Skip to main content

லக்ஷ்மன் என்றைக்கும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான்! ஏன் தெரியுமா..?- கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #3

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

vvs

 

v.v.s லக்ஷ்மன் என்றால் வங்கிபுரப்பு வெங்கட சாய் (vangipurapu venkata sai ) லக்ஷ்மன் என்றுதான் பொருள். ஆனால், அது அவர் இந்திய அணிக்கு வருவதற்கு முன்பு வரைதான். இந்திய அணியில் நுழைந்த பிறகு அவரின் v.v.s எனும் முதலெழுத்துக்களுக்கு அர்த்தம் very very special என மாறிப்போனது. அந்தளவிற்கு சிறப்பான ஒரு வீரர்.

 

இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் மும்மூர்த்திகளில் சச்சின், டிராவிட்டோடு இவரும் ஒருவர். சச்சின் கொண்டாடப்பட்ட அளவிற்கு டிராவிட் கொண்டாடப்படவில்லை. டிராவிட் பேசப்பட்ட அளவிற்கு லக்ஷ்மன் பேசப்பட்டதில்லை. மரத்திற்கு ஆணி வேர் முக்கியம்தான். அதற்காக மற்ற வேர்களின் துணை தேவையில்லை என அர்த்தம் இல்லை. அவை தன்னுடைய வேலையைச் சரியாகச் செய்துகொண்டிருக்கும். அதுபோலத்தான் இந்திய அணி என்னும் ஆலமரத்தின் ஆணிவேராக இருந்த சச்சினும் ட்ராவிட்டும் தடுமாறும்போதும் கூட லக்ஷ்மன் என்னும் வேர் அணியைப் பல முறை தாங்கிப் பிடித்துள்ளது. 

 

லக்ஷ்மன் என்ற  பெயரைக் கேட்டாலே பலருக்கும் நினைவுக்கு வருவது 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டிதான். தொடர்ந்து 16 டெஸ்ட் வெற்றிகளோடு அசைக்க முடியாத அணியாக வலம் வந்த ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி, ஃபாலோ -ஆன் பெற்று, பேட்டிங் செய்யக் களமிறங்கியது. இந்த போட்டியில், இந்திய அணி வெற்றிபெறும் என யாரேனும் அன்று சொல்லியிருந்தால், டாக்கிங் டாம் கூட சீமான் குரலில் வாய்ப்பில்ல ராசா என்றுதான்  கூறியிருக்கும். ஆனாலும் ட்ராவிட்டும் லக்ஷ்மனும் போராட ஆரம்பித்தார்கள். டிராவிட் சதமடிக்க 281 ரன்கள் குவித்தார் லக்ஷ்மன். வரலாறு படைத்தது இந்தியா. அந்தத் தொடரையும் வென்றது. "2001 டெஸ்ட் தொடர் இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியது, எங்களால் உலகின் எந்தப் பகுதியிலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்குள் விதைத்தது" என்று சமீபத்தில் ஹர்பஜன் சிங் கூறியிருந்தார். 

 

நம்மால் எங்கும் யாரையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ஒரு அணிக்கு மிகவும் முக்கியம். அந்த நம்பிக்கைக்கு உரம் சேர்த்தவர் லக்ஷ்மணன். இதன் எதிரொலியாக ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை சமன் செய்தது. ஆஸ்திரேலியா 90களிலும் 2,000-ன் முற்பகுதியிலும் அதிகமாக வெறுக்கப்பட்ட அணி. காரணம் சாதாரணமான ஒன்றுதான். அந்த அணியை வெல்வது கனவிலும் நடக்காத ஒன்று. அதனால் மற்ற நாட்டு ரசிகர்களுக்குக் கோவம் இருக்கும். ஆனால் லக்ஷ்மனுக்கோ ஆஸ்திரேலியா என்றால் கொள்ளைப் பிரியம். எப்போதும் பேட்டிங் ஆடுவதற்கு முன்பு குளித்துவிட்டு வருவாராம் லக்ஷ்மன். ஆஸ்திரேலியா என்றால் ஐஸ் குளியலே போட்டுவிட்டு வருவார் போல. அந்த அளவிற்கு அந்த அணியிடம் உற்சாகமாக ஆடுவார்.

 

ஆஸ்திரேலியாவிடம் லஷ்மனின் டெஸ்ட் ஆவரேஜ் கிட்டத்தட்ட 50. சச்சினுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர் லக்ஷ்மன். இந்தியா, ஆஸ்திரேலியாவை வென்ற போட்டிகளில் அவரின் ஆவரேஜ் 72. ஆஸ்திரேலியாவிற்கு எதிராகச் சமனான போட்டிகளில் அவரது ஆவரேஜ் 107. ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கும் அவர்களிடம் வீழாமல் தப்பிக்கவும் லக்ஷ்மனின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவரது ஆவரேஜ் கூறும். 2010-ல் ஆஸ்திரேலியாவோடு மொஹாலி டெஸ்டில் வெற்றிபெற காலில் காயத்தோடு போராடுகையில், ரன் சரியாக ஓடாத ஒஜாவை பேட்டை தூக்கிக்கொண்டு லக்ஷ்மன் அடிக்கப் பாய்ந்தது யாராலும் மறக்க முடியாத ஒன்று. 

 

cnc

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமில்லை, இந்தியா பல நாடுகளுடனான போட்டிகளில் வெல்வதற்கும் சமன் செய்வதற்கும் லக்ஷ்மன் பெரும் பங்காற்றியுள்ளார். குறிப்பாக தற்போதைய இந்திய வீரர்கள் திணறும் வெளிநாட்டு மண்ணில், இந்திய அணி வென்ற போட்டிகளில் அவரின் ஆவரேஜ் 51, சமன் செய்த போட்டிகளில் அவரின் ஆவரேஜ் 58. இதன் மூலமே அவர் இந்தியாவின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாகவும், தோல்வியை நோக்கிப் போகும்போதெல்லாம் தடுத்து நிறுத்துபவராகவும் இருந்தார் என்பது தெரியும். ஒட்டுமொத்தமாக வெளிநாட்டு மண்ணில் அவரின் ஆவரேஜ் 42. லக்ஷ்மன் மிடில் ஆர்டரில் பாறையைப் போல் அசைக்க முடியாதவர். அவரை அவுட் ஆக்குவதோ அவரைத்தாண்டி மிடில் ஆர்டரை உடைப்பதோ மிகவும் கடினம்.

 

ஐந்து மற்றும் ஆறாவது பொசிசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் வகிக்கிறார் லக்ஷ்மன். நீண்டகாலமாக அமைதியாக இந்திய மிடில் ஆர்டரின் தூணாக விளங்கியுள்ளார் லக்ஷ்மன். பொதுவாக டெஸ்ட்களில் முதல் இன்னிங்க்ஸைவிட இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுவது கடினம். பிட்ச் கடினமாகிவிடும். ஆனால் அதிலும் வி.வி.எஸ்- வெரி வெரி ஸ்பெஷல்தான். முதல் இன்னிங்ஸில் சராசரியாக 44 ரன்கள் அடித்திருக்கும் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் சராசரியாக 48 ரன்கள் அடித்திருக்கிறார். சுருக்கமாகக் கூறுவதென்றால், லக்ஷ்மன் அதிகம் கொண்டாடப்படாத வீரர். அவரைப் போல் ஒரு பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு இன்றும் தேவைபட்டுக்கொண்டேதான் இருக்கிறார். லக்ஷ்மன் என்றைக்கும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல்தான்.

 


சேட்ட பய சார் இந்த சேவாக்... கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #2

 

 

 

Next Story

இஷான் கிஷன் மீது ஒழுங்கு நடவடிக்கையா? விளக்கமளித்த டிராவிட்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Disciplinary action against Ishan Kishan? Explained by Dravid

இந்திய அணியின் வளர்ந்து வரும் இளம் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் இஷான் கிஷன். உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர், பிறகு கில் வந்ததாலும், அணியின் விக்கெட் கீப்பராக ராகுல் செயல்பட்டதாலும் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், டெஸ்ட் போட்டிகளுக்கு முன் மனச்சோர்வு காரணமாக சிறிது காலம் ஓய்வு தேவைப்படுவதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து, அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் ராகுல் கீப்பராக செயல்படுவதால் தனக்கு இடம் கிடைக்காது என்பதாலும், தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டு வருவதாலும் ஓய்வு எடுத்தார் என்று பரவலாக பேச்சுகள் எழுந்தது.

தற்போது, சஞ்சு சாம்சன் கீப்பராக அணிக்கு திரும்பி இருப்பதாலும், ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி கீப்பராக செயல்படுவதாலும், அடுத்து ரிஷாப் பண்ட் உடல் தகுதி பெற்று விட்டால் அவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதாலும், இனி அணிக்கு அணியில் தனக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பதால், அவர் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெறப்போவதாக வதந்திகள் கிளம்பியது.

இந்நிலையில், நாளை இந்திய ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி மொகாலியில் தொடங்குகிறது. இதை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முதல் டி20 போட்டியில் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் எனவும், அடுத்த இரண்டு டி20 போட்டிகளில் விராட் கோலி களமிறங்குவார் எனவும் தெரிவித்தார். மேலும் ரிங்கு சிங் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய டிராவிட், ஸ்ரேயாஸ் அணியில் தேர்வு செய்யப்படாததற்கான காரணத்தையும் விளக்கினார். அணியில் பல பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ஸ்ரேயாஸை தேர்வு செய்ய முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.

அப்போது இஷான் கிஷன் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த பயிற்சியாளர் டிராவிட், இஷான் கிஷனே இந்த அணி தேர்வுக்கு தன்னை கருத்தில் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும், அவரேதான் தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பு ஓய்வு கேட்டதால், அவரின் உணர்வுகளை மதித்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாகவும் விளக்கினார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னுடைய நிலைத்தன்மையை நிரூபித்தால், அவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அணியில் சேர்க்க கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கூறினார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். 

- வெ. அருண்குமார்  

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர்.