நான் இப்போது தான் புரிந்து கொண்டேன். நம்மைப் போல இல்லமால் மாப்பிளை எதையாவது சாதித்து விட்டு பேசவேண்டும் என்று நினைக்கிறார். அதுவரை நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். நீங்கள் பேசும்போது அன்று தான் சாதித்து இருக்கிறீர்கள் என்று நாங்கள் எடுத்து கொள்கிறோம் என்று பேசிவிட்டு நகர்ந்து விட்டார். எல்லாரும் அதையே ஒத்து போயினர்.

எப்படி நாம் பேசுவதற்கு நியாயம் இருக்கிறதோ அதே போல பேசாமல் இருப்பதற்கும் அவர்களிடத்தில்  ஒரு நியாயம் இருக்கும். அதை மதிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே. அவர் மேலும் ஒரு விஷயம் சொன்னார். காரைக்குடி பக்கம் அந்த மனிதர்கள் சொல்லும் வார்த்தை ரொம்ப முக்கியம் சார். வார்த்தைகள் இலவசமாக கிடைக்கிறதே என்று நிறைய செலவு செய்யாதே என்று சொல்வார்கள். வளரும் நாடுகள் பேச்சைக் குறைக்க வேண்டும் சார் என்றெல்லாம் சொன்னார். எதையாவது பேசி முட்டாளாக இருப்பதற்கு, எதுவுமே பேசாமல் புத்திசாலியாக இருப்பதே மேல் என்று ஒரு மேதை சொன்ன வரிகள் தான் எனக்கு ஞாபகம் வந்தது.