Skip to main content

"உன் பதவி கிரீடத்தை வெளியே கழட்டி வைத்துவிட்டு வா என்றார் அம்மா" - பெப்சி முன்னாள் சி.இ.ஓ இந்திரா நூயி | வென்றோர் சொல் #44

Published on 16/12/2021 | Edited on 28/12/2021

 

Indra Nooyi

 

"இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற நான் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளேன். இந்தியாவில் என்னுடைய வளர்ப்பு சிறப்பாக இல்லாதிருந்தால் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. எனவே இந்தியாவிற்கு நான் அதிகம் நன்றி சொல்லவேண்டும்" எனக் கூறி நெகிழ்கிறார் இந்திரா நூயி.

 

இந்திரா நூயி... உலகின் பல நாடுகளில் வணிகக்குடை விரித்து சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கும் அமெரிக்க குளிர்பான நிறுவனமான பெப்சி நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. சென்னையில் சாதாரண நடுத்தர பின்புலமுடைய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, 12 ஆண்டுகள் பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகப் பதவி வகித்தவர்.

 

சுதந்திர இந்தியாவிற்கு எட்டு வயதாக இருக்கும்போது கிருஷ்ணமூர்த்தி - சாந்தா கிருஷ்ணமூர்த்தி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் இந்திரா நூயி. இன்றைய இந்தியச் சூழல் பெண்களுக்கு அதிகம் சுதந்திரம் அளிக்கக்கூடியதாக இருந்தாலும், அன்றைய சூழல் அவ்வாறாக இருந்திடவில்லை. அதிக கட்டுப்பாட்டு வரைமுறைக்குள் பெண்களை சமூகம் திணித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், சாத்தியமுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடைத்து வெளியே வந்திருக்கிறார் இந்திரா நூயி. அதற்கு அவர் குடும்பமும் பெருமளவில் ஒத்துழைப்பு நல்கியிருக்கிறது.

 

சென்னையில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இந்திரா நூயி, எம்.பி.ஏ படிப்பை கொல்கத்தாவில் படித்தார். பின், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை, மும்பையில் ஜான்சன் ஜான்சன் நிறுவனத்தில் வேலை எனத் தன்னுடைய தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கியிருந்த இந்திரா நூயிக்கு, 1978ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. அதையடுத்து, அமெரிக்கா சென்ற இந்திரா நூயி, பப்ளிக் அண்ட் பிரைவேட் மேனேஜ்மெண்ட் பிரிவில் முதுகலை பட்டம் பெறுகிறார். மோட்ரோலா உட்பட சில நிறுவனங்களில் வேலை பார்த்துவந்த இந்திரா நூயி, 1994ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அங்கிருந்து தலைமை நிதி அதிகாரி, இயக்குநர்கள் குழுவில் பொறுப்பு எனப் படிப்படியாக வளர்ந்து 2006ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.

 

"இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து எட்டு ஆண்டுகள் கழித்து நான் பிறந்தேன். காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு அப்போதுதான் புது நாடாக நாம் வளர்ந்து கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில்தான் கல்வி, வேலை வாய்ப்புகள் நோக்கி நம் பெண்கள் நகர ஆரம்பித்திருந்தனர். என்னுடைய குடும்பம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அதே நேரத்தில் கட்டுப்பாடுகள் நிறைந்த கூட்டுக்குடும்பம். எங்கள் குடும்பத்தின் சிறப்பு என்னவென்றால் ஆண், பெண் இருவருக்கும் சம உரிமை அளிக்கப்படும். என்னுடைய பேத்திகள் நிறைய படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று எங்களுடைய தாத்தா விரும்பினார். அதனால் எங்களுக்கு நிறைய சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் அது கட்டுப்பாடுகளுடன் கூடிய சுதந்திரமாக இருக்கும். நாங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்பினோமோ அதற்கான ஒத்துழைப்பு எங்கள் குடும்பத்தினரிடம் இருந்து கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் அது பெரிய விஷயம்தான். என்னுடைய அக்கா என் வாழ்வில் மிக முக்கியமானவர். அவரைப் பார்த்துதான் நான் என்னை வளர்த்துக்கொண்டேன். உண்மையில் சொல்லவேண்டுமானால் பெண்கள் திறமைசாலிகள். அவர்களது திறமைகளைச் சரியாகப் பயன்படுத்தாமல் ஏன் நாம் வீணடிக்க வேண்டும்.

 

Indra Nooyi

 

பெண்கள் பெரிய பொறுப்புகளுக்கு வர ஆரம்பித்துவிட்டாலும் குடும்பம் சார்ந்து நிறைய கட்டுப்பாடுகள் அவர்களுக்கு உள்ளன. பெப்சி நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயத்தை என் அம்மாவிடம் கூற ஆவலுடன் வீட்டிற்கு வந்தேன். அம்மா உங்களுக்கு ஒரு நல்ல சேதி கொண்டுவந்திருக்கிறேன் என்று கூறிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தபோது, எந்தச் செய்தியாக இருந்தாலும் பரவாயில்லை. முதலில் பால் வாங்கிவிட்டு வா. நாளை காலைக்கு பால் இல்லை என்றார். நான் உடனே அருகில் இருந்த கடைக்குச் சென்று பால் வாங்கிவந்தேன். நான் பெப்சி நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அந்த விஷயத்தை ஆவலுடன் உங்களிடம் கூறவந்தால் முதலில் பால் வாங்கிவிட்டு வா என்கிறீர்களே... என்ன மாதிரியான அம்மா நீங்கள் என்று அவரிடம் கூறியதற்கு அவர் ஒரு பதில் கூறினார். வெளியே நீ பெப்சி நிறுவனத்தின் தலைவராக இருக்கலாம். ஆனால் இந்த வீட்டிற்குள் நுழையும்போது நீ மனைவி, மகள், மருமகள், குழந்தைக்கு தாய் மற்றும் பல. அந்தப் பொறுப்பை வேறு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே அந்தக் கிரீடத்தை வீட்டிற்கு வெளியே கழட்டி வைத்துவிட்டு வா என்றார். உண்மை என்னவென்றால் என் வாழ்க்கையில் அதை நான் ஒருபோதும் கிரீடமாக நினைத்ததில்லை".

 

இந்திரா நூயி தலைமையில் பெப்சி நிறுவனம் அடைந்த வளர்ச்சி என்பது அளப்பரியது. அவர் சி.இ.ஓ.வாக  பதவியேற்கும்போது 35 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அந்நிறுவனத்தின் வருமானம், அவர் அப்பதவியிலிருந்து விலகும்போது 64 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருந்தது. அதேபோல அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 58.70 டாலரில் இருந்து 108.72 அமெரிக்க டாலராக இரட்டிப்பு வளர்ச்சி கண்டிருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு இறுதியில் அப்பதவியில் இருந்து விலகிய இந்திரா நூயி, அமேசான், ஃபிலிப்ஸ் உட்பட உலகின் பல முன்னணி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ளார்.

 

"நாம் குழந்தைகளாக இருக்கும்போது வானம் ஏன் நீலமாக இருக்கிறது? பறவைகள் ஏன் உயரமாகப் பறக்கின்றன என்று பல கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்திருப்போம். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் குறைந்துவிடுகிறது. வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள். உங்களுடைய கனவுகளை அடைய கடினமாக உழைத்தும், தியாகங்கள் செய்தும் தொடர்ந்து போராட வேண்டும்..." என வெற்றியின் ரகசியத்தை விவரிக்கிறார் இந்திரா நூயி.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!

 

பஸ் ஸ்டாண்டில் ஆரஞ்சு விற்று பள்ளிக்கூடம் கட்டிய ஹரேகலா ஹஜப்பாவின் வெற்றிக்கதை | வென்றோர் சொல் #43

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.