Skip to main content

"என் கல்லறையின் மேல் அமர்ந்து கொண்டு..." லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #5

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

என்னைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் வெறும் வார்த்தைகளின் கோர்வைகளில் என் வாழ்க்கையின் வலிமைகளை உங்களுக்கு உணர்த்திட முடியுமோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் முயற்சிக்கிறேன், நாப்தலினும் பச்சை ரத்தமும் கலந்த வாசனை நாசியில் துளைக்க, உடைந்த ரத்தத்திட்டுகளின் ஓவியத்தீற்றல்களோடு நான் அந்த இருள் கலந்த கர்ப்பப்பையின் வெளியே பலங்கொண்டு இழுக்கப்பட்டேன். கசிந்த வெளிச்சத்தில் கூசியது கண்கள் மட்டுமல்ல என் குறி குறித்த சோதனையில் பெண் என்றதும் சுருங்கி முகங்களும் தான். முகச்சுழிப்பின் மூலத்தை அறிந்து கொள்ளும் அறிவினை இறைவன் படைக்கவில்லை அப்போது. தாயின் மார்ப்புத் தட்டையின் பாலைச் சுவைத்த எனக்கு செயற்கையாய் கண்ணாடி புட்டியின் ரப்பர் சுவை புகுத்தப் பட்டது. பசுவின் கதகதப்பை இழந்த கன்றுக்குட்டியானேன் மூன்றே மாதங்கள் அவள் இறைவனடி சேர்ந்துவிட்டாள் அவளின் ஸ்வாசமும், ஸ்பரிசமும், எனைப் பார்த்து வியந்த, ரசித்த கண்களும் வெகு சீக்கிரம் பிரிந்து சபிக்கப்பட்டதை கூட உணர முடியாமல் ஏதோ ஒரு கரங்களில் அடைக்கலமானேன்.

இயற்கையின் கோரம் நிவாரணம் கிடைக்காத புயலாய் எனைத் தாக்கத் தொடங்கியது. அந்த கதாநாயகன் கதாநாயகியைப் போல் என்னால் தனிமையில் இனிமை காண முடியவில்லை. என்னுள் நான் ..... நான்....நான் மட்டுமே மேலோங்கி நின்றேன் ஆணவத்தின் வார்த்தையாம் நான் அதனில் இருந்தே என் அனைத்தையும் எடுத்துக்கொண்டேன். தாயின் இறப்பு தந்தையை புதுமாப்பிள்ளை ஆக்கியது. பிஞ்சு அதிரங்கள் அமிர்தப் பால் அருந்தும் போது முகம் மூடிய அந்த முந்தானைச் சுகத்திற்கு ஆசைப்பட்டு, சிறு பட்டும் கை நிறைய இனிப்புகளுமாய் தந்தையின் கரத்தோடு மணப்பந்தலில் நான்! கல்யாண மேடையிலே இதென்ன யாரோ யார்யாரோ நகர்த்த மீண்டும் தனிமை. வந்தது அன்னையில்லை தந்தையின் மனைவி என்று காலதாமதமாகவே புரிந்தது. என் சிறு தேகம் அவளின் மடிச்சுகத்தில் அமிழ்ந்து கொள்ள தகித்தது. வளையல் குலுங்க பால் சோற்றை பிசைந்து தரும் தருணத்திற்காய் ஏங்கிய என் முன் பெரும்பாலும் நீட்டப்பட்டது சில பருக்கைகள் தான். முந்தானையின் முக்கிய நூலாய் தந்தையை மட்டுமே ஆமோதித்திருக்கிறாள் என் புது அன்னை. மீண்டும் நான்... நான்... என வாழ்வின் முழுமைக்கும் ஒருமையானேன். என்னைத் தோண்டியே தோண்டியே தனித்தனி பாத்திகளாய் அன்பை விதைத்துக் கொண்டேன்.
 

xf



எப்போ பாரு ஒரே சண்டை எனக்காக இவளையும் பார்த்துக்கோ கொஞ்சம் பணம் தர்றேன் என்று சில சலவை நோட்டுக்கள் அப்பாவிடம் இருந்து கைமாறிட நானும் அகதியாய் சென்றேன் அத்தையின் வீட்டிற்குள்! நான் அறியவில்லை வறுமையின் வீட்டில் நான்காவது தட்டு விருந்துண்ண போய் தரித்திர சாயம் பூசிக்கொள்வேன் என்று! மையமாய் கிழிந்த சிறு தையல் பூசிய உடைகளில் மறைய வில்லை பூரித்த உடல். கருயைிலும் காமம் பிறக்கும் போலும், வயதிற்கே உரிய வாளிப்பு சற்று மிதமிஞ்சி நிற்க, அடுத்த வீட்டு அண்ணன், பக்கத்துவீட்டு தாத்தா என்று உடைகளின் அடியில் எதையோ தேடிய விரல்களைத் தவிர்க்க முடியவில்லை, விடுங்களேன் வலிக்கிறது என்று கத்திய உதடுகள் சிறைபிடிக்கப்பட்டன, புரியாத பாஷைகள் புரிந்துகொள்ள முடியாத பயமுறுத்தல்கள் என்று நீண்டது என் இரவுகள். வசவுகளே வாழ்க்கையாகிப் போனதின் உச்சம்.

ஐந்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் நான் பெற்ற குறைந்த மதிப்பெண்கள் எதன் காழ்ப்புணர்ச்சியோ நிர்வாணமாக்கி நிற்கவைத்து விட்டாள் ஆதரவு அளிப்பதாக சொல்லிக்கொண்டு இருந்த அத்தை. அரைக்கம்பத்தில் பாதி கிழிந்தாடியப் பட்டத்தை விடவும் கொடுமையான நிலைமை. என் சிறு கைகளுக்கு சக்தியில்லை வெளிச்சமிட்டு இருக்கும் அந்த அங்கத்தை மறைக்க, பயந்து உடலைக் குறுக்கி சிறு சப்தத்திற்கும் மாடிப்படியில் அடியில் கோணிச் சாக்கிற்குள் புதைய சிகப்பு எறும்புகள் என்னை ஆசையோடு முத்தமிட்டது. தடித்த உடலோடு அந்த வலியை அனுபவித்தவர்களுக்குத்தான் தான் தெரியும். நரகம் பூலோகத்திலும் உண்டென்பது.நிராதரவாய் நின்றது இரண்டு முழு பத்து நிமிடங்கள் அதன் அதிர்வுகள் இப்போதும் கூட என் உடல் முழுக்க! ஏதோ ஒரு கண்கள் என்னை இம்சித்துக் கொண்டு இருப்பதைப் போலவே இருந்தது எனக்குள் இருக்கும் நான் என்ன தொலைத்திருக்கிறேன் என்றே தெரியாமல் தேடிக்கொண்டு!

பால்யம் மறைந்து பருவம் எய்திய நொடிகள் எல்லாம் கடந்து செல்லும் ஏக்கப்பெருமூச்சுகளையும், வக்கிரப்பார்வைகளையும் முதுகில் ஊறும் தேளாய் கடந்து என் பெண்மையைக் காக்கப் போராட வேண்டியிருந்தது. தேடிச் செல்லும் யாவும் எளிதில் கிடைப்பதில்லை ஆனால் நான் தேடலாமலேயே எனக்கு காதல் 
கிடைத்தது எனக்குள் இருக்கும் நான் அவனால் அழிந்தாள். ஊரையும் உறவுகளையும் எதிர்த்து எனைக் கரம் பிடித்த என் காதலனை நினைத்து தலை கொள்ளா பெருமை, தாரை வார்த்துக்கொடுக்க சிற்றன்னையுடன் அப்பாவும் இதுதான் உன் தம்பி தங்கைகள் என்று அவரின் ஆண்மையை பறைசாற்றிக் கொள்ள வந்திருக்க, ஆங்காங்கே தொட்டுப்பார்த்த அண்ணாவும் மாமாவும் முதிர்கண்ணியாவாள் கைப்பற்றலாம் என்று நினைத்த நினைப்பில் மண் விழ நான் அவரின் துணையானேன்.

 

hj



இனிமையாய் கழிந்த நாட்கள் கசப்பாக சில வருடங்கள் பிடித்தன. எந்த நிறம் மயக்கியது என்று சொல்லப்பட்டதோ அது இன்று அடிக்கும் கறுப்பாகிப் போனது, தெத்துப்பல்லின் கவர்ச்சியில் சிரிக்கச் சொல்லி ரசித்த கண்கள் இன்று கனலை மட்டுமே கக்கிக்கொண்டு இருந்தது?! மொத்தத்தில் வெறும் நான்கு வருடத் தாம்பத்தியத்தில் சாயம் போனது எங்கள் காதலின் சொல்லாடல்கள். தினந்தோறும் வெகு சீக்கிரமாகத் தோற்றுபோனேன் அவனுடனான அந்த வார்த்தைப் போராட்டத்தில்! நான் அவனிடம் கேட்டேன் இரு நொடிகளில் வாழ்விழக்கும் தீக்குச்சியா நம் காதல் என்று! அலட்சியப் பெருமூச்சோடு நீ என் அடிமை உனக்கு சோறும் துணியும் போடுவதே பெரியது இன்னும் சலுகைகள் எதிர்பார்க்காதே என்றான்.

சோதனை பெட்டிக்குள் கரையும் சோடியம் உப்பின் கரைசலானது என் வாழ்க்கை இனியென்ன செய்யப் போகிறேன் நான். அவன் வரையில் நான் நிழலாய் பின்தொடர வேண்டியவள், மனைவி என்ற அடையாளத்துடன் நகைகள் பூட்டப்பட்ட பட்டுப்புடவை சுற்றிய ஒரு அக்மார்க் அடிமை. அந்த நிழலை உடைத்து நிஜத்தை புரிய வைக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் ஏதோவொரு நிபந்தனைகளின் அடிப்படையில் அவனின் அன்பு படிக்கட்டுகளை அமைக்கிறது.
 

gh



ஏதோவொரு சூடான அமிலத்தின் எரிச்சலை விழுங்கும் தொண்டைக்குழியின் பயத்தைப் போல ஒரு விநாடி நிதானித்து சொல்கிறேன் நான் என் இறப்பின் செய்தியை! இதை படிக்கும் போதாவது உன் உதடுகளின் முகமூடியைக் கிழித்துவிட்டு உண்மையான புன்னகையை எனக்குத் தா காதல் கணவனே. ஆனால் என் தந்தையைப் போல நான் நசுக்கப்பட்ட குப்பைக் காகிதத்தின் கிறுக்கலாய் அவன் வரையில் சிதறிய கண்ணாடிச் சில்லுகளாய்! அழகாய் ஒதுக்கிவிட்டு புதியவேடம் போடத் தொடங்கிவிட்டான். இன்னொரு விட்டில் பூச்சியத் தேடி! பிறப்பில் விலகிய இருட்டு இறப்பில் என்னை கட்டிக்கொண்டது. நான் இதோ பற்றியெரியும் அந்த சுடுகாட்டின் என் கல்லறையின் மேல் அமர்ந்து கொண்டு உறங்கும் பிணங்களையும் அதை புதைக்க வரும் எதிர்கால பிணங்களின் அலறல்களையும் ரசித்துக் கொண்டு இப்போது என்னுள் வளர்ந்த நான் முழித்துக் கொண்டாள். மறுபடியும் உடல் அழிந்த ஆன்மாவிற்குள் தன் தேடுதலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

என் பிரதிபலிப்பாய் இன்னும் நிறைய நான்கள் இருக்கிறார்கள் அவர்களை தயவு செய்து வளரவிடாதீர்கள்.

 

Next Story

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய பரபரப்பு கடிதம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Wife who lost her husband passed away in Chennai

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரும், கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பிரவீனும் ஷர்மிளாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களை மறந்த இவர்கள் தங்களது காதலைத் தொடர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அவர்கள் உடனடியாக ஷர்மிளாவுக்கு தனது சொந்த சமூகத்திலேயே திருமண வரன் பார்த்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, இச்சம்பவம் குறித்து தன் காதலனான பிரவீனிடம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தக் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய ஷர்மிளா, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன் காதலன் பிரவீனை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஷர்மிளாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி 2 மாதங்கள் வெளியூரில் வசித்துவந்த நிலையில் ஜனவரி மாதம் தான் பள்ளிக்கரணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஷர்மிளாவின் அண்ணனான தினேஷ் என்பவர் பிரவீனை கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பிரவீன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அன்றைய தினம் தனது மனைவி ஷர்மிளாவுடன் இருந்த பிரவீன், இரவு 9 மணியளவில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், தனது 4 நண்பர்களுடன் வந்து பிரவீனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இந்தக் கொலை வெறி தாக்குதலில் பிரவீன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பிரவீன் கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவி ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், வெட்டுக்காயங்களுடன் இருந்த பிரவீனின் உடலைப் பார்த்து அழுததில் அந்த இடம் முழுக்க சோகத்தில் மூழ்கியது.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது, டாஸ்மாக் கடை வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 4 நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில், இந்த வழக்கை துரிதப்படுத்திய பள்ளிக்கரணை உதவி ஆணையர் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், பிரவீனை கொலை செய்த பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5  பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஷர்மிளா, தனது கணவன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரவீன் கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், " குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான ஷர்மிளாவின் பெற்றோர் துரை - சரளா மற்றும் அவரது அண்ணனான நரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, சிறையில் இருக்கும் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் ஏப்ரலில் பெயிலுக்கு விண்ணப்பித்த நிலையில் இது ஷர்மிளாவுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர். அதே நேரம், தனது கணவரை இழந்த துக்கம் தாளாமல் இருந்த ஷர்மிளா போலீசாரின் அலட்சிய போக்கால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத சமயத்தில்  தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என்று எண்ணிய ஷர்மிளா, கடந்த 14 ஆம் தேதியன்று அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், ஷர்மிளாவுக்கு கழுத்து எலும்பு, நரம்பு, உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷர்மிளா, கடந்த திங்கட்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய கணவன் கொலை செய்யப்பட்ட 2 மாதங்களில் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.

அதே வேளையில், ஷர்மிளா தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது கணவர் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாகவும், தன் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என்று ஷர்மிளா தன்னுடைய குடும்பத்தார் பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், பிரவீனின் மாமியார், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.