Skip to main content

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய மூன்று வீரர்கள்!

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

ipl

 

மார்ச் மாதம் நடைபெற இருந்த 13-ஆவது ஐ.பி.எல் தொடரானது கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின், கரோனா பாதிப்பு குறைவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டு, அது குறித்தான அறிவிப்பை பி.சி.சி.ஐ வெளியிட்டது. அதன்படி, செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இத்தொடரில், 56 போட்டிகள் லீக் போட்டிகள், 4 போட்டிகள் பிளேஆஃப் சுற்று போட்டிகள் ஆகும்.

 

நடப்பு ஐ.பி.எல் தொடரில் தேவ்தத் படிக்கல், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பல இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில முன்னணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினர். அந்தவகையில், மூன்று முன்னணி வீரர்களின் நடப்பு ஐ.பி.எல் செயல்பாட்டைப் பார்க்கலாம்.

 

தோனி

 

சர்வதேச ஓய்விற்குப் பிறகு, தோனி களமிறங்கும் தொடர் என்பதால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 14 போட்டிகளில் விளையாடிய தோனி, 200 ரன்கள் மட்டுமே குவித்து ரசிகர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத்தவறினார். மேலும், நடப்பு ஐ.பி.எல் தொடரே தோனியின் ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான தொடராக அமைந்துள்ளது. சென்னை அணி முதல்முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து, அணியை வழிநடத்தும் திறன் குறித்தும் தோனி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

ரிஷப் பண்ட்

 

டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட் மீதும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 14 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட், ஒரே ஒரு அரை சதம் அடித்து 343 ரன்கள் குவித்துள்ளார். இந்த அரை சதமும் மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

cnc

 

கிளைன் மேக்ஸ்வெல் 

 

அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமை படைத்தவரான ஆஸ்திரலியாவைச் சேர்ந்த கிளைன் மேக்ஸ்வெல், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல் போட்டிகளில் கிளைன் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்துவதற்காக எதிரணியினர் தனி வியூகங்கள் வகுத்த சீசன்களெல்லாம் உண்டு. அந்த அளவிற்கு சிக்ஸர்கள் விளாசி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய மேக்ஸ்வெல், நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஒரு சிக்ஸர்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 13 போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல், 9 பவுண்டரிகள் அடித்து, வெறும் 108 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

 

 

Next Story

எந்த தேதியில் மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்?; இறுதி போட்டி எப்போது? - வெளியான புதிய தகவல்!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

ipl 2021

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்திருந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் சில நகரங்களில் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சில அணி வீரர்களுக்கும், அணி உறுப்பினர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள், கடந்த ஆண்டைப் போலவே ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடைபெறுமென இந்திய கிரிக்கெட் வாரியம், அண்மையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தது.

 

இந்தநிலையில், தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குமென்றும், அக்டோபர் 15ஆம் தேதி தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும் எனவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

விராட் கோலி உடனான மோதல் குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

Suryakumar Yadav

 

 

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலிக்கும் தனக்குமிடையே நடந்தது என்ன என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

 

அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரின் 48-ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிலைத்து நின்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி வீரரான சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார்.

 

மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் களத்தில் நிற்கும் போது பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி அவரை சீண்டும் விதமாக நடந்துகொண்டார். இந்திய அணிக்காக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத ஒருவரிடம், இந்திய அணியின் கேப்டன் இப்படியா நடந்து கொள்வது என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.

 

இது குறித்து அவர் பேசுகையில், "அது களத்தில் உச்சகட்ட தருணம். எனக்கும் அவருக்கும் இடையே அதற்கு முன்பு எதுவும் நடக்கவில்லை. இந்த விஷயம் எப்படி இவ்வளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. விராட் கோலி அனைத்து போட்டிகளிலும் உற்சாகத்துடன் இருப்பதை பார்த்திருக்கிறேன். மும்பை அணிக்கு எதிரான போட்டி மட்டும் விதிவிலக்கல்ல. அது பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான போட்டி. போட்டிக்குப் பிறகு இயல்பாகத்தான் இருந்தார். நன்றாக விளையாண்டீர்கள் என்று அனைவரிடமும் கூறினார். இது சிறிய தருணம் மட்டும்தான். அந்த சூழ்நிலையில் எதிரணியில் முக்கியமான வீரர் யார் என்பது அவருக்கு தெரியும்" எனக் கூறினார்.