Skip to main content

13 வருடங்கள் ஆகிவிட்டன!!! தன்னுடைய சாதனையை நினைவு கூர்ந்த யுவராஜ் சிங்!!!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

Yuvraj Singh

 

ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து இன்றோடு 13 வருடங்கள் ஆகிவிட்டன என்று இந்திய அணியின் மூத்த வீரர் யுவராஜ் சிங், அத்தருணத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

 

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் அதிரடியான ஆட்டத்திற்கும், களத்தில் துடிப்பான ஃபீல்டிங்கிற்கும் பெயர் பெற்றவர். 28 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது, அத்தொடரில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. அத்தொடருக்குப் பின் இந்திய அணியில் ஒரு ஜாம்பவானாக உருவெடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்துவந்தார்.

 

நீண்ட இடைவெளிக்குப் பின் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தாலும், தொடர்ச்சியான இளம் வீரர்களின் வருகையால் அணியில் அவருக்குச் சரியான இடம் கிடைக்காமல் போனது. பின் யுவராஜ் சிங் சர்வதேசப் போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் யுவராஜ் சிங் 13 வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

 

2007 -ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாக இன்று வரை பார்க்கப்படுகிறது. அப்போட்டியில் 16 பந்துகளில் 58 ரன்கள் குவித்து அசத்தினார் யுவராஜ் சிங்.

 

Ad

 

அந்த நாளை நினைவு கூறும் விதமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், "சிக்ஸர் அடித்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, 13 வருடங்கள் ஆகிவிட்டன" என்றும் "காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது" என்றும் பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

ரஜினியைத் தொடர்ந்து கமல் படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

yuvraj singh with father yograj joins kamal in indian 2 movie

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின்  60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் ஷங்கர், ராம் சரணை வைத்து ஆர்.சி 15 படத்தை இயக்கி வருகிறார். எனவே ஒரு வாரம் இந்தியன் 2 படப்பிடிப்பும் அடுத்த வாரம் ஆர்.சி 15 படப்பிடிப்பையும் ஷங்கர் படமாக்கி வருகிறார். 

 

ad

 

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று (01.11.2022) தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையும் நடிகருமான யோக்ராஜ் சிங் இணைந்துள்ளார். இதனை யோக்ராஜ் சிங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், "கேமராவுக்குப் பின்னால் இருக்கும் எல்லா ஹீரோக்களின் மேலும் பெரிய மரியாதை உள்ளது. என்னை மேலும் அழகாக்கிய ஒப்பனையாளர்களுக்கு நன்றி. லெஜெண்ட் கமல்ஹாசனுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

யோக்ராஜ் சிங், இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆறு ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார். பின்பு கிரிக்கெட்டிலிருந்து விலகி பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

இம்மாத இறுதியில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஒரே அணியில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங்!

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

VIRU YUVI

 

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் புதிய கிரிக்கெட் தொடர் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் ஆண்டுதோறும் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல்  சீசன், வரும் 20 ஆம் தேதி ஓமன் நாட்டில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முதல் சீசனில் இந்தியா சார்பாக ஒரு அணியும், ஆசியா சார்பாக ஒரு அணியும், பிற நாடுகளை சேர்ந்த வீரர்களை உள்ளடக்கிய ஒரு அணியும் பங்கேற்கவுள்ளன.

 

இந்த முதல் சீசனில், இந்திய சார்பாக பங்கேற்கும் அணிக்கு இந்திய மகாராஜா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அணிக்காக இந்திய ஜாம்பவான்கள் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் விளையாடவுள்ளனர். இவர்களைத் தவிர இந்திய மகாராஜா அணியில், இர்பான் பதான், யூசுப் பதான், பத்ரிநாத், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, நமன் ஓஜா, மன்பிரீத் கோனி, ஹேமங் பதானி, வேணுகோபால் ராவ், முனாஃப் படேல், சஞ்சய் பங்கர், நயன் மோங்கியா மற்றும் அமித் பண்டாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

அதேபோல் ஆசியா சார்பாக களமிறங்கவுள்ள அணிக்கு ஆசியா லயன்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அணியில் சோயிப் அக்தர், ஷாகித் அப்ரிடி, சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன், கம்ரான் அக்மல், சமிந்த வாஸ், ரொமேஷ் கலுவிதரனா, திலகரத்ன தில்ஷான், அசார் மஹ்மூத், உபுல் தரங்கா, மிஸ்பா உல்- முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது யூசுப் மற்றும் உமர் குல் ஆகிய இலங்கை பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ளனர். பிற நாடுகளை சேர்ந்த ரெஸ்ட் ஆஃப் வேர்ல்டு அணியின் பெயரும், அதில் இடம்பெறவுள்ள வீரர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.