Skip to main content

மாநிலத்தின் பாதி தொகுதிகள் குடும்பத்துக்கு, மீதிதான் கட்சிக்கு! - முதல்வரை தெரியுமா

Published on 19/11/2019 | Edited on 27/11/2019

ஹரியானா மாநிலத்தின் அரசியல், புதிய முதல்வரின் பின்னணி... குறித்த இக்கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதி :

தமிழை இரண்டாம் அலுவல் மொழியாகக் கொண்டிருந்த வடமாநிலம்!



இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியானாவை பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து, பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார் தேவிலால். காங்கிரஸ் கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். 1966ல் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஹரியானா என்கிற மாநிலம் உதயமானது. அதன் முதல் முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பகவத் தயாள் சர்மா என்பவர் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது தேவிலாலுக்கும் கட்சித் தலைமைக்கும் கருத்து வேறுபாடு வந்ததால், 1971ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தன்னை நிரூபித்தார். 1975ல் இந்திராகாந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, தேவிலால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 19 மாதங்கள் சிறையில் இருந்தபோது, தேசிய தலைவர்களுடனான நெருக்கம் அதிகரித்திருந்தது, நெருக்கடி நிலையை எதிர்த்த ஹரியானாவின் சிங்கம் என புகழப்பட்டார்.

 

chaudary devilal

தேவிலால்



1977ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம் சார்பில் தேவிலால் போட்டியிட்டார். ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது. ஹரியானா முதல்வராக முதல் முறையாகப் பதவியேற்றார் தேவிலால். இரண்டு வருடங்கள் ஆட்சி செய்தார். நெருக்கடி நிலைக்கு எதிராக இருந்த தலைவர்கள் ஒன்றிணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டனர். அப்படி போட்டியிட்ட தேவிலால், தான் வகித்த முதல்வர் பதவியை அதே ஜனதா தளம் கட்சியில் இருந்த பஜன்லால் என்பவரிடம் கைமாற்றிவிட்டார். தேவிலால் மூலம் முதல்வர் பதவிக்கு நெருக்கடி வர, அப்படியே காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார் பஜன்லால். தேவிலால் எம்.பியாகி 1980 முதல் 1982ல் வரை மைய அரசியலில் இருந்தார். 82ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜனதா தளம் – ஜனசங்கம் என்கிற பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் ஜனதாதளம் 31 இடங்களில் வெற்றி பெற்று, பாஜக, சுயேட்சையுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயல, அது தோல்வியில் முடிந்து எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தார். ஜனதா கட்சியில் நம்பிக்கை துரோகிகள் உள்ளார்கள் என அதிலிருந்து பிரிந்து 1987ல் லோக்தளம் என்கிற கட்சியை தொடங்கினார். அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 90 இடங்களில் 85 இடங்களில் லோக் தளம் கூட்டணி வெற்றி பெற்று பெரும் சாதனை புரிந்தது, மீதி 5 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பெரிய வெற்றியோடு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் தேவிலால். 1989ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம்.பியானவர், தனது முதல்வர் பதவியை தனது மகன் ஓம் பிரகாஷ் சௌதாலாவிடம் தந்துவிட்டு ஒதுங்கினார். மாநிலத்தில் முதல்வர் பதவிக்கான குழப்பத்தில் மாறி மாறி முதல்வராக 4 பேர் அமர கடைசியில் ஆட்சி கலைக்கப்பட்டது.

 

 

om prakash choutala

ஓம்பிரகாஷ் சௌதாலா



1991ல் காங்கிரஸ் கட்சி ஆட்சி ஏற்பட்டு பஜன்லால் முதல்வராகப் பதவிக்கு வந்தார். அவருக்குப் பின்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து மூன்று முறை முதல்வராக இருந்த பான்சிலால் தொடங்கிய ஹரியானா விகாஸ் ( விவசாயி ) கட்சி ஆட்சியை பிடித்து பான்சிலால் முதல்வரானார். இருவருமே ஹரியானாவில் ஜாட் சமுதாயத்துக்கு அடுத்தபடியாக உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள். ஜனதா கட்சியில் முதல்வராக இருந்த பஜன்லால், பின்னர் முதல்வர் பதவியை தக்க  வைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியின் உதவி பெற்று முதல்வரானவர். பிறகு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். அதன் பின்னரும் இரண்டு முறை முதல்வராக இருந்தார். 1996ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற பான்சிலால் தொடங்கிய ஹரியானா  விகாஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் ஆதரவோடு கூட்டணி ஆட்சி நடைபெற்றது.

அந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் பஜன்லால் மகன் சந்தரமோகன், துணை முதல்வராக இருந்தார். பான்சிலால் தனது மகன் சுரேந்தர் சிங்கை முதல்வராக்க முயன்றார். அப்போது அவர் எம்.பியாக இருந்தார், பின்னர் எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார். இன்னோரு மகன் ரன்பீர் சிங்கும் பின்பு எம்.எல்.ஏவாக இருந்தார். இவரது மனைவி தொடர்ச்சியாக 1996ல் இருந்து எம்.எல்.ஏ. அதன்பின் அவரது பேத்தி ஸ்ருதியும் 2009ல் எம்பியானார். அதன்பின் பான்சிலாலின் கட்சியும் காங்கிரஸ் கட்சியுடன் 2004ல் இணைந்துவிட்டது. தனது மகனுக்கு முதல்வர் பதவியை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லை என்றதும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 1997ல் ஹரியானா ஜாங்கிட் கட்சி என புதியதாக ஒரு கட்சியை தொடங்கினார் பஜன்லால். இவரின் மற்றொரு மகன் குல்தீப்பும் முன்பு எம்.பியாக இருந்தவர், இப்போது எம்.எல்.ஏவாக உள்ளார். (இவர்களின் கட்சியும் 2016ல் காங்கிரஸோடு இணைந்துவிட்டது) 1998ல் ராஜ்ய சபா எம்.பியாகி வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவையில் துணை பிரதமர் பதவியை அலங்கரித்தார் தேவிலால். அதன்பின் வந்த சந்திரசேகர் அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 1991 வரை துணை பிரதமராக இருந்தார். அதற்கடுத்த ஆண்டு 1999ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேவிலால் மகன் ஓம்பிரகாஷ் சௌதாலா முதல்வராகி 5 வருடங்களை பூர்த்தி செய்தார்.
 

chautala family

சௌதாலா குடும்ப அரசியல்வாதிகள்


ஓம்பிரகாஷ் சௌதாலாவுக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் முன்னாள் அமைச்சர் அஜய் சௌதாலா, இரண்டாவது மகன் அபய் சௌதாலா. அஜய் சௌதாலா மைய அரசியலை கவனித்துக்கொள்ள வேண்டும், இளைய மகன் மாநில அரசியலை கவனித்துக்கொள்ள வேண்டும்  எனச் சொல்லி பாகம் பிரித்து கட்சியில் பொறுப்புகளை தந்து வைத்திருந்தார். அஜய் சௌதாலாவின் மகன்தான் 31 வயதான துஷ்யந்த் சௌதாலா. இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் குடும்ப  உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பில் இருந்தனர். ஊழல் புகாரில் 10 ஆண்டுகள் தண்டனை கிடைத்து ஓம் பிரகாஷ் சௌதாலா, மூத்த மகன் முன்னாள் அமைச்சர் அஜய் சௌதாலா இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இடைவெளியில் கட்சிக்குள் குழப்பம் உருவானது.

தனது அண்ணன் குடும்பத்தையே கட்சியில் இருந்து விரட்டிவிட்டார் அபய். இதில் வெகுண்டெழுந்த அஜய்யின் மகன் துஷ்யந்த், புதியதாக ஜனநாயக லோக்தளம் என்கிற கட்சியை 2018 டிசம்பரில் தொடங்கினார். தனது கட்சிக்கு செருப்பு சின்னத்தை வாங்கினார். இப்படி மாநிலத்தில் தேவிலால் குடும்பம் – காங்கிரஸ் லால் குடும்பத்தை சேர்ந்தவர்களை தவிர்த்துவிட்டு அரசியல் செய்யவே முடியாது. இவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே எம்.எல்.ஏ தேர்தலில் 40 சதவித இடங்களிலும், எம்.பி தேர்தலில் 50 சதவித இடங்களில் போட்டியிடுவார்கள். மற்றவைதான் கட்சியில் உள்ள மற்ற பிரமுகர்களுக்கு. முழுக்க முழுக்க சாதி அரசியல் என்பதால் அந்தந்த சாதி மக்கள் இவர்களை ஏற்றுக்கொண்டு வெற்றி பெற வைக்கிறார்கள், சில நேரங்களில் வேறு முடிவுகளையும் தருகிறார்கள்.

அந்த முடிவு என்ன? பின்னர் ஆண்டவர்கள் யார்? பாஜகவின் பாதம் ஹரியானாவில் பதிந்தது எப்படி? பாஜக ஆட்சியில் நடந்தவை என்ன?

அடுத்த பகுதி...

எம்.எல்.ஏ ஆன உடனே நேரா முதல்வராகிவிட்டார்!


 

 

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த பகீர் சம்பவம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Incident happened on his pregnant wife in punjab

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள புல்லேநங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ். இவர், பிங்கி (23) என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். 6 மாத கர்ப்பமாக இருந்த பிங்கியின் வயிற்றில், இரட்டை குழந்தைகள் வளர்ந்து வந்திருந்தது.

இதற்கிடையில், சில தினங்களாகவே, சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகம் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல், சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சுக்தேவ், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் மனைவி பிங்கியை கட்டிலோடு சேர்த்து கட்டி வைத்து தீ வைத்துள்ளார். இதில், கர்ப்பிணி பெண்ணான பிங்கியின் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, சுக்தேவ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பிங்கியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கர்ப்பிணி மனைவியை தீ வைத்து தப்பியோடிய சுக்தேவை பிடித்து கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.