Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #03

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

iraval edhiri part 3

 

இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்

 

இதற்குமேல் வெளிச்சம் தர இயலாது என்று மஞ்சள் தடவி பல்பு சத்தியம் செய்யாத குறையாகக் கதறியது. வாசலின் ஓரம் நாய் ஒன்று யாரோ சாப்பிட்டுப் போட்ட எச்சிலையை ருசி பார்த்துக் கொண்டு இருந்தது. சில கான்ஸ்டபிள்கள் ட்யூட்டி மாறியதை நோட்டில் குறித்தபடி இருந்தார்கள். 

 

இன்ஸ்பெக்டர் அறையை ஒட்டிய பென்ஞ்சில், “என்னா கேஸூ ?”  புடவையின் மேற்பக்கம் சற்று சரிந்திருந்ததை லட்சியம் செய்யாமல், காவிப் பற்களுடன் இந்த இடம் ஒன்றும் எனக்குப் புதுசு இல்லை என்பதைபோல் அருகில் இருந்தவர்களை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தாள் அந்த பெரிய உடம்புக்காரி.

“தே....! கொஞ்சம் அப்பாலே போ....!” “இந்தா ஏட்டு இவளை அந்தப் பக்கமாப் போகச் சொல்லு சொம்மா நசையாட்டம் ஒட்டிகினு ?”  போட்டிருந்த வெள்ளைக்கரை வேட்டி சட்டைக்கும், வாயிலிருந்து வரும் வார்த்தைக்கும் கொஞ்சமும் ஒட்டாமல் கத்தினான் அவன்.

“இந்தாம்மா போய் ஓரமா உட்காருறீயா இல்லை, செல்லுக்குள்ளே போட்டு லாடம் கட்டவா ?!”

“அட ஏன் ராசா நீ ?!” “ போனமுறை கட்டினதுக்கு கழண்டுபோச்சு எனக்கு....?!” அதற்கு மேல் அவள் பேசிய வார்த்தைகளை கேட்காமல் இருப்பதே நலம் நமக்கு.

“இன்ஸ்பெக்டர் சக்ரா ?!” உள்ளே நுழைந்ததும் அனைவரிடத்திலும் ஒருவித அமைதியும், குழைவும். “ என்ன ? ரஞ்சி மறுபடியும் வந்துட்டியா நல்லாதாப் போச்சு உடம்பு ரொம்ப சூடாகிப்போச்சு, தணிக்க தேவைதான். “  அவளைப் பார்த்து அசிங்கமாய் கண்ணடித்தவன். பக்கத்தில் அமர்ந்திருந்த வெள்ளை கரையைப் பார்த்தான் 

“என்னா வேணும் ?!”

“இந்தாங்க ! இந்த மாச கமிஷன் அய்யா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க ?!”

“ம்.....?!”  “தொழில் எல்லாம் எப்படிப் போவுது ?!”  பணத்தை பேண்ட் பாக்கெட்டுக்குள் சொருகியபடியே கேட்டான் சக்ரா.

“நீங்க இருக்கும்போது என்ன கஷ்டமுங்க அப்போ நான் கிளம்பட்டுங்களா ?” 

“ம்...ம்...!” “ ஏண்டா இப்போ நம்ம ஏரியாவில இரண்டு மூணு ஸ்கூல் பசங்களைக் காணோமே உங்க அய்யாவுக்கு அதிலே ஏதாவது தொடர்பு இருக்குதா ?!”

“அட இல்லீங்க அய்யா ? அந்த வேலைக்கு எல்லாம் எப்பவோ முழுக்கு போட்டுட்டார். இப்போ முழு நேர அரசியல்தான் !”.

“விசாரணையிலே அவரு பேரும் இருக்கு, நானா கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நீயா சொல்லிட்டா கமிஷன் கணிசமாத்தான் ஏறும் இல்லைன்னா.....!” 

“இல்லீங்க ?!”  அவன் தலையைச் சொறிந்தபடியே வெளியேறினான். எமகாதன் இவனை அய்யாகிட்டே சொல்லி கொஞ்சம் தட்டி வைக்கச் சொல்லணும்.

“சார்....?!”  “இன்னைக்கு கேஸ் சிபிஐக்கு மாறுவதா சர்க்குலர் வந்திருக்கு”. 

“CBI ஆபிஸர் மாறன் கிட்டே இந்த கேஸ் சம்பந்தப்பட்ட பைல்களை ஒப்படைக்கணும்.” எஸ்.ஐ. வேந்தன் பணிவாக சொன்னான்.

“நாலு பைலும் ரெடியா ?”

“ரெடி ஸார்.....?!” “ ஏற்கனவே பசங்க கடத்தலில் ஈடுபட்டு இருந்த பசங்களை கொண்டு வந்து வைச்சிருக்கிறேன். சொல்லிவைச்சா மாதிரி யாரும் இல்லைன்னு சாதிக்கிறாங்க. பசங்க காணாம போன நேரத்திலே இவனுங்க யாரும் ஊருக்குள்ளே இல்லையாம். எல்லாம் கடலுக்குள்ள இருந்திருக்கானுங்க?!”

“கடலுக்குள்ளேயா ?”

“உங்களுக்குத் தெரியுமே ஸார் ! நம்ம குப்பத்துலே இருக்கானே கடல் குமாரு அவனுக்கு அன்னைக்கு பொறந்தநாளுன்னு இவனுங்களுக்கு எல்லாம் பார்ட்டியாம். தண்ணி, மேற்படி சமாச்சாரங்கள்ன்னு கடலையே நாறடிச்சிட்டு வந்துருக்கானுங்க. இவனுங்க செல்போன் சிக்னலும் அந்த இடத்தைத்தான் காட்டுது !”.

“கேஸ்ல எந்த முன்னேற்றமும் இல்லைன்னு கமிஷனர் போட்டுத் தாளிக்கிறாரு ? இதுலே கேஸ் வேற சிபிஐ கண்ட்ரோல்ல போயிடுச்சு. வாசலில் ஒரே ஆரவாரம்....!”

“என்னாச்சு ?”

“பிரஸ் பீப்பிள் ?”

“இவனுங்களுக்கு வேற வேலையே இல்லைடா, மைக்கைப் பிடிச்சிட்டு அலையறாங்க. என்னவாம் அவனுங்களுக்கு ?!”

“கேஸ் சிபிஐக்கு மாறியதைப் பற்றி கேப்பாங்க ? கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணுங்க?!”  “இது குழந்தைங்க சம்பந்தப்பட்ட கேஸூ ?!” எஸ்.ஐ  அத்தனை சொல்லியும் சக்ரா விரைப்போடு நின்றான்.

 

அவனின் அதிக முறைப்போடு மைக்குகள் நீட்டப்பட்டன.

“ஏன் ஸார் ?” “உங்க ஸ்டேஷன் லிமிட்ல உள்ள ஸ்கூல்ல இருந்து குழந்தைங்க காணாம போயிருக்காங்க நீங்க என்ன ஆக்ஷன் எடுத்து இருக்கீங்க ?”

“விசாரிச்சிட்டு இருக்கோம்.?!”

“ஸார் பாதிக்கப்பட்ட பெற்றவர்களோட நிலைமையைப் பாருங்க ?!” “இதெல்லாம் தாண்டி குற்றம் நடந்து இரண்டு நாள் ஆச்சு இப்போவரைக்கும் எந்த அப்டேட்டும் இல்லை. மக்கள் தங்களோட பிள்ளைகளை வெளியே அனுப்பவே பயப்படறாங்க. இதுக்கு உங்க பதில் என்ன ?”

“உங்களால கண்டுபிடிக்க முடியலைன்னுதான் சிபிஐ மாறனை இதுலே இன்வால்வ் பண்ணியிருக்காங்களா ? “

 

ஆளாளுக்கு கேள்விகளை கேட்டார்கள். “பொறுமையை இழுத்துப் பிடித்தபடியே நீங்க கேட்குற எந்த கேள்விக்கும் என்னால இப்போ பதில் சொல்ல முடியாது. இது மேலிடத்தோட உத்தரவு. ஒரு கேஸ் சிபிஐக்கு மாறுவதால கேஸை இதுக்கு முன்னாடி நடத்தினவங்க திறமையில்லாதவங்கன்னு சொல்லிட முடியாது. சிபிஐ கிட்ட இந்த கேஸ் போனாலும் ஃபர்ஸ்ட் இன்வெஸ்டிகேஷன் தொடர்பான தகவல்கள், கேஸ்க்கு கூடிய ஒத்துழைப்பையும் நான் தருவேன். காணாம போனது எனக்கும் பிள்ளைகள் மாதிரிதான்!”

“இன்ஸ்பெக்டர் சக்ராவின் அலட்சியம் !” என்று பத்திரிகைகளில் செய்தி. ப்ளாஷ் நியூஸில் .....!”

“சென்னையில் ஒரே நாளில் காணாமல் போன நான்கு மாணவர்கள் இரண்டு நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் போலீஸ் சிபிஐ கரங்களில் வழக்கு; பெற்றோர்களுக்கு நியாயம் கிடைக்குமா ?” 

 

மாறன் வேறு சேனலை மாற்றினான். சின்த்தால் சோப்பின் சரும பாதுகாப்பை நம் நலமும் சமுதாய நலமும் என்ற பஞ்ச் டயலாக்கோடு வலியுறுத்திக் கொண்டு இருந்தது. “இந்தக் கடத்தலுக்கு காரணம் பணமா ? பழிவாங்கும் படலமா ?”  விதவிதமான தலைப்புகளில் செய்தி சேனல்களில் விவாதங்கள். 

 

மாறன் உதடுகளில் க்ரீன் டியின் சூட்டை ருசித்தபடியே சலித்துக் கொண்டான். எல்லாவற்றையும் மீடியா பேசு பொருளாக்கி விடுகிறார்கள். பிரச்சனையின் நிலவரம் என்ன என்பதை ஆராய்வதைத் தாண்டி இவர்களின் டி.ஆர்.பி மோகம்.

 

சில நேரங்களில் ரகசியமாக வைக்க வேண்டிய விசாரணைகள் கூட,  “குற்றம் நடந்தது என்ன?” என்று வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறார்கள். எல்லாவற்றையும் தோலுரித்துப் பார்க்கும் ஆர்வம். தானும் கெட்டு மற்றவர்களையும்,  ஒருவித பதட்டத்திலேயே வைத்துக் கொள்ளும் சைக்கோத்தனமான மனநிலையில் தற்போதைய மீடியாக்கள் வந்துவிட்டன. 

 

ரிஷப்ஷனுக்கு கால் செய்து, “ பிளைட்டுக்கு நேரமாச்சு, செக் அவுட் பண்றேன். பில்லை ரெடி பண்ணுங்க ?!”  என்று கையடக்க சூட்கேஸை எடுத்துக் கொண்டு லிப்டிற்கு வந்தான். மாறன் பதினைந்து வருட சர்வீஸ். இப்போது கூட ஒரு கேஸை வெற்றிகரமாக முடித்துவிட்டு டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறான். 

 

இதோ அடுத்த கேஸ் தயாராக....!  ரிசப்ஷன் இளைஞன் ஸ்நேகமாய் புன்னகைத்தான். “இப்போதான் டிவியில் உங்களைப் பார்த்தேன் ஸார் ஆல் தி பெஸ்ட் !” என்றான்.

“தேங்க்ஸ் ....!” அழுத்தமான சிரிப்புடன் சென்னையின் பயணத்திற்கு ஆயத்தமான மாறனைப் பற்றி சில வரிகள். 37- ன் தொடக்கத்தில் இருந்தான். காதல் திருமணம் செய்து அதே அவசரத்தில் விவாகாரத்தும் பெற்றவன். 

 

கடமை என்ற ஒன்றைத் தவிர பெரிதாக எதிலும் அக்கறை காட்டாத நேர்மையான அதிகாரி. சிபிஐயில் பத்துவருட அனுபவம். கைவைத்த அத்தனை கேஸிலும் வெற்றி. பிளைட்டில் இருந்து இறங்கி நேராக அவன் சென்ற இடம் சக்ராவின் இன்சார்ஜ்ஜில் உள்ள காவல் நிலையம். 

 

மாறன் தன் பெட்டியை டேக்ஸியிலேயே வைத்துவிட்டு ஸ்டேஷனில் நுழைந்தான். இரவு நேர ஆக்கிரமிப்பில் காவல் நிலையம் தள்ளாடிக் கொண்டு இருந்தது. உள்ளே நுழையும்போதே ஒரு வித சாராய நெடி. இரண்டு மூன்று பேர்களுடன் ஒருவித மெத்தனத்தில் இருந்தது ஸ்டேஷன். வெளியே வண்டியின் சப்தம். எஸ்.ஐ.வேந்தன் இரவு நேர ரோந்து சென்றுவிட்டு திரும்பி ஸ்டேஷனுக்குள் நுழைந்து மாறனைப் பார்த்ததும் அவசரமான ஒரு சல்யூட்டினை செலவழித்தான்.

“வாங்க ஸார்..!” “நான் எஸ்.ஐ.வேந்தன் ரோந்து போயிருந்தேன், வந்து ரொம்ப நேரமாச்சா ?!”

“இப்பத்தான் ஸ்டேஷன்லே....?!”

“இரண்டு பேர் லீவ், நைட் ட்யூட்டி பாக்கிறவங்க.....!”

“இட்ஸ் ஒ.கே……?!” “ எனக்கு கேஸ் பற்றியத் தகவல்கள் வேணும்!”. 

“ஒன் மினிட் ஸார்…..!”

 

இன்ஸ்பெக்டர் அறைக்குள் நுழைந்த கேசவன் இரு நிமிடங்களில் வெளிப்பட்டான். கூடவே சன்னமான ஒலியும்.  அவன் பின்னே தொத்திக் கொண்டு வந்தது. மாறன் முகச்சுழிப்புடன், வேந்தனை பார்க்க “ஸாரி ஸார். இன்ஸ்பெக்டர் ?” …” இதை உங்ககிட்டே கொடுக்கச் சொன்னார். !”

“அவர் எங்கே ?”  மாறனின் கேள்விக்கு வேந்தன் தலைகவிழ்ந்து கொள்ள அரைநொடியில் ஸ்டேஷன் இருளைப் பூசிக் கொண்டது. 

“ஜெனரேட்டர் இல்லையா ?”  மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு இருந்த ரைட்டரிடம் கேட்டான் மாறன்.

“ரிப்பேர் ஸார்.....! இது வழக்கம் இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களில் கரண்ட் வந்திடும்!”  ஆனால் ஏழாவது நிமிடத்தின் நொடியில் கரண்ட் வந்தது. மாறன் பைல்களைப் பெற்றுக் கொண்டு வெளியேறினான். 

“சார்......எஸ் ஐ சார் !” “இங்கே வந்து பாருங்களேன்” பின்பக்கத்தில் இருந்து இன்னொரு காக்கியின் பயம் கலந்த குரல் ! மாறனும் வேந்தனும் பின்பக்கம் ஓடினார்கள். வெளிச்சப் புள்ளியில் ஒரு ஆளுயர பெட்டி நின்றுகொண்டு இருந்தது. “ இதெப்படி இங்கே ?”

“தெரியலை ஸார் ?” “ அவசரத்துக்கு ஒதுங்கலான்னு வந்தேன் இங்கே இந்த பெட்டி கிடக்குது உள்ளேயிருந்து ஏதோ சப்தம் வருது ஸார் ?!” என்றார் திகிலுடன்.

 

மாறன் அந்தப் பெட்டியைத் திறக்கப் போக,  “இருங்க ஸார் உள்ளே இருந்து ஏதோ சப்தம் வருது எனக்கென்னவோ ? பாம் ஏதாவது ?!”

 

மாறன் தன் பாக்கெட்டில் இருந்து,  சிறிய மெட்டல் டிடெக்டர் போன்ற கருவியை எடுத்தான். பெட்டியை சுற்றிலும் ஆராய்ந்தவன்.  “ஒண்ணும் இல்லை திறக்கலாம்!” என்று அதையே கத்தியாக்கி திறக்க உள்ளிருந்தது ஒரு பள்ளிச்சீருடை அணிந்த சிறுவன். 

 

அவனின் கண்கள் அந்த வெளிச்சத்தில் மின்னின. அவன் மாறனைப் பார்த்தபடியே பெட்டியில் இருந்து வெளியே வந்தான். “உங்களை வரவேற்கிறேன்”  என்று சொல்லிவிட்டு ஒரு அதிர்வலைக்கு உட்பட்ட காகிதம் போல எம்பி மாறனின் மேல் சாய்ந்தான். 

“சார்....!”  “இந்தப் பையன் காணாமல் போனவர்களில் ஒருவன்!”  என்று தான் சற்று முன் மாறனிடம் தந்த பைலைப் புரட்டிக் காட்டினான். அசோக் என்று பெயரிடப்பட்டு இருந்த அந்த சிறுவனின் வாயின் கடையோரம் மெல்லிய ரத்தக்கோடு. 

 

ஸ்டேஷன் விழித்துக் கொண்டது. இன்ஸ்பெக்டர் மட்டும் இன்னுமும் வரவில்லை. அந்த பையனின் பாடியை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவிட்டு பெட்டியை பாரன்சிக்கில் சேர்க்க சொல்லி தன் வீட்டிற்குத் திரும்பினான் மாறன். படுக்கையில் சரிந்தான். மனதிற்குள் சற்று நேரத்திற்கு முன் வெல்கம் சொல்லி மரித்துப் போன அசோக் தெரிந்தான்.

 

தலையை ஒருமுறை சிலுப்பிவிட்டு கொண்டு வந்த பைலைப் பிரித்தான். நான்கு சிறுவர்களின் புகைப்படம் அதில், “எங்களை காப்பாத்திட மாட்டீர்களா ?” என்று கேட்பதைப் போல இருந்தது. பைலை ஸ்டடி பண்ணுவதில் தூக்கத்தை தொலைத்தான் மாறன்.

 

- தொடரும் 

 

- லதா சரவணன்.

 

 

Next Story

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #14

Published on 25/07/2022 | Edited on 04/08/2022

 

iraval edhiri

 

வெல்கம் டூ அலைகள் நியூஸ் சானல் நான் உங்கள் ஷோபா இன்னைக்கு நாம பேசப்போறே விஷயம் அவசியமானது மட்டுமல்ல கவனத்தில் கொள்ள வேண்டியதும் கூட, இக்கட்டான ஒரு காலகட்டத்தை கடந்து வந்தாலும் அதோட வடுக்கள் ஆழமாக இறங்கியிருக்கிறது. அது ஒரு பக்கம் பொருளாதாரம், மனசிதைவு, சிறுதொழில் இழப்புன்னு நிறைய பிரச்சனைகளைச் சந்தித்து இருக்கிறோம். மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நம்ம எல்லாருக்கும் பெரிய சவாலா அமைந்த பல விஷயங்களில் ஒன்று ஆன்லைன் பள்ளிக் கல்லூரிப் படிப்புகள்.

 


அதை பேஸ் பண்ணி ஆன்லைன் அலப்பறைகள்ன்னு நிறைய வீடியோஸ் நகைச்சுவையா வந்தாலும் உண்மையில் இந்த ஆன்லைன் படிப்புகள் மாணவர்கள் மத்தியில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. எதை அவர்கள் கைகளில் இருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதையே கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்ட பெற்றோர்கள் 
மன அழுத்தத்திற்கு நிறைய மாணவர்கள் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார் மனோதத்துவ நிபுணர் மருத்துவர் பிரபாகர் அவர்கள் வணக்கம் சார்.

 

பிரபாகர் அந்தக்கால கமலஹாசனை நினைவு படுத்தினார். வசீகரக் கண்களை மறைக்க கண்ணாடி அணிந்திருந்தாரோ என்னமோ ?! அடிக்கடி அதை மூக்கின் மேல் தூக்கிவிட்டு கொண்டது கூட ரசனையாய் இருந்தது. 

 

வணக்கம் என்று கேமிராவைப் பார்த்து கையை குவித்தவர். ஷோபாவைப் பார்த்து பேச ஆரம்பித்தார். எதையும் தொட்டு உணரும் நிலை உன்னதமானது இல்லையா ?! பல வார்த்தைகள் பேச முடியாத விஷயத்தை ஒரு மெளனமும் தொடுதலும் கொடுத்துவிடும் ஆனா ஆன்லைன் கலாச்சாரம் உள்ளே நுழைந்ததும், எல்லாம் மாறிப்போனது. ஒரு பெட்டிகடையை எடுத்துக்கோங்க அந்த தெருவில் உள்ள அத்தனை பேரையும் அந்தக் கடைக்காரருக்கு தெரியும், இன்றைய கூகுள் மாதிரி எந்த வீட்டில் யார் இருக்காங்க என்ன செய்யறாங்கன்னு நிறைய தகவல்கள் மனிதர்களைப் படித்து வைத்திருந்தாங்க ஆனா எல்லாமே ஆன்லைன் ஆனபிறகு, நான் ஆன்லைனில் வாங்கினேன் இப்போ எல்லாம் நேரா யாருப்பா நேரத்தை செலவு பண்ணிட்டுப் போறாங்க ரிலாக்ஸா எல்லாத்தையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வாங்கிக் கொள்றது எத்தனை செளகரியம்ன்னு பேசறது பெரிய பேஷனும் கெளரவமும் ஆகிட்டது. 

 

இப்போதைக்கு உலகமே இதில் தான் இயங்கிட்டு வர்றது இந்த வசதிகள் தப்புன்னு சொல்றீங்களா ஸார் ?

 

விஞ்ஞானம் வளரவளர மனிதம் சுருங்குது பார்த்தீங்களா ? வெறும் தொடுதிரையில் ரசிக்கும் பழக்கம் விடுத்து நாலு கடை ஏறி இறங்கி காய்கறியோ பொருளோ வாங்குங்க அங்கே எத்தனை வார்த்தைகள் வலம் வரும். நம்மையும் அறியாம எத்தனையோ கற்றுக் கொள்ளலாம் ஆனா அதுக்கெல்லாம் இப்போ நேரம் இருக்கலை. அதனாலதான் வளரும் சமுதாயம் வெளிப்படையா பேச தயங்குது. தனக்கு என்ன வேணுன்னு கூட கேட்கத் தெரியாத மனித குலம் உருவாகுது. அதைச் சுற்றிலும் விளம்பர விரல்கள் ஆக்கிரமிக்கிறது. என் தேவைகள் அடுத்தவனின் விருப்பமாக போகிறது. அப்பா அம்மா சொன்னா அநேக விஷயங்களில் எதிர்த்துப் பேசும் பிள்ளைகள் முகம் தெரியாத யாரோ ஒருத்தர் சொன்னா இதுதான் எனக்கானதுன்னு சட்டுன்னு எடுத்துக்கிற அளவுக்கு அவங்களைப் பழக்கப்படுத்தி வைச்சிருக்கு இந்த இணைய உலகம்
சரியா சொன்னீங்க சார் ? இதனால என்ன பாதிப்புகள் வருது.

 

இப்போதைக்கு பாதுகாப்பு நமக்கு வெளியே இல்லை நமக்கு உள்ளேயேதான் யாரும் யாரையும் கண்காணிக்க முடியாது தனி மனிதனோட ஒழுக்கம் மட்டும்தான் அவர்களை சீர்படுத்தும் கத்தியின் முனை கூர்மையாத்தான் இருக்கு அதன் பாகத்தின் பாதுகாப்பினை நாம உணர்த்தணும் அங்கே தவறுவதால்தான் நிறைய காயங்களை உள்ளே எடுத்துக்கிறோம். கண்பார்வைகள் கோளாறு அதிகமாகுது. நிறைய பிள்ளைகள் வாதத்தினால் பாதிக்கப்படுவதாக ஆர்த்தோ டாக்டர்கள் சொல்றாங்க. ஆடி ஓடி விளையாடி அடிபட்டு கத்துக்க வேண்டியவைகளைக் கூட இப்போ திரையில் பார்த்து சந்தோஷப்பட்டு ஒரு கற்பனையிலேயே வாழ்க்கை அமைவது அவர்களின் புலன்களை மட்டுமல்ல மனதையும் மந்தப்படுத்துகிறது. 

 

சமீப காலமா மாணவர்களின் தற்கொலை செய்திகள் அங்கொன்னும் இங்கொன்னுமா படிக்கிறோம், நான்கு பேர் காணாமல் போயிருக்காங்க இப்படி எத்தையோ பிரச்சனைகள் இதுக்கு தீர்வு என்னவாக இருக்க முடியும் ஸார். 

 

மறக்கமுடியாத இணைப்புகளை நாம பிள்ளைகளுக்கு உருவாக்கிக் கொடுத்தாச்சி, தவறுகளை இலகுவாக கத்துக்க சந்தர்ப்பங்களை வலைவிரிச்சி கொடுக்கிறோம். அவர்களுக்கு அக்கறையும், அன்பையும் கொடுக்கணும். இயந்திரங்களை விடவும் அப்பாவும் அம்மாவும் நமக்கு அநேக அன்பைத் தருவாங்கன்னு உணர வைக்கணும். கண்காணிப்பது தெரியாமயே அவங்க தப்பைச் சுட்டிக் காட்டணும். உண்மையைச் சொல்லணுன்னா அப்பாஅம்மாக்கு பயந்தாற்போல நாம பெத்த பிள்ளைகளுக்கும் பயப்படும் ஜெனரேஷன் நாமகாத்தான் இருப்போம். 

 

ரொம்ப அழகா சொன்னீங்க சார் ? நீங்க சொன்னாற் போல விளம்பரங்கள் இலவசங்கள் கவர்ச்சியான அறிவுப்புகள்னு எல்லாம் விற்பனை மயமாகவே போயிட்டது. யாரை எப்படி பயன்படுத்தலான்னு யோசிக்கும் மனநிலைக்கு எல்லாரும் வந்தாச்சு. இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒரு விளம்பர அறிவிப்பினைக் கேட்டேன். வளர்ந்து வரும் மாலில் ஒரு கேம் கம்பெனி தன்னோட கிளைகளை திறக்கிறாங்க. மாணவர்கள் தான் அவர்களின் டார்கெட். வர்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டி மாதிரி அறிவிச்சியிருக்காங்க. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு, கேம் ஷோல நிறைய பரிசுகள் இருக்காம். ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டுக்கள் கோலோச்சிக்கிட்டு இருக்கும் போது இந்த அறிவிப்பின் தாக்கம் எப்படியிருக்குன்னு நாம அடுத்த வீடியோவில் பார்க்கலாம் அதுவரையில் சைனிங் ஹாப் ஷோபா மற்றும் நம்ம வேலியபுள் கெஸ்ட் மருத்துவர் பிரபாகர் அவர்கள். திரை அணைக்கப்பட்டது. 

 

எங்கே ஆரம்பிக்க போறாங்க ? அந்த வீடியோகேம்.

 

மாயா தன் மொபைலை உயிர்ப்பித்து அந்த விளம்பரத்தைக் காட்டினாள். மாறன் அதை கவனித்தான். இந்தவாரம் நாம இங்கே போகணும் மாயா. 

 

ஏன் ஸார் ? ஸாரி சார் கூப்பிடவேண்டான்னு சொன்னீங்க இல்லை, ஏன் மாறன் ?

 

ஜஸ்ட் பார்க்கணுன்னு தோணுது. என் உள்ளுணர்வு எச்சரிக்கிறது நிச்சயம் அங்கே ஏதாவது ஒரு லீட் கிடைக்கலாம். மாயா இப்போ நாம போற இடம் சமீபத்திய துக்கத்தை விழுங்கியிருக்காங்க கொஞ்சம் பார்த்துப் பேசணும்.

 

என்னோட பேச்சு உபகரணங்களோடதான். அதனால் நீங்க கவலைப்படவேண்டாம். கார் அந்த காம்பெளண்டை தொட்டது. 

 

மாறன் அந்த வீட்டின் வாயிற்படியில் சற்றே தயங்கித்தான் நின்றிருந்தான். உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று பெரும் மனக்குழப்பம் எழுந்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு வாசல் முழுவதும் குத்தகைக்கு எடுத்திருந்த காலணிகள் எல்லாம் இப்போது காணாமல் போயிருந்தன. வீடு பிடிக்காத ஒரு மெளனத்தைப் பூசிக் கொண்டு இருந்தது. 

 

 

பக்கத்து பிளாட் பெண்மணி மெல்ல எட்டிப்பார்த்து மாறனைக் கண்டதும் சட்டென்று தலையை இழுத்துக் கொண்டாள். தனக்கேன் வம்பு என்பதாகக் கூட இருக்கலாம். 

 

நகர்ப்புறங்களில் நத்தையாய் இம்மாதிரிக் கட்டிடங்களுக்கு சுருண்டு கொள்ளும் மனிதர்களின் மத்தியில் மனிதத்தை எதிர்பார்ப்பது என்பது ஆழ்கடல் முத்தை தேடுவதைப் போலத்தான் அதில் கூட மனிதன் வெற்றிப் பெறுகிறான் ஆனால் மனிதத்தில் தோற்றுப் போகிறான். அட என்ன இப்படியே நடந்ததை நினைச்சிகிட்டே இருந்தா உங்க உடம்பு என்னாகுறது ? எழுந்து வேலை வெட்டியப்பாருங்கய்யா ? ன்னு கலயத்தில் கஞ்சியைக் கொண்டு வந்து நீட்டும் மனிதர்கள் இப்போது இல்லை. கிராமப்புறங்களில் கூட சற்று விநோதமான நகர கைகள் வளைத்துவிட்டது. 

 

கோலம் அடைத்த வாசலில் எல்லாம் அதன் வண்ணங்களைக் கலைப்பதைப் போல வாகனங்களின் கால்தடங்கள் பதிய துவங்கிவிட்டது. ஆதிச்ச நல்லூரைப் போல இதுநான் எங்கள் காலம் என்று நாம் ரசித்து வாழ்ந்த பக்கங்களை மண்ணுக்குள் தேடும் காலம் விரைவில் இல்லை என்ற நிஜம் நெஞ்சை அழுத்தியது. கூலர்ஸை கழட்டினான். 

 

தொட்டதும் திறப்பதைப் போன்று இருந்த கதவை அலட்சியம் செய்துவிட்டு அழைப்பு மணியை அழுத்தினான். பெரியவர் ஒருவர் வந்து கதவைத் திறந்தார். சாத்தலைங்க திறந்துதான் இருக்கு.

 

நான் மாறன் இவங்க மாயா இரண்டுபேரும்

 

 தெரியும் ஸார் அன்னைக்கு என் பேரனுடைய கடைசி நாளில் பார்த்தேனே ?!

 

மன்னிக்கணும். எனக்கு இந்த நேரத்தில் உங்களை வந்து தொந்தரவு செய்ய கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும் ஏற்கனவே நான்கு பிள்ளைகள் காணாமல் போயிருக்காங்க அதில் இரண்டுபேர் இப்போ உயிரோடவே இல்லை, ஒரு பையன் கிடைச்சும் பலனில்லை. 

 

தம்பி அதுக்கும் என் பேரனோட இறப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே ?! அவன் தற்கொலை இல்லை பண்ணியிருக்கான். அவர் அந்த வார்த்தையைச் சொல்லும் போது உடைந்து அழத் தயாராய் இருப்பதைப் போல இருந்தது. 

 

ஸார் நடந்து போன சம்பவத்துக்கும் உங்க பேரனின் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லாம இருக்கலாம் ஆனா இறந்த போன உங்க பையனுக்கும் அந்த பிள்ளைகளுக்கும் வயது ஒண்ணுதான் காணாமல் போன பையனும் இவனும் ஒரே பள்ளியில் தான் படிக்கிறாங்க. எனக்கு அவனோட அறையை மற்றும் அவனின் பொருட்களை கொஞ்சம் பார்க்கணும். 

 

அன்னையிலே இருந்து அது பூட்டித்தான் இருக்கு. நிற்க நேரமில்லாத என் மகனும் அவன் மனைவியும் கூட இப்போ இதோ பக்கத்து அறையில் முடங்கிக் கிடக்கறாங்க. திறந்துதான் இருக்கு போங்க என்று மாறன் அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிரில் இருந்த அறையைக் காட்டினார். மாறனும், மாயாவும் எழுந்தார்கள். 

 

அந்த அறையை நோக்கி கடக்கும் போதே மெல்லியதாய் முனகல் சப்தம். ஏங்க கார்டுலே கடனாயிடுச்சின்னு அவனைத் திட்டாதீங்க என்னோட நகை இருக்கு நான் வைச்சித்தர்றேன் இல்லைலேன்னா ஆபீஸ்லே லோன் போட்டுத் தர்றேன் பாவம்ங்க அவன்

 

சரிம்மா நான் திட்டலை இப்போ நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு என்று ஒரு ஆண் குரல் சமாதானப்படுத்தியது. பெரியவர் கதவைத் திறந்து உள்ளே சென்று, சிறிது நேரத்தில் அந்த குரலுக்குச் சொந்தகாரன் ஆன மனிதன் வெளியே வந்தான்.

 

நீங்க....

 

நான்தான் அவனோட அப்பா அவர் சுட்டிக்காட்டிய திசையில் சில தினங்களுக்கு முன்பு அதுவா இருந்த அச்சிறுவன் அவனாகச் சிரித்துக் கொண்டு இருந்தான். 

 

வாங்க என்று அறைக்குள் அழைத்துச் சென்றார் அவர். முகத்தில் சில நாட்களின் தாடி முளைத்திருந்தது. கண்களில் சொல்லொண்ணா சோம் துளிர்த்திருந்தது. 

 

அறைக்குள் நுழைந்தார்கள். மாயா தன் போனில் நோட்பேடைத் திறந்தாள். அறையை சுற்றிலும் ஒரு பார்வையிட்டு சில குறிப்புகளை எழுதிக் கொண்டாள்.

 

அறை முழுவதும் பணத்தின் செழுமை படர்ந்திருந்தது. விலையுயர்ந்த படுக்கை, கிரிக்கெட் பேட், சுவரோரமாய் கம்ப்யூட்டர் அதன் அருகில் சுவரின் பிளக்பாயிண்ட்டில் மொபைல் போன்களுக்கு உயிரூட்டும் சார்ஜர்கள். சுவரில் பெரியதாக கோலியும், டோனியும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். சிறு அலமாரியில் சில பொம்மைகள் அதன் நடுவில் பாடப் புத்தகங்கள் பக்கத்தில் ஒரு மொபைல் போன் அநாதையாய் கிடந்தது. 

 

இது....

 

என் பையனோட போன். ஆன்லைன் கிளாஸ்க்காக வாங்கித் தந்தது. 

 

போலீஸ் இதை எடுத்துப் போகலையா ?

 

இல்லை ஸார் அவன் இறந்தப்போ போலீஸ் வந்து விசாரிச்சப்போ இது எங்கே இருந்ததுன்னே தெரியலை நேத்து அவனின் ஈமக்காரியங்களுக்காக அவன் உபயோகிச்ச பொருட்களை எடுக்கும் போது கிடைச்சதுன்னு வேலைக்காரம்மா கொண்டுவந்து கொடுத்தாங்க. 

 

மாயா அதைக் கையில் எடுத்தாள் நான் காஸ்ட்லியான வஸ்த்து என்று அது சிரித்தது. சார்ஜர் பாதி தீர்ந்து போயிருக்க தொடுதிரையில் செக்யூரிட்டி வளையம். 

 

பாஸ்வேர்டு ....

 

எனக்கு தெரியாது ஒருவேளை என் மனைவிக்கு தெரிந்து இருக்கலாம் ஆனா எதையும் சொல்லும் மனநிலையில் அவள் இல்லை. ஒரே பையன்னு செல்லம் கொடுத்து அவனுக்காகவே கால நேரம் பார்க்காம உழைச்சோம் சார் ஆனா பாருங்க எல்லாத்தையும் .....!

 

உங்க வருத்தம் என்னாலே புரிஞ்சிக்க முடியுது. அவன் எப்படி ரொம்ப மூடி டைப்பா இல்லை நல்லா பேசுவானா ? 

 

ரொம்ப பேசமாட்டான் ஸார். அவனுக்கு பிறகு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள அவளோட உடல்நிலை ஒப்புக்கலை அதனால இவன்தான் எங்களுக்கு எல்லாமா இருந்தான். இங்கே நின்றால் எனக்கு அவன் நினைவு அதிகமாக வருகிறது என்று நகர்ந்தவர் உங்களுக்கு குடிக்க ஏதாவது என்று கேட்டார்.

 

வேண்டாம் ஸார் .... என்றனர் ஒரே குரலில் கோரஸாய் மாறனும், மாயாவும்.

 

அதேநேரம் வாசலில் ஒரு அரவம் கேட்டது. ஒரு சிறுவன் அங்கிள் கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தோம் உங்க வீட்டு பால்கனியில் எங்க பால் விழுந்திட்டது என்ற குரல். மாறன் அக்குரலில் ஈர்க்கப்பட்டு வெளியே வந்தான். 

 

பால்கனிப் பந்திற்காய் காத்திருக்கும் ஆர்வம். நீளமான டிராக்ஸூம், மஞ்சள்நிற டீ-சர்ட்டும் அணிந்திருந்தான். பேட்டை தாங்கியபடி அவன் சற்றே சாய்வாய் நின்றிருந்த விதம் மாறனுக்கு எதையோ நினைவூட்டியது. அந்த சிறுவனின் உருவம் அவனைப்போல தோன்ற மெலிதாய் ஒரு ஈர்ப்பு எட்டிப் பார்த்தது. விசாரிப்பதற்குள் தான் தேடி வந்த பொருளைப் பெற்றுக் கொண்டு தேங்க்ஸ் ஒன்றை உதிர்த்துவிட்டு கிளம்பினான் அவன்.

 

மாறன்...இங்கே வாங்களேன் மாயாவின் குரலில் வழிந்த டெசிபல் அவனை பின்னோக்கி நகர வைத்தாலும் மனம் முழுக்க அச்சிறுவன் வியாபித்திருந்தான்.
 

 

 

Next Story

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #13

Published on 13/07/2022 | Edited on 04/08/2022

 

tt

 

‘முட்டாள்’ என்ற வார்த்தைகளும் நீரஜ்ஜின் சாபமும் இணைந்து கொண்டதோ என்னவோ, ரதி டெக்ஸ்டைல்ஸின் வாசற்படி டைல்ஸ் தன் மடியில் மைக்கேலை வாங்கிக் கொண்டது. தன் கேபினின் ஜன்னல் வழியாக மதன் எட்டிப்பார்க்க கூடவே நீரஜ்ஜூன் கண்களும் சேர்ந்து கொண்டன. அவனின் உதடுகள் கோபத்திலும், அவமானத்திலும் நடுங்கிய மைக்கேலின் உடலைப் பார்த்து மீண்டும் ஒருமுறை ‘முட்டாள்’ என்று கூறிக்கொண்டன.
 
“யார் அவன்? உனக்குத் தெரியுமா நீரஜ்?”
 
நண்பன் சில மணித்துளிகளுக்கு முன்புவரையில் இந்த பகுதிக்கு நான் தேர்ந்த கமெண்டர்களில் ஒருவன். நேர்மை நியாயம் என்ற பேசிவிட்டு இப்போது அடிபடுகிறான்.
 
“பேசிப்பார்க்கலாமா?”
 
“வாய்பில்லை மதன் நான் நிறைய பேசினேன் அவன் எதற்கும் ஒப்புக்கொள்வதாக தெரியவில்லை, நன்றாக வாழ்ந்து கெட்டவன். பாதிப் பட்டினியிலும் நாணயம் போகவில்லை.”
 
“நீரஜ், இம்மாதிரி ஆட்கள் மனசாட்சிக்குப் பயந்தவர்கள், இவர்களை இலகுவாக வளைத்து விடலாம்.” மதன் தன் இண்டர்காமை எடுத்து யாரிடமோ பேசினான். தயங்கித் தயங்கி தன் காயங்களையும் கலைந்த உடைகளையும் பார்த்தபடியே வெளியேறிய மைக்கேலை நோக்கி இருவர் ஓடினார்கள். மேலும் தன்னை தாக்க வருகிறார்களோ என்று பயந்த அவன் ஓட எத்தனிக்கும் போதே,
 
“ஸார், உங்களை எம்.டி. கூப்பிடறார்.” என்றான் வந்தவர்களின் ஒருவன். மைக்கேல் நம்பாமல் பார்க்க, ரிசப்ஷனில் உட்கார வைக்கப்பட்டான். குளிர்பானம் ஐஸ்கட்டிகள் மிதந்து தரப்பட்டது.
 
“எடுத்துக்கோங்க, என்ன ஸார் எனக்குத்தான் தெரியாது. நீங்களாவது ஒரு வார்த்தை சொல்லக்கூடாது நான் எம்.டிக்கு வேண்டியவன்னு, என் வேலைக்கே உலை வைக்கப் பார்த்தீங்களே தம்பி?!”
 
பவ்யமாய் அருகில் நின்ற அவரை வியப்பு தடவிய கண்களோடு பார்த்தான் மைக்கேல். சற்று நேரத்திற்கு முன்பு ‘வேலைக்கு சேர வந்த நாளே தாமதம் இதில் அட்வான்ஸ் வேற கேட்கிறே? இதென்ன உங்கப்பன் கட்டிவைச்ச கடையா’ன்னு, கேள்வி கேட்டு வார்த்தை முத்தி, அடித்து வெளியே விரட்டிய மனிதர். கிழிந்த பொட்டலம்போல் தூக்கி வீசியவர். தனக்கு ஒரு பிரச்சனை என்றதும் மனிதர்கள்தான் சட்டென்று எத்தனை நிறம் மாறுகிறார்கள். மைக்கேல் ஏதும் பேசாமல் அமைதியாய் பார்த்தான். குளிர்பானத்தையும் தொடவில்லை.
 
அதே ஆசாமி, “சின்னவர் மேல கூப்பிடறார்.” என்று பவ்யமாக சொல்லிவிட்டு, ஒரு ஊழியருடன் முதல் மாடிக்கு அனுப்பினான். இதுவரையில் கண்களில் இகழ்ச்சியும் சக மனிதன் அவமானப்படுகிறானே என்ற அக்கறையின்றி உதட்டை கன்னத்தின் கடைக்கோடிவரை இழுத்து சிரித்த அனைவரின் கண்களிலும் இப்போது ஒருவித மரியாதையைப் பார்க்க முடிந்தது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனுக்கு கிடைத்த மரியாதை.
 
பணம் சட்டைப் பையினை மீறி வெளியே எட்டிப்பார்த்தபோது,
 
“சார்... சார் என்ன வேண்டும்?”
 
“மச்சி அங்க போகணும்டா நீ?!” கார் கதவை பவ்யமாய் திறந்துவிட்டு, “வெல்கம் யூ” தலைசரித்து வணங்கியதும், பில்லுக்கு மீறிய டிப்ஸ்க்குகாக அடிவயிறுவரை சரிந்து வணங்கியதும், ‘இதெல்லாம் அந்த மோசமான நாளுக்குப் பிறகு, அப்படியே தலைகீழாக மாறிப்போனதே ஏன்? நான் இப்படி சபிக்கப்பட்டேன்.’
 
“சார் நீங்க உள்ளே போகலாம்...” மீண்டும் அதே பெரியவர்?! மைக்கேல் உள்ளே நுழைந்தான்.
 
“ஹாய் மைக்கேல்?!” என்று மதனின் பின்னால் நின்று குரல் கொடுத்த ராஜீவ்வைப் பார்த்தவுடன் தனக்கு கிடைத்த மரியாதையை சட்டென்று புரிந்து கொண்டான் மைக்கேல். அன்று ஆரம்பித்த பழக்கம். இந்த இழிநிலையில் இருந்து தப்பிக்க இதைவிட்டால் வேறு இல்லைன்னு மனசுக்குள்ளே தோண ஆரம்பிச்சது.
 
“இரண்டு வருஷம் இப்படியே போச்சு அதற்குப்பிறகுதான் பிரச்சனையே?”
 
“அப்படியென்ன தொழில் பண்ணீங்க? கள்ளக்கடத்தலா?”
 
“இல்லை நவீன தொழில் நுட்பங்களோடு நூதனமா ஒரு திருட்டு.” சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான் மைக்கேல்.
 
தன் வீட்டின் முன்னால் வந்து நின்ற வேனைப் பார்த்து அம்மா அதிசயித்தாள், மைக்கேல் உள்ளே நுழைந்தான்.
 
“இந்த பிரிட்ஜ், கேஸ் ஸ்டவ் எல்லாம் கிச்சன்லே வைச்சிடுங்க. அப்பறம் அந்த மர பீரோவை எடுத்துட்டு புது பீரோவை வைங்க. சோபா இங்கே சுவரோரமா இருக்கட்டும். டிவி கூட, செல்ப்பில் வேண்டாம் சுவற்றில் அடிச்சிடுங்க...” தன் முன்னால் நின்ற நான்கைந்து இளைஞர்களுக்கு ஆர்டர் போட்டுக் கொண்டு இருக்கும் மைக்கேலை அம்மாவும், தங்கையுமாய் ஆர்வமாய் பார்த்தார்கள்.
 
“என்ன மைக்கேல் இது? அண்ணா புது டீவியா ஏதுன்னா காசு?”
 
“பிரண்ட் ஒருத்தனோட சேர்ந்து புதுசா தொழில் தொடங்கியிருக்கேன்.” வேலைகளை மேற்பார்வையிட்டபடியே சொன்னவன்.
 
“புது தொழிலா? மூலதனம் இல்லாம எப்படி மைக்கேல்?!” அம்மாவின் சந்தேகப் பார்வையைத் தவிர்த்துவிட்டு,
 
“உலகத்திலே எல்லாரும் கெட்டவங்களா இருக்கப் போவது இல்லைம்மா, நாம நல்லாயிருந்தப்போ நம்மால யாரோ ஒருத்தர் பயன்பட்டு இருப்பாங்களே அவங்களில் ஒருத்தன்தான் இவன். எப்படியோ நம்ம கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து போச்சு இன்னும் நல்ல லாபம் வந்தா சொந்தமா வீடு வாசல்லன்னு செட்டில் ஆகிடலாம் தங்கச்சிக்கு நல்ல இடத்திலே கல்யாணம் செய்யலாம். முதல்ல இந்தா பிடி இதிலே இருபத்தைந்தாயிரம் இருக்கு வீட்டுவாடகை கரண்ட் பில் எல்லாம் செட்டில் பண்ணு.” மைக்கேல் அம்மாவின் கரங்களில் திணித்துவிட்டு தங்கையிடம் ஒரு பார்சலைத் திணித்தான்.
 
“இனிமே கிழிந்ததை தச்சிக் கட்டிக்க வேண்டாம் ஐந்து சல்வார் இருக்கு அடுத்த மாதம் உன்கிட்டே பணம் தர்றேன். வேணுங்கிறதை வாங்கிக்க.” என்று புதியதாக கவர் பிரிக்கப்படாமல் இருந்த சோபாவில் அமர்ந்தான் மேலே உறையாய் இருந்த பிளாஸ்டிக் கவர் நசுங்கி சிணுங்கியது அவனின் மனதைப் போலவே?!
 
கண்ணாடித்தடுப்புகளுக்கு நடுவில் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான் மைக்கேல் அவனின் லேப்டாப்பின் தொடுதிரையில் பிரபல மொபைல் நெட்வொர்க் கம்பெனிகளின் டேட்டா பேஸ். அவற்றை எடுத்து எக்ஸலில் அப்பலோட் செய்துவிட்டு, க்ரூப் கால் கனெக்ட் செய்தான்.
 
“உங்க மொபைல்ல நம்ம குரூப்-க்கு தகவல்கள் எல்லாம் அனுப்பியிருக்கேன் இன்னும் நாலைந்து நாளுக்கு இந்த டார்கெட்ஸ் எல்லாம் முடிக்கணும்.”
 
“எஸ் ஸார்.” என்ற பதில்கள் கோரஸாக வந்தது.
 
ராக்கேஷ் மைக்கேலை நிமிர்ந்து பார்த்தான்.
 
“எஸ் ஆன்-லைன் சூதாட்டம்தான் சம்பந்தப்பட்ட நம்பர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்புவோம் அவங்க ரெஸ்பான்ஸ்ஸை பொறுத்து வலை விரிப்போம். எங்களோட டார்கெட் பேராசைப் பிடித்த ஆசாமிகள்தான். ஆன்லைன் விற்பனைகள் அதிகரிச்சிட்டு வந்ததால தங்களோட தொலைபேசி இணைப்புகளை அதில் குறிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் அந்த தளத்தில் செயல்படறதுக்காக கேஷ்பேக், சில பரிசுக்கூப்பன்கள் எல்லாம் அனுப்பி வைக்கப்படும், இதே போல் மொபைல் நெட்வொர்க்கில் அவங்க நெம்பரை ஹேக் பண்ணிட்டா அவங்க பங்கேற்ற தகவல்கள் அந்த போனின் எண் எந்த இடத்தில் எல்லாம் லாகின் ஆகுன்னு தெரியும்.
 
உங்களுக்கு ஒரு ஆபர் இருக்குன்னு இரண்டு மெசேஜ் போகும், பார்க்கலைன்னா கவர்ச்சிகரமான குரலில் ஒரு பெண்ணை பேச வைப்போம். பாதிபேர் அதிலேயே மயங்கி விவரங்களை கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. எங்களோட சைட்டில் விவரம் கேட்பாங்க, டம்மியா சில கேள்விகள் கேட்போம். குழந்தை கூட பதில் சொல்வதைப் போல இலகுவா, பத்தாவது கேள்விக்கு பிறகு அவங்க எங்க லிங்கை அவங்க நண்பர்களுக்கும் குழுக்களுக்கம் ஷேர் பண்ணச் சொல்லுவோம். எல்லாம் முடிந்து இறுதி கட்டத்தில் ஏதாவது ஒரு பெரிய பரிசை வின் பண்ணியிருக்கீங்கன்னு மெசேஜ் தருவோம். அந்த கங்கிராட்ஸ்க்கு மேல விழற கலர் பூக்கள் தான் நாங்க அவங்களுக்கு விரிக்கிற வலை.
 
இது ஏதும் தெரியாதவங்க அடுத்த கட்டத்துக்கு நகர்வாங்க. ஐபோனும், லேப்டாப், காஸ்ட்லி திங்க்ஸ் வெறும் கேள்விக்கு பதில் சொல்லி கிடைச்சா யார் விடமாட்டாங்க. இந்த போட்டிக்கு உள்ள டிமாண்ட்ஸை அவங்களுக்கு புரியாத வியாபார வார்த்தைகள் மூலம் அனுப்பி சப்மிட் பட்டனை கிளிக் பண்ணா?! இந்த பரிசை இத்தனை மணி நேரத்தில் நீங்கள் வெல்லலாம் அதற்கு ஒரு 20ஆயிரம் 30 ஆயிரமின்னு பொருளோட விலைக்கு ஏத்தாமாதிரி டெபாசிட் பண்ண சொல்வோம்.
 
சில பேர் பண்ணிடுவாங்க, அவங்களுக்கு அந்த பொருளின் மதிப்பில் கால்வாசி கூட இல்லாத இந்த டெபாசிட் பெரிசா தெரியாது. சிலர் எஸ்கேப் ஆயிடுவாங்க அவங்களை மறுபடியும் தொடர்பு கொள்வோம். எங்க வெப்சைட்டின் தகவல்கள் அனுப்புவோம் பாருங்க இந்த சைட்டில் நாங்க இதையெல்லாம் பெற்றுக்கொண்டோம் ஒரு 50 அல்லது 60 ஐடி கிரியேட் செய்து ரிவ்வியூஸ் பதிவு செய்து அவங்க நம்பிக்கையை அதிகப்படுத்துவோம். பணம் வந்ததும் அந்த ஐடி எங்க ஆப்பில் இருந்து அன்கன்சிடர் பகுதிக்குப் போயிடும் சர்வரோட கனெக்ட் செய்யவும் முடியாம, பணத்தை இழந்தவர்கள் அதிகம்.”
 
“இது தப்புன்னு உனக்குத் தோணலையா மைக்கேல்?!”
 
“சரி தப்பைப் பார்த்தா நான் எப்படி பிழைக்க முடியும். அதிலும் நான் யாரை ஏமாற்றினேன் பேராசை பிடித்த மனிதர்களை எல்லாமே இலகுவா கிடைச்சிடும்ன்னு குறுக்கு வழியில் முயற்சிக்கிற மனிதர்களை அவர்களை ஏமாற்றுவது எனக்குத் தப்பா தெரியலை. ஒரு விதத்தில் சந்தோஷமாகவே இருந்தது. எல்லாம் என் ஏரியாவிற்கு வந்த புது இன்ஸ்பெக்டரை சந்திக்கும் வரையில்!
 
ஆன்லைன் சூதாட்ட ஏமாற்றத்தில் இரண்டு பேர் தற்கொலை செய்திட்டாங்கன்னு பேப்பரில் நீயூஸ் படிச்சதும் மேற்கொண்டு இதை தொடறணுமான்னு தோணிச்சி. இரண்டு மனசா நான் தவிச்சிக்கிட்டு நின்னப்போ போலீஸ் விரிச்ச வலைன்னு தெரியாம அவங்களுக்கு எங்க டீமில் உள்ள பையன் கால் பண்ணிட்டான் ட்ரேஸ் பண்ணி அவனைப் பிடிச்சி என்னையும் அதே நேரம், நான் என் தங்கைக்கு கல்யாணம் நிச்சயம் செய்திருந்தேன்.
 
எத்தனை சுலபமா வளர்ந்தேனோ அத்தனை இழந்தேன் ராக்கேஷ், எல்லாம் காலேஜ் பசங்க அவங்க தப்பிக்க அப்ரூவர் ஆகி என்னை கை காட்டிடாங்க, நான் கொஞ்சம் அசால்ட்டா இருந்திட்டேன். டிராக்டிங் ஐடி லாக் பண்ணலை, நீரஜ் தன் வரையில் தப்பிக்கணுன்னு கம்பி நீட்டிட்டான். தங்கச்சியோட கல்யாணம் நின்னுபோச்சு அவ தற்கொலை பண்ணிகிட்டா அந்த ஏக்கத்திலேயே அம்மாவும் எல்லாத்தையும் இழந்திட்டேன் ராக்கேஷ்.”
 
மைக்கேல் கதறி அழுதான்.
 
“ஜெயிலுக்கு வந்தபிறகு கூட எனக்கு பிரச்சனைகள் ஓயலை. நீரஜ் பற்றிய உண்மையைச் சொல்லக் கூடாதுன்னு ஒரே மிரட்டல். இங்கே யாரையும் நம்ப முடியலை, யாரைப் பார்த்தாலும் என்னை கொல்ல வர்றா மாதிரியே இருக்கு. எப்படியோ தப்பிச்சிகிட்டே வர்றேன். நீரஜ் பற்றி வாய் திறக்கலை எல்லாமே என்னோட பிளான்னு ஒத்துக்கிட்டேன். குற்றத்தை ஒப்புக்கிட்டதாலே தண்டனை கொஞ்சம் குறைஞ்சது.”
 
“ம்...ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு சிக்கல்.” மைக்கேலின் தோளின் மீது ஆதரவாய் கை வைத்தான் ராக்கேஷ்.
 
“எவன் குடிய கெடுக்க இன்னமும் கண்ணு முழிச்சிட்டு இருக்கீங்க?” என்று லாட்டியில் கம்பியைத் தட்டியபடியே கன்னடத்தில் கேட்ட செக்யூரிட்டியைப் பார்த்துவிட்டு இருவரும் தங்கள் உறங்க எத்தனித்தார்கள். மனத்தைப் போலவே விழிகளும் மூடாமல் வெறித்தன.