Skip to main content

சென்னை அணியுடன் மோதப் போவது யார்? - மும்பை VS குஜராத் முழு அலசல்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Who will clash with the Chennai team? Mumbai VS Gujarat Full Analysis

 

16 ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது எலிமினேட்டர் போட்டி இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

 

குஜராத் அணியை ஒருமுறை கூட வீழ்த்தாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல்முறையாக குவாலிஃபயர் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம் லக்னோ அணியை ஒருமுறை கூட வீழ்த்தாத மும்பை அணி எலிமினேட்டர் சுற்றில் லக்னோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டிக்கு முன்னேற நடப்பு சாம்பியன் குஜராத் அணியும் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணியும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. ஆட்டத்தின் நுணுக்கங்களை கற்றுத் தந்த பாடசாலைக்கு எதிராக வியூகங்களை வகுத்துக் கொண்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. மும்பை அணியில் நெடுங்காலம் விளையாடிய ஹர்திக், குஜராத் அணியின் கேப்டனான பின் தொடர்ந்து இரண்டு முறை அணியை ப்ளே ஆஃப் போட்டிக்கு கொண்டு வந்து வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்துள்ளார். 

 

ஆனால், எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணியை வீழ்த்த ஹர்திக் படை என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளது என்பது போட்டியின் போதே தெரியும். மறுபுறம் மும்பை அணி ப்ளே ஆஃப் போட்டிகளில் ‘கங்கா சந்திரமுகியாக மாறுவதை போல்’ சிறந்த அணியாக செயல்படுவதை கடந்த சீசன்களில் நாம் பார்த்துள்ளோம். 19 ப்ளே ஆஃப் போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி அதில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. அனைத்தையும் தாண்டி மும்பை அணி மட்டும் தான் குஜராத் அணியை இரண்டு முறை வீழ்த்தியுள்ளது. 

 

மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணி ப்ளே ஆஃப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ப்ளே ஆஃப் போட்டி சிறப்பானதாக அமைந்ததில்லை. ரோஹித் 19 முறை மும்பை அணிக்காக ப்ளேஆஃப் போட்டியில் விளையாடியுள்ளார். அதில் 297 ரன்களை மட்டுமே எடுத்து சராசரியாக 16.50 ரன்களை மட்டுமே வைத்துள்ளார். அதில் இரு அரை சதங்களும் அடக்கம். அவர் விளையாடிய கடைசி 9 போட்டிகளில் 125 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Who will clash with the Chennai team? Mumbai VS Gujarat Full Analysis

 

மற்றபடி இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேம்ரூன் க்ரீன், திலக் வர்மா, நெஹேல் வதேரா என அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாகவே அமைந்துள்ளது. நடப்பு சீசனில் தொடக்க போட்டிகளில் திலக் வர்மா சிறப்பாக ஆடி சில ஆட்டங்களில் மும்பை அணி சிறந்த ஸ்கோரை எட்ட உதவினார். தொடரின் நடுவில் அந்த பணியை சூர்யகுமார் மேற்கொண்டு அணிக்கு வெற்றி தேடித் தந்தார். கடந்த சில போட்டிகளில் கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்துள்ளார். போட்டிக்கு ஏற்றார்போல் மேட்ச் வின்னர்களாக செயல்பட்டு மும்பை பேட்ஸ்மேன்கள் அணிக்கு தூணாக விளங்குகின்றனர்.

 

மறுபுறம் பும்ரா, ஆர்ச்சர் இல்லாமல் தொடக்க போட்டிகளில் மும்பை அணி விக்கெட்களை எடுக்கத் திணறி வந்தது. ஆனால் தொடரின் பிற்பாதியில் ஆகாஷ் மேத்வாலின் எழுச்சி பிற பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தினால் எதிரணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்களை வேகமாக இழந்தனர். ஆகாஷ் மேத்வாலின் எகானமி ரேட் பவர் ப்ளேவில் 7.25 ஆகவும் டெத் ஓவர்களில் 7.26 ஆகவும் உள்ளது. இதன் காரணமாக அணியின் மற்ற பந்துவீச்சாளர்களான பெஹ்ரெண்ட்ராஃப் மற்றும் ஜோர்டன் அழுத்தமில்லாமல் பந்துவீச முடிகிறது. சுழலில் குமார் கார்த்திகேயா மற்றும் பியூஷ் சாவ்லா தங்களது பணியை சிறப்பாக செய்வதால் பந்து வீச்சிலும் மும்பை அணி பலமானதாகவே உள்ளது.

 

குஜராத் டைட்டன்ஸ்

லீக் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி முதல்முறையாக வாழ்வா சாவா ஆட்டத்தில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி இன்றைய போட்டியை எப்படி சமாளிக்கும் என்பதைப் பொறுத்தே ஆட்டத்தின் போக்கு அமையும். அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் கில் கட்டாயமாக மும்பை பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாக இருப்பார்.  

 

Who will clash with the Chennai team? Mumbai VS Gujarat Full Analysis

 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷனகா தொடர்ந்து சொதப்பி வருவது குஜராத் அணிக்கும் பெரும் பின்னடைவு. அவருக்கு பதில் ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப் போன்றோர் விளையாட வைக்கப்படலாம். மற்றபடி விஜய் சங்கர், சஹா, மில்லர் போன்றோர் சிறப்பான ஆட்டத்திறனைக் கொண்டுள்ளனர். டேவிட் மில்லர் மும்பை அணிக்கு எதிராக ஒரு முறை மட்டுமே அரைசதம் அடித்திருந்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 140 ஆக உள்ளது. சராசரியாக 40 ரன்களில் அவர் ஆடி வருகிறார். 

 

நடப்பு சீசனில் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா சராசரியாக 40 ரன்களை வைத்துள்ளார். ஆனால் 4 ஆவது இடத்தில் களமிறங்கும் போது சராசரியாக 11.4 ரன்களை மட்டுமே சராசரியாக வைத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 3 ஆவது இடத்தில் களமிறங்கினால் அணிக்கு கூடுதல் பலம். பந்துவீச்சில் நடப்பு சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரு பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியில் உள்ளனர். ரஷித் கான் மற்றும் ஷமி இருவரும் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஆட்டத்தின் போக்கு குஜராத் அணிக்கு சாதமாக மாறலாம். ஏனெனில் இஷான் கிஷன் தொடர்ந்து வேகப்பந்து வீச்சுக்கு எதிராக திணறி வருகிறார். அதே சமயத்தில் 54 பந்துகளை இஷான் கிஷனுக்கு எதிராக வீசியுள்ள ஷமி ஒருமுறை கூட அவரை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சென்னை அணியுடனான போட்டியில் யஷ் தயாலுக்கு பதிலாக நல்கண்டே சேர்க்கப்பட்டார். அழுத்தமான சூழலில் நல்கண்டே தடுமாறியதைக் காண முடிந்தது. இன்றைய போட்டியில் அவருக்கு பதில் யஷ் தயால் சேர்க்கப்படலாம்.

 

இரு அணியின் ஒப்பீடு

ரஷித் கான் 6 இன்னிங்ஸ்களில் 4 முறை ரோஹித் சர்மாவை வீழ்த்தியுள்ளார். ஆனால் ரஷித் கான் பந்துவீச்சில் இதுவரை ஆட்டமிழக்காத சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 67 ரன்களை அடித்துள்ளார். இரு அணிகளும் இலக்கை சேஸ் செய்வதில் முதன்மையான அணியாக திகழ்கிறது. இரு அணிகளும் இதுவரை 9 முறை இலக்கை சேஸ் செய்துள்ளன, அதில் 6 முறை இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளது.  மும்பை அணி தனது பவர்ப்ளே பந்துவீச்சை தொடர்ந்து மெருகேற்றி வந்துள்ளது. அந்த அணியின் பவர் ப்ளே எகானமி 9.2 ஆக இருந்தது. அதன் சராசரி ரன்கள் 54.9. ஆனால் கடைசி 5 போட்டிகளில் 8.2 எகானமி ரேட்டுடன் 27.3 ரன்களை சராசரியாக வைத்துள்ளது.  


 

Next Story

உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது - பும்ரா ஓபன் டாக்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Don't Let Ego Be Your Barrier Bumrah Open Talk

இந்த ஆட்டத்தில் உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று நேற்றைய ஆட்டம் குறித்து பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 25ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பும்ரா பெரும் தலைவலியாக இருந்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே கோலியை அவுட்டாக்கி பெங்களூரு ரசிகர்களை அமைதியாக்கினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் மீண்டும் டக் அவுட் ஆகியும்  ஏமாற்றினர். கேப்டன் டு பிளசிஸ் 61 ரன்களும், பட்டிதார் 50, ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஆனால் மீண்டும் வந்த பும்ரா விக்கெட் வேட்டையைத் தொடர்ந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான 53 ரன்கள் கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். மத்வால், கோபால், கோயட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின் 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை சிறப்பான துவக்கம் தந்தனர். ஆடுகளத்தில் ஸ்விங்கிங் கண்டிஷன் சிறப்பாக செயல்பட்ட முதலிரண்டு ஓவர்களை பொறுமையாகக் கையாண்ட இருவரும் மூன்றாவது ஓவரிலிருந்து ஆட்டத்தை மும்பை வசப்படுத்தினர். ரோஹித் மற்றும் இஷானின் பேட்டிலிருந்து மைதானத்தின் பல பக்கங்களுக்கும் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறக்கத் தொடங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தனர். மிகவும் சிறப்பாக ஆடிய இஷான் அரைசதம் கடந்து 69 ரன்களுக்கு வீழ்ந்தார்.

அடுத்து வந்த சூர்யா ரோஹித்துடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடினார். சூர்யாவின் பேட்டிலிருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரி மற்றும் சிக்சர்கள் வந்தது. 17 பந்துகளிலேயே அரை சதம் கடந்தார் சூர்யா. ரோஹித் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யா 52 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக்கும் அதிரடியில் இறங்க 15.3 ஓவர்களிலேயே மும்பை அணி வெற்றி இலக்கை அடைந்தது.  இதன் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி தரப்பில் வைசாக், தீப், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பின்னர் பரிசளிப்பு விழாவின் போது பேசிய பும்ரா, “ நான் இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எப்போதும் என்னால் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. மைதானத்தை விரைவில் கணித்து என்னுடைய பந்து வீச்சை அதற்கு ஏற்றாற்போல் மாற்றினேன். இங்கே உஙளுக்கு அனைத்துவிதமான திறமைகளும் வேண்டும். அதுபோல தான் என்னை தயார்படுத்தியுள்ளேன். யார்க்கர் மட்டுமே உங்களுக்கு எல்லா நாளும் உதவாது. எனக்கும், நான் சரியாக பந்து வீசாத கடினமான நாட்கள் இருந்தது. அப்போது எங்கு தவறு இழைத்தேன் என வீடியோக்கள் உதவியுடன் தெரிந்துகொண்டேன். எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்திப்போக உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி அவர்கள் என் பந்தை சிறப்பாக அடித்தால், எங்கு தவறு உள்ளது? அதை எப்படி சரி செய்ய வேண்டும் என சிந்தித்து, என்னை மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்துவேன். எனக்கு நானே அழுத்தம் கொடுத்து என்னை தயார் செய்வேன். சில நேரங்களில் யார்க்கர், சில நேரங்களில் பவுன்சர் என சூழலுக்கு தகுந்தாற்போல் வீச பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக மைதானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். நீங்கள் 145 கி.மீ வேகத்தில் வீசுபவராக இருக்கலாம், ஆனால் அது எல்லா சமயத்திலும் வேலை செய்யாது. மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப குறைந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் எனும் சூழல் வந்தால், அவ்வாறும் வீச வேண்டும். அதற்கு உங்கள் ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு சின்ன சின்ன தயார்படுத்துதலும் உங்களை சிறப்பாக்கும். ஒரே ஒரு தந்திரம் மட்டும் வேலை செய்யாது. ஸ்டம்ப்புகளை குறிவைத்து துருவ வேட்டைக்கு செல்லுங்கள் ” என்று கூறினார். 

Next Story

சோதனை மேல் சோதனை; ஹர்திக் பாண்டியாவுக்கு விபூதி அடித்த சகோதரர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Police action Hardik Pandya's brother for Money laundering case

முன்னணி இந்திய கிரிக்கெட் அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஹர்திக் பாண்டியா. முன்னதாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியா அந்த அணியிலும் கேப்டனாகத் தொடர்ந்தார். ஆனால், மும்பை அணியின் நட்சத்திர வீரர், ரோகித் ஷர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிற்கு சென்றதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ஆண்டு கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மோசமான வரவேற்பு கிடைக்கிறது. ஆனாலும், ரசிகர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தன் சகோதரர் ஒருவரால் மேலும் ஒரு பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் உடன்பிறந்த சகோதரர் க்ருணால் பாண்டியா. இவரும் இந்திய அணியிலும், ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் சகோதரர்கள் இருவரும் பிஸினஸிலும் காலூன்ற நினைத்துள்ளனர். அதற்கு பாண்டியா சகோதரர்களின், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா துணையாக வந்துள்ளார். மூவரும் சேர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ‘பாலிமர்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா தலா 40 சதவீதம் என்றும், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா 20 சதவீதம் என்றும் முதலீடு செய்தனர். ஒப்பந்தத்தில் லாபத்தையும் இதே விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்து கொண்டனர். இதில், ஹர்திக் மற்றும் க்ருணால் இருவருமே முழு நேர கிரிக்கெட் வீரர்கள் என்பதால் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சகோதரர் வைபவ் பாண்டியா எடுத்துக்கொண்டுள்ளார்.

Police action Hardik Pandya's brother for Money laundering case

இதனையடுத்து வைபவ், தனது இரு சகோதரர்களுக்கும் தெரியாமல் அதே தொழிலில் ஈடுபடும் மற்றொரு நிறுவனத்தை ரகசியமாக துவக்கியுள்ளார். இது ஹர்திக், க்ருணால் பாண்டியாக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர் செய்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், சகோதரர்கள் மூவரும் இணைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனத்தின் லாபம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதைக் கவனித்த ஹர்திக் பாண்டியா என்ன பிரச்சனை என நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்துள்ளார். அதில், ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் வைபவ் சொந்தமாக தனி நிறுவனத்தை தொடங்கி இருப்பது தெரிய வந்ததுள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வைபவ் பாண்டியாவை நம்பி, பாண்டியா சகோதரர்கள் புது நிறுவனத்தைத் தொடங்கிய நிலையில், அவரே இப்படி செய்தது பாண்டியா சகோதரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் பாண்டியா ரகசியமாக புதிய கம்பெனி தொடங்கியதால் பழைய கம்பெனிக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் பழைய கம்பெனியில் தனக்கான லாபத்தின் சதவீதத்தை 20 சதவீதத்தில் இருந்து 33.3 சதவீதமாக வைபவ் அதிகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் முதலில் மூன்று பேர் சேர்ந்து தொடங்கிய கூட்டு நிறுவனத்தில் கிடைத்த பணத்தை அடிக்கடி தனது சொந்த நிறுவனத்திற்கு வைபவ் மாற்றிக் கொண்டுள்ளார். பாண்டியா சகோதரர்களுக்கு தெரியாமல் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை வைபவ் மாற்றியதாக தகவல் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த அதிர்ச்சி பின்னணி முழுமையாக தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா தன்னை ஏமாற்றிய வைபவிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்ததாகவும், உடனே உனது பெயரை களங்கப்படுத்திவிடுவேன் என்று ஹர்திக் பாண்டியாவை வைபவ் மிரட்டியதாக தகவல் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ஒன்று விட்ட சகோதரரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா, வைபவிற்கு எதிராக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வைபவை கைது செய்து 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரித்து வருகின்றனர். வைபவ் மொத்தம் 4.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகே, மோசடி சம்பவம் குறித்து தகவல்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். பிரபல கிரிக்கெட் வீரருக்கு சகோதரரால் நடந்த  மோசடி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.