Skip to main content

அந்த சாதனையை இன்று படைப்பாரா விராட்?

Published on 03/07/2018 | Edited on 03/07/2018

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்டு ட்ரஃபாட்ர்டு மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அதிவேகமாக 2ஆயிரம் ரன்கள் குவித்த விரர் என்ற சாதனையை படைப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.
 

Virat

 

 

 

இந்திய கேப்டன் விராட் கோலி இதுவரை 55 டி20 போட்டிகளில் களமிறங்கி, 1,992 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 48.48 ரன்கள் ஆகும். எனவே, 2,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைக்க அவருக்கு வெறும் 8 ரன்களே தேவை. இதற்கு முன்னர் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில், ப்ரெண்டன் மெக்கல்லம் மற்றும் பாகிஸ்தானின் சோயிப் மாலிக் ஆகியோர் 2,000 ரன்களைக் கடந்துள்ளனர். குறிப்பாக சோயிப் மாலிக் தனது 59ஆவது போட்டியில்தான் இந்த மைல்கல்லை எட்டினார். எனவே, இன்றைய போட்டியில் விராட் கோலி எட்டு ரன்கள் எடுத்தால் சர்வதேச டி20 போட்டிகளில் 2,000 ரன்களைக் கடந்த நான்காவது வீரர் மற்றும் அதிவேக 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அடைவார்.
 

இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி மிகவும் சொதப்பலாக ஆடக்கூடியவர் என்ற கருத்து நிலவுகிறது. அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளிலும் அவர் சரியாக விளையாடவில்லை. எனவே, இந்தத் தொடரில் அந்த எண்ணத்தை அவர் மாற்றுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

 

Next Story

பொறுப்புடன் ஆடிய கோலி; சிலிர்த்தது சின்னசாமி மைதானம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
rcb vs kkr ipl live score update kohli played important knock

ஐபிஎல் 2024 இல் 10 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்த கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெங்களூர் அணியை முதலில் பேட் செய்யுமாறு அழைத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் கேப்டன்  டூப்ளசிஸ் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு கேமரூன் கிரீன் கோலியுடன் இணைந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிரீன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த மேக்ஸ் வெல்லும் கோலியுடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். ஆனால் அந்த அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 28 ரன்களை எடுத்து நரேன் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ராஜத் பட்டிதார் மீண்டும் ஏமாற்றினார். 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அனுஜ் ராவத்தும் 3 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஒருபுறம் வீரர்கள் தவறான ஷாட்டுகளால் ஆட்டம் இழந்த போதிலும் மறுபுறம் விராட் கோலி எப்போதும் போல தனக்குரிய பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் எப்போதும் போல தன்னுடைய பினிஷிங் அதிரடியை காட்டினார். 8 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்தார். கோலி 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கி 3.5 ஓவர்களிலேயே 52 ரன்களுடன் அதிரடியாக ஆடி வருகிறது.  சால்ட் 12 பந்துகளில் 24 ரன்களும், நரைன் 11 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்த ஆட்டத்தில் 83 ரன்கள் எடுத்ததன் மூலம், விராத் கோலி இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த எடுத்துள்ள வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றுக் கொண்டார். 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.