Skip to main content

இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக முதல் மனைவியை... - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு : 01

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

Detective Malathi's Investigation : 01

 

முதல் பெண் துப்பறிவாளரான மாலதி அவர்கள் தன்னுடைய துப்பறியும் பணியில் நேர்ந்த அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் பலவற்றை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

துப்பறியும் பணி எனக்கு மகிழ்ச்சியான ஒன்று தான். அடிப்படையில் நான் ஒரு இன்ஜினியர். போர் அடிக்கும் வேலைகளைத் திரும்பத் திரும்ப செய்வதை விட ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களைத் தரும் துப்பறியும் பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. திருமணம் தொடர்பான பல வழக்குகளை நாங்கள் கையாளுகிறோம். 

 

1993 ஆம் ஆண்டு முதல் நான் இந்தப் பணியில் இருக்கிறேன். அப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்பு ஒருவரைப் பின்தொடரும் வழக்குகள் தான் அதிகம் வரும். இப்போது திருமணத்திற்குப் பிறகு பின்தொடரும் வழக்குகள் அதிகம் வருகின்றன.

 

ஒருமுறை ஒரு பெண் அவருடைய கணவரை உளவு பார்க்குமாறு கூறினார். ஆன்லைன் விளையாட்டில் பணம் செலுத்தி யாரிடமோ தான் மாட்டிக்கொண்டதாகவும் அதனால் விவாகரத்து வேண்டும் என்றும் கணவர் கூறுவதாகக் கூறினாள் அந்தப் பெண். கடனிலிருந்து தப்பிப்பதற்காக விவாகரத்து செய்துவிட்டு அவர் வெளிநாடு தப்பிச் செல்வதாகத் திட்டம் என்று கூறினார். அவரை நாங்கள் பின்தொடர்ந்த போது தான் தெரிந்தது அவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும், அவளோடு வெளிநாடு செல்லத் திட்டமிட்டு இந்த நாடகத்தை நடத்துகிறார் என்றும். அதன் பிறகு பலவாறு முயன்று அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தனர்.

 

டெக்னாலஜியின் வளர்ச்சியால் நன்மையும் தீமையும் சம அளவில் இருக்கின்றன. நம்முடைய முகம் இப்போது எளிதாக வெளியே தெரிகிறது. முடிந்த அளவுக்கு யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் தான் நாங்கள் நடமாடுவோம். டெக்னாலஜி மற்றும் மனித அறிவு இணைந்து பயணிப்பதே சிறந்தது. 60 வயது தந்தையின் ஃபோனில் ஜிபிஎஸ்ஸை ஆன் செய்துவிட்டு அவரை உளவு பார்க்க மகன் கோரினான். ஆனால், அவர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றவுடன் போனையே மாற்றினார். அவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பது அப்போது தான் தெரிந்தது.

 

வழக்கில் உளவு பார்ப்பதற்கு எந்த வயதினர் தேவையோ அந்த வயதினரை நாங்கள் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். சிறு வயதில் என்னுடைய பையன் கூட இதில் பணியாற்றியிருக்கிறான். மிகவும் சவால் நிறைந்த பணி என்றாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கிறது.

 

 

 

Next Story

பெண்களை ஆசையாக பேச வைப்பது; சபலம் உள்ள ஆண்களிடம் ஆட்டையைப் போடுவது  - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 42

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 detective-malathis-investigation-42

பெண்களுக்கு ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல் பற்றிய வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.

எங்களிடம் வந்திருந்த நபர் சுமார் 90 லட்சம் பணத்தை எங்கேயோ ஏமாந்து கொடுத்திருக்கிறார். அதாவது, ஒரு கிளப் தங்களிடம் மெம்பராக இருந்தால் நிறைய விதமான சலுகைகள் உள்ளன. எனவே மெம்பராக இணையுங்கள் என்றும், உங்களைப் போல நிறைய பெரிய இடத்து நபர்களும் இதில் மெம்பர்களாக இருப்பதாகச் சொல்லி, கிளப்பிற்கு சென்றதும் பெண்களை பேச வைத்து, பழக வைத்து காசை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாகச் சொன்னார். மிகப் பெரிய நபர் எனவே போலீசிடம் செல்லாமல் என்னிடம் வந்தார். இவர் தான் மட்டும் இல்லாமல் நிறைய நண்பர்களை வேறு சேர்த்து விட்டிருந்தார். இந்த கிளப்பில் நிறைய பெண்களுடன் பேசியும் இருக்கிறார். தன்னை இப்படி ஏமாற்றியவர்களை பற்றி தெரிய வேண்டும் என வந்தவரிடம், நமக்கு தேவையான  தகவல்களை வாங்கினோம்.

இவர் சுதாரித்ததும் அந்த கிளப் நம்பரை மாற்றியுள்ளது பற்றி தெரிய வந்தது. சரி அவரிடம் பேசிய பெண்களின் நம்பர்களை வாங்கி, இவர் பேசினால் அவர்கள் சொன்ன இடத்திற்கு வருவார்கள் என்பதை உறுதி செய்து, தொடர்பு கொண்ட பெண் அங்கே வந்ததும் அங்கிருந்து அவரை பின் தொடர்ந்தோம். அவர் ஒரு கால் சென்டரில் பணிபுரிகிறார் என்பது புரிந்தது. இதுபோல பெண்களை வைத்து அந்த நிறுவனம் ஏமாற்றவே இப்படி பெண்களை நியமித்து இருக்கின்றனர் என்பதை கண்டறிந்தோம். நாம் பின் தொடர்ந்த அந்த பெண்ணும் வெறும் சம்பளத்திற்காக மட்டுமே இந்த வேலையே செய்திருக்கார் என்று தெரியவந்தது.

இவரிடம் விஷயத்தைச் சொல்லி அவர் அவ்வளவு தொகையை எந்த வங்கிக்கு அனுப்பினாரோ அந்த  வங்கி  கிளைக்குச் சென்று அக்கவுண்டின் சில தகவலை வாங்கச் சொன்னோம். அவர் போய் பார்த்ததில் அந்த கணக்கு பணம் வந்த அடுத்த இருபது நிமிடத்தில் தொகையை பல கணக்கிற்கு மாற்றிவிட்டு அக்கௌண்ட் 'நில்' என  வந்திருக்கிறது. இவர் கூட சேர்ந்து பன்னிரண்டு பேரின் தொகை கிட்டத்தட்ட பத்து கோடிக்கு மேல் ஏமாற்றி கணக்கும் மூடிவிட்டனர். ஒரு டீம் செட் செய்து முதலில் பெரிய தொகையாக ஒரேடியாக வாங்காமல், சிறு சிறு தொகையாக வாங்கி அதை சிறிது காலம் கழித்தே பெரிய தொகையாக அதிகரித்துள்ளனர்.

இவர் கிளப் முகவரி பற்றி தெரிந்து ஆரம்பத்திலே சுதாரிக்க ஆரம்பிக்கவும் அவர்கள் எல்லா தொடர்பையும் துண்டித்து விட்டனர். அதனால் தான் அவர்களை ட்ரேஸ் செய்ய முடியவில்லை. தொடர்பு கொண்ட அந்த கால் சென்டர் பெண்ணை மட்டும் கண்டு பிடிக்க முடிந்தது. இவர் குடும்பத்திடமிருந்து மறைத்து கெட்ட வகையில் ஆசைப்பட்டதால் அது அவர்களுக்கே பெரிய மோசடியாக விளைந்துவிட்டது. பெரிய இடத்து நபர்கள் என்பதால் போலீஸ் என்று சென்றால், பத்திரிகை வரை சென்று பெயர் கெட்டுப் போய்விடும் என்று விட்டனர். இதுபோல ஆன்லைனில் தள்ளுபடி, சுலபமாக கோடிக்கணக்கில் லோன் வாங்கித் தருகிறோம் என்றும் விளம்பரம் செய்து தொடர்பு கொள்ளும் நபர்களை நம்புவது மிகப்பெரிய நஷ்டத்தில் போய் முடியும். மக்களின் விழிப்புணர்வினால் மட்டுமே இதுபோல ஏமாற்றுபவர்களை உருவாக்காமல் தடுக்க முடியும்.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது