Skip to main content

யு.கே. டு யு.ஏ.ஈ. (UK டு UAE): சோதனைகளைக் கடக்குமா இந்திய கிரிக்கெட் அணி?

Published on 17/09/2018 | Edited on 17/09/2018

 

Asia cup

 

“வீட்டுல புலி வெளியில எலி” என்று சொல்வதைப் போல பெரும்பாலான கிரிக்கெட் அணிகள் சொந்த மைதானத்தில் வெளுத்துக்கட்டும். ஆனால் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மண்ணைக் கவ்விகொண்டு திரும்பி வரும். இதற்கு இந்திய அணியும் விதிவிலக்கு இல்லை. பல கால கட்டங்களில் வெளிநாடுகளில் இந்திய அணியின் செயல்பாடு ஒரு சில தொடர்களில் மெச்சும்படியாக இருந்தாலும், பெரும்பாலான தொடர்களில் மோசமாகவே இருந்துள்ளது. நடந்து முடிந்த இங்கிலாந்து தொடர் இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

 

இங்கிலாந்தில் நடைபெற்ற  டி20 தொடரை 2-1 என இந்தியாவும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தும் வென்றன. இரண்டரை மாத இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, 6 அணிகள் பங்கு பெறும்  ஆசிய கோப்பை போட்டிகளுக்காக துபாய் சென்றுள்ளது இந்திய அணி. ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, குல்தீப் யாதவ் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. மேலும், கிங் கோலி இல்லாமல் இந்தத் தொடரில் பங்கு பெறுவது இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும். ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

Asia cup

 

இந்தியாவின் டாப்-3 ஆட்டக்காரர்களான ரோஹித், தவான் மற்றும் கோலி ஆகியோரின் செயல்பாடு சமீப காலமாக மிகவும் சிறப்பாக உள்ளது. இது மிகப்பெரும் பலமாக இருந்து வருகிறது. ஆனால் இதுவே இந்தியாவிற்கு மிகப்பெரிய பலவீனமாகவும் உள்ளது. ஏனென்றால் டாப்-3 வீரர்கள் சரியாக விளையாடாத ஒரு சில போட்டிகளில் மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. கோலி இல்லாமல் களம் காணுவதால், பேட்டிங்கை பொறுத்தவரை சவால் நிறைந்ததாகவே இருக்கும்.

 

முதல் விக்கெட்டிற்க்கு லோகேஷ்  ராகுலும், இரண்டாவது விக்கெட்டிற்க்கு எம்.எஸ்.தோனியும் களம் காண வாய்ப்புகள் அதிகம். மிடில் ஆர்டரில் மனிஷ் பாண்டே, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய நால்வரில் இருவருக்கு மட்டுமே இடம் கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு பெரிய சோதனையாக இருப்பது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களே. பல போட்டிகளில் டாப்-3 பேட்ஸ்மேன்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்த போதிலும், சொதப்பலான மிடில் ஆர்டர் பேட்டிங்கால் தோல்விகளை தழுவியது. நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரிலும் இதே நிலைதான்.

 

அணியின் ஒரே ஒரு ஆல் ரவுண்டரான ஹர்டிக் பாண்டியா, பேட்டிங் அல்லது பெளலிங் என ஏதாவது ஒரு துறையில் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை குல்தீப் யாதவ் மற்றும் சஹால் இணை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இங்கிலாந்து தொடரிலும் சுழல் பந்துவீச்சு மெச்சும்படியாக இருந்தது. புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சு உள்நாடு, வெளிநாடு என அனைத்து நாடுகளிலும் சிறப்பாக இருந்து வருகிறது. காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் விளையாடாத பும்ராஹ், அணிக்கு திரும்பியிருப்பது வேகப்பந்துவீச்சுத் துறைக்கு கூடுதல் பலமாக இருக்கும். எனினும் ரெகுலரான ஆறாவது பந்து வீச்சாளர் இல்லாதது குறிப்பிடத்தக்கது. கேதர் ஜாதவ் பார்ட் டைம் பௌலராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Asia cup

 

பலம்:

துவக்க ஆட்ட இணை

மிரட்டலான சுழல் பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

 

பலவீனம்:

வலுவில்லாத இடைநிலை ஆட்டக்காரர்கள்

ஆல் ரவுண்டர்கள்

 

உத்தேச அணி:

டாப் ஆர்டர்(1-3): ரோஹித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல்

 

மிடில் ஆர்டர்(4-7): எம்.எஸ்.தோனி, மனிஷ் பாண்டே அல்லது அம்பதி ராயுடு,   கேதர் ஜாதவ், ஹர்டிக் பாண்டியா

 

பவுலர்ஸ்(8-11): புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவெந்திர சஹால், ஜாஸ்ப்ரிட் பும்ராஹ்

 

 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.