Skip to main content

5 முறை உலக சாம்பியன், 50+ டைட்டில்... ரியல் ஹீரோ – செஸ் கிராண்ட் மாஸ்டர்...

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

இன்று கிரிக்கெட்டில் கோலியின் சாதனைகளுக்கு தொடக்கப் புள்ளியாக இருந்தவர் சச்சின். சச்சினுக்கு முன்பு கவாஸ்கர், கபில்தேவ் இந்தியாவிலும், உலகளவிலும் பிரபலம். இந்தியாவில் ஓரளவு பிரபலமாக இருந்த கிரிக்கெட்டை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றவர் சச்சின். ஆனால், செஸ் போட்டிகளைப் பொறுத்தவரை விஸ்வநாதன் ஆனந்த் என்ற நபரின் வருகைக்கு முன்புவரை இந்தியா உலகளவில் செஸ் போட்டிகளில் சாதித்ததில்லை. நம் நாட்டில் இன்றுள்ள செஸ் விளையாட்டின் உயரத்திற்கு விதைகளை விதைத்தவர் ஆனந்த்தான். 

 

cc

 

 

இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் மற்றும் முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உலகளவில் புகழ்பெற்ற முடிசூடா மன்னன். ரஷ்யர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த செஸ் போட்டிகளில், இந்தியாவை முன்னிலைப்படுத்தி தனிமுத்திரை பதித்தவர். இந்திய விளையாட்டு வீரர்களில் மிகவும் தலைசிறந்த, ஈடு இணையற்ற வீரர்.

 

ஆனந்தின் தாய் சதுரங்கத்தில் அதிக ஈடுபாடு உடையவர். ஆனந்தின் தாய் சுசீலா, ஆனந்திற்கு ஆறு வயதிலிருந்தே செஸ் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். அவரை ஊக்கப்படுத்தினார். இது அவரின் எதிர்கால செஸ் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது. பின்னர் ‘டால்’ என்ற செஸ் அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றார். தன்னுடைய 14 வயதிலேயே தேசிய அளவிலான செஸ் போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றார். 

 

கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும்போதே உலக செஸ் சாம்பியன் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடினார். 1983-ல் 14 வயதாக இருந்தபோது தேசிய சப்-ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப், 1984-ல் ஆசியன் ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப், 1985-ல் மீண்டும் ஆசியன் ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப், 16 வயதில் தேசிய செஸ் சாம்பியன், 1987-ல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்தியர், 18 வயதில் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர். இப்படி ஒன்று, இரண்டல்ல சிறு வயதிலேயே சாதனைகள் பல புரிந்தார். இந்தியாவின் செஸ் மாஸ்டராக உயரத்தை அடைந்தார் ஆனந்த்.

 

cc

 

 

2000, 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். உலக செஸ் சாம்பியன் போட்டிகள் டோர்னமென்ட், ரேபிட், நாக் அவுட் என மூன்று முறைகளில் ஏதாவது ஒரு முறையில் நடத்தப்படும். இந்த மூன்று முறைகளிலும் பட்டம் வென்றவர் தமிழ்நாட்டில் 11 டிசம்பர் 1969-ம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்த விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே.

 

1985-ல் அர்ஜுனா’ விருது, 1987–ல் இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது, 1991-1992ஆம் ஆண்டிற்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, 2000-ல் பத்ம பூஷன் விருது, 2007-ல் பத்ம விபூஷன் விருது, 1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான சதுரங்க ஆஸ்கார் விருது என்று இவர் வாங்கிய விருதுகள் ஏராளம். வெளிநாடுகளிலும் விருதுகள் வாங்கியுள்ளார். 

 

அவர் சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பவர். விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார். அவரது முன்னாள் சதுரங்க போட்டியாளர்களால்கூட மிகவும் மதிக்கப்படுபவர். விஸ்வநாதன் ஆனந்த் 2007 முதல் 2013 வரை ஆறு ஆண்டுகள் சதுரங்க உலகத்தில் ஆதிக்கம் செலுத்தினார். சில ஏற்ற இறக்கங்களையும் கண்ட அவர், இறக்கங்களைக் கடந்து சாதித்துவருகிறார்.  

 

1988-ஆம் ஆண்டுவரை ஒருவர்கூட செஸ் கிராண்ட் மாஸ்டர் இல்லை. அந்த வருடம் விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார். இன்று 50+ செஸ் கிராண்ட் மாஸ்டர்கள்.  ஆண்கள் பிரிவில் இந்தியா ஆறாவது இடத்திலும், பெண்கள் பிரிவில் ஏழாவது இடத்திலும் உள்ளது. இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார் ஆனந்த். 1991-ல் உலகின் சிறந்த டாப் 10 செஸ் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்த அவர், இன்றும் அந்தப் பட்டியலில் அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

cc

 

 

கடந்த ஆண்டு அவரின் 48 வயதில் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார். ஒரு தனி ஆளாக இந்தியாவை செஸ் போட்டிகளில் உலகறிய செய்தார். இந்தியாவில் விளையாட்டு துறையில் செஸ் போட்டிகளை தனது கெரியராக மேற்கொள்ள நினைக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர் சமுதாயத்திற்கு அவர் ஒரு ரோல் மாடல். 
 

 

 

Next Story

தொடங்கியது '2024 தேர்தல் திருவிழா'- தேதிகள் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'2024 Election Festival' begins- dates announced

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதே நேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதி பற்றி முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (16/03/2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாற்றுகையில், ''மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது. 2024-ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 986.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட 6 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.50 கோடி பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நூறு வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆள்பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக உள்ளது. நான்கு பலத்தை கட்டுப்படுத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்பலத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதை தடுக்க தேவையான அளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். 50% வாக்கு சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். எல்லைகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.பொய்ச் செய்திகளை உருவாக்கி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.