Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; உங்க ஃபோனை உபயோகிக்கும் கொள்ளையர்கள் - பகுதி 6 

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

digital-cheating-part-6

 

புதுடெல்லி மாநகரத்தில் வடகிழக்கு பகுதியில் வசிப்பவர் வாஜ்பாய் பாண்டே. இவர் வயது முதிர்வு காரணமாக மருந்து கடைக்கு நேரில் சென்று தனக்கான மருந்துக்களை வாங்குவதற்கு பதில் ஆன்லைனில் மருந்துகளை புக் செய்துள்ளார். அந்த மருந்துகள் தனியார் கூரியர் சேவை நிறுவனமான டி.டி.டி.சி. மூலம் டெலிவரி செய்யப்படும் என அந்த மருந்து விற்பனை இணையதளம் கூறியுள்ளது. அந்த மருந்து இரண்டு நாளில் பெரியவரின் வீட்டுக்கு வந்துவிடும் எனச் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு தினங்கள் கடந்தும் மருந்துகள் வரவில்லை. இதனால் அந்த கூரியர் நிறுவனத்தின் கான்டாக்ட் நம்பர் ஏதாவது கிடைக்குமா என கூகுளில் சர்ச் செய்துள்ளார். கஸ்டமர் கேர் எண் என ஒரு மொபைல் எண்ணை கூகுள் காட்டியுள்ளது. அவரும் அந்த நம்பரை தொடர்புகொண்டு, “மருந்து புக் செய்தேன் இன்னும் வரவில்லை, ஏன் இன்னும் டெலிவரி செய்யவில்லை” எனக் கேட்டுள்ளார்.  

 

கஸ்டமர் கேரில் பேசியவர் புக்கிங் நம்பர், தேதி போன்றவற்றை கேட்டுள்ளார். இவரும் தன்னிடமிருந்த தகவல்களைத் தந்துள்ளார். இந்த தகவல்களை கொண்டு உங்கள் டேட்டாவை எங்களது இணையத்தில் பார்க்க முடியவில்லை. நீங்க தப்பா சொல்றீங்க. சரியான எண்ணை சொல்லுங்க. முதல் நான்கு எழுத்துக்கள் ஆங்கிலத்திலும் பிறகு (நியுமெரிக்) எண்ணில் குறிப்பிடப்பட்டிருக்கும்” என்று கேட்டுள்ளார். அதற்கு முதியவர், “இல்லை 8 இலக்க நம்பர்தான் உள்ளது” என்று சொன்னதும், எதிர் தரப்பிலிருந்து, “உங்களுக்கு அது தெரியவில்லை.  உங்கள் மொபைலில் ஸ்கிரீன் ஷேரிங் ஆப் இருக்கிறதா?” என்று கேட்டுள்ளனர். “அப்படின்னா?” என முதியவர் கேட்க, “உங்க மொபைலில் உள்ள மெசேஜ்களை நாங்கள் இங்கிருந்தே படித்து தெரிந்துகொள்ளும் வசதி” என்றிருக்கிறார்கள். அதற்கு முதியவர், “ஆப். இல்லையே” என்று சொல்ல, “அதை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டு எங்களை அழையுங்கள்” என எதிர் தரப்பிலிருந்து சொல்லியுள்ளனர். 

 

“எனக்கு அது தெரியாது” என்று முதியவர் சொல்ல, “தெரியாதா? இருங்க, நான் ஒரு லிங்க் அனுப்புகிறேன் அந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள் ஸ்கிரீன் ஷேரிங் ஆப் ஒன்று டவுன்லோடாகி உங்கள் மொபைலில் இன்ஸ்டாலாகிவிடும்” என்றுள்ளார்.  பெரியவரின் மொபைல் எண்ணுக்கு லிங்க் வந்துள்ளது., அவரும் அதனை டவுன்லோட் செய்து அவரது மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ளார். இதன்பின் அந்த மொபைல் முழுவதும் அந்த மர்ம கும்பலின் கன்ட்ரோலுக்கு சென்றது. அந்த மொபைல் டேட்டாவை ஆன்லயே வைக்க செய்துள்ளனர். “நாளை உங்களுக்கான மருந்து டெலிவரியாகிவிடும்” எனச் சொல்ல இவரும் லைனை கட் செய்துள்ளனர்.

 

மறுநாள் மருந்து வரவில்லை, ஆனால் அவரது மொபைல் மெசேஜ் ஃபோல்டரில் அவரது வங்கி கணக்கிலிருந்து பணம் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்ட மெசேஜ்கள், அதற்கான ஓ.டி.பி. வந்திருப்பது தெரிந்து அதிர்ச்சியானார்.  உடனடியாக புதுடெல்லி வடகிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சஞ்சய் குமாரிடம் புகார் தந்தார். 

 

சைபர்செல் போலீஸார், அவரது மொபைலை வாங்கி ஆய்வு செய்தனர். அதில் ஸ்கிரின் ஷேரிங் ஆப் இருந்ததை பார்த்து இதை எதற்காக வச்சிருக்கீங்க எனக் கேட்டபோது, நடந்ததை கூறியுள்ளார். மொபைல் பேங்க் ஆப் ஓப்பன் செய்து பார்த்தனர். பணம் அனுப்பப்பட்ட கணக்கை கண்டறிந்தனர். ஸ்கிரின் ஷேரிங் ஆப் வழியாக பெரியவரின் மொபைலை ஆப்ரேட் செய்த அந்த மர்ம கும்பல், மொபைல் பேங்க் ஆப் வழியாக பெரியவரின் கணக்கை ஓப்பன் செய்து அவரின் கணக்கிலிருந்து 2,40,000 ரூபாயை வெவ்வேறு வங்கி கணக்குக்கு மாற்றிவிட்டதை கண்டறிந்தனர். அந்த கஸ்டமர் கேர் எண்ணை பெரியவரிடம் சைபர்செல் போலீஸார் கேட்டபோது, அந்த பெரியவர் கூகுளில் தேடியெடுத்த எண்ணை தந்தார். அதை சைபர் க்ரைம் போலீஸார் தொடர்புகொண்டபோது அது ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வேறு தொடர்பு எண்களை வாங்கி அதிகாரிகளிடம் போலீஸார் விவரத்தை அளித்துள்ளனர். நீங்கள் குறிப்பிடும் நம்பர் எங்களுடைய கஸ்டமர் கேர் தொடர்பு எண் அல்ல எனச் சொல்ல சைபர்செல் போலீஸார் அதிர்ச்சியாகினர். கூகுள் தேடல் பகுதியில் அந்த கூரியர் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணை தேடி சர்ச் செய்தபோது போலி கஸ்டமர் கேர் எண் தான் முதலில் வந்துள்ளது. 

 

வங்கிகள், ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் போன்றவை தங்களது வாடிக்கையாளர்களின் சேவைக்காக 24 மணி நேர சேவை தொடர்பு எண்களை வெளியிடுகின்றன. இதனை உன்னிப்பாக கவனித்து அதே பெயர்களில் போலியான கஸ்டமர் கேர் எண்களை உருவாக்கி தேடல் பொறிகளில் முதலில் வருவது போல் செட் செய்துள்ளது டிஜிட்டலை அறிந்த மோசடி கும்பல். திடீரென தேவைக்காக ஒரு நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண்ணை தேடுபவர்களுக்கு போலியான கஸ்டமர் கேர் எண் கிடைத்து அவர்கள் தொடர்புகொண்டதும், அவர்கள் இவர்கள் குறித்த தகவல்களை கேட்பதுபோல் கேட்டு எந்த வழி செட்டாகுமோ அந்த வழியில் அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடித்துள்ளதை கண்டறிந்தனர். புகார் தந்த டெல்லி பெரியவரின் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து எந்தந்த அக்கவுண்ட்டுக்கு பணம் போனது என ட்ராக் செய்யத் துவங்கிய சைபர்செல் போலீஸார் விசாரணை நடத்த தொடங்கினர். 

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் விபின்குமார். ஒரு பயண ஆப் வழியாக சிங்கப்பூர் டூ டெல்லி செல்ல தனியார் விமானத்தில் அவர், அவரது மனைவி, குழந்தை என மூவருக்கும் டிக்கட் புக் செய்துள்ளார். கோவிட் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது. விமான கட்டணத்தை திருப்பி தரவில்லை. 2022 ஏப்ரல் 19 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி நடந்ததை எழுதியவர் முகநூலில் அந்தப் பயண ஆப் பக்கத்தை கண்டறிந்து அதனை டேக் செய்தார். பலரும் தங்களது கருத்துக்களை அதில் தெரிவித்து வந்தனர். ஏப்ரல் 22 ஆம் தேதி அந்த நிறுவனத்தின் கஸ்டமர் கேரில் இருந்து அழைப்பதாக ஒருவர் கூறி நான் கேட்கும் தகவல்களை வழங்குங்கள் 30 நிமிடத்தில் பணத்தை திரும்ப வழங்க வழி செய்கிறேன் என உறுதியளித்துள்ளார். உங்களுக்கு ஏன் பணம் வரவில்லை எனத் தெரியவில்லை. எங்கள் நிறுவன இணையத்தில் தகவல்கள் சரியாக இல்லை. உங்கள் மொபைல் ஸ்கீரினை ஷேர் செய்ய முடியுமா எனக் கேட்டுள்ளனர். இவரும் தனது மொபைலில் ஏற்கனவே உள்ள ஆப் வழியாக தனது மொபைலை பார்க்க அனுமதி தந்துள்ளார். ஏப்ரல் 24 ஆம் தேதி அவரது வங்கி கணக்கில் இருந்து முதலில் 50 ஆயிரம் எடுத்துள்ளனர். உடனே அவர் தனது வங்கி கணக்கு உள்ள சிட்டி பேங்க் கிளையின் கஸ்டமர் கேரை தொடர்புகொண்டு தகவல் கூறியுள்ளார். அவர்கள், ஏ.டி.எம். கார்டு வழியாக பணம் எடுக்க முயற்சித்திருப்பார்கள், அதனால் அதனை லாக் செய்துவிடுகிறோம் என ப்ளாக் செய்தவர்கள். புதிய ஏ.டி.எம். கார்டுக்கு அப்ளே செய்யச் சொல்லியுள்ளனர். அவரும் அதனை செய்துள்ளார்.  ஏப்ரல் 27 ஆம் தேதி விபின் கணக்கிலிருந்து மீண்டும் 2.8 லட்சம் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டுவிட்டது. மொத்தம் 3.3 லட்சம் ரூபாய் பணம் வேறு வங்கி கணக்குக்கு மாற்றிவிட்டனர். அதிர்ச்சியானவர் ஐதராபாத் சைபர்செல் போலிஸாரிடம் புகார் தந்தார்.  

 

ச்சிகுடாவை சேர்ந்தவர் அனில்குமார் சவரேகர். ஒரு பொருளை பிரபல தனியார் இணையதளத்தில் ஆர்டர் செய்திருந்தார். இரண்டு நாள் கடந்து கூரியர் எக்ஸ்கியூட்டிவ் எனச் சொல்லிக்கொண்டு அவரது மொபைல் எண்ணில் ஒருவர் பேசினார். உங்க அட்ரஸ் தப்பாயிருக்கு கூரியர் டெலிவரி செய்ய முடியல. நான் அட்ரஸ் மாத்தியிருந்தனே. இல்லையே பழைய அட்ரஸ்தான் இருக்கு. நான் பார்சலை ரிட்டன் அனுப்பிடறேன். இல்லை எனக்கு அந்த பார்சல் அவசியம் தேவை.  நீங்க உங்க மொபைல்ல ஸ்கிரின் ஷேரிங் ஆப் இன்ஸ்டால் செய்து உங்க மொபைலை எனக்கு காட்டுங்க என்றுள்ளார். இவரும் அதேபோல் செய்ய. டெஸ்டிங்காக ஒரு ரூபாய் அனுப்பச் சொல்லியுள்ளார். இவரும் பேங்க் வெப்சைட் ஓப்பன் செய்து ஒரு ரூபாய் அனுப்பியுள்ளார். கொஞ்ச நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம், 49 ஆயிரம் என இரண்டு தொகைகள் வேறு கணக்குக்கு மாற்றப்பட்டது. அதனைப் பார்த்து அதிர்ச்சியான அவர் போலீஸில் புகார் தந்துள்ளார். அவர்களின் விசாரணையில் ஸ்க்ரீன் ஷேரிங் ஆப் வழியாக பேங்க் அக்கவுண்ட் யூசர் நேம், பாஸ்வேட் பார்த்து தெரிந்துகொண்டு அதனை பயன்படுத்தி வேறு கணக்குக்கு பணத்தை மாற்றியுள்ளார்கள். 

 

தெலுங்கானா மாநிலம் கோபன்பள்ளியைச் சேர்ந்தவர் ஜிதேந்திரகுமார் வர்ஷினி. கோபன்பள்ளி காவல்நிலையத்திற்கு வியர்க்க விறுவிறுக்க காரில் வந்து இறங்கி தள்ளாடியபடி வந்து ஒரு புகார் தந்தார். அதில், மின்கட்டணம் கட்ட இன்றே கடைசி நாள். கட்டணம் கட்டவில்லையென்றால் மாலை மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மொபைலுக்கு மெசேஜ் வந்தது. 3400 ரூபாய் கட்டவேண்டியதா இருந்தது. உடனே வந்து கட்ட முடியாதுன்னு சொன்னன். ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தச் சொன்னாங்க. எனக்கு கட்ட தெரியாதுன்னு சொன்னன். உங்கள் ஏ.டி.எம். கார்டு நம்பர் சொல்லுங்க நான் கட்டறேன்னு சொன்னார். கார்டு நம்பர் சொன்னன். ஓடிபி கேட்டார் சொன்னன். ஆனால் என் வங்கி கணக்கில் இருந்து 48 ஆயிரம் போயிடுச்சி. திரும்ப அந்த நம்பரை அழைச்சா லைன் எடுக்கல கட்டாகிவிட்டது எனத் தெரிவித்திருந்தார். போலீஸ் விசாரணையில் மின்வாரியத்தின் பெயரை பயன்படுத்தி ஏமாற்றியது தெரியவந்தது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில மின்வாரியமும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லியுள்ளது. உங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கிறேன் எனச் சொல்லி கால்ஸ் வருகின்றன. லிங்க்குகள் அனுப்பப்பட்டு அதில் தகவல்களை பூர்த்தி செய்யச் சொல்கின்றன. அது எல்லாமே ஆன்லைன் மோசடி கும்பலின் கைவரிசை.  

 

இதென்ன பிரமாதம் இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் சிலதிருக்கு. டாஸ்மாக் சரக்கு ஆன்லைனில் விற்பனை என ஆன்லைன் பேமெண்ட் வாங்கி குடிமகன்களையும், திருப்பதி தேவஸ்தானத்தின் லட்டு என புக் செய்து பக்தர்களை ஏமாற்றி அரசாங்கத்தையே அலறவிட்டது எப்படி? 

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை தொடரும்…

 

டிஜிட்டல் சதுரங்க வேட்டை - 5: மின்னஞ்சலைத் தொட்டால் மோசடி வலையில் சிக்குவீர்கள்!

 

Next Story

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; ஒரு வருடத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 288.38 கோடி பகுதி – 25

Published on 12/06/2023 | Edited on 13/06/2023

 

Digital Cheating part 25

 

புகார் தரலாம் என்றால் அவரிடம் பேசியதற்கான ஆதாரம் உள்ளதே தவிர, அந்த மொபைல் எண் தெரியாது; வீடு எங்கிருக்கிறது எனத் தெரியாது; ஆள் கறுப்பா; சிவப்பா எனத் தெரியாது; அவர் சொன்ன பெயர் உண்மைதானா என்றும் தெரியாது. பணம் தந்தாரே வங்கி கணக்கில் இருந்து பணம் வந்திருக்குமே? என்றால் அதுவெல்லாம் ஒரு லிங்க் வழியாகவே ட்ரான்ஸக்சன் நடந்துள்ளது. அந்த லிங்க்கும் டெலகிராம் வழியாகவே வந்துள்ளது. சைபர் க்ரைம் போலீஸாரிடம் சென்றால் அலைய விடுவார்கள் என்பதால் என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்.

 

இந்த மோசடிகளைத் தடுக்க முடியாதா?

நாம் இந்த தொடரில் இதுவரை கண்டதெல்லாம் சுண்டக்காய் அளவிலான மோசடிகளே. இதைவிட வித்தியாசமாக, விதவிதமாக உலகளவில் டிஜிட்டல் மோசடிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேற்கத்திய நாடு ஒன்றிலிருந்து பார்ன் வெப்சைட் இயங்கியது. தினமும் விதவிதமான பார்ன் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டன. லட்சக்கணக்கானவர்கள் அதில் தினமும் சென்று அந்த வீடியோக்களை பார்த்தனர். அந்த இணையதளத்தில் இரவு நேரத்தில் ஃலைவ் ஷோ ஒலி-ஒளி பரப்பானது. இணையத்தில் லைவ்வில் உள்ள இளம் மங்கைகளோடு உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் யார் வேண்டுமானாலும் உரையாடும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. அடுத்தவர் நிர்வாணத்தை பார்ப்பதுதான் இன்று பெரும்பாலானவர்கள் செய்வது. லட்சக்கணக்கான ஆண்கள் அந்த இணையதளத்தின் வழியாக அந்த பேரிளம் மங்கைகளுடன் ஆன்லைனில் கனெக்டாகி உரையாடினார்கள். தனித்தனியாகவே உரையாடல் நடந்தது. ஆண்கள் கேட்டதையெல்லாம் ஆன்லைன் வீடியோவில் அந்த அழகு மங்கைகள் செய்தனர். ஜொல் வழிய லட்சக்கணக்கானோர் ரசித்தனர்.

 

இறுதியில் அந்த இணைய தளம் ஒரு ஷாக் செய்தியை பார்வையாளர்களுக்கு தந்தது. அதாவது, அந்த வெப்சைட் வழியாக உரையாடியது, ஆண்கள் சொன்னதையெல்லாம் செய்தது இணையத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு பொம்மை என்றதைக் கேட்டு அதிர்ச்சியானார்கள். அதை பலரும் நம்பவில்லை. அந்தளவுக்கு தத்ரூபாக இருந்தது அந்த பொம்மை. அதுமட்டுமல்ல ஆண்களின் கேள்விகளுக்கெல்லாம் சரியாக பதில் சொன்னதும் அவர்களால் நம்ப முடியாததுக்கு காரணம். அவர்கள் நம்பமாட்டார்கள், நம்ப முடியாததை நம்ப வைப்பதே டெக்னாலஜி. நான் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை புரட்டிப் போடுவேன்; இந்தியாவில் பாலாறும் தேனாரும் ஓடும்; தலைக்கு 15 லட்சம் பணம் தருவேன் என்று டிஜிட்டல் வழியாகவே தன்னை கட்டமைத்து பேசி இந்தியாவின் பிரதமர் பதவியை பிடித்தாரா இல்லையா நரேந்திர மோடி. அதுதான் டெக்னாலஜியின் பலம். மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வளர்ச்சி என்பது வெகு குறைவு. அந்த நாடுகள் டெக்னாலஜி பயன்படுத்துவதில், வளர்ச்சியில் நம்மைவிட 3 தலைமுறைக்கு முன்னணியில் உள்ளனர்.

 

இப்போது உலகத்தையே மிரட்டிக்கொண்டு இருப்பது ஏ.ஐ. எனப்படும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். நாம் பேசுவதை வைத்து நமக்கு என்ன தேவை என்பதை யூகித்து நமக்கு அதுகுறித்த விளம்பரங்களை, நிறுவனங்களை, அறிவுரைகளை சொல்லத் துவங்கியுள்ளது இணையம். அதற்கு நமது முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப், டெலகிராம் உட்பட நாம் மொபைலில் பயன்படுத்தும் ஆப்கள் வழியாகவே நம்மை கண்காணித்து நமக்கு ஆப்படிக்கின்றன. மொபைல்களில் நம் உடலின் ஹார்ட்பீட், சுகர், வாக்கிங் தூரம் போன்றவற்றையெல்லாம் அறிந்துகொள்ள ஆப்களை இன்ஸ்டால் செய்கிறோம். அதில் நமது விரல் ரேகைகளை பதிவு செய்யச் சொல்லும் ஆப்கள் உண்டு. இந்த ஆப்கள் தான் தற்போது நமது பர்சனல் தகவல்களைத் திருடுகின்றன. கைரேகையை வைத்து நமது ஆதார் டேட்டாவை எடுப்பதோடு, நமது வங்கிக் கணக்கில் இருந்தும் பணத்தை எடுக்கிறார்கள். இந்த ஆப்கள் ஹார்ட்பீட்டை கண்காணிக்க மட்டுமல்ல நம்மையும் கண்காணிக்கின்றன. 

 

ஆர்டிபிஷியல் இன்டிலிஜென்ஸ் வளர்ச்சியின் மற்றொரு முன்னேற்றம், செய்தி பத்திரிகைகளுக்கு கட்டுரையோ, கல்லூரி மாணவ-மாணவியர் ரெக்கார்ட் நோட்ஸ் எழுதுவதோ, ஆராய்ச்சி மாணவர்கள் தீசஸ் எழுதவெல்லாம் இனி உட்கார்ந்துகொண்டு மாங்கு, மாங்கு என மூளையை கசக்கி, வார்த்தைகளை எடுத்துப்போட்டு எழுதத் தேவையில்லை. எனக்கு இப்படியொரு தலைப்பில், இந்தந்த தகவல்களைக் கொண்ட இப்படியொரு உள்ளடக்கத்தில் ஒரு கட்டுரை, ரெக்கார்ட் தேவை எனச்சொல்லி தகவல்களை சேட்பட் என்னும் இணையதளத்தில் உள்ளீடு செய்துவிட்டால் போதும். அடுத்த சில நிமிடத்தில் அழகான வடிவமைப்பில் நமக்கு அனுப்பி வைத்துவிடும். ஒரே கட்டுரையை வெவ்வேறு விதமாக எழுதித் தரச் சொன்னாலும் தந்துவிடும். கட்டுரை மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடியோ, முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என யாரோ ஒருவர் எங்கேயோ பேசுவது போன்று ஒரு வீடியோவை எடுத்து அதை இணையத்தில் தந்துவிட்டு, நாம் நினைப்பதையெல்லாம் சொல்லினால் அதனை அவர்கள் பேசுவது போலவே வீடியோவாக மாற்றி தந்துவிடும்.

 

ஹாலிவுட் நடிகர்கள் பக்தி வேடத்தில் எப்படியிருப்பார்கள் என அவர்களின் சாதாரண ஃபோட்டோவை அப்லோட் செய்தால் பக்தி வேடத்தில் எப்படி இருப்பார்கள் என உருவாக்கி அனுப்பி வைத்துவிடும். இதுவெல்லாம் சில நிமிடங்களில் நடந்துவிடும். அந்தளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. இது இன்னும் வளரும் இதனால் லட்சக்கணக்கானவர்களின் வேலைகள் உலகம் முழுவதும் காலியாகும் என எச்சரிக்கிறார்கள் வல்லுநர்கள். தமிழ்நாடு அரசின் காவல்துறை கடந்த 2023 மே மாதம் சைபர் க்ரைம் பிரிவின் கூடுதல் டிஜிபி சஞ்சய்குமார் பேசும்போது, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல்வேறு விதமாகப் பேசி கடந்த ஓராண்டில் மட்டும் 288.38 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் மட்டும் ஏமாற்றியுள்ளார்கள் டிஜிட்டல் மோசடியாளர்கள். எங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில் 106 கோடி ரூபாய் மட்டும் முடக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சைபர் க்ரைம் ஹெல்ப்லைன் 1930ல் வந்த புகார்கள் மட்டும் 12 ஆயிரம். அந்த மூன்று மாதத்தில் மட்டும் 67 கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் இருந்து டிஜிட்டல் கொள்ளையர்கள் எடுத்துள்ளனர்.

 

இதில் 27 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. கடந்த 45 நாட்களில் 27,905 சிம் கார்டுகளை முடக்கச் சொல்லி தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் கூறியதில் 22,440 சிம்கார்டுகளை முடக்கியுள்ளனர் என்கிறார். அவர் காவல்நிலையத்துக்கு வந்த புகார்களை சொல்லியுள்ளார். காவல்நிலையத்துக்கே வராத புகார்கள், வந்தாலும் வாங்காமல் இழுத்தடிக்கும் புகார்கள் போன்றவற்றை கணக்கிட்டால் இதைவிட அதிகமாக இருக்கும் என்பது நம் அனைவரும் அறிந்ததே. தமிழ்நாட்டில் மட்டுமே இவ்வளவு புகார்கள், இத்தனை கோடிகளை எடுத்துள்ளார்கள் என்றால், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் எவ்வளவு டிஜிட்டல் மோசடிகள், எத்தனை ஆயிரம் புகார்கள், எவ்வளவு கோடி ரூபாய்களை மக்கள் ஏமாந்திருப்பார்கள் என நினைத்தால் மலைப்பாகவே இருக்கிறது. உலகளவில் சில லட்சம் கோடிகள் ஆண்டுதோறும் டிஜிட்டல் வழியாக மோசடி நடக்கிறது. இந்த மோசடிகளைத் தடுக்க வேண்டும் என்றால் டெக்னாலஜி சட்டங்களை வலிமைப்படுத்த வேண்டும். அதற்கு முன்னதாக டெக்னாலஜி தெரிந்தவர்களை இந்தியா முழுமைக்குமே காவல்துறையில் பணியில் அமர்த்த வேண்டும்.

 

இதனை இங்கு குறிப்பிடக் காரணம், சைபர் க்ரைம் பிரிவில் டெக்னாலஜி தெரியாதவர்களைத்தான் பணியில் வைத்துள்ளனர். டெபுடேஷன் பணி, ஓ.டி பணியாகவே இந்த பிரிவுக்கு ஆள் அனுப்பப்படுகின்றனர். இப்போதும் தனி நபர்களை, ஹேக்கர்களை நம்பியே சைபர் பிரிவு காவல்துறை செயல்படுகிறது என்கிறார்கள் துறை நிபுணர்கள். அதனால் ஆன்லைன் மோசடிகளை, குற்றங்களை தடுப்பது என்பது கடினமாகியுள்ளது. உலகத்தையே அச்சுறுத்தும் போதை மருந்துகள் விற்பனை, கள்ளச் சந்தையில் ஆயுதம் விற்பனை, பாலியலுக்காக இளம்பெண்கள் கடத்தல், மனித உறுப்புகளுக்காக குழந்தைகள் கடத்தல் போன்றவை உலகை அச்சுறுத்துகின்றன. டார்க்-வெப் என்கிற ரகசிய இணையதளம் வழியாக இதற்கான தகவல் பரிமாற்றங்கள் நடப்பதையே கண்டறிந்தும் அதனைத் தடுக்க முடியாத நிலையிலேயே உலகின் ஒவ்வொரு நாட்டின் சைபர் க்ரைம் பிரிவும் உள்ளது. அந்தளவுக்கு எதிர் தரப்பிலும் டெக்னாலஜி கிங்குகள் உள்ளனர். இந்திய அரசின் பொதுத்துறை, அரசு அலுவல் துறைகளின் முக்கிய இணையதளங்களை முடக்கியுள்ளார்கள் ஹேக்கர்கள்.

 

சில நேரங்களில் அவர்கள் கேட்கும் அளவுக்கு பணத்தை தந்து மீட்டுள்ளார்கள். வரும் காலங்களில் தண்ணீரால் உலகப்போர் வருகிறதோ இல்லையோ...! நாடுகளுக்கு இடையிலான சைபர் சண்டை கண்டிப்பாக நடக்கும் என்கிறார்கள் டெக் வல்லுநர்கள். நம் நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் ‘கொரில்லா சைபர் ஃவார்’ எப்போதோ தொடங்கி நடந்து வருகிறது. அரசியலுக்காக மொபைல் ஆடியோ டேப்பிங் இல்லீகலாக செய்யப்படுவதாக ஒன்றிய, மாநில கட்சிகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாக்கியது பெகாசஸ் உளவு மென்பொருள். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக நரேந்திர மோடி அரசாங்கம் அதனை வாங்கியது. அதனை வைத்து இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களை, சொந்த கட்சித் தலைவர்களை, உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை, ராணுவ அதிகாரிகளை, பத்திரிகையாளர்கள் என யாரை கண்காணிக்க வேண்டுமோ அவர்களின் செல்போன் அல்லது மின்னஞ்சலுக்கு வைரஸ் அனுப்பி அவர்களை உளவு பார்ப்பது அம்பலமானது. இதுபோன்ற மிக ரகசிய பணிகளைச் செய்யக்கூட தனியார் நிறுவனங்களை நம்பியே உள்ளது அரசின் உளவு அமைப்புகள். 

 

தனியார் கம்பெனிகளிடம் தந்தால் நாளை சிக்கல் வந்தாலும் அரசின் தலை தப்பிவிடும் எனக் கணக்கிடுகிறார்கள். அதுவும் ஆபத்துதானே?. அதை வைத்து அவர்கள் மிரட்டமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? டெக்னாலஜி வளர, வளர குற்றம் செய்பவர்களும் தங்களது வித்தையை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். வாசகர்கள் இந்ததொடரில் படித்தவை மேம்போக்கான டிஜிட்டல் மோசடிகளே. இதைவிட விதவிதமாக மோசடிகள் டெக் வழியாக நடக்கும். இணைய மோசடிகள், குற்றங்களுக்கான தண்டனையை இந்தியாவில் அதிகப்படுத்தினால் மட்டுமே டிஜிட்டல் சதுரங்க வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்பிக்க முடியும். மோசடிகளை, குற்றங்களை எதிர்கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. மக்கள் எச்சரிக்கையாக இருங்கள், பாதிக்கப்பட்டாலோ ஏமாந்தாலோ அரசின் சைபர் பிரிவினரிடம் முறையிடுங்கள், தீர்வை பெறுங்கள் என்பதோடு இந்தத் தொடர் இந்நேரத்தில் முடிகிறது. 

 

 

Next Story

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; “பேங்க்ல இப்படிலாம் கேட்க மாட்டாங்களே சுதாரித்த நபர்” பகுதி - 24

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

Digital cheating 24

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அது. “சார் போஸ்ட்” என தபால்காரர் வீட்டு வாசலில் இருந்து கத்தினார். உள்ளிருந்து வந்தார் அரசுத் துறையில் பணியாற்றும் 55 வயதாகும் நபர். “இதுல ஒரு கையெழுத்துப் போடுங்க.” கையெழுத்துப் போட்டதும் இந்தாங்க என ஒரு கவரை தந்துவிட்டுச் சென்றார் தபால்காரர்.

 

பிரபலமான பொதுத்துறை வங்கியில் இருந்து வந்த அந்த கவரை பிரித்த போது உள்ளே, துரைசாமி அர்ஜுனன் என அவரின் பெயர் இருந்த புதிய ஏ.டி.எம் கார்டு பளபளத்தது. தனது பழைய ஏ.டி.எம் கார்டு எக்ஸ்பயரி ஆனதால் புதிய கார்டு அனுப்பியிருக்கிறார்கள் போல. பரவாயில்லை பொதுத்துறை வங்கிகூட நல்லா வேகமாக வேலை செய்றாங்களே என மகிழ்ச்சி அடைந்தார்.

 

ஏ.டி.எம் கார்டு ஆக்டிவேட் செய்ய இந்த எண்ணுக்கு கால் செய்யுங்கள் என அதில் ஒரு மொபைல் எண் இருந்தது. இவர் தனது மொபைலை எடுத்து  அந்த நம்பரை தொடர்புகொண்டார். எதிர்முனையில் பேசிய குரல் அழகான பெண் குரல். “நீங்கள்தானா என உறுதி செய்துகொள்ள சில கேள்விகள்” எனச்சொல்லி, “உங்க அட்ரஸ் பின்கோட் நம்பர் சொல்லுங்க? அப்படியே வங்கியில் தந்துள்ள உங்க நாமினி பெயர் சொல்லுங்க” என்கிற கேள்வியை கேட்டு பதிலை வாங்கிக்கொண்டதும், “உங்க பழைய ஏ.டி.எம் கார்டு டேட் முடியவுள்ளது, அதனால் புதிய கார்டு வங்கி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய கார்டு அப்டேட் செய்ய வேண்டுமானால் பழைய கார்டை டீஆக்டிவேட் செய்யவேண்டும். அதனால் முதலில் பழைய கார்டு எண் சொல்லுங்கள், பிறகு புதிய கார்டு எண் சொல்லுங்கள்” என இரண்டு கார்டு எண்களும் கேட்க இவரும் தந்துள்ளார். 

 

“இப்போது நீங்கள் வங்கியில் பதிவு செய்த உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி வரும் அதைச்சொல்லுங்கள்” என்று கேட்டுள்ளார் அந்தப் பெண். ஓடிபி சொல்ல முயன்றவர் டக்கென சுதாரித்துக்கொண்டு, “ஓடிபி எல்லாம் வங்கியில் இருந்து யாரும் கேட்கமாட்டாங்கன்னு அடிக்கடி மெசேஜ் வருது, நீங்க ஓடிபி கேட்கறிங்க” என்று கேட்டுள்ளார். “இது டெபிட்கார்டு ஆக்டிவேட் சர்விஸ், அதனால் பயப்படாம சொல்லுங்க பிரச்சனையில்லை” என்றிருக்கிறார் அந்தப் பெண். “இல்லை, நான் என்னோட வங்கி கிளையில் நேரடியாகப்போய் ஆக்டிவேட் செய்துகொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். “உங்களுக்கு எதுக்கு சிரமம், நானே செய்து தந்துடுறேன்” என்றார் அந்தப் பெண். “சிரமம் ஒன்னுமில்லை” என்றார் அவர். “வெய்யில் காலத்தில் நீங்க அலையாதிங்க. கார்டு உடனே ஆக்டிவேட் செய்யலன்னா அக்கவுண்ட் லாக் ஆகிவிடும்” என்றிருக்கிறார் அந்தப் பெண். “யாரு?” என இவர் கேட்டதும், “சிஸ்டம், ஆட்டோமேட்டிக்கா லாக் செய்துடும்” என்றிருக்கிறார் அந்தப் பெண். “நான் இப்பவே பேங்க்குக்கு போய் பார்த்துக்கிறேன்” எனச் சொல்லியபடி போன் லைனை கட் செய்துள்ளார்.

 

உடனே புறப்பட்டு வங்கியில் போய் அவர் இதனை கூறியபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் அந்த கார்டு, கவர் வாங்கி பார்த்தபோது, அப்படியே வங்கி அனுப்புவது போல் அனுப்பியிருந்தனர். அவர் உடனே தனது வங்கி மேலாளரிடம் தகவல் சொல்லியுள்ளார். அவர்கள் தொடர்பு கொள்ளச்சொல்லி அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண் போலியாக இருந்தது.

 

முகநூல், வாட்ஸ்அப் போல் இந்தியாவில் கோடிக்கணக்காணோர் டெலகிராம் ஆப் பயன்படுத்த துவங்கியுள்ளனர். அதற்கு காரணம் இலவசமாக கோலிவுட், பாலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட் படங்களும், வெப்சீரியஸ்களும் இலவசமாக கிடைப்பதால் பொதுமக்கள் அதில் குந்தவைத்து அமர்ந்துள்ளனர். டவுன்லோட் செய்து படமாக பார்க்கின்றனர்.

 

டெலகிராமில் ஒரு குரூப் உள்ளது என்றால் அதில் நாம் இணைந்தால் அதில் மொபைல் எண் காட்டாது. டெக்னாலஜி கில்லாடிகள் அதன் வழியாகவும் மோசடி செய்யத் துவங்கியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த நெட்டிஸன் அவர். இணையத்திலேயே புழங்கிக்கொண்டு இருக்கும் அவர் சினிமா குறித்தும், உணவுக் குறித்தும், தான் போய்வந்த சுற்றுலா தலங்கள், அரசியல் என எதுகுறித்தாவது சமூக ஊடகத்தில் எழுதிக்கொண்டே இருப்பார். இவருக்கு டெலகிராம் வழியாக அறிமுகமானவர், “நான் சங்கரநாராயணன்” (இது உண்மையான பெயரா என நெட்டிஸனுக்கும் தெரியாது) எனச் சொல்லிக்கொண்டு அறிமுகமாகியுள்ளார்.

 

“நான் ஒரு சோசியல் மீடியா கன்சல்டிங் நிறுவனம் வைத்துள்ளேன். சோசியல் மீடியாக்கள் மூலம் ஹோட்டல்கள், சினிமா, உணவு போன்றவற்றை பப்ளிசிட்டி செய்வது எங்களது வேலை. நாங்கள் ஹோட்டல்கள் குறித்து பட்டியல் தருவோம் அதற்கு நீங்கள் ரிவ்யூ எழுத வேண்டும் அப்படி எழுதினால் ஒரு ரிவ்யூவுக்கு 500 ரூபாய் சார்ஜ் தருவோம்” என்றுள்ளார்.

 

ஆஹா, அதற்கென்ன எழுதிடுவோம் என களம் இறங்கியுள்ளார். முதலில் ஒரு பத்து ஹோட்டல் குறித்து ரிவ்யூ எழுதியுள்ளார். இவரது வங்கி கணக்குக்கு 5 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளனர். எவ்வளவு நேர்மையா இருக்காங்க, வீட்ல இருந்தபடியே லட்சம் லட்சமா சம்பாதிக்க வழி தெரிஞ்சிடுச்சி என இறக்கை இல்லாமலே வானில் பறக்கத் துவங்கினார். அவர்கள் பட்டியல் தருவதும், இவர் அந்த பட்டியலில் உள்ள ஹோட்டல்கள் குறித்து பதிவு எழுதுவது, சினிமாக்கள் குறித்து ஆஹா ஓஹோ என எழுதுவது என இருந்துள்ளார். ஒருநாள், “நீங்க எங்க கம்பெனிக்கு டெப்பாசிட் கட்டனும், அப்பத்தான் உங்களை மெம்பராக்குவோம்” என்றுள்ளார். “ப்ரீமியம் எவ்வளவு” என்று இவர் கேட்க, “நார்மல் மெம்பர்னா 50 ஆயிரம், கோல்டன் ப்ரீமியம் எடுத்துக்கிட்ட 1 லட்சம், டைமண்ட் மெம்பராகனும்னா 2 லட்சம். நார்மல் மெம்பர்னா மாதம் 100 பெயர் கொண்ட பட்டியல் தருவோம். கோல்டன் மெம்பர்னா மாதம் 1000, டைமண்ட் மெம்பர்னா ஹோட்டல், சினிமா மட்டுமில்லாம, அரசியல் பதிவுகள் போடவும் கன்டெண்ட் தருவோம்” என்றுள்ளார். இவர் டைமண்ட் மெம்பராக 2 லட்சம் பணம் தந்துள்ளார். 

 

அவர்கள் பட்டியல் தருவதும், இவர் ரிவ்யூ எழுதுவதும், கமெண்ட் போடுவதும் என வாழ்ந்துள்ளார். “உங்களுக்கு வருமானம் வருதில்ல; எங்களுக்கு முன்கூட்டியே பணம் தாங்க என நைச்சியமாக பேசிபேசி சுமார் 30 லட்ச ரூபாயை ஆட்டயப்போட்டுள்ளார் அந்த நபர். அதன்பின் ரிவ்யூ எழுதுவதற்கான பட்டியல் வரத்தும், பணம் வரத்தும் குறைந்தது. இவரிடமிருந்து டெலகிராம் வழியாக பேசியவர் 30 லட்ச ரூபாய் பணம் வாங்கியிருந்தார். இவர் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து பணம் தந்துள்ளார். இப்போது 30 லட்ச ரூபாய் கடனுக்கு வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறார். என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார். அவரின் வீட்டுக்கு செல்லலாம், போலீசில் புகார் தந்து அவரது மொபைல் எண்ணை வைத்து ஆளை பிடிக்கலாமே?

 

தொடரும்…