Skip to main content

"இந்த பிள்ளைகளுக்கு புரியலையே நிழலை நிஜம்ன்னு நம்பி அதுங்களும் ஏமாந்து..." லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #3

Published on 21/09/2019 | Edited on 23/09/2019


நாளுக்கு மூன்று முறை வந்து விட்டு செல்லும் பேருந்திற்காக அமைக்கப்பட்ட அந்த நிறுத்தத்தில் பள்ளி முடித்து பக்கத்து சிற்றூருக்கு செல்ல புத்தக மூட்டைகளோடு யுவதிகளும் அவர்களை ரசித்துக் கொண்டு இல்லாத மீசை துடிக்கும் காளைகளும், வயோதிகத்திலும் இதுதான்யா காதல் என்று காலில் விழும் அளவிற்கு கூன் வளைந்த தன் மனைவியை கைப்பிடித்து சாலை கடக்கும் அந்த வயோதிகரும், பள்ளிப்பிள்ளைகளை ஈர்ப்பதற்காகவே தின்பண்டங்களைத் தள்ளுவண்டியில் சுமந்தவர்களையும் தாண்டி என் கண்களுக்கு அந்த ஒடிசலான பெண் தெரிந்தார். சுருங்கியதைப் போன்ற சிறு உருவம், கொஞ்சம் அழுத்திப் பிடித்தால் உடைந்துவிடும் என்பதைப் போன்ற தேகம்.

 

ui



கவிதா தாகத்துக்கு ஏதாவது சாப்பிடறீயா என்று அருகிலிருந்த பெண்மணி கேட்க கேள்வி காற்றில் கரைந்து போனதே தவிர அந்த கவிதா என்று விளிக்கப்பட்ட உருவத்திற்கு கேட்கவில்லை, அவரின் கண்கள் எதையோ வெறித்துப் பார்த்தது. அழுதது கண்களில் நீர் வற்றிப் போயிருக்கும் போலும், கன்னங்கள் மட்டும் அழுகை கரையின் ஓவியங்களைச் சுமந்திருந்தது. உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினார் அந்த கவிதா. அதேநேரம் நிறுத்தத்தில் வந்து நின்ற பேருந்து புழுதியோடு சில பிரயாணிகளையும் துப்பியது பல்வேறு அலுவல்களில் கூட்டம் கலைய நான் அருகில் உள்ள மரபெஞ்சில் அமர்ந்தேன். பாவடை தாவணியில் ஒரு இளம்பெண் அவளை வாசம் பிடித்துக் கொண்டே ஒரு வாலிபன். காதலர்கள் தங்களைத் தவிர சுற்றத்தை உணர்வதில்லை, காதல் மொழி பேசிக்கொண்டு இருக்க அவன் அந்த பெண்ணிற்கு அருகில் நகர்ந்து அவளின் கைகளைப் பற்றினான். அவளும் பயத்தில் சற்றே நகர அங்கு மெளனமாக காதல் நாடகம் ஒன்று அரங்கேறிக்கொண்டு இருந்தது. நம் உறவு இல்லாதவரையில் எல்லாமே வேடிக்கைதானே! எனக்குரிய வண்டி வருகிறதா என்று திரும்பிப் பார்ப்பதற்குள் பளாரென்ற ஒரு சப்தம் எழுந்து நிற்கவே தெம்பில்லாத மெளனத்தை போர்வையாய் போட்டிருந்த அந்த கவிதாவின் மென்கரங்களில் சிக்கிக் கொண்டு இருந்தான் அந்த வாலிபன்.

ஏண்டா உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையாடா படிக்கிற பிள்ளைங்க மனசை மாத்தி அவங்க எதிர்காலத்தையே பாழாக்குறீங்களே, பெத்தவ எத்தனை நம்பிக்கையோட அனுப்பியிருப்பா ஏமாத்தாதேடா. ஆயிரம் வசவுகள் அத்தனை வன்மம் அதுவும் அந்த பையனை போட்டு புரட்டி எடுக்கும் அளவிற்கு அந்த சிறு உடலில் சக்தியிருக்கிறதா? எனக்கென்னவென்று இருந்த அந்த இடத்தில் இன்சன்ட்டாய் ஒரு கூட்டம். விடு கவிதா எல்லாரும் பாக்குறாங்க. இதென்ன ரோட்லே அசிங்கமா என்று கடிந்து கொண்டு அவரைப் பிடித்து இழுக்க முயன்று தோற்றுபோக சட்டென்று கைகால்கள் வெட்டி இழுத்தது அளவுக்கதிகமான ஏதொவொன்று துடிப்பாய் நடுத்தெருவில் வெளியாகிக்கொண்டு இருக்க, எதிர்பட்ட வாகனத்தில் அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன் நான். அவங்க ஏதோ மனத்தாங்கல்ல இருக்காங்க யார் பேரையோ சொல்லி முணங்குறாங்க, இப்போயிருக்கிற உடம்பு கண்டிஷன்லே தூக்கமருந்து கொடுத்திருக்கும் ஆனாலும் அவங்க உடம்பு எடுத்துக்க மறுக்குது சில டெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கேன் என்று டாக்டருக்கு உரிய கடமையோடு அவர் செல்ல, மனப் பாரம் தாங்காமல் அரற்றிக்கொண்டே மருந்தின் மயக்கத்தில் உறங்கினாலும் அந்த பெண்மணியின் முகம் வேதனையை தான் எழுப்பியது மயக்க மருந்து கூட அவருக்கு மனநிம்மதியைத் தரவில்லை போலும், என்னம்மா ஆச்சு இவங்களுக்கு?

நான் செய்த உதவிகள் என்மேல் நம்பிக்கை வரவழைத்திருக்கும் என்று நினைக்கிறேன் மடை திறந்த வெள்ளத்தைப் போல் உடனிருந்த பெண்மணி வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தார். எல்லாம் அவளோட தலைவிதி, சில பிறப்புகள் எப்போதுமே சுகப்படாது. ஆளும்பேருமா இருக்க இங்கனவந்து அநாதையா படுத்துக் கிடக்கிறாளே இவதான். கவிதா அதான் அவ பேரு பிறப்பும் அப்படி சீரும் சிறப்புமில்லை ஆறாவது பொண்ணு எப்படியாவது தாட்டிவிடனுமின்னு விருதா குடிகாரனுக்கு கட்டிக்கொடுத்திட்டாங்க, ஆணும் பொண்ணுமா கண்ணுல ஒத்திக்கிறாமாதிரி இரண்டு புள்ளைங்க அதுங்க வாழ்க்கையைக் காக்க அவளும் எவ்வளவோ போராடினா தீப்பெட்டி ஒட்டி பிள்ளைக்கு போட்ட காதுகம்மலும், கொலுசும் கூட கழட்டிட்டுப் போயிட்டான் அவ புருஷன். பையன் தலையெடுத்து காப்பாத்துவான்னு பார்த்தா அப்பனைப் போல பிள்ளைன்னு அதுவும் ஊதாரியா திரிஞ்சி பத்தொன்பது வயசிலேயே எவளையோ இழுத்துகிட்டு ஓடிடுச்சி பொட்டைபிள்ளைதான் எதிர்காலன்னு இருந்தா?

 

ghjk



ம்... ஏன் அந்த பொண்ணுக்கு என்னாச்சு... சரியா படிக்கலையா?
படிப்பா அதெல்லாம் கணக்கிலடங்காமத்தான் இவ சக்திக்கு உடம்பையே செருப்பா தச்சிப்போட்டு என்ஜினியருக்குப் படிக்கவைச்சா பயபுள்ளை ஒழுங்கா சோறுகூட திங்காது காலேஜீ வண்டி வரும்போது சோத்தை ஊட்டிகிட்டு செலவுக்கு பணம் கொடுத்து தேராய் அலங்கரிச்சுப் பார்த்தா. அது என்னடான்னா கூலிவேலை பார்க்குறே ஒருத்தனைக் கட்டிகிட்டா, இந்த சினிமாவிலே எல்லாம் காட்டுவாங்களே தாலியைக் கட்டிகிட்டு அவங்க அவங்க வீட்டுலே கமுக்கமா இருந்துட்டாங்க இரண்டுபேரும்.

ரிஜிஸ்டர் மேரேஜா...?

அந்தக் கண்றாவிதான், ஏந்தம்பி நீயும் சின்னவயசுதானே வயித்தைக் கிழிச்சிப் பெத்துப்போடும் போது இந்த பாழாப்போன காதல் எங்கேப்பா போச்சு, மூச்சிலிருந்து, பேச்சிலிருந்து, பசியறிந்து சோத்தைப் போட்டு, கூழோ கஞ்சியோ ஊத்தி வளர்த்தாலும் உன்னையே தானே நம்பி கிடந்தா கட்டினதுதான் சரியில்லை பெத்த ஒண்ணாவது ஒழுங்கா இருக்கவேண்டாம். நாலுபேரு பாக்க எனக்கு ஆத்தா வேணான்னு விடுதலைப்பத்திரத்தில் கையெழுத்து போட்டாளே அந்த கையெழுத்தை கத்துகொடுத்தது கூட பெத்தவதானே அவ உழைப்புதானே உங்களையெல்லாம் நாங்க காதலிக்க வேண்டான்னு சொல்லலை அதை மறைத்து ஏன் பெத்தவளை ஏமாத்தனுன்னு கேக்கிறேன். பசியாத்தி வழியனுப்பி வைக்கிறவ நீ படிக்கிறேன்னு தானே நம்பிக்கையா இருப்பா நீ இப்படி இரவல் வாங்கின உடம்பும், உடையுமா அலங்கரிச்சு இன்னொருத்தன் கண்ணுக்கு விருந்து கொடுக்கிறேன்னு எந்த தாயாவது நினைப்பாளா?! காதல் என்ன தம்பி காதல் நேர்மையில்லாத எதுவும் சுயநலம் தலைவிரித்தாடும் எதுவும் நிலைக்காது. அதுங்களைச் சொல்லியும் தப்பில்லை தம்பி இன்னைக்கு உலகம் துரோகத்தையும், ஏமாற்றையும் தானே சொல்லித்தருது. மலிவு உணர்வைகளைத் தானே தட்டில் வைச்சி ஊட்டிவிடுது. அதுக்குத் தகுந்தாமாதிரிதானே புத்தியும் இருக்கும்.

அந்த பொண்ணு....

இதோ மூணாவது தெருவில எங்கே ஆத்தா வந்து தன்னை கூட்டிட்டுப் போயிடுவாளோன்னு அந்த பையன் பின்னாடி ஒளிஞ்சிகிட்டு கிடக்கா. இந்த முட்டாள் சிறுக்கி நாலுநாளா பச்சைத் தண்ணி பல்லுலே ஊத்தாம விட்டுத் தொலைன்னு சொன்ன உறவுகளை மதிக்காம பிள்ளை என் பிள்ளை என்னைப் பார்த்தா ஓடிவந்திடுவான்னு குருட்டுத்தனமா நம்பி வந்திட்டா, இரண்டு நாளைக்குப் பிறவுதான் அந்த பொண்ணு முகத்தையே பார்த்தோம். பெத்தவ ரோட்டிலே அநாதையா இருக்க, யார் யார் காலிலே விழுந்து ஒருதடவை எம்பிள்ளையை பார்த்திடறேன்னு கெஞ்சிக்கிட்டு இருக்க அவ காதல் மயக்கத்தில அவன் கூட கல்யாணத்திற்கு தயாராயிட்டா. அவங்க சனங்க இழுத்து தள்ளினாங்க அப்ப கூட ஒருவார்த்தை கேட்கலை தம்பி. மனசு உடைஞ்சி போயி வந்திட்டா பெத்தவ இல்லையா இங்கே நடந்ததைப் பார்த்ததும் அடக்கி வெச்சதெல்லாம் வெளியே வந்திட்டது. இப்படித்தானே அவளோட பொண்ணையும் இன்னொருத்தன் மயக்கியிருப்பான்.

 

hj



இந்த பிள்ளைகளுக்கு சினிமாவைப் பார்த்து ஆசை வருது. இந்தப் படத்தில இவ கிடைக்கலைன்னு செத்தவன்னு, நாக்கை அறுத்தவன், கட்டிப்பிடிச்சிகிட்டு மலையிலிலே இருந்து விழுந்து செத்தவன் எல்லாம் அடுத்த படத்திலே இன்னொருத்தி கூட ஆடிப்பாடுடப் போயிடுவான் படிக்காத சிறுக்கி எனக்கு புரியுது. இந்த பிள்ளைகளுக்கு புரியலையே நிழலை நிஜம்ன்னு நம்பி அதுங்களும் ஏமாந்து பெத்தவங்களையும் இல்லை ஏமாத்துங்க. என்னசெய்யறது கலிகாலம். படுத்திருந்த அந்த பெண்மணியின் நினைவில் என்ன தோன்றியதோ மீண்டும் அவர் கண்களில் கண்ணீர் உடல் வெட்டி வெட்டி இழுக்க அந்தம்மாள் மருத்துவரைக் கூப்பிட ஓடினாள். செத்த பாத்துக்கோங்க என்று! நான் கண்ணிமைக்காமல் அந்த தாயையே பார்த்துக் கொண்டு இருந்தேன். சுயநலங்கள் வஞ்சித்த கலைந்த ஓவியமாய் அவர்.  மகளை மீட்டெடுக்கும் வைராக்கியம் தோற்றுப் போனதையும், நெஞ்சின் லயமாய் துதித்த மகளின் ஏமாற்றத்தையும் தாங்காமல் அந்த இலக்கற்ற விழிகள் ஒரே திக்கில் நிற்க பொங்கிய கண்ணீரோடு நான் திரும்பியும் பாராமல் வெளியேறினேன். 

 

Next Story

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய பரபரப்பு கடிதம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Wife who lost her husband passed away in Chennai

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரும், கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பிரவீனும் ஷர்மிளாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களை மறந்த இவர்கள் தங்களது காதலைத் தொடர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அவர்கள் உடனடியாக ஷர்மிளாவுக்கு தனது சொந்த சமூகத்திலேயே திருமண வரன் பார்த்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, இச்சம்பவம் குறித்து தன் காதலனான பிரவீனிடம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தக் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய ஷர்மிளா, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன் காதலன் பிரவீனை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஷர்மிளாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி 2 மாதங்கள் வெளியூரில் வசித்துவந்த நிலையில் ஜனவரி மாதம் தான் பள்ளிக்கரணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஷர்மிளாவின் அண்ணனான தினேஷ் என்பவர் பிரவீனை கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பிரவீன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அன்றைய தினம் தனது மனைவி ஷர்மிளாவுடன் இருந்த பிரவீன், இரவு 9 மணியளவில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், தனது 4 நண்பர்களுடன் வந்து பிரவீனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இந்தக் கொலை வெறி தாக்குதலில் பிரவீன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பிரவீன் கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவி ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், வெட்டுக்காயங்களுடன் இருந்த பிரவீனின் உடலைப் பார்த்து அழுததில் அந்த இடம் முழுக்க சோகத்தில் மூழ்கியது.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது, டாஸ்மாக் கடை வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 4 நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில், இந்த வழக்கை துரிதப்படுத்திய பள்ளிக்கரணை உதவி ஆணையர் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், பிரவீனை கொலை செய்த பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5  பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஷர்மிளா, தனது கணவன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரவீன் கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், " குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான ஷர்மிளாவின் பெற்றோர் துரை - சரளா மற்றும் அவரது அண்ணனான நரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, சிறையில் இருக்கும் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் ஏப்ரலில் பெயிலுக்கு விண்ணப்பித்த நிலையில் இது ஷர்மிளாவுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர். அதே நேரம், தனது கணவரை இழந்த துக்கம் தாளாமல் இருந்த ஷர்மிளா போலீசாரின் அலட்சிய போக்கால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத சமயத்தில்  தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என்று எண்ணிய ஷர்மிளா, கடந்த 14 ஆம் தேதியன்று அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், ஷர்மிளாவுக்கு கழுத்து எலும்பு, நரம்பு, உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷர்மிளா, கடந்த திங்கட்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய கணவன் கொலை செய்யப்பட்ட 2 மாதங்களில் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.

அதே வேளையில், ஷர்மிளா தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது கணவர் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாகவும், தன் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என்று ஷர்மிளா தன்னுடைய குடும்பத்தார் பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், பிரவீனின் மாமியார், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.