Skip to main content

இனி யார் பெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற விவாதத்திற்கு இடமில்லை...

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

சில மாதங்களுக்கு முன்புவரை விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்மித், இங்கிலாந்தின் ரூட், நியூசிலாந்தின் வில்லியம்சன், தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா ஆகியோரில் யார் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் அவ்வப்போது வரும். ஆனால் இப்போது அதைப்பற்றி பேச்சே வருவதில்லை. இதற்கு காரணம் மற்றவர்களைவிட வேறு லெவலுக்கு யாரும் நெருங்க முடியாத அளவிற்கு வெகுதூரம் சென்றுவிட்டார் கோலி. 

 

virat

 

கிரிக்கெட்டில் சாதனைகள் என்பது அரிதாகவே படைக்கப்பட்டு வந்தது. சச்சின், கோலி போன்றோர் இதற்கு விதிவிலக்கு. இன்று கோலி எடுக்கும் ஒவ்வொரு ரன்னும் ஏதாவது ஒரு விதத்தில் சாதனையாக மாறிவருகிறது. கோலி மட்டும் எப்படி பவுலர்களை சாதாரணமாக விளாசுகிறார், என்ற கேள்வி எழுமளவிற்கு அவரின் பேட்டிங் உள்ளது. டைமிங், பர்ஃபெக்‌ஷன், ப்ளேஸ்மென்ட் என அனைத்திலும் இன்று கோலிக்கு நிகர் அவரே. 
 

ஒருநாள் போட்டிகளில் கோலி படைக்காத சாதனைகளே இல்லை என்றளவிற்கு புள்ளிவிவரங்கள் விரைவில் மாறும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எடுத்த ரன்கள் 250. இதில் கோலியின் பார்ட்னர்ஷிப் ரன்கள் 248. இந்தப் போட்டியில் இந்திய அணி எடுத்த ரன்களில் 46% ரன்கள் கோலி எடுத்தவை. அதிக ரன்களில் மட்டுமல்ல. ஃபினிஷிங், அதிரடி, வின்னிங் லீடர் என கோலி இந்திய அணிக்கு பல வகைகளில் பங்களித்து வருகிறார்.
 

உள்நாடு, வெளிநாடு, பர்ஸ்ட் பேட்டிங், சேசிங், ஸ்பின், பாஸ்ட், பேட்டிங் பிட்ச், பவுலிங் பிட்ச் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் தான் நம்பர் 1 என்பதை நிருபித்து வருகிறார். கடைசியாக விளையாடிய 14 தொடர்களில் 13 தொடர்களில் பேட்டிங் சராசரி 50+. இப்படி ஒரு கன்சிஸ்டன்ட்டாக விளையாட விராட் கோலியால் மட்டுமே முடியும். 92, 77, 134, 58. இந்த எண்கள் ரன்கள் இல்லை. கடைசி 4 வருடங்களில் கோலியின் பேட்டிங் சராசரி. வேறெந்த பேட்ஸ்மேனும் ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இப்படியொரு சராசரியை வைத்திருக்க இயலாது. 

 

virat

 

கடைசி 3 வருடங்களில் அதிக ரன்கள் (3481), அதிக நிமிடங்கள் (3363) களத்தில் பேட்டிங் செய்தது, அதிக பந்துகள் (3525) சந்தித்தது, அதிக பவுண்டரிகள் (327), அதிக சதங்கள் (15), டாப் 5 பேட்ஸ்மேன்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் (98.75), அதிக பேட்டிங் சராசரி (89.25), டாப் 5 பேட்ஸ்மேன்களில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் (43) என கோலியின் சாதனை புள்ளிவிவரங்கள் பட்டியல் எல்லையின்றி சென்றுகொண்டே இருக்கும்.  
 

சேசிங் கிங், பெஸ்ட் பேட்ஸ்மேன் என அதிகம் அறியப்பட்ட கோலி அதிரடி, ஃபினிஷிங், கேப்டன் பொறுப்புகளிலும் அசத்தியுள்ளார். ஃபினிஷர் என்றால் கடைசி சில ஓவர்களில் இறங்கி அடித்து ஆடி வெற்றிபெற வைப்பது என்பதுதான் இதுவரை நாம் பார்த்தது. ஃபினிஷர் என்பதற்கான வரையறையை மாற்றியவர் கோலிதான். தொடக்கம் முதலே தேவையான ரன்ரேட்டை மெய்ன்டைன் செய்து பல ஓவர்கள் இருக்கும்போதே அணியை வெற்றி பெற செய்வார் கோலி. முதல் விக்கெட்டிற்கு களமிறங்கும் கோலி கடைசி 3 வருடங்களில் 54 போட்டிகளில் 14 முறை நாட் அவுட் என்பது குறிபிடத்தக்கது. 

 

ஒரு பேட்ஸ்மேனாக கொண்டாடப்பட்ட கோலி, ஒரு சிறந்த கேப்டனாக பெரியளவில் கொண்டாடப்படவில்லை. வெளிநாடுகளில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கோலி தலைமையில் இந்திய அணி பல வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ளது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கோலியின் தலைமையில் இந்திய அணி வென்ற அளவிற்கு வேறெந்த இந்திய கேப்டனின் தலைமையிலும் இந்திய அணி வெற்றி பெறவில்லை.
 

virat

 

பேட்ஸ்மேன் கோலிக்கு கிடைத்த கிரடிட், கேப்டன் கோலிக்கு கிடைக்கவில்லை. கேப்டனாக கோலி சிறு தவறு செய்யும்போதெல்லாம் அது ஊதி பெரிதாக்கப்படும். ஆனால் அணி வெற்றி பெற்ற போதெல்லாம் அதற்கான கிரடிட் அவருக்கு அளிக்கப்படவில்லை. 
 

கேப்டனாக கோலி இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும் என்பது உண்மை. இருப்பினும் வெற்றி பெறும்போதெல்லாம் பெரிய அளவில் அவருக்கு கிடைக்காத கிரடிட், தோல்வி பெறும்போது விமர்சனம் அவர்மீது பாய்கிறது. டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளில் பெரிய சீனியர் வீரர்கள் இல்லாமல் கோலி தலைமையில் வெற்றிகளை பெற்றுவருவதையும் கவனிப்பது அவசியம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது - பும்ரா ஓபன் டாக்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Don't Let Ego Be Your Barrier Bumrah Open Talk

இந்த ஆட்டத்தில் உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று நேற்றைய ஆட்டம் குறித்து பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 25ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பும்ரா பெரும் தலைவலியாக இருந்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே கோலியை அவுட்டாக்கி பெங்களூரு ரசிகர்களை அமைதியாக்கினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் மீண்டும் டக் அவுட் ஆகியும்  ஏமாற்றினர். கேப்டன் டு பிளசிஸ் 61 ரன்களும், பட்டிதார் 50, ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஆனால் மீண்டும் வந்த பும்ரா விக்கெட் வேட்டையைத் தொடர்ந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான 53 ரன்கள் கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். மத்வால், கோபால், கோயட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின் 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை சிறப்பான துவக்கம் தந்தனர். ஆடுகளத்தில் ஸ்விங்கிங் கண்டிஷன் சிறப்பாக செயல்பட்ட முதலிரண்டு ஓவர்களை பொறுமையாகக் கையாண்ட இருவரும் மூன்றாவது ஓவரிலிருந்து ஆட்டத்தை மும்பை வசப்படுத்தினர். ரோஹித் மற்றும் இஷானின் பேட்டிலிருந்து மைதானத்தின் பல பக்கங்களுக்கும் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறக்கத் தொடங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தனர். மிகவும் சிறப்பாக ஆடிய இஷான் அரைசதம் கடந்து 69 ரன்களுக்கு வீழ்ந்தார்.

அடுத்து வந்த சூர்யா ரோஹித்துடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடினார். சூர்யாவின் பேட்டிலிருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரி மற்றும் சிக்சர்கள் வந்தது. 17 பந்துகளிலேயே அரை சதம் கடந்தார் சூர்யா. ரோஹித் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யா 52 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக்கும் அதிரடியில் இறங்க 15.3 ஓவர்களிலேயே மும்பை அணி வெற்றி இலக்கை அடைந்தது.  இதன் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி தரப்பில் வைசாக், தீப், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பின்னர் பரிசளிப்பு விழாவின் போது பேசிய பும்ரா, “ நான் இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எப்போதும் என்னால் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. மைதானத்தை விரைவில் கணித்து என்னுடைய பந்து வீச்சை அதற்கு ஏற்றாற்போல் மாற்றினேன். இங்கே உஙளுக்கு அனைத்துவிதமான திறமைகளும் வேண்டும். அதுபோல தான் என்னை தயார்படுத்தியுள்ளேன். யார்க்கர் மட்டுமே உங்களுக்கு எல்லா நாளும் உதவாது. எனக்கும், நான் சரியாக பந்து வீசாத கடினமான நாட்கள் இருந்தது. அப்போது எங்கு தவறு இழைத்தேன் என வீடியோக்கள் உதவியுடன் தெரிந்துகொண்டேன். எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்திப்போக உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி அவர்கள் என் பந்தை சிறப்பாக அடித்தால், எங்கு தவறு உள்ளது? அதை எப்படி சரி செய்ய வேண்டும் என சிந்தித்து, என்னை மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்துவேன். எனக்கு நானே அழுத்தம் கொடுத்து என்னை தயார் செய்வேன். சில நேரங்களில் யார்க்கர், சில நேரங்களில் பவுன்சர் என சூழலுக்கு தகுந்தாற்போல் வீச பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக மைதானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். நீங்கள் 145 கி.மீ வேகத்தில் வீசுபவராக இருக்கலாம், ஆனால் அது எல்லா சமயத்திலும் வேலை செய்யாது. மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப குறைந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் எனும் சூழல் வந்தால், அவ்வாறும் வீச வேண்டும். அதற்கு உங்கள் ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு சின்ன சின்ன தயார்படுத்துதலும் உங்களை சிறப்பாக்கும். ஒரே ஒரு தந்திரம் மட்டும் வேலை செய்யாது. ஸ்டம்ப்புகளை குறிவைத்து துருவ வேட்டைக்கு செல்லுங்கள் ” என்று கூறினார்.