ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டி! எதிரணியினரை தும்சம் செய்த தமிழ்நாட்டு வீரர்கள்! 

05:55 PM May 02, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேசிய அளவிலான 4வது மாற்றுத் திறனாளிகளுக்கான கபாடி போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்த்தான், பீகார், சத்தீஸ்கர், விதர்பா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 16 மாநில அணிகள் பங்கேற்றன. கடந்த 29ந் தேதி கோப்பை மற்றும் வீரர்கள் அறிமுக விழா நடந்தது. இதனைத்தொடர்ந்து 30ந் தேதி கபாடி போட்டி தொடங்கி நடைபெற்றது.

முதல் போட்டியில் தமிழ்நாடு-கர்நாடக அணி வீரர்கள் களம் கண்டதில் தமிழ்நாடு அணி 33-20 புள்ளிகள் பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. ஜார்க்கண்ட் அணியுடன் மோதிய தமிழ்நாடு அணி 45-9 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் தெலுங்கானா அணியுடன் மோதிய தமிழக அணி 33-3 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய தமிழக அணி, மஹாராஷ்டிரா அணியை 42-21 வென்று இறுதிச்சுற்றிக்கு தகுதி பெற்றது.

அனல் பறக்க நடந்த இறுதி ஆட்டத்தில் ஆந்திராவை எதிர்கொண்ட தமிழக அணி 45-25 புள்ளிகள் பெற்று அபார வெற்றி பெற்று கோப்பையை தன் வசமாக்கி 4வது முறையாக கோப்பையை தக்க வைத்துக்கொண்டது. தமிழக அணி எதிர்கொண்ட ஒவ்வொரு ஆட்டத்திலும் தன்னை எதிர்த்து விளையாடிய அணிகளை அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் தமிழக கபடி வீரர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். தமிழக மாற்றுத் திறனாளிகள் கபாடி சங்க பொதுச்செயலாளர், தேசிய மாற்றுத்திறனாளிகள் கபாடி கூட்டமைப்பின் துணைத்தலைவர் ரமேஷ் கண்ணன் மற்றும் அணி கேப்டன் மகேஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது; ‘பல ஆண்டுகளாக தமிழ்நாடு அணிக்காக விளையாடி கொண்டிருக்கும் வீரர்களுக்கு இதுவரைக்கும் அரசு சார்பில் இருந்து பெரிய அளவில் எந்த ஒரு உதவித் தொகையோ, அரசு வேலை வாய்ப்போ கிடைக்கவில்லை, அதனால் வீரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசாங்க வேலை உறுதி செய்ய வேண்டும். அதே போன்று, இனிமேல் வருங்காலத்தில் வரக்கூடிய வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்டம் தோறும் பயிற்சி ஆட்டம் விளையாடுவதற்கு மைதானங்கள் அமைத்து தரவும், மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்கவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்தார். சங்க பொருளாளர் செந்தில் குமார், சங்க ஆலோசகர் பாக்கியதான், உள்ளிட்ட அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT