Skip to main content

அதிரடி சதிகள் ஆரம்பம்! ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி? #5

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

“கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவோடு ஆட்சியை நடத்துவது இயலாத காரியம்” பிரதமரானவுடன் ஹிட்லர் மனதில் ஒடிய முதல் சிந்தனை இதுதான். பாப்பென் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளின் ஆதரவு மொத்தமாக 43 சதவீதம்தான் இருந்தது. கம்யூனிஸ்ட்டுகள் கையில் 100 பேர் இருந்தனர். 608 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுக்காக ஒவ்வொரு முறையும் கையேந்திக் கொண்டிருக்க முடியாது. கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க வேண்டும். உடனடியாக நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும். பதவியேற்ற மறுநாளே ஹிண்டன்பர்கிடம் வந்தார் ஹிட்லர். நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு 1933 மார்ச் 5 ஆம் தேதி தேர்தல் என்ற அறிக்கையை தயாரித்து எடுத்துவந்தார்.

 

gjh



“இதில் கையெழுத்திடுங்கள்” ஹிண்டன்பர்கிற்கு விருப்பமில்லை. ஆனால், ஹிட்லரின் அதட்டலான, மிடுக்கான உத்தரவை எதிர்த்துப் பேச அவரால் முடியவில்லை. கம்யூனிஸ்ட்டுகளுக்கு அதிர்ச்சி. என்ன நடக்கிறது என்பதை யூகிக்கக் கூட அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை. ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை உள்ளடக்கிய பிரஷ்யாதான் இருப்பதிலேயே பெரிய மாநிலம். அதன் நிர்வாகப் பொறுப்பை துணை பிரதமர் பாப்பென் கையில் கொடுத்தார் ஹிட்லர். அதேசமயம், அந்த மாநிலத்தின் காவல்துறையை தனது நம்பிக்கைக்குரிய கோயரிங்கிடம் கொடுத்தார். அடுத்து ராணுவ தளபதிகள் அனைவரையும் அழைத்தார்.

“எந்தக் காரணத்தைக் கொண்டும் இப்போதுள்ள ராணுவத்தில் மாற்றம் இருக்காது. அவரவர் பொறுப்புகள் அப்படியே நீடிக்கும். வெர்சைல்ஸ் உடன்படிக்கையை அமல்படுத்த முடியாது. நவீன கடற்படையும், விமானப்படையும் அவசியம் தேவை. அப்போதுதான் ஜெர்மனி ராணுவத்தை உலகின் மிகப்பலம் பொருந்திய ராணுவமாக மாற்றமுடியும்” ஹிட்லரின் பேச்சு, ராணுவ தளபதிகளின் வயிற்றில் பாலை வார்த்தது. காதில் தேனாக இனித்தது. நாஜிக் கட்சியின் அதிரடிப்படையில் இடம் பெற்றுள்ளவர்கள் ராணுவத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அவர்கள் பயந்துபோய் இருந்தனர். இப்போது அந்தப் பயம் போய்விட்டது. ஹிட்லர் அரசுக்கு முழு ஆதரவு அளிக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
 

jk



ராணுவத்தைத் திருப்தி செய்தாயிற்று. முதலாளிகளின் ஆதரவு முக்கியம். கூப்பிடு அவர்களை. குருப்ஸ், ஐ.ஜி. பார்பென், யுனைடெட் ஸ்டீல், நாட்டின் மிக முக்கியமான மூன்று வங்கிகளின் தலைவர்கள், பிரபலமான கோடீஸ்வரரும், தலைசிறந்த ரசாயன மேதையுமான கார்ல் போஸ்ச், ஹிட்லருக்கு பண உதவி செய்ய மறுத்த வான் தைஸன் என எல்லோருக்கும் அழைப்பு பறந்தது. டாக்டர் ஜல்மர் ஸ்சாச் ஹிட்லரின் நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

அவரிடம் 30 லட்சம் மார்க்குகளை உடனடியாக கொடுத்தனர். “இனி ஜனநாயகம் இருக்காது. அதுதான் அனைத்து தனியார் துறை நிறுவனங்களுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. தொழிற்சங்கங்கள் உற்பத்திக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன. ஜெர்மனியின் ஆயுத பலத்தை பெருக்க வேண்டும்” முதலாளிகளுக்கு வேறு என்ன உறுதி வேண்டும். அதுவும் ஆயுதபலத்தை பெருக்க முடிவு செய்துவிட்டால், குரூப்ஸ் உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகளுக்கு கொண்டாட்டம்தான். சந்தோஷமாக ஆதரவு தெரிவித்துவிட்டு கலைந்தனர்.
 

k



அடுத்து என்ன? ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி. “தேர்தலில் நாஜிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு கம்யூனிஸ்ட்டுகளை நாசம் செய்ய வேண்டும்”  பிப்ரவரி 22 ஆம் தேதி பிரஷ்யாவின் காவல்துறையில் 50 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். அத்தனைபேரும் ஹிட்லரின் அதிரடிப் படை மற்றும் இளைஞர் அணியினர். கொஞ்சம் கூட நாகரீகமற்ற, பகையுணர்வுடன் வளர்க்கப்பட்ட, கொலைக்கு அஞ்சாத அவர்களிடம் இப்போது சட்டப்பூர்வ அதிகாரம் கொடுக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன் புரட்சி நடத்த கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளதாக கோயபல்ஸ் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டார். தினமும் இந்தப் பிரச்சாரம் உச்சக் கட்டத்திற்கு சென்றது.

மார்க்சிஸ்ட்டுகளுக்கு தங்களைச் சுற்றி நடப்பது புரியத் தொடங்கியது. ஆனால், அவர்கள் சுதாரிப்பதற்குள் நாடுமுழுவதும் கம்யூனிஸ்ட் அலுவலகங்களுக்குள் ஜெர்மன் காவல்துறையினர் புகுந்தனர். சோதனையிட்டனர். அங்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக அச்சிட்டு வைத்திருந்த நோட்டீஸ்கள், போஸ்ட்டர்களைக் கைப்பற்றினர். “நாளை இப்போது நம் கையில்” “வெற்றியை நோக்கி முன்னேறுவோம்” இதுதான் அவர்கள் கைப்பற்றிய நோட்டீஸ்களில் காணப்பட்ட வாசகம். தேர்தல் பிரச்சார வாசகங்கள்தான். ஆனால், புரட்சிக்கான சதிக்கு இதை ஆதாரமாகக் காட்டி குற்றம்சாட்டினர்.

தெருவில் போன கம்யூனிஸ்ட்டுகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் 4 ஆயிரம் பேர் கைதாகினர். அவர்களில் பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அப்போதும் கம்யூனிஸ்ட்டுகளின் பிரச்சாரம் ஓயவில்லை. அவர்களுக்கு அனுதாபம் இருக்கத்தான் செய்ததது. நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற வேண்டும். எதைச் செய்தேனும் கம்யூனிஸ்ட்டுகளை நுழைய விடக்கூடாது. நாஜிகளுக்கு இடப்பட்டிருந்த உத்தரவு இது. மார்ச் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறப்போகிறது.

 

j



பிப்ரவரி 27 ஆம் தேதி இரவு பத்துமணிக்கு, பிரஷ்ய காவல்துறை அமைச்சர் கோயரிங்கிற்கு ஒரு டெலிபோன் வந்தது. பேசியவர், ஹிட்லரின் நண்பர் ஹன்ப்ஸ்டாங்கில். “நாடாளுமன்றக் கட்டிடமான ரெய்ச்ஸ்டக்கில் இருந்து புகை வருவதாகச் சொல்கிறார்கள். என்னவென்று பாருங்கள்” ஆம், பழமைவாய்ந்த ஜெர்மன் நாடாளுமன்றக் கட்டிடம் பற்றி எரிந்துகொண்டிருந்தது. உடனே, ஹிண்டன்பர்கிற்கு தகவல் பறந்தது. துணைபிரதமர் பாப்பெனுடன் அங்கு விரைந்தார். ஹிட்லர் வந்தார். முக்கியத் தலைவர்கள் அனைவரும் வந்தனர். “கம்யூனிஸ்ட்டுகள் நாடாளுமன்றக் கட்டிடத்தை கொளுத்திவிட்டார்கள்”

நாஜிகள் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர். எவ்வித ஆதாரமும் இல்லாமலேயே பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினர். மக்கள் பதைபதைத்தனர். பலரால் நம்பவே முடியவில்லை. “நாஜிகளின் அட்டூழியம் இதுதான். இப்படித்தான் இருக்கும். தங்களுடைய வெற்றிக்காக நாட்டையே அழிக்கக் கூட அவர்கள் தயங்கமாட்டார்கள்” என்று கம்யூனிஸ்ட்டுகள் விளக்கம் அளித்தனர். நாடாளுமன்றத்தின் மையத்தில் உள்ள வெப்பம் வெளியேற்றும் சுரங்கப்பாதை வழியாக உள்ளே நுழைந்த நாஜிகள் மிகச் சாமர்த்தியமாக இந்த சதியை நிறைவேற்றியுள்ளதாக கூறப்பட்டது. ஹிட்லரின் நண்பர் ஹன்ப்ஸ்டாங்கில்தான் இந்தக் காரியத்தை திட்டமிட்டு நடத்தினார் என்று பரவலான பேச்சு அடிபட்டது.

ஆனால், ஹாலந்து நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன் மதுவிடுதி ஒன்றில், ஜெர்மன் நாடாளுமன்றத்தை தீவைத்துக் கொளுத்தப்போவதாக குடிபோதையில் உளறினார் என்று காவல்துறைக்கு தகவல் கிடைத்திருப்பதாக கோயரிங் கூறினார். வான் டெர் லுப்பே என்ற அந்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது, நாடாளுமன்றத்திற்கு தீவைத்தது தான்தான் என்பதை ஒப்புக் கொண்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இத்தனை சதிகளுக்கு அப்புறம் வாக்குப்பதிவு நடந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அப்போதும் நாஜிகளுக்கு 288 இடங்கள்தான் கிடைத்திருந்தன. பாப்பெனின் தேசியவாத கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. கம்யூனிஸ்ட்டுகள் 81 இடங்களைக் கைப்பற்றியிருந்தனர். பாப்பெனின் ஆதரவு இருந்தால், பெரும்பான்மையைக் காட்டிலும் 16 இடங்களே கூடுதலாக இருந்தது. “இது போதாது. மேலும் பாப்பெனை எப்போதும் நம்பிக்கொண்டிருக்க முடியாது. பிறர் சொல்வதை எல்லாம் கேட்டு ஆட்சி நடத்த முடியாது. நான் என்ன நினைக்கிறேனோ அது நடக்க வேண்டும்” மே மாதத்தில் மீண்டும் தேர்தல் நடத்திவிடலாம் என்று முதலில் திட்டமிட்டார். ஆனால், அதை மாற்றிக்கொண்டார்.

எளிதான காரியம் என்ன? தனக்கு எதிரான கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் 81 பேரை நாடாளுமன்றத்திற்குள் வரவிடாமல் செய்வதுதான் என்று முடிவு செய்தார். கோயரிங்கை அழைத்தார் ஹிட்லர். அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று ஆலோசனை நடத்தினார். மார்ச் 15 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது. கோயபல்ஸ் பிரச்சாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன் விரிவான அறிக்கை ஒன்றை ஹிட்லர் தயாரித்திருந்தார். அது என்ன? நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்ற வேண்டிய சட்டங்கள் அனைத்தும் ஹிட்லரே கவனித்துக் கொள்வார். பட்ஜெட் தயாரிப்பது, வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது என எல்லாவற்றுக்கும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றையும் ஹிட்லரே முடிவு செய்வார்.

அமைச்சரவை இதற்கு ஒப்புதலை அளித்தது. உடனே அந்த அறிக்கை ஹிண்டன்பர்கிடம் சமர்ப்பிக்கப்பட்டது. வேறு பேச்சே இல்லை. அவர் கையெழுத்திட்டார். மார்ச் 21 ஆம் தேதி பதவி ஏற்புவிழா. போஸ்ட்டாம் என்ற இடத்தில் உள்ள காரிஸான் தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்குதான் மகா பிரடெரிக் மன்னர் புதைக்கப்பட்டார். மகா பிரடெரிக் காலத்தைய ஜெர்மன் ஏகாதிபத்தியத்தை மீண்டும் நிறுவுவதுதான் ஹிட்லரின் லட்சியமாக இருந்தது. ஹிண்டன்பர்க் வந்தார். வெளிநாட்டு பிரமுகர்கள் வந்திருந்தனர். ஏராளமான வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். ஹிட்லரின் குழுவினர் கொள்ளைக் கூட்டத்தினர் போல சீருடையில் ஸ்வஸ்திக் சின்னம் தரித்து வந்திருந்தனர்.

கெய்ஸர் மன்னரின் ராணுவ சீருடையில், தாங்கள் பெற்ற பதக்கங்களுடன் முன்னாள் ராணுவத்தினர் ஏராளமானோர் ஆஜராகி இருந்தனர். ஜெர்மன் தேசிய கொடியில் நாஜிகளின் ஸ்வஸ்திக் சின்னம் இடம்பெற்றிருந்தது. குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்கை பாராட்டி ஹிட்லர் பேசினார். மிகுந்த மரியாதையுடன் அவர் பேச்சு அமைந்திருந்தது. பேசி முடித்தவுடன் ஹிண்டன்பர்கின் கைகளைப் பிடித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அது திரைப்படமாகவும் படம்பிடிக்கப்பட்டது. எல்லாம் ஹிண்டன்பர்கின் விருப்பத்தில்தான் நடக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குவதில் ஹிட்லர் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி முடிந்தவுடன் ஹிண்டன்பர்க் கையெழுத்துடன் இரண்டு அவசரச் சட்டங்கள் வெளியிடப்பட்டன. 

முதல் சட்டம். 

முந்தைய ஆட்சிக்காலத்தில் கொலை, கொள்ளை, துன்புறுத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாஜிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படுகின்றனர்.

இரண்டாவது சட்டம்.

அரசாங்கத்திற்கு எதிராகவோ, நாடாளுமன்றத்திற்கு எதிராகவோ கருத்துத் தெரிவிப்பவர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள். மூன்றாவது சட்டம் ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் ஹிட்லரும், பாப்பெனும் மட்டுமே கையெழுத்திட்டிருந்தனர். ஏனென்றால் அது அவ்வளவு பயங்கரமான சட்டம். ஆம். அரசில் குற்றவாளிகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அவை ராணுவ நீதிமன்றங்களைப் போல இயங்கும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மார்ச் 23 ஆம் தேதி ஓபரா ஹவுஸ் என்ற கட்டிடத்தில் நாடாளுமன்றக் கூட்டம் கூடியது. ஜெர்மானியர்களை தற்போதைய சிரமங்களில் இருந்து மீட்பதற்கான சட்ட முன்வரைவு என்ற பேரில் இந்த மூன்று அவசரச்சட்டங்களையும் அவையின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்தார் ஹிட்லர். மசோதா நிறைவேற வேண்டுமெனில், மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு வேண்டும். ஹிட்லருக்கு தற்போது உள்ள ஆதரவுடன் மேலும் 31 பேரின் ஆதரவு அவசியம். கத்தோலிக்க சென்ரிக் கட்சிக்கு பொய்யான சில வாக்குறுதிகளை அளித்து சரிக்கட்டி வைத்திருந்தார்.

அதையும் மீறி மசோதா தோற்றுவிட்டால்? அந்த பயமும் இருந்தது. அதற்காகத்தான் கோயபல்ஸ் தந்திரமாக ஒரு திட்டத்தைத் தயாரித்திருந்தார். நாஜிப்படையினரை கூட்டம் நடக்கும் இடத்தில் பெருமளவுக்கு திரட்டி நிற்கவைத்திருந்தார். “எங்களுக்கு முழு அதிகாரம் வேண்டும். இல்லையேல் சுடுவோம். கொல்வோம்” நாஜிகள் உரக்க முழங்கிக் கொண்டிருந்தனர். மசோதாவைத் தாக்கல் செய்த ஹிட்லர் மிகவும் சாதுவைப் போல பேசினார். “இந்தச் சட்டங்களைப் பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. அவசியப்பட்டால் மட்டுமே பயன்படுத்தப்படும். எங்கள் கவனம் முழுவதும் நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பதில்தான் இருக்கும். பிரான்ஸ், பிரிட்டன், சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளுடன் பகையுணர்வுடன் நடந்துகொள்ள மாட்டோம்”

ஹிட்லர் பேசி முடித்தவுடன், சமூகவாதக் கட்சி சார்பில் ஓட்டோ வெல்ஸ் என்பவர் எழுந்தார். இந்த கொடூரமான சட்டங்களை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

துள்ளி எழுந்தார் ஹிட்லர். “உங்கள் ஆதரவு தேவையில்லை. சாகப்போகிறவனின் ஆதரவு தேவையில்லை” ஆவேசம் கொப்புளித்தது. கண்களில் அனல் பறந்தது.

வாக்கெடுப்பு நடைபெற்றது. 441 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். 84 பேர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஹிட்லரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. 14 ஆண்டு ஜெர்மன் குடியரசு முடிவுக்கு வந்தது. நாஜிகளின்  கையில் ஜெர்மன் சிக்கியது.


 

Next Story

போலீஸ் ஸ்டேஷனாக மாற உள்ள ஹிட்லரின் வீடு!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரியா அரசு முடிவு செய்துள்ளது. பல யூதர்களை கொன்று குவித்தவர் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர். அவருக்கு சொந்தமான ஆஸ்திரியாவில் பிரனவ் ஆவ் இன் என்னும் நகரத்தில் உள்ள அவரது பிறந்த வீட்டை ஆஸ்திரியா அரசு காவல் நிலையமாக மாற்றவுள்ளது.



முன்னதாக ஆஸ்திரியா அரசு இந்த கட்டிடத்தை மொத்தமாக விலை கொடுத்து வாங்கி அதனை அகதிகளுக்கான மறுவாழ்வு மையமாக மாற்ற முயற்சித்தது. ஆனால் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு, கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் அந்த கட்டிடத்தை 8,10,000 யூரோக்களுக்கு ஆஸ்திரியா அரசு கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இதனை காவல் நிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

ஹிட்லர் ஒலிம்பிக்ஸ்! ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி? #7

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

சர்வாதிகாரி ஆகி விட்டால் போதுமா? சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளினைப் போலவே, உலகப் பத்திரிகைகள் ஹிட்லரை சித்தரித்து வந்தன. 1935 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹிட்லரை இது மிகவும் கவலையடையச் செய்தது. நாஜிகளின் கொடூரமான அட்டூழியங்கள் உலகப் பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பெற்றன. ஹிட்லரையும், அவரது அரசையும் கிழிகிழியென்று கிழித்தெறிந்தன. இனப்படுகொலை உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தது. கோயபல்சும், கோயரிங்கும், ஹிம்லரும், ருடால்ப் ஹெஸ்ஸும் ஹிட்லரை இறகுப்பந்துபோல பயன் படுத்துவதாக கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டன. மற்றொரு பக்கம் ஹிட்லரின் பேச்சுக்களை அலசி ஆராய்ந்து, அவர் போருக்கு தயாராகி வருவதாக கட்டுரைகள் எழுதப்பட்டன.

ஹிட்லருக்கு போர் புரியவேண்டும் என்ற எண்ணம் இருந்தது உண்மைதான். ஆனால், ஜெர்மனியின் தொழில்வளத்திற்கு கச்சாப் பொருள்களை வெளிநாட்டில் இருந்துதானே வாங்கியாக வேண்டும்? கொஞ்சம் அடக்கி வாசித்து, பிறகு எகிறலாமே. தொழில் அதிபர்கள் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய அனுமதி கொடுத்துவிட்டார். வெளிநாடுகளுக்கு ஜெர்மன் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்து, அதற்குப் பதிலாக கச்சாப் பொருள்களை வாங்கிக் கொள்ள முடிவு செய்தார். அதற்கு, வெளிநாடுகளின் மதிப்பைப் பெற வேண்டுமே.
 

fgh



பிரான்சிடம் பேசிப் பார்க்கலாம் என்று முயற்சி செய்தார். ஆனால், ஹிட்லரை முட்டாள் என்று கூறிவிட்டார் பிரான்ஸ் பிரதமர். அமெரிக்காவிடம் கேட்கலாம் என்றால், அங்குள்ள யூதர்களின் தயவைப் பெற்றதாக ஆகிவிடும். அது தற்கொலைக்குச் சமம். என்ன பிரிட்டனைத் தாஜா செய்ய முடியுமா பார்க்கலாம். அது சாத்தியமானால் தப்பிவிடலாம் என்று முடிவு செய்தார். அதேசமயத்தில், பிரிட்டனும் ஜெர்மனியுடன் உறவுகளைப் புதுப்பிக்கலாம் என்று நினைத்திருந்தது. ஆங்கிலேயர்கள் தூய்மையான ஆரியர்கள் என்பது ஹிட்லரின் எண்ணம். இந்திய சுதந்திரப் போராட்டத்தையே மட்டமாக பேசியவர் ஹிட்லர். “இங்கிலீஷ் ஜாதி தூய்மையானது. அது களங்கமுற்று அரசு எந்திரம் நொறுங்கிப் போனால், அல்லது, பலமான எதிரி உருவானால் மட்டுமே பிரிட்டனை ஜெயிப்பது சாத்தியம். இந்தியத் தலைவர்களால் இங்கிலாந்தை எதிர்த்துப் போராட முடியாது. மற்ற வல்லரசுகளின் கீழ் இருப்பதை விட இங்கிலாந்தின் கீழ் இருப்பதே இந்தியாவுக்கு நல்லது”

இதுதான் இந்திய சுதந்திரத்தைப் பற்றி ஹிட்லரின் கருத்து. அதனால்தான், விடுதலைப் போராட்ட காலத்தில், ஹிட்லருடைய அடிப்பொடிகளாக இந்தியாவில் உருவான ஒரு கூட்டம், விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்க முன் வந்ததோ என்னவோ? பிரிட்டன் மீது இவ்வளவு உயரிய மதிப்பு வைத்திருக்கும் ஹிட்லர, அந்த நாட்டின் உறவை விரும்பியதில் வியப்பேதும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரிட்டனின் பத்திரிகைகள் கடுமையாக  எதிர்த்தன. அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலோர், பிரதமர் சாம்பர்லின் உள்பட ஹிட்லருடன் உறவை ஏற்படுத்த விருப்பம் தெரிவித்தனர். இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள ஹிட்லர் தயாராக இருந்தார். ஆனால், மக்கள் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அனுமதி மறுத்துவிட்டார்.
 

 

gh



அடால்ப் என்ற வார்த்தை வொல்ப் என்ற ஆங்கில வார்த்தையின் மருவல் என்று கூறுவார்கள். அதாவது ஓநாய் என்று அர்த்தம். இதை ஹிட்லரே அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் கொள்வார். பிரிட்டனுடன் உறவு என்ற தந்திரத்தைக் கையில் எடுத்தபோது, தன்னை ஓநாய் என்று அவர்கள் நினைப்பார்கள், ஆனால், நான் நரி என்பது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை என்று நண்பர்களிடம் கூறினார். பிரிட்டனின் மன்னர், இங்கிலாந்துக்குள் வர ஹிட்லருக்கு அனுமதி மறுத்தாலும், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜான் சைமன் ஹிட்லரைத் தவறாக எடைபோட்டு விட்டார். மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிக்கப் போவதில்லை என்று ஹிட்லர் பேசியதை அவர் நம்பினார். அதைத் தொடர்ந்து, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக ஜெர்மனியும் ராணுவபலத்தை பெருக்கிக் கொள்ள அனுமதிப்பது தவறில்லை என்று கருத்துத் தெரிவித்தார்.

“நாங்கள் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க மாட்டோம். அதேசமயம், வெர்சைல்ஸ் உடன்படிக்கையின் கீழ்  ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றிய ஸார்லாந்து உள்ளிட்ட பகுதிகளை மட்டுமே திரும்பக் கேட்கிறோம். எங்களுடைய விவசாய வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் இது மிகவும் அவசியம்” என்று நைச்சியமாக பேசிவந்தார் ஹிட்லர். சுமூகமான சூழல் உருவான நிலையில், ஜான் சைமனை பெர்லின் வரும்படி அழைத்தார் ஹிட்லர். இந்த முடிவு பிரிட்டனில் பலத்த வரவேற்பைப் பெற்றது. ஆனால், அந்தச் சந்திப்புத் தேதி நெருங்கும் நிலையில் ஹிட்லர் திடீரென்று பல்டியடித்தார். “ஜெர்மன் மீண்டும் ஆயுத உற்பத்தியைப் பெருக்கப் போகிறது. அதற்கான திட்டங்களைத் தயாரித்து வைத்துள்ளது. ஏற்கெனவே, கணிசமான அளவில் ராணுவபலத்தை ரகசியமாக அதிகரித்துள்ளது”

 

jk



இப்படித் தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை ஒன்று பிரிட்டனில் வெளியிடப்பட்டு விட்டது. இது ஜெர்மனியை அவமானப்படுத்தும் செயல் என்று ஹிட்லர் ஆவேசப்பட்டார். கடைசியில், அந்தச் சந்திப்பு நடக்காமலேயே போயிற்று. மார்ச் 16 ஆம் தேதி, ஜெர்மன் ராணுவத்திற்கு புதிதாக ஐந்துலட்சம் வீரர்களைத் தேர்வு செய்யும் வகையில் சட்டம் இயற்றினார் ஹிட்லர். “இன்றுடன் வெர்சைல்ஸ் உடன்படிக்கை செத்துவிட்டது. பிரான்சும் பிரிட்டனும் எதிர்க்கட்டும் பார்க்கலாம். அவர்களுக்கு அந்தத் துணிச்சல் இருக்கும் என்று நான் நம்பவில்லை. நாடாளுமன்றத்தில் ஹிட்லர் முழங்கியது உண்மைதான். பிரான்சும், பிரிட்டனும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அடுத்த ஒரே ஆண்டில், ஜெர்மனியின் ராணுவபலம், பிரான்சுக்கு நிகரானது. 20 ஆண்டுகளுக்கு அப்புறம் இந்த பலத்தை மீண்டும் பெற்றது ஜெர்மனி.

1936 மார்ச் மாதம் எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ராணுவம் விலக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த ரைன்லாந்தை ஜெர்மன் தன்வசப்படுத்தியது. யாரும் மூச்சுக்கூட விடவில்லை. இப்போதைக்கு போர் வராது என்று சாதாரணமாக நினைத்திருந்த பிரிட்டன், தனது படைபலத்தை குறைக்கத் தொடங்கியிருந்த காலம் அது. ரைன்லாந்தைக் கைப்பற்றி மூன்றே மாதங்கள்தான். ஜூலை மாதம், ஸ்பெயினில் உள்நாட்டு போர் மூண்டது. அந்த நாட்டின் தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோ, இத்தாலி அதிபர் முசோலினியிடம் உதவி கேட்டார். ஆனால், அவர் அப்போது எத்தியோப்பியா மீது போர் தொடுத்திருந்தார். இதை ஜெர்மனி பயன்படுத்திக் கொண்டது. பிரான்கோவுக்கு உதவ ஒப்புக் கொண்டது. பிறகென்ன அடுத்த சிலநாட்களில் ஜெர்மனியின் கையில் ஸ்பெயின். ஜெர்மனியின் லாகவாமான இந்தத் தந்திரம் முசோலினிக்கு பிடித்துவிட்டது. அவர், ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
 

ghj



இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், பெர்லின் நகரம், ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு ஜரூராகத் தயாராகி வந்தது. 1936 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதிவரை போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எத்தனையோ அல்லல்களைத் தாண்டி மிக கவனமாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, ஹிட்லரே கவனித்தார். விளையாட்டு அரங்கை அவரே வடிவமைத்தார். ஆனால், யூதர்களயும், ஜிப்ஸிகளையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்துவரும் நாஜி அரசாங்கம் நடத்தும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், செக்கோஸ்லாவாகியா, ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற நாடுகளில் யூதர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். யூத விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்ஸில் பங்கேற்கக் கூடாது என்று யூத அமைப்புகள் தடை விதித்தன. ஏற்கெனவே, ஜெர்மனியில் அனைத்துத் தடகள விளையாட்டுகளிலும் யூதர்கள் அப்புறப்படுத்தப் பட்டிருந்தனர். ஆரியர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தனர்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதா வேண்டாமா என்று அமெரிக்கா பரிசீலனை செய்துவந்தது. பெர்லினுக்கு ஒரு குழுவை அனுப்ப, அது முடிவு செய்திருந்தது. ஹிட்லர் சுதாரித்துக் கொண்டார். சர்வதேச நன்மதிப்பைப் பெறுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார். கோயபல்ஸ் தனது திறமையை இந்தப்பக்கம் திருப்பினார். ஒலிம்பிக்ஸ் ஏற்பாடுகள் குறித்து பக்கம்பக்கமாக செய்திகள் வெளிவரும்படி பார்த்துக் கொண்டார். “யூதர்களுக்கு அனுமதி இல்லை” என்று எழுதி வைக்கப்பட்டிருந்த போர்டுகள் எல்லா இடங்களிலும் அகற்றப்பட்டன. ஜெர்மன் அரசு நிர்வாம் சிறப்பாக செயல்படுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டன. ஹிட்லரின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் விளம்பரச் செய்திப்படங்களை பிரமாண்டமான முறையில் எடுத்துக் கொடுக்கும் பணியில் லெனி ரீபென்ஸ்டால் என்ற பெண்மணி ஈடுபட்டிருந்தார்.

அவருடைய படங்கள், ஹிட்லரின் தேர்தல் வெற்றிக்கும், வெளிநாட்டினர் மத்தியில் செல்வாக்கைப் பரப்புவதற்கும் பெரிய அளவில் உதவியாக இருந்தன. யூதர்களுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டன. இது நாடகம் என்று ஈனஸ்வரமாக எழுந்த குரல்கள், ஆரவாரக் கூச்சலுக்கு மத்தியில் எடுபடாமல் போயிற்று. பெர்லின் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பது என்று அமெரிக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து உலக அளவில் எழுந்த எதிர்ப்புகள் அனைத்தும் ஒடுங்கிவிட்டன. 11 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. ஹிட்லர் தனது படை பரிவாரங்களுடன் பிரமாண்டமான அரங்கிற்குள் நுழைந்தார். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து, வலது கையை உயர்த்தி “தலைவர் வாழ்க” என்றனர். வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அசந்துவிட்டனர். இப்படி ஒரு தலைவனா?

 

hj



மொத்தம் 49 தடகளக் குழுக்கள் பங்கேற்றன. ஜெர்மனியின் சார்பில் 348 வீரர்கள் கலந்துகொண்டனர். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா சார்பில் 312 பேர் பங்கேற்றன. பெரும்பகுதி பதக்கங்களை ஜெர்மனி வாரிக்குவித்தது. ஹிட்லர் நடுநிலையாளர் போல தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இந்தப் போட்டி ஜெர்மனியின் உலகளாவிய அந்தஸ்த்தை உயர்த்துவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதைப் புறக்கணிக்கமால் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் கலந்துகொண்டது தவறு என்று பின்னாளில் பேசப்பட்டன. ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்ததுதான் தாமதம். ஹிட்லரின் என்ஜினீயரிங் மூளை வேகமாக திட்டங்களைத் தீட்டத் தொடங்கியது. யூதர்கள் மீதான வெறித்தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. கொத்துக் கொத்தாக அள்ளிச் சென்றனர். ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டனர். அங்கு கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். சாப்பாடு இல்லாமல் உயிர் இருக்கும்வரை உழைத்துவிட்டு செத்துப்போகும்படி விடப்பட்டனர்.

ஏற்கெனவே, நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டிருந்தன. இப்போது, ஹிட்லரின் கவனம் ரயில்பாதைகளில் திரும்பியது. பிரிட்டனின் தி கிரேட் ரயில்வேக்கு சொந்தமான பாதைகள்தான் உலகில் அகலமானவையாக கருதப்பட்டு வந்தன. அதைவிட அகலமான ரயில்பாதைகளை ஹிட்லர் வடிவமைத்தார். குறைந்த விலையில் ஜெர்மானியர்களுக்கு கார் வழங்குவதற்காக வோல்ஸ்வேகன் காரை ஹிட்லரே வடிவமைத்தார். கட்டிடங்கள், சிறிய ரக விமானங்கள், நவீன பீரங்கிகள் என ஹிட்லரின் மூளையில் உதித்த எல்லாவற்றையும் உருவாக்க திறமையாளர்கள் நிறைந்திருந்தனர். ஹிட்லர் சொல்வார். விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், தொழிலாளர்களும் செய்து முடிப்பார்கள்.

வெளி உலகினருக்கு இதெல்லாம் தெரியாமல் போயிற்று. முதல் இரண்டு ஆக்கிரமிப்பு அளித்த போதை குறைவது போல தெரிந்தது. ஹிட்லர் சுதாரித்துக் கொண்டார். வெற்றியால் உண்டாகும் போதை குறைய அனுமதித்தால் சோர்ந்து விடுவார்கள். என்ன செய்யலாம்? தனது ஓவிய ஆர்வத்தை புரிந்துகொள்ளாமல், கல்லூரியில் சேர்க்க மறுத்த வியன்னா ஓவியக் கல்லூரி நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்வு ஹிட்லரின் நெஞ்சில் இன்னமும் வடுவாக இருந்தது.

“ஜெர்மனியுடன் இணைந்து விடுங்கள்”

1938 ஆம் ஆண்டு 12 ஆம் தேதி ஆஸ்திரிய அரசுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்தார் ஹிட்லர். வேண்டுகோளை ஏற்பதாக தெரியவில்லை. “எனக்கு ஆஸ்திரியா வேண்டும்” ராணுவத்திடம் கேட்டார் ஹிட்லர். ஜெர்மன் ராணுவத்தின் அணிவகுப்பைப் பார்த்ததுமே, ஆஸ்திரியா ஹிட்லரின் சட்டைப்பையில் வந்து விழுந்து. இதைப் பார்த்ததும் செக்கோஸ்லாவாகியா மிரண்டுவிட்டது. அடுத்து ஹிட்லரின் குறி தன்மீதுதான் இருக்கும் என்று நடுங்கியது. ஜெர்மனிடம் இருந்து எடுத்துத் தரப்பட்ட சுடடன்லாந்தை மீண்டும் ஒப்படைத்து விடும்படி செக் அதிபர் பெனோஸுக்கு தகவல் அனுப்பினார் ஹிட்லர்.

அமைதியான முறையில் அந்தப் பகுதியை மட்டும் கொடுத்திருக்கலாம் அவர். பிடிவாதம் செய்தார். மூன்று மாதங்கள் வரை பேச்சுவார்த்தை என்ற பேரில் இழுத்தடித்தார். ஹிட்லர் பொறுமை இழந்தார். ஜெர்மன் ராணுவம் உத்தரவுக்காக காத்திருந்தது. ஹிட்லர் “ம்” என்றால் எந்த நாட்டையும் கவ்விக் கொண்டுவந்து அவர் காலடியில் போட தயாராக இருந்தது ராணுவம். செக் அதிபருடன் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே, இத்தாலிக்குச் சென்றார் ஹிட்லர். ரோம் நகரில் இத்தாலி சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்தார். செக்கோஸ்லாவாகியா மீது படையெடுக்கும் பட்சத்தில்  முசோலினி எதிர்ப்பு தெரிவித்து விடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அவரே அந்தச் சமயத்தில் எத்தியோப்பியா மீது படையெடுத்த களைப்பில் இருந்தார்.

இருவரும் பரஸ்பரம் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொண்டனர். இதை அறிந்ததும், தனக்கு உதவி செய்யும்படி பிரிட்டனையும், பிரான்சையும் மன்றாடியது செக்கோஸ்லோவாகியா. ஏதேனும் செய்யுங்கள் என்று பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லினுக்கு வேண்டுகோள் விடுத்தார் பிரான்ஸ் பிரதமர். அவர் அனுப்பிய தந்தியின் நகலை இணைத்து, ஹிட்லருடன் பேச நேரம் ஒதுக்கும்படி கேட்டார் சாம்பர்லின். சாம்பரிலின் அனுப்பிய தந்தியைப் பார்த்ததும் ஹிட்லரின் உதட்டோரத்தில் எகத்தாள புன்னகை தோன்றின. “நான் வருவதை ஏற்க மறுத்த பிரிட்டிஷ் சிங்கம், இப்போது, என் சந்திப்புக்கு நேரம் கேட்கிறது”

தனக்குள் சொல்லிக்கொண்டார் ஹிட்லர். எல்லாம் ஹிட்லரின் நேரம். பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லினுக்கு வயது 70. இதுபோன்ற பயணத்தையெல்லாம் தவிர்த்து வந்தார். பெர்லினில் சந்திக்கலாம் என்றுதான் சாம்பர்லின் நினைத்திருந்தார்.

ஆனால், ஓபர்ஸல்ஸ்பர்க் மலையை ஓட்டிய பெர்காப் நகரில் சந்திக்க ஹிட்லர் ஏற்பாடு செய்தார். அங்கு செல்வதற்கே ஏழுமணி நேரம் அவர் பயணம் செய்ய வேண்டும். 1938 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அந்தச் சந்திப்பு நடந்தது. ஹிட்லர் மட்டுமே பேசினார். சாம்பர்லின் கேட்டுக் கொண்டிருந்தார். ஜெர்மனிக்கான பிரிட்டிஷ் தூதர் இருவருக்கும் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். ஜெர்மனியின் உரிமைகளைப் பற்றியே அவர் விவரித்தார். “எங்களிடமிருந்த எடுக்கப்பட்ட பகுதிகளைத்தான் கேட்கிறோம். நம் இரு நாடுகளுக்கு இடையே ஏதேனும் பிரச்சனை என்றால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” பேச்சுவார்த்தை முடிந்தது. மீண்டும் சந்திப்போம். நல்லதோர் முடிவெடுப்போம் என்று சாம்பர்லின் தெரிவித்தார். “இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே ஹிட்லர்” வியந்தபடியே லண்டன் போய்ச் சேர்ந்தார் சாம்பர்லின்.