தென் ஆப்பிரிக்க அணி 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணிக்கு எதிராக குறைந்த ரன்கள் எடுத்த அணி என்கிற மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி மீண்டும் சொதப்பினார். கேப்டன் ரோஹித், கில் இணை ஓரளவு நிலைத்து ஆடியது. ரோஹித் 39 ரன்களும், கில் 36 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கோலி சிறப்பாக விளையாடிய நிலையில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் டக் அவுட் ஆக, ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தான் அதிர்ச்சி காத்திருந்தது. 153-4 என இருந்த இந்திய அணி 153 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஒரே ரன்னுக்கு (153) 6 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் இழந்த அணி எனும் மோசமான சாதனையைப் படைத்தது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா, இங்கிடி, பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் எல்கர் 12 ரன்களுக்கும், ஜொர்ஸி ரன்னிலும், ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மார்க்ரம் 36 ரன்களுடனும், பெடிங்காம் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- வெ.அருண்குமார்