Skip to main content

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி செய்த சாதனை

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Virat Kohli achieved feat after five years

 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்த டெஸ்ட் போட்டியில், மூன்றாம் நாளிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, 1 - 0 என்ற புள்ளியில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.

 

இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் (ஜூலை 20)  தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணிக்காக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினார்கள்.

 

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தனர். இதில் ரோகித் சர்மா 80 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முந்தைய டெஸ்ட் தொடரில், இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 1999 ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து இரு டெஸ்ட் தொடர்களிலும் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்துத் தந்த இந்திய தொடக்க ஜோடி என்ற பெருமையை ரோகித் ஷர்மாவும், யஷஸ்வியும் பெற்றுள்ளனர்.

 

இதையடுத்து வந்த சுப்மன் கில் 12 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் களம் இறங்கினார்கள். மிகவும் எச்சரிக்கையாக ஆடிய விராட் கோலி தனது 21வது பந்தில் தனது முதல் ரன்னை எடுத்தார். தொடர்ந்து ஆடிய விராட் கோலி தனது சதத்தை நிறைவு செய்வதற்குள் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை எடுத்தது. விராட் கோலி 87 ரன்களும், ஜடேஜா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

 

இந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, விராட் கோலி 180 பந்துகளை எதிர்கொண்டு சதம் அடித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 29வது சதத்தை பூர்த்தி செய்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் அவர் அடித்த முதல் சதம் இதுதான். மேலும், இது விராட் கோலியின் 500வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி சதம் அடித்த அதே ஓவரில் ஜடேஜாவும் 106 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.

 

இந்திய அணியின் மொத்த ஸ்கோர் 341 ரன்களாக உயர்ந்த நிலையில், விராட் கோலி 206 பந்துகளுக்கு 121 ரன்கள் எடுத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரரான அல்ஜாரி ஜோசப்பால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து அஜிங்க்யா ரஹானே களம் இறங்கினார். இவர் 8 ரன்கள் எடுத்த நிலையில், ஷனான் காப்ரியல் பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து இஷான் கிஷண் களம் இறங்கினார். தொடர்ந்து ஆடிய ஜடேஜா, 152 பந்துகளுக்கு 61 ரன்கள் எடுத்த நிலையில், கெமர் ரோச்சால் அவுட் ஆனார்.

 

இதையடுத்து, அஸ்வின் களம் இறங்கினார். 25 ரன்கள் எடுத்திருந்த இஷான் கிஷண், ஜேசன் ஹோல்டர் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து வந்த ஜெயதேவ் உனத்கட் 7 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆகி களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த முஹமது சிராஜ் 11 பந்துகளைச் சந்தித்த நிலையில் ஜொமெல் வாரிக்கன் வீசிய பந்தில் அவுட் ஆனார். இறுதியாக விளையாடிய அஸ்வின் அரை சதத்தை கடந்து 56 ரன்கள் எடுத்திருந்த போது, கெமர் ரோச் பந்தில் அவுட் ஆனார்.

 

இறுதியாக இந்திய அணி 438 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகேஷ் குமார் 1 பந்து மட்டுமே சந்தித்த நிலையில், ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் மற்றும் ஜொமெல் வாரிக்கன் தலா 3 விக்கெட்டுக்களை எடுத்தனர்.

 

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் கேப்டன் கிரேக் பிராத்வைட் மற்றும் டேஜெனரைன் சந்தர்பால் களம் இறங்கினார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 71 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, 33 ரன்கள் எடுத்திருந்த சந்தர்பால், அஸ்வின் வீசிய பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து வந்த கிரிக் மெக்கென்சி 14 ரன்களுடனும், கிரேக் பிராத்வைட் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் குவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்விஸ்ட் இருக்கு... சன் ரைசர்ஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ராயல் சேலஞ்சர்ஸ்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

ஐபிஎல் 2024இன் 41 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி, அனுபவ கோலி, டு பிளசிஸ் இணை ஹைதராபாத் பந்து வீச்சை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண வைத்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டு பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜேக்ஸும் 6 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த பட்டிதார், கோலியுடன் இணைந்து அசர வைக்கும் விதத்தில் ஆடினார். மார்கண்டேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் அடித்து ஹைதராபாத் பவுலர்களை திகைக்க வைத்தார். 20 பந்துகளில் அரை சதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். க்ரீனின் 20 பந்துகளுக்கு 37 எனும் கடைசி கட்ட அதிரடி கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்து வீசிய உனாத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும், மார்கண்டே, கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 207 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தியது. கடந்த சில போட்டிகளாக அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து வரும் ஹைதராபாத் அணி இந்த இலக்கை எளிதில் அடித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் தைரியமாக முதல் ஓவரை ஸ்பின்னரான வில் ஜேக்ஸுக்கு கொடுக்க, சிக்சர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ட்விஸ்ட் நடந்தது. தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை மிரட்டி வந்த ஹெட் 1 ரன்னில் அவுட் ஆனார்.

There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

பின்னர் சிறிது அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஸ்வப்னில் சிங் சுழலில் மார்க்ரம் 7, கிளாசென் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நித்திஷ் ரெட்டியும் 13 ரன்களில் கரன் ஷர்மா பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத்தும், கரன் ஷர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

85-6 என்ற இக்கட்டான சூழலில் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். அவருடன் இணைந்து சபாஸ் அஹமதுவும் இணைந்து எவ்வளவோ முயன்றும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. கம்மின்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை களத்தில் நின்ற சபாஸ் அஹமது 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியால் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மா, க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், யாஸ் தயால், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். அட்டகாசமாக ஆடி 20 பந்துகளில் அரை சதம் அடித்த பட்டிதார் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 புள்ளிகள் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து பெங்களூரு அணிக்கு கொஞ்சம் பிளே ஆஃப் வாய்ப்பு எஞ்சியுள்ளது. அதனால் இந்த வெற்றியானது 6 ஆட்டங்களாக தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.