Skip to main content

இந்துவா முஸ்லீமா எனக் கண்டறிய வேட்டியை உருவினார்கள்... தாராவி கலவரம் குறித்துப் பகிரும் ஆறாவயல் பெரியய்யா! தாராவி கதைகள் #3

Published on 27/05/2021 | Edited on 18/06/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவியில் நடைபெற்ற மதக்கலவரம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் தாராவியிலும் மதக்கலவரம் வெடித்தது. அந்த சம்பவம் நடந்து ஒருமாத காலம் நிறைவடைந்திருந்த நிலையில், மிகப்பெரிய கலவரம் தாராவிக்குள் உண்டானது. அதுகுறித்து நான் எழுதிய ஒரு கவிதை பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அந்தக் கவிதையில் இடம்பெற்றிருந்த வரிகளையும், அந்த வரிகளை நான் எழுதியதற்கான காரணத்தையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

 

'தமிழில் சிந்திக்கும் எனக்கு இன்னுமொரு பெரும்பொழுது தாராவியில் இருக்குமா... ஆடை உரித்து மதம் பார்த்து சங்கறுத்த ஆயுதம் ஒன்று என் வீட்டிலும் இருக்கிறதே'. அங்கு இந்து, முஸ்லீம் கலவரம் வெடித்தவுடன் இரு தரப்புமே மற்றவர்கள் வேட்டியையும், கால்சட்டையையும் உருவிப்பார்த்து, அவர்களது மதத்தை உறுதிசெய்துவிட்டு வெட்ட ஆரம்பித்தார்கள். பலபேர் இதில் காயம்பட்டர்கள். இட்லி விற்ற ஒரு சிறுவனை இதேபோல ஆடையுருவிப் பார்த்துக் கொலைசெய்து 90 அடி ரோட்டில் வீசிவிட்டுச் சென்றனர். மொத்தமாக இதில் இறந்தது 8 பேர்தான் என்றாலும் அங்கிருந்த மக்கள் மத்தியில் இது ஏற்படுத்திருந்த பீதி மிகவும் கொடூரமாக இருந்தது. அதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. 

 

'இடம்பிடிக்க குடி கொளுத்திய தீக்கோல் ஒன்று என் வீட்டிலும் இருக்கிறதே'. அங்கிருந்த குடிசைகளுக்குத் தீவைத்து, அந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக குடிசையைக் கொளுத்தினார்கள். கொளுத்தியவனும் தமிழன்தான். இந்து, முஸ்லீம் என இரு தரப்புகளிலும் தமிழர்கள் இருந்தார்கள். 'கொள்ளையடிக்கப்பட்ட கடையரிசி என் வீட்டு உலையிலும் நாறியதே'. அந்தக் கொடூரமான கலவரங்களுக்கு மத்தியில் கடையில் இருந்த அரிசி, பருப்புகளெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன. அந்தக் கடையும் தமிழனுடையதே; அங்குள்ள பொருட்களை அள்ளிக்கொண்டு சென்றவனும் தமிழனே. 144 தடை உத்தரவு போடப்பட்டு ராணுவம் அங்கு குவிக்கப்பட்டிருந்தது. அன்றைய இரவு நான், எனது தோழர்கள் அனைவரும் வேலை முடித்துவிட்டுத் திரும்பி வந்தோம். எங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே தனியாக இருப்பார்கள் எனக் கூறியவுடன் தாராவிக்குள் செல்ல எங்களை அனுமதித்தனர். நடந்து போகக்கூடாது எனக் கூறி முட்டிபோட்டுக்கொண்டே செல்லச் சொன்னார்கள். நானும் உடனிருந்த தோழர்களும் முக்கால் கி.மீ தூரம் முழங்காலிட்டுக்கொண்டே சென்றோம்.    

 

'என் எதிரில் எரிந்த தீயில் வழிந்த குருதியில் மரணம் பொங்கிய அக்கணத்தில் இதற்கான கவிதை விழி பிதுங்கி விரிந்தபோது என்னிடத்தில் இருந்திருக்கவில்லை பேனாவும் காகிதமும்'. இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடந்து ஓராண்டுகள் கடந்த பிறகே இந்தக் கவிதையை எழுதினேன். முட்டி போட்டுக்கொண்டு சென்ற அல்லது வீதியில் அந்தச் சிறுவன் வெட்டுப்பட்டுக் கிடந்த சூட்டில் இந்தக் கவிதையை எழுதியிருந்தால் வரிகள் இன்னும் வலிமையாக இருந்திருக்கும். 'சொந்த மண்ணில் ரத்தத்திலும் நெருப்பிலும் நீந்திவந்து உயிர் பிழைத்தும் என்னால் முடியவில்லையே அனலோடு கவிதை படைக்க... அச்சத்தை நக்கித்துடைத்து கருமூச்சு குமிழும் தீயின் நாக்கை திராவகக் காப்பை, கண்ணாடித் துகளை, வெட்டரிவாளை, விசம்சூடி விழிபிதுங்கும் கத்தி முனையை ஏற்பதும் எதிர்ப்பதும் தாராவிக்குப் புதிய அனுபவமல்ல'. ஒருத்தனை கத்தியால் குத்திக் கொல்ல நினைத்தார்கள் என்றால் விஷம் தடவித்தான் குத்துவார்கள். தெருக்களில் ரத்தம் சிந்திக்கிடப்பது, கண்ணாடிகள் நொறுங்கிக்கிடப்பதெல்லாம் அங்கு சாதாரணம். சாதிக்கலவரங்கள், மதக்கலவரங்கள், களவாணிப்பயல்களுக்கு இடையேயான மோதல்கள் எனப் பலவற்றை பார்த்துப் பழகிவிட்டார்கள் அந்த மக்கள்.

 

dharavi

 

'இடைவிடாத ஊரடங்கின் இடிபாடுகளில் சிக்கித்தவிக்கும் அன்றாடங்காய்ச்சிகளின் அன்னை தாராவிக்கு கொடியணி வகுத்து குறிப்பார்க்கும் அரசாங்கத் துப்பாக்கி சனியன்கள் பயங்கொடுக்கின்றன திண்ண; கவலை கொடுக்கின்றன அருந்த'. அங்கு நடக்கிற பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசாரை வந்து குவிப்பார்கள். பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டுவரவே அவர்கள் வந்திருந்தாலும் கலவரத்தில் நம்மையும் சுட்டுவிடுவார்களோ என அச்சமாக இருக்கும். 'தப்பாமல் ஊறிப்பாயும் உப்பு, மஞ்சு முட்டும் சாளரங்கள், ஆலைச் சங்கொலியை பஞ்சால் அடைத்தாலும் தப்பாமல் ஊறிப்பாயும் தப்பு'. அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி யூனியன் உட்பட எல்லா யூனியன்களும் உங்களுக்கு நாங்கள் போனஸ் வாங்கித் தருகிறோம் எனக் கூறி அங்கிருந்தவர்களைப் போராட வைத்தார்கள். கடைசியில் அங்கிருந்த டெக்ஸ்டைல்ஸ் அனைத்தும் குஜராத்திற்குச் சென்றுவிட்டது. ஒவ்வொரு கம்பெனியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வேலை பார்த்தார்கள். சில கம்பெனிகளில் 7 ஆயிரம் தமிழர்கள்வரை வேலை பார்த்தார்கள். 80களிலேயே ரூ. 25 ஆயிரத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கிய தமிழர்களும் அங்கு இருந்தனர். இந்தக் கம்பெனிகள் எல்லாம் மூடப்பட்டதால் வெறும் 15 ரூபாய் தினக்கூலிக்காக நம்முடைய ஆட்கள் வேலைக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது.  

 

'இந்த நேரத்திலும்கூட இந்த உப்பளத்தில் கணபதி முளைக்கிறார்; கரகாட்டம் பார்க்கிறார்; கரைந்திடப்போகிறார்'. இவ்வளவு நெருக்கடியான வாழ்க்கைக்கு மத்தியிலும் கணபதி வழிபாடு சிறப்பாக நடைபெறும். மாடுங்காவில் வரதா பாய் தரப்பினர், கணேசர் கோவிலில் ஆதிதிராவிடர்கள், ட்ரான்சிட் கேம்பில் நாடார்கள், கல்யாணிவாடியில் முக்குலத்தோர் என வெகு விமரிசையாக கணபதி விழா நடக்கும். 'இந்த உப்பளத்தின் ஒலிப்புலத்திலும் இயேசு முளைக்கிறார்; ஏற்பாடு ஜெபிக்கிறார். 'இந்த உப்பளத்தின் ஒலிப்புலத்திலும் அல்லா முளைக்கிறார்; அருளாளர் ஆகிறார்'. கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ், இஸ்லாமியர்களின் ரம்ஜான் என எல்லா மதப்பண்டிகைகளும் அங்கு களைகட்டும். ஆனால், இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு விழா கொண்டுவதற்கான வாய்ப்பே அங்கு அமையவில்லை.

 

தானாகவே முளைக்கிறது நகம்; பிணங்களைச் சுரண்டியும், போதையை அளந்தும், வெட்டமுடியாமல் வீங்கிப் பெருக்கிறது. இந்த சாமிகள் எல்லாம் அந்தந்த மதங்களுக்கானது. அங்கு தானாக முளைத்த ஒன்று என்றால் அது ரௌடிசம். 'உனக்கு காவல் நானேநானே என கிரீடம் பூசிக்கொண்டு அறைக்குள் நுழைகிறது; அச்சம் உள்ளிருக்கும் என் அறைக்குள் எல்லாம் அச்சமின்றி நுழைகின்றன'. நாங்கள்தான் உங்களுக்குப் பாதுகாப்பு என்றுகூறி அவர்களது சுயநலத்திற்காக சாதிய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மக்களைத் தனிமைப்படுத்தும் வேலைகளும் அங்கு நடந்தன.

 

 

Next Story

"தமிழர்கள் கடைசிவரை கூலித்தொழிலாளியாக இருந்ததற்கு இதுதான் காரணம்..." ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்! #8

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவி தமிழர்கள் பெரிய தொழிலதிபர்களாக உருவாக முடியாமல் போனதற்கான காரணம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

தாராவிக்கு மனிதநேயமிக்க முகம் ஒன்று உள்ளது. அங்கு வீடுகள் நெருக்கமாக இருப்பதால் யார்யார் வீட்டில் சமையல் நடக்கிறது; அடுப்பு எரிகிறது என்பதெல்லாம் தெரிந்துவிடும். தொடர்ந்து இரு நாட்கள் ஒரு வீட்டில் அடுப்பு எரியவில்லை என்றால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து காரணம் கேட்பார்கள். கையில் பணமில்லை என்பதற்காக ஒருவர் சமைக்காமல் பட்டினியாகக் கிடக்கிறார் என்றால் மற்றவர்கள் கோபப்படுவார்கள். 'இதை முதலிலேயே சொல்லவேண்டியதுதானே.. வா இருக்கிறதை பகிர்ந்து சாப்பிடலாம்' என்று கூறி அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். இந்தப் பழக்கம் அங்கு வசித்த எல்லா மொழி பேசும் மக்களிடமும் இருந்தது. தாராவி என்ற பெயர் எதற்காக வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது குறித்து நிறையத் தேடிப்பார்த்தோம். எந்த இடத்திலும் அதற்கான சரியான பதில் இல்லை. மும்பை என்ற பெயர் வந்ததற்குக் காரணம் அங்கு மும்பாதேவி கோவில் என்று ஒரு கோவில் இருந்தது. அது மீனவ மக்களுக்கான கோவில். மும்பா என்பது ஆங்கிலேயர்களால் பம்பா என உச்சரிக்கப்பட்டு பின்பு பம்பாய் என்றானதாகக் கூறுவார்கள். பின்பு, அது மும்பை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 

விஜயகாந்த், கமல், ரஜினி என தமிழ்நாட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்த அனைவருக்கும் தாராவியில் ரசிகர்மன்றம் இருந்தது. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மிகப்பெரிய அளவில் இருக்கும். பல ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் இந்த நடிகர் படத்தை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை அங்கு இல்லை. அனைவருமே ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். சாதி, மதம் கடந்து அனைவரும் தமிழர்களாக ஒற்றுமையாக இருந்ததற்கு முக்கிய காரணம் பிற இனத்தவர்கள் நம்மை இந்த இடத்திலிருந்து விரட்டிவிடுவார்களோ என்ற எண்ணம்தான். மும்பையில் ஆளுநராகத் தமிழர் ஒருவர் இருந்தபோது தாராவியில் தமிழர்களுக்கு நேர்ந்த பிரச்சனை குறித்து அவரிடம் முறையிட்டதற்கு, 'பிழைக்க வந்த இடத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதானே' என்றார். இது மாதிரியான விஷயங்கள் எல்லாம்தான் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. 

 

மராட்டியப் பெண்களும் தமிழ்ப்பெண்கள் போலவேதான் இருப்பார்கள். அவர்கள் நம் பெண்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. மராட்டியக் கிராமப்புறங்களுக்குள் சென்றால் நம்முடைய அம்மா, அத்தையைப் பார்ப்பதுபோல இருக்கும். அவர்களுடைய விருந்தோம்பல் பண்பும் சிறப்பாக இருக்கும். ஆரம்பக்கட்டத்தில், தாராவி மக்கள் என்றால் தவறானவர்கள் என்ற எண்ணம் அங்கிருந்தவர்கள் மத்தியில் இருந்தது. நான் அங்கிருந்த காலகட்டத்திலேயே அந்த எண்ணத்தை உடைக்க இலக்கியவாதிகள், இளைஞர்கள் எனப் பலர் வேலை செய்தனர். உண்மையில் தாராவிக்காரர்கள் தவறானவர்கள் அல்ல; கொஞ்சம் கோபக்காரர்கள். ஒருமுறை ஓனர் திட்டினார் என்பதற்காக நடு ரோட்டிலேயே வண்டியை நிறுத்திவிட்டு, நீங்களே ஒட்டிட்டுப்போங்கடா என நம்முடைய ஆட்கள் எட்டு பேர் வேலையை விட்டுவிட்டு வந்தார்கள். தாராவி தமிழர்களை வேலைக்கு வைத்தால் இந்த மாதிரியான முரட்டுத்தனமான செயல்களைச் செய்வார்கள் என்ற பயம் அங்கிருந்த முதலாளிகளுக்கு இருந்தாலும் இதுவரை எந்த முதலாளியும் தாராவி தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று கூறியதில்லை. 

 

அங்கிருந்த சாதாரண மக்களுக்கு மராட்டிய அரசோ காவல்துறையோ ஒருபோதும் இடைஞ்சல் கொடுத்ததில்லை. ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒருவர் தாராவிக்குள் ஒளிந்திருக்கிறார் என்றால் போலீஸ் வருவார்கள். மற்றபடி வேறெந்த காரணத்திற்காகவும் போலீஸ் உள்ளே வரமாட்டார்கள். இன்றைக்கு வட இந்தியர்களைப் பார்த்து நாம் கூறுகிறோமே அதுபோல இந்த தமிழனுங்க வந்துதான் நமக்கெல்லாம் வேலை கிடைக்காம போயிருச்சு என்று சில மராட்டியர்கள் பேசுவார்கள். இது மாதிரியான பேச்சு சாதாரண மக்கள் மத்தியில் இருந்தாலும் அரசியல்வாதிகளிடமோ அதிகாரிகளிடமோ இருக்காது. கம்யூனிஸ்ட் போராட்டங்களில் கலந்துகொள்வார்கள் என்று நினைத்து முன்னரே கைது செய்து போலீஸ் நிலையத்தில் எங்களை இருக்க வைப்பார்கள். மறுநாள் வெளியே விட்டுவிடுவார்கள். எந்தவொரு போலீஸ் அதிகாரியும் நீங்கள் எதுக்கு போராட்டம் செய்றீங்க என்றெல்லாம் எங்களைப் பார்த்துக் கேட்டதில்லை. சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை மட்டுமே அவர்கள் செய்வார்கள். 

 

குஜராத்தில் இருந்து ஒரு தொழிலதிபர் வருகிறான் என்றால் அவன் நண்பர்கள் அனைவரும் நகைக்கடை வைப்பார்கள். இங்கு தமிழ்நாட்டில் இருந்து நாடார் ஒருவர் போகிறார் என்றால் அங்கு சென்று மளிகைக்கடைதான் வைப்பார். தாராவி தமிழர்களோ மாடுங்கா தமிழர்களோ தொழில்ரீதியாக அங்கு செல்லவில்லை. மாதச்சம்பளத்தை நோக்கித்தான் ஆரம்பத்திலிருந்தே சென்றுகொண்டிருந்தார். குஜராத்தியர்கள், பார்சியினரெல்லாம் தொழில் செய்யவேண்டும் என்ற முடிவோடுதான் அங்கு வந்தார்கள். ஆனால், பெரும்பாலான தமிழர்களிடம் கூலிக்கு வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. தாராவிக்கு சென்ற தமிழர்களின் அதிகபட்ச ஆசை டாக்சி, ஆட்டோ வாங்கவேண்டும் என்பதாகவே இருந்தது. இதுதான் தமிழர்கள் அங்கு பெரிய தொழிலதிபர்களாக உருவாக முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

 

 

Next Story

"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல..." ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்! தாராவி கதைகள் #7

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்தப் பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவியின் தற்போதைய நிலை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

ஒரு காலத்தில் 45 பள்ளிகளாக இருந்த தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது 20 பள்ளிகளாக குறைந்துவிட்டன. தாராவியில் இருந்த 2 பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. பம்பாயில் வசிக்கும் நம் குழந்தைகள் எதற்குத் தமிழ் படிக்க வேண்டுமென்று நம் ஆட்கள் நினைக்க ஆரம்பித்ததன் விளைவுதான் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதற்கு காரணம். தாராவி என்பது தமிழர்களின் கோட்டை, தாராவி என்பது இன்னொரு தமிழ்நாடு என்ற பிம்பம் ஏறக்குறைய 90 விழுக்காடு நொறுங்கிவிட்டது. 

 

80களில் ஒலிம்பிக் நேரத்தில் கலர் டிவியை இலவசமாக இறக்குமதி செய்ய அனுமதி இருந்தது. அதற்கு முன்பு தாராவி பகுதியில் கலர் டிவி கிடையாது. சில குடிசைகளில் 60 எம்.எம் வெள்ளைத் திரையில் சினிமா ஓட்டுவார்கள். அதற்கு 2 ரூபாய், 3 ரூபாய் எனக் கட்டணம் வசூலித்துக்கொள்வார்கள். சினிமா பார்க்க வேண்டுமென்றால் அங்குதான் பார்க்க வேண்டும். 10க்கும் மேற்பட்ட குடிசைகளில் இதற்கான வசதி இருந்தது. இதை நடத்துபவர்கள் பெரும்பாலும் ஏதாவது ரௌடியாகத்தான் இருப்பார்கள். 3 மணிக்கு ஒரு சினிமா, 6 மணிக்கு ஒரு சினிமா, இரவு 9 மணிக்கு ஒரு சினிமா போடுவார்கள். இதில், 9 மணி சினிமா என்பது ப்ளூ ஃபிலிம்மாக இருக்கும். இதில், பெண்களுக்கு அனுமதி கிடையாது. இது மாதிரியான கலாச்சார சீர்கேடு நிகழ்வுகள் நடப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் போலீசார் கண்டுகொள்ளமாட்டார்கள். இதில் கிடைக்கும் வருமானத்தில் போலீசாருக்கும் ஒரு பங்கு செல்லும். சில நேரங்களில் மேலதிகாரி அழுத்தம் காரணமாக ரெய்டு நடத்த வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்படும். அந்த நேரங்களில் ரெய்டு வரும் விஷயத்தை முன்கூட்டியே இவர்களிடம் தெரிவித்துவிடுவார்கள். 

 

50 பேர் கூடி ப்ளூ ஃபிலிம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இதனால் தாராவி பகுதிக்குள் நிறைய வன்முறைகள் நடந்தன. ஒருகட்டத்தில் இதை இழுத்து மூட வேண்டுமென பெண்களே போராட ஆரம்பித்துவிட்டனர். அதுபோக தாராவி தமிழர்களுக்குப் பெரிய சிக்கல், தமிழ்நாட்டுத் தமிழர்களாலும் இருந்தது. தமிழ்நாட்டில் ஏதாவது கொலை செய்துவிட்டு தாராவி பகுதிக்குள் வந்து பதுங்கிக்கொள்வார்கள். அப்படி வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கென்றே அங்கு ஒரு கூட்டம் இருந்தது. இதனால், அடிக்கடி தாராவி பகுதிக்குள் போலீசார் வந்துசென்றனர். படம் பார்ப்பது, ரம்மி விளையாடுவது மாதிரியான பொழுதுபோக்குகள் மட்டுமே அங்கிருந்த மக்களுக்கு இருந்தன.

 

அதைத் தவிர்த்து, இலக்கியக் கூட்ட விழா நடந்தாலும் பெரும்பாலான மக்கள் அதில் பங்கெடுத்துக்கொள்வதில்லை. புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்கக் கூடிய ஆட்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இருந்தாலும் வெறும் 20, 30 ஆட்கள் மட்டுமே இலக்கியக் கூட்டங்களில் வந்து நேரடியாகக் கலந்துகொள்வார்கள். அதுபோக அரசியல் ரீதியான பட்டிமன்றங்கள் நடைபெறும். திமுகவினர் வந்தால் ஜெயலலிதா அதிக அயோக்கியத்தனம் செய்தது ஆளும் கட்சியாக இருந்தபோதா, எதிர்க்கட்சியாக இருந்தபோதா என தலைப்பு வைத்து நடத்துவார்கள். அதுவே அதிமுகவினர் வந்தால் கருணாநிதி அதிக அயோக்கியத்தனம் செய்தது ஆளும் கட்சியாக இருந்தபோதா, எதிர்க்கட்சியாக இருந்தபோதா எனத் தலைப்பு வைத்து நடத்துவார்கள். எங்களுக்கு இது சரியாகப்படவில்லை. ஒருமுறை இதுமாதிரியான பட்டிமன்ற நிகழ்வுக்கு வந்தவர்களிடம் அரசியல் பேச வேண்டாம்; அதற்குப் பதிலாக திருக்குறள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுங்கள் எனக் கூறினோம். முதலில் அவர்கள் தயங்கினாலும் பிறகு சம்மதித்துவிட்டனர்.

 

அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட திருக்குறள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, 'உண்மையோ பொய்யோ இதுவரை ஒரு தலைவனை தூற்றியோ புகழ்ந்தோதான் பேசியிருக்கிறோம். முதல்முறையாக திருக்குறள் பற்றி பேசுகிறோம் என விழாவிற்கு வந்த மூவருமே கண்கலங்கிவிட்டனர். அரசியல் பட்டிமன்றங்கள்தான் இப்படி ஆபாசமாக நடக்குமேயொழிய, இலக்கிய பட்டிமன்றங்கள் மிகக் கண்ணியமான முறையில் நடக்கும். சிலப்பதிகாரம் பற்றி பேசுகிறார்கள் என்றால் கண்ணகிக்கும் மாதவிக்கும் புகழ் பரப்பக்கூடிய அளவிலேயே விவாதங்கள் நடைபெறும். அந்த மாதிரியான தலைப்புகள்தான் தேர்ந்தெடுக்கப்படும். தற்போது இலக்கியக் கூட்டங்கள் எதுவும் அங்கு நடப்பதில்லை. 

 

அன்று பெரிய தலைவர்களாக இருந்த ஆட்களின் பெயர்களைக்கூட இன்றைய ஆட்கள் மறந்துவிட்டனர். தாராவி பற்றி தமிழ் சினிமாவில் கூறியதில் எதுவும் உண்மையில்லை. 'நாயகன்', 'காலா' படங்களில் காட்டியதுபோல எந்தச் சம்பவங்களும் அங்கு நடைபெறவில்லை. தற்போது வசிக்கும் இடத்தை விற்றுவிட்டு 30 லட்சம், 40 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு புறநகர் பகுதியில் சென்று வசதியாக வாழலாம் என்று நினைத்துதான் தாராவியில் இருந்து தமிழர்கள் வெளியேறத்தொடங்கினார்கள். மராட்டிய அரசோ, மாநகராட்சியோ நம் மக்களைத் துரத்தவில்லை. சினிமாவிற்காகத் தமிழர்கள் அவர்களுக்கு கீழே அடிமையாக இருந்ததுபோல காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

 

தமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்! தாராவி கதைகள் #6