Skip to main content

அடுத்த சச்சின்! அடுத்த சேவாக்! பாராட்டு மழை... யார் இந்த பிரித்வி ஷா?

Published on 11/10/2018 | Edited on 11/10/2018

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பிரித்வி ஷா இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாடும் 11 பேரில் ஒரு போட்டியில்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது நடைபெறும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றார். தனது முதல் போட்டியில் சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இதன் மூலம் அறிமுகப்படுத்திய முதல் போட்டியில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 

 

pp

 

மகாராஷ்டிராவில் 1999-ல் பிறந்தார் பிரித்வி ஷா. 4 வயது இருக்கும் போது அவரது தாயார் இறந்து விட்டார். அவரது தந்தை பிரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் கவனம் செலுத்த மிகவும் உதவினார். பிரித்வி ஷா மற்றும் அவரது தந்தையின் ஒரே நோக்கம் இந்திய அணியின் கிரிக்கெட் தொப்பியை ஷா அணிய வேண்டும் என்பதுதான். ஷாவும் அவரது தந்தையும் வாழ்க்கையில் அனைத்து நாட்களையும் கிரிக்கெட்டிற்காக அர்ப்பணித்தனர். 2010-ஆம் ஆண்டு ஏஏபி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை தந்து ஷாவை கிரிக்கெட் பயிற்சியை தொடர அனுமதியளித்தது. இந்தியன் ஆயில் நிறுவனமும் இவருக்கு ஸ்பான்சர்ஷிப் அளித்தது.  

 

பிரித்வி ஷா 2016-17 ரஞ்சி டிராபி அரை இறுதி போட்டி மூலம் தனது முதல் வகுப்பு ஆட்டத்தில் அறிமுகமானார். அந்த போட்டியில் மும்பை அணிக்கு விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் தனது முதல் சதத்தை பதிவு செய்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இதன் மூலம் இளம் வயதில் ரஞ்சி டிராபி தொடரில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அடுத்ததாக துலீப் டிராபி முதல் போட்டியிலும் சதம் அடித்தார். ரஞ்சி டிராபி, துலீப் டிராபி மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டி என மூன்றிலும் அறிமுக போட்டிகளில் சதமடித்து அசத்தி வருகிறார்.

 

pr

 

2018-ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் பிரித்வி ஷா இந்திய அணியின் கேப்டனாகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் இந்திய அணியை வழி நடத்தி அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். கடந்த ஐபிஎல் தொடரில் பிரித்வி ஷா 1.2 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கபட்டார். ஐபிஎல்-ல் விளையாடிய மிக இளம் வீரர் என்ற பெருமைக்கு உரியவர். கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அரை சதம் அடித்த இளம் வீரர் என்ற சஞ்சு சாம்சன் சாதனையை சமன் செய்தார். முதல் வகுப்பு போட்டிகளில் 14 ஆட்டங்களில் விளையாடி 7 சதங்கள் உட்பட 1418 ரன்கள் எடுத்துள்ளார். முதல் வகுப்பு போட்டிகளில் அவரின் பேட்டிங் சராசரி 56.72. 

பிரித்வி ஷா மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் அவரது ஆட்டத்தை பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அடுத்த சேவாக், அடுத்த சச்சின் என பலரும் கூறிவருகின்றனர். சுரேஷ் ரெய்னா பிரித்வி ஷாவை அடுத்த சேவாக் என்று புகழ்ந்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணிக்கு மற்றுமொரு சூப்பர் ஸ்டார் கிடைத்துள்ளதாக ட்வீட்டரில் கூறியிருந்தார். சச்சின் மற்றும் லாராவின் கலவை தான் பிரித்வி ஷா என வாகன் ட்வீட்க்கு ரீட்வீட் செய்துள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் மார்க் வாக்.

 

சேவாக் போன்று தயங்காமல் பந்தை எதிர்கொள்ளும் திறனும், சச்சின் போன்று பந்தை திசைக்கு ஏற்ப ஆடும் திறனும் பிரித்வி ஷாவிற்கு இருக்கிறது என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலி கூறியுள்ளார். ஆனால் பிரித்வி ஷாவை சேவாக் உடன் ஒப்பிட வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளார் கங்குலி. 
 

 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.