Skip to main content

88 வயதில் மகனைத் தேடிய தாய்; 15 வருடங்களுக்குப் பிறகு நடந்த ஆச்சரியம் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 24

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

detective-malathis-investigation-24

 

தன் மகனை வயதான காலத்தில் தேடிய தாய் குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.

 

88 வயதுடைய பாட்டி ஒருவரின் மகனை நாங்கள் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று அந்தப் பாட்டியின் உறவினரான பெண் (பையனுடைய சித்தி) எங்களிடம் வந்தார். அந்த பாட்டியின் மகனுக்கு வயது 50. கடைசியாக அவருடைய மகனை அவர் பார்த்தது 15 வருடங்களுக்கு முன்பு. நன்றாகப் படிக்கும் அந்தப் பையன், அவனுடைய தந்தையின் அதீதமான கண்டிப்பால் மன உளைச்சலுக்கு ஆளானான். அவனுடைய தந்தையின் இறப்புக்குப் பிறகும் அவனால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. தன்னுடைய தாயோடு தான் அவன் வாழ்ந்து வந்திருக்கிறான்.

 

மத்திய அரசாங்க ஊழியரான அவனுடைய தாய், தன்னுடைய சொந்த வீட்டை மகன் பெயரில் எழுதி வைத்தார். அதன்பிறகு ஆதரவற்றோர் இல்லத்திற்கு அவர் சென்றார். அவ்வப்போது அனைவரும் சென்று அவரைப் பார்த்து வருவார்கள். மகனும் ஆரம்ப காலங்களில் அவ்வப்போது சென்று தன்னுடைய தாயைப் பார்த்து வந்தார். பிறகு எப்போதாவது வர ஆரம்பித்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் தாயைப் பார்க்க வரவே இல்லை. மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நிச்சயமாக தன்னுடைய மகனைக் கண்டுபிடித்து தர வேண்டும் என்று அவர் கேட்டார். 

 

நம்முடைய தேடலை நாம் தொடங்கினோம். மகன் குறித்த பல்வேறு தகவல்களை தாயிடமிருந்து நாம் பெற்றோம். மகனுக்காக அவர் எழுதி வைத்த வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. வாடகைப் பணம் எங்கே செல்கிறது என்பதை ஆராய்ந்தோம். அங்கு வாடகைக்கு இருந்தவர்களிடம் பேசினோம். அவருடைய வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை தாங்கள் செலுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களும் அவரை நீண்ட காலமாக நேரில் சந்திக்கவில்லை என்றனர். அவர் தொடர்பில் வந்தால் எங்களிடம் தெரிவிக்குமாறு கூறினோம். 

 

தான் இறப்பதற்கு முன்னர் ஒருமுறை தன்னுடைய மகனைப் பார்க்க வேண்டும் என்று அந்தத் தாய் விரும்பினார். சில நாட்கள் கழித்து அவருடைய நம்பர், வாடகைக்கு இருந்தவர்கள் மூலம் எங்களுக்கு கிடைத்தது. முதலில் அவர் எங்களுடைய அழைப்பை ஏற்கவில்லை. ஒருநாள் போனை எடுத்தார். அனைத்து விஷயங்களையும் அவரிடம் நாங்கள் கூறினோம். ஒருமுறை வந்து தாயைப் பார்த்துவிட்டுச் செல்லுமாறு கூறினோம். சில நாட்கள் கழித்து வருவதாகச் சொன்ன அவர், அதேபோல் வந்தார். தாய்க்கு மிகவும் மகிழ்ச்சி. இதில் நிறைய உதவிகள் செய்த அந்தப் பையனுடைய சித்திக்கும் இந்த இடத்தில் நன்றி சொல்ல வேண்டும்.

 


 

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.