Skip to main content

ஓய்வு முடிவை திரும்ப பெற விரும்புகிறேன்... பிசிசிஐக்கு யுவராஜ்சிங் கடிதம்!!!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

yuvraj singh

 

 

ஓய்வு முடிவை திரும்ப பெற்று பஞ்சாப் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என பிசிசிஐக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ்சிங் கடிதம் எழுதியுள்ளார்.

 

ஆல்ரவுண்டரான யுவராஜ்சிங் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடி பல முக்கியமான தொடர்களை வெல்வதில் பெரிய பங்காற்றியிருக்கிறார். குறிப்பாக 2011-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றதில் யுவராஜ்சிங் பங்கு அளப்பரியது. அந்த தொடரில் தொடர் நாயகன் விருது யுவராஜ்சிங்கிற்கு வழங்கப்பட்டது. அதன் பின்பு எதிர்பாராத விதமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார். இளம் வீரர்களின் தொடர்ச்சியான வருகையால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தாலும் அணியில் அவருக்கு சரியான இடம் கிடைக்கவில்லை. அதனையடுத்து கடந்த ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.    

 

சமீபத்தில் யுவராஜ்சிங் பஞ்சாப் அணியைச் சேர்ந்த சில வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். அப்போது அவரது பேட்டிங் திறனைக் கண்டு, பஞ்சாப் மாநில கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் புனீட் பாலி யுவராஜ்சிங் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும். அதன்மூலம் இளம் வீரர்களை அவரால் தயார்படுத்த முடியும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளையடுத்து தற்போது யுவராஜ் சிங் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு இந்த கடிதத்தினை எழுதியுள்ளார்.

 

 

Next Story

ரஜினியைத் தொடர்ந்து கமல் படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

yuvraj singh with father yograj joins kamal in indian 2 movie

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின்  60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர், ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே ஒரு வாரம் இந்தியன் 2 படப்பிடிப்பும் அடுத்த வாரம் ஆர்.சி 15 படப்பிடிப்பையும் ஷங்கர் படமாக்கி வருகிறார். 

 

ad

 

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று (01.11.2022) தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையும் நடிகருமான யோக்ராஜ் சிங் இணைந்துள்ளார். இதனை யோக்ராஜ் சிங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், "கேமராவுக்குப் பின்னால் இருக்கும் எல்லா ஹீரோக்களின் மேலும் பெரிய மரியாதை உள்ளது. என்னை மேலும் அழகாக்கிய ஒப்பனையாளர்களுக்கு நன்றி. லெஜெண்ட் கமல்ஹாசனுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

யோக்ராஜ் சிங், இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆறு ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார். பின்பு கிரிக்கெட்டிலிருந்து விலகி பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

இம்மாத இறுதியில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஒரே அணியில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங்!

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

VIRU YUVI

 

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் புதிய கிரிக்கெட் தொடர் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் ஆண்டுதோறும் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல்  சீசன், வரும் 20 ஆம் தேதி ஓமன் நாட்டில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முதல் சீசனில் இந்தியா சார்பாக ஒரு அணியும், ஆசியா சார்பாக ஒரு அணியும், பிற நாடுகளை சேர்ந்த வீரர்களை உள்ளடக்கிய ஒரு அணியும் பங்கேற்கவுள்ளன.

 

இந்த முதல் சீசனில், இந்திய சார்பாக பங்கேற்கும் அணிக்கு இந்திய மகாராஜா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அணிக்காக இந்திய ஜாம்பவான்கள் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் விளையாடவுள்ளனர். இவர்களைத் தவிர இந்திய மகாராஜா அணியில், இர்பான் பதான், யூசுப் பதான், பத்ரிநாத், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, நமன் ஓஜா, மன்பிரீத் கோனி, ஹேமங் பதானி, வேணுகோபால் ராவ், முனாஃப் படேல், சஞ்சய் பங்கர், நயன் மோங்கியா மற்றும் அமித் பண்டாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

அதேபோல் ஆசியா சார்பாக களமிறங்கவுள்ள அணிக்கு ஆசியா லயன்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அணியில் சோயிப் அக்தர், ஷாகித் அப்ரிடி, சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன், கம்ரான் அக்மல், சமிந்த வாஸ், ரொமேஷ் கலுவிதரனா, திலகரத்ன தில்ஷான், அசார் மஹ்மூத், உபுல் தரங்கா, மிஸ்பா உல்- முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது யூசுப் மற்றும் உமர் குல் ஆகிய இலங்கை பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ளனர். பிற நாடுகளை சேர்ந்த ரெஸ்ட் ஆஃப் வேர்ல்டு அணியின் பெயரும், அதில் இடம்பெறவுள்ள வீரர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.