இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்புவரை அதிகம் விமர்சிக்கப்பட்டவர் கேப்டன் விராட் கோலி. ஆனால், தொடர் தொடங்கிய முதல் போட்டியிலேயே இந்திய அணியின் ஒரே நம்பிக்கையாக கடைசி வரை களத்தில் நின்றவரும் அவர்தான். ஒருவேளை சக வீரர்கள் அவருக்கு பக்கப்பலமாக இருந்திருந்தால் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் வாய்ப்பிருந்தது.
இந்நிலையில், விராட் கோலி மிகச்சிறப்பாக செயல்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் பயிற்சியாளர் ட்ரிவேர் பேலிசிஸ் தெரிவித்திருந்தார். அவரது விக்கெட்டை வீழ்த்துவது கடினமாக இருந்ததாகவும், அடுத்த போட்டிகளில் விராட் கோலிக்கு மைண்ட் அட்டாக் கொடுப்போம் என்றும் அவர் கூறியிருந்தார். இப்படி, இந்த சுற்றுப்பயணம் தொடங்கியதில் இருந்தே எல்லா விமர்சனங்களும் விராட் கோலியை நோக்கியே இருக்கின்றனர்.
அதன்படி, ஐசிசி செயலதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஆகியோர் கலந்துகொண்ட விவாதத்திலும் விராட் கோலி குறித்து பேசியிருக்கிறார்கள். விராட் கோலியைப் பார்த்து இங்கிலாந்து வீரர்கள் பயப்படுகிறார்களா எனக் கேட்டபோது, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என உடனடியாக மறுத்தார் ராய். தொடர்ந்து பேசிய அவர், விராட் ஒரு மிகச்சிறந்த வீரர். பேட்டிங்கிலும், மைதானத்திலும் அவர் ஒரு சுவாரஸ்யமான வீரராகவே திகழ்கிறார். அவரது திறமையில் துளியளவும் சந்தேகம் கிடையாது. ஆனால், எப்படியானாலும் அவரது விக்கெட்டை வீழ்த்துவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.