Skip to main content

“நாங்கள் தவறு செய்துவிட்டோம்..” - பாபர் அசாம்

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

“We have made a mistake..” - Babar Assam

 

உலகக் கோப்பை லீக் போட்டியின் 43வது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொல்கத்தா மாநிலம், ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான டேவிட் மாலன் 39 பந்துகளில் 31 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 61 பந்துகளில் 59 ரன்களையும் குவித்து தங்களது விக்கெட்களை இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஆடிய ரூட் 72 பந்துகளில் 60 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஸ்டோக்ஸ் 76 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஏனைய வீர்கள் 30 ரன்களுக்குள்ளாகவே ஸ்கோர் செய்தனர். அதன்படி இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 337 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியில் எந்த வீரரும் சதம் அடிக்காமலே 337 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

பாகிஸ்தான் பந்துவீச்சை பொறுத்தவரை, ஷகீன் அஃப்ரிடி 2 விக்கெட்களையும், மொஹமது வாசீம் 2 விக்கெட்களையும், அஹமது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஹரிஸ் ரவூஃப் 3 விக்கெட்களை கைப்பற்றினார். 

 

338 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஆகா சல்மான் மட்டுமே அரை சதத்தை அடித்தார். அணியின் கேப்டன் பாபர் அசாம் 45 பந்துகளில் 38 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மொஹமது ரிஸ்வான் 51 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹரிஸ் ரவூஃப் 23 பந்துகளில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை தொடர்ந்து பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

 

இங்கிலாந்து அணியில், டேவிட் வில்லி 3 விக்கெட்களையும், அடில் ரஷித், அட்கின்சன் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

 

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், “ஆட்டத்தை வெளிப்படுத்திய விதத்தில் மிகவும் ஏமாற்றம். நாங்கள் தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியை வென்றிருந்தால் கதை வேறு மாறி இருந்திருக்கும். 

 

நாங்கள் பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் தவறு செய்துவிட்டோம். 20 முதல் 30 ரன்களை எக்ஸ்டிராஸில் கொடுத்துவிட்டோம். எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை எடுக்கவில்லை. மிடில் ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை எடுக்கவில்லை என்றால் பெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடும். நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி எங்கள் தவறுகள் குறித்து ஆலோசிப்போம்” என்று பேசினார். 

 

 

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.