Skip to main content

அடிச்சா சிக்ஸ்... மிஸ் ஹிட்டும் சிக்ஸ்... வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ரகசியம் என்ன?

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 19 ரன்கள் தேவை. 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய பிராத்வெய்ட் முதல் 4 பந்துகளில் 4 சிக்ஸர்கள் அடித்து தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்தார். இப்படி பல முறை உள்ளூர் டி20 போட்டிகளில் கலக்கியுள்ளனர். இதுதான் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்களின் பேட்டிங் ஸ்டைல். மற்ற எந்த அணியிடமும் இல்லாத அளவிற்கு பவர் ஹிட்டர்களை இந்த அணியிடம் மட்டுமே காண முடியும்.
 

russell

 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவர் ஹிட்டர்கள் சிங்கில்ஸ் எடுக்க மிகவும் தடுமாறுவார்கள். அவர்களால் எளிதாக ஸ்ட்ரைக்கை ரோட்டேட் செய்ய முடிவதில்லை. ஆனால் லென்த் பால், யார்க்கர் லென்த், ஸ்லொவ் பால், பவுன்சர் என எப்படிப்பட்ட பந்துகளையும் எளிதாக எல்லைக் கோட்டிற்கு அப்பால் அனுப்புவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
 

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெயில், பொல்லார்ட், ரஸ்ஸல் போன்ற முன்னணி வீரர்கள் ஹிட்டர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வந்துள்ள இளம் வீரர்களான ஹிட்மையர், நிக்கோலஸ் பூரன் ஆகியோரும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் எளிதாக விளாசுகின்றனர். இன்னும் பல அதிரடி பேட்ஸ்மேன்கள் உருவாகிக்கொண்டே உள்ளனர்.
 

உடல்ரீதியாக பலமாகவும், உயரமாகவும் இருப்பதே இதற்கு காரணம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் பவர் ஹிட்டர்களாக இருப்பதற்கு இது மட்டுமே காரணமல்ல. டைமிங், பேட்டை பிடிக்கும் விதம், பயிற்சி செய்யும் முறை, டெக்னிக், நம்பிக்கை என பல காரணிகள் இதற்கு பங்களிக்கின்றன.
 

மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை ஆகியவை, கண்ட்ரோல் மற்றும் திசையை தீர்மானிக்கின்றன. அப்பர் பாடி மற்றும் ஆர்ம்ஸ்களை மட்டுமல்லாமல் லோயர் பாடியின் லெக்கை மிகவும் பலப்படுத்துவது அவசியம். கால் பகுதிகள் மற்றும் வயிற்று தசைகள் தான் பேட்ஸ்மேன்களுக்கு தேவையான பவரை தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 

ஒரு கோல்ஃப் வீரர் கோல்ஃப் பந்தை அடிப்பதற்கு முன்னரே உடலியல், கன்ட்ரோல் மற்றும் டெக்னிக் உள்ளிட்ட அனைத்தையும் தயார் செய்துகொள்வது போலவே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பேட்டிங்கை அணுகுகின்றனர். மிஸ் ஹிட்டாகும் ஷாட்கள்கூட சிக்ஸர்களாக மாறுவதும் இதனால் தான்.
 

gayle

 

 

சாப்பிடுகின்ற உணவு முறை பலம் தருகிறது என்று பெரும்பாலானோர் கூறி வருகின்றனர். ஆனால் நாங்கள் பவர் ஹிட்டிங் ஷாட்களை விளையாடுவதற்கு நம்பிக்கை ஒரு பெரிய பங்கை தருகிறது. மிகவும் கடுமையாக பயிற்சி செய்கின்றோம். வலிமையை அதிகரிக்க கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது. ஒரு உறுதியான தளத்தை தர வலுவான கால்கள் உதவுகின்றன. துல்லியமான டெக்னிக்கும் அவசியம் என பவர் ஹிட்டிங் பேட்ஸ்மேன் ஆண்ட்ரே பிளெட்சர் 2016-ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.
 

பல வருடங்களாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் திணறி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால் இதே காலகட்டங்களில் 2 முறை டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அதற்கு அணியின் ஒப்பனிங் பேட்ஸ்மேன்கள் முதல் கடைசி பேட்ஸ்மேன் வரை பவர் ஹிட்டர்களாக இருப்பது முக்கிய காரணம்.
 

கால்களுக்கு அதிக பலத்தை தருவது, டெக்னிக், பயிற்சி செய்யும் விதம், பேட்டை பிடிக்கும் ஸ்டைல், பயன்படுத்தும் பேட், பேட் ஸ்விங், உடலியல் ரீதியான பலம், உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவை வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை மற்ற அணி வீரர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது. இந்த காரணிகளே அவர்களுக்கு பவர் ஹிட்டிங் ஷாட்களுக்கு உதவுகிறது.
 

உலகம் முழுவதும் பல அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் கெயில், பொல்லார்ட், ரஸ்ஸல், நரைன், சமி உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தனிச்சிறப்பு வாய்ந்த பவர் ஹிட்டர்களாக இருந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டிகளில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தான். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பவர் ஹிட்டிங், கிரிக்கெட் விளையாடும் விதம், சிறு சிறு குறும்புத்தனம் போன்றவற்றை பார்க்க உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள். 

 

 

Next Story

WPL : சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
WPL : Bengaluru team won the title

இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (W.P.L.) கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி (23.02.2024) தொடங்கியது. இது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் ஆகும். இதற்கான இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (17.03.2024 நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களுரூ அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி  களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோன்று கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

ஒன்பதாவது வருடமாக தொடரும் சாதனை; கலக்கும் இந்திய அணி!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Record continues for ninth consecutive year; A mixed Indian team

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரைசதம் கடந்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 29, ஜோ ரூட் 24 என ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. சிறப்பான தொடக்கம் தந்த  ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் கடந்தனர்.  ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஹித் அரைசதம் கடந்து 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் மற்றும் கில் சிறப்பாக ஆடினர். 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என அதிரடியாக ஆடிய அவர், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் 12 ஆவது சதமாகும். அதனைத் தொடர்ந்து கில்லும் சதமடித்தார். ஆனால் சதமடித்த வேகத்திலேயே இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இறங்கிய படிக்கல் மற்றும் சர்பிராஸ் ஆகியோர் அரைசதம் கடந்தனர். படிக்கல் 65 ரன்களிலும், சர்பிராஸ் 56 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்த ஜடேஜா மற்றும் ஜுரேல் ஆகியோர் 15 ரன்களில் வெளியேறினர். கடைசியாக குல்தீப் 30, பும்ரா 20 ரன்கள் சிறப்பாக ஆட இந்திய அணி 124.1 ஓவர்களில் 477 ரன்கள் குவித்தது.

259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது.  36 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை அஸ்வின் சாய்த்தார். ரூட் மட்டும் அரைசதம் கடந்து 84 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரரானார். முதல் மூன்று இடங்களில் முறையே வார்னே, கும்ப்ளே, முரளிதரன் ஆகியோர் உள்ளனர். மேலும் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் இடத்தை (36 முறை) பிடித்துள்ளார். கும்ப்ளே 35 இரண்டாவது இடத்தில் உள்ளார். பும்ரா, குல்தீப் தலா 2  விக்கெட்டுகளை எடுத்தனர். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார்.

இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசி, பேட்டிங்கிலும் ஜொலித்த குல்தீப் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் தொடர்நாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கடந்த 2015 முதல் சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக சாதனை படைத்து வருகிறது. ஒன்பதாவது வருடமாக டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது.

வெ.அருண்குமார்