Skip to main content

தாம்பத்தியம் நடக்கலைன்னா அந்த திருமணம் செல்லாது - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 29

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

advocate-santhakumaris-valakku-en-29

 

தான் சந்தித்த குடும்பநல வழக்குகள் குறித்து நம்மிடையே குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.

 

சந்தானம் என்பவருடைய வழக்கு இது. திருமணம் என்பது தாலி கட்டுவது மட்டுமே அல்ல. திருமணத்திற்கென்று சில கடமைகள் இருக்கின்றன. இருவீட்டாரும் முடிவு செய்து சந்தானம் மற்றும் நந்தினிக்கு திருமணம் நடைபெற்றது. முதலிரவு நேரத்தில் அவள், அவனை விட்டு விலகிச் சென்றாள். கனவுகளோடு இருந்த அவனுக்கு அது ஏமாற்றமாக இருந்தது. இதுவரை யாரோடும் தான் தனித்து ஒரு ரூமில் இருந்ததில்லை என்று அவள் காரணம் சொன்னாள். அவர்களுக்குள் தாம்பத்திய உறவு நடக்கவில்லை. 

 

இதை கவனித்த சந்தானத்தின் தாய், அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனையா என்று அவனிடம் கேட்டார். பிரச்சனை எதுவும் இல்லை என்று அவன் பதில் கூறினான். தன்னுடைய தாய், தந்தையோடு இருந்து வந்த சந்தானம், தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்தான். அவனுடைய பெற்றோரும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். தனிக்குடித்தனம் சென்ற பிறகும் அவர்களுக்குள் தாம்பத்தியம் நடக்கவில்லை. ஒருநாள், இது குறித்து அவளிடம் அவன் விரிவாகப் பேசினான். அவள் தொடர்ந்து தன்னுடைய தயக்கத்தை வெளிப்படுத்தினாள். 

 

தலைசிறந்த நிபுணர் ஒருவரிடம் அவர்கள் சென்றனர். அவர் இருவரிடமும் பேசினார். தந்தை இல்லாமல் தாயால் வளர்க்கப்பட்ட பெண் அவள். திடீரென ஒருநாள் அவனுக்கே தெரியாமல் வெளிநாட்டில் மேல்படிப்பு படிப்பதற்காக அவள் விண்ணப்பித்தாள். இந்தத் திருமண உறவில் தன்னால் இருக்க முடியாது என்றும், அதனால் தான் அமெரிக்கா செல்லப்போவதாகவும் அவள் தெரிவித்தாள். அதன்படி அமெரிக்காவுக்கும் அவள் சென்றாள். சந்தானம் என்னிடம் வந்து இது குறித்து தெரிவித்தார். 

 

தாம்பத்தியம் நடக்கவில்லை என்றால் திருமணமே செல்லாது என்று சொல்வதற்கான சட்டம் இருக்கிறது. எனவே இதை செல்லாத திருமணம் என்று அறிவிக்கக் கோரி நாங்கள் மனு தாக்கல் செய்தோம். தனக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லை என்று அமெரிக்காவிலிருந்து அந்தப் பெண் விளக்கம் அனுப்பினார். நாங்கள் சொல்வது உண்மைதான் என்பதை அவரே ஒப்புக்கொண்டார். எனவே நடைபெற்ற திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு சந்தானமும் வேறு திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.