Skip to main content

"கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவது குறித்து முன்னரே தெரிவிக்கப்படவில்லை" - விராட் கோலி!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

virat kohli

 

2021ஆம் ஆண்டின் இருபது ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்தியாவின் இருபது ஓவர் அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா, சில நாட்களுக்கு முன்னர் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

 

இதன்தொடர்ச்சியாக விராட்  கோலி மற்றும் ரோகித் சர்மா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையொட்டி இன்று (15.12.2021) ஊடகங்களிடம் பேசிய விராட் கோலி, கேப்டன்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் விளக்கமளித்துள்ளார்.

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி குறித்த கேள்விக்குப் பதிலளித்த விராட் கோலி, "ஒருநாள் தொடரில் விளையாட தயாராக இருந்தேன், தயாராகவும் இருக்கிறேன். ஓய்வு வேண்டுமென நான் பிசிசிஐயிடம் கேட்கவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட தயாராக இருக்கிறேன். நான் ஓய்வு கேட்கவில்லை” என தெரிவித்தார்.

 

ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக பேசிய விராட் கோலி, "டெஸ்ட் அணி தேர்வுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் என்னை தொடர்புகொண்டனர். தலைமை தேர்வாளர் என்னுடன் டெஸ்ட் அணி குறித்து விவாதித்தார். அழைப்பு முடிவடைவதற்கு முன்பு, நான் இனி ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்கப்போவதில்லை என ஐந்து தேர்வாளர்களும் முடிவு செய்துள்ளதாக என்னிடம் கூறப்பட்டது. அதற்கு முன்பாக இதுகுறித்து எதுவும் கூறப்படவில்லை. டி20 கேப்டன் பதவியைவிட்டு விலகும் முன்னர் பிசிசிஐயிடம் அதுகுறித்து தெரிவித்தேன். எனது கருத்தை அவர்களிடம் சொன்னேன். அதை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று கூறி அதனை பிசிசிஐ வரவேற்றது.

 

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நான் தலைமை வகிக்க விரும்புகிறேன் என்று அப்போது தெரிவித்தேன். என் தரப்பிலிருந்து கூறப்பட்டவை தெளிவாக இருந்தது. ஆனால் (பிசிசிஐ) அதிகாரிகளும் தேர்வாளர்களும் மற்ற வடிவ போட்டிகளிலும் நான் தலைமை தாங்க வேண்டாம் என நினைத்தால் பரவாயில்லை என தெரிவித்திருந்தேன்" என கூறினார்.

 

மேலும் ரோகித் சர்மா குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த விராட் கோலி, "ரோகித் மிகவும் திறமையான கேப்டன். யுக்தி ரீதியாக மிகவும் திறமையானவர். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர்கள் (ரோகித் மற்றும் டிராவிட்) எனது 100 சதவீத ஆதரவினைப் பெறுவார்கள். (கேப்டன்சி மாற்றம் குறித்த) காரணங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை. கடந்த இரண்டு வருடங்களாக இதை தெளிவுபடுத்தி, தற்போது சோர்வடைந்துவிட்டேன். எனது எந்த நடவடிக்கையும் அல்லது முடிவும் அணியைப் பாதிப்பதாக இருக்காது" என கூறியுள்ளார்.

 

மேலும் விராட் இந்தப் போட்டியின்போது, டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவை மிஸ் செய்வோம் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ட்விஸ்ட் இருக்கு... சன் ரைசர்ஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ராயல் சேலஞ்சர்ஸ்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

ஐபிஎல் 2024இன் 41 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.25) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆர்சிபி, அனுபவ கோலி, டு பிளசிஸ் இணை ஹைதராபாத் பந்து வீச்சை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண வைத்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டு பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜேக்ஸும் 6 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து வந்த பட்டிதார், கோலியுடன் இணைந்து அசர வைக்கும் விதத்தில் ஆடினார். மார்கண்டேவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் அடித்து ஹைதராபாத் பவுலர்களை திகைக்க வைத்தார். 20 பந்துகளில் அரை சதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலியும் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். க்ரீனின் 20 பந்துகளுக்கு 37 எனும் கடைசி கட்ட அதிரடி கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்து வீசிய உனாத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும், மார்கண்டே, கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 207 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தியது. கடந்த சில போட்டிகளாக அதிரடியாக ஆடி ரன்கள் குவித்து வரும் ஹைதராபாத் அணி இந்த இலக்கை எளிதில் அடித்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க, முதல் ஓவரிலேயே ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் தைரியமாக முதல் ஓவரை ஸ்பின்னரான வில் ஜேக்ஸுக்கு கொடுக்க, சிக்சர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், ட்விஸ்ட் நடந்தது. தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை மிரட்டி வந்த ஹெட் 1 ரன்னில் அவுட் ஆனார்.

There is a twist Royal Challengers rocking performance against Sunrisers!

பின்னர் சிறிது அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 31 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஸ்வப்னில் சிங் சுழலில் மார்க்ரம் 7, கிளாசென் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நித்திஷ் ரெட்டியும் 13 ரன்களில் கரன் ஷர்மா பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த அப்துல் சமத்தும், கரன் ஷர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

85-6 என்ற இக்கட்டான சூழலில் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கினார். அவருடன் இணைந்து சபாஸ் அஹமதுவும் இணைந்து எவ்வளவோ முயன்றும் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. கம்மின்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை களத்தில் நின்ற சபாஸ் அஹமது 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணியால் 171 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய ஸ்வப்னில் சிங், கரன் ஷர்மா, க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், யாஸ் தயால், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். அட்டகாசமாக ஆடி 20 பந்துகளில் அரை சதம் அடித்த பட்டிதார் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 4 புள்ளிகள் பெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.

இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து பெங்களூரு அணிக்கு கொஞ்சம் பிளே ஆஃப் வாய்ப்பு எஞ்சியுள்ளது. அதனால் இந்த வெற்றியானது 6 ஆட்டங்களாக தொடர் தோல்விகளால் துவண்டிருந்த பெங்களூரு அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Next Story

“ரோஹித்துக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக இவரே தகுதியானவர்” - ஹர்பஜன் சிங் கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

ஐபிஎல் 2024 இன் 38 வது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (22-04-24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த அணியில் புதிதாக துஷாரா, நெகல் வதீரா சேர்க்கப்பட்டனர்.

மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் களமிறங்கினர். ரோஹித் 6 ரன்களிலும், இஷான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். பின்னர், வந்த முகமது நபி 23 ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுக்க, அதன் பிறகு திலக் வர்மாவும், நெகல் வதீராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து 99 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக வந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர், 180 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பட்லரும், ஜெயிஸ்வாலும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர், வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் உடன் இணைந்து ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர், 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற கேப்டன் சஞ்சு சாம்சங், 38 ரன்கள் எடுத்தார். 18. 4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு இது ஐ.பி.எல்.லில் இரண்டாவது சதம் ஆகும். இந்த இரண்டு சதங்களும் மும்பை அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 14 புள்ளிகள் பெற்று தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையில், இந்திய உலகக் கோப்பை டி 20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். உலகக் கோப்பை டி20 அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த உலகக் கோப்பை டி20க்குப் பிறகு ரோஹித் டி20 விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்திய அணியின் டி20 அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற பேச்சு எழுந்தும் வருகிறது. இடையில் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக சில போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது கேப்டனாக அவரின் செயல்பாடுகள் மற்றும் வீரராக அவரின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறார் என்பதாலும் இந்திய அணிக்கு வேறு கேப்டனை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ யோசிப்பதாக கூறப்படுகிறது.

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு அடுத்து யாரை டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே பார்ம் என்பது தற்காலிகம் தான். அவரின் திறமை தான் நிரந்தரம். மேலும், இந்திய டி20 அணிக்கு சஞ்சு சாம்சனை நிச்சயம் எடுக்க வேண்டும். மேலும் இந்திய அணிக்கு ரோஹித்துக்குப் பிறகு டி20 அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். இது சரிதான் என்கிற வகையில் ரசிகர்களும் அவருடைய பதிவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.