T20 World Cup Series; South Africa advanced to the finals

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி தொடங்கியது. இதில் ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இருப்பினும் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர். ஆப்கானிஸ்தான் அணி ஐந்து ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 23 ரன்களை மட்டுமே எடுத்தது.

Advertisment

இறுதியாகத் தென்னாப்பிரிக்காவின் அபார பந்து வீச்சால் 11வது ஓவரின் 5வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களில் ஆப்கானிஸ்தான் அணி சுருண்டது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் அணி படைத்தது.

Advertisment

T20 World Cup Series; South Africa advanced to the finals

அதனைத் தொடர்ந்து 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் களம் இறங்கினர். அதன்படி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ஓவர்களில் 60 ரன்களை குவித்து தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. அதன்படி அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது. மேலும் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தானைத் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.

இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்குத் தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றுள்ளது. அதாவது தென்னாப்பிரிக்கா அணி 7 முறை அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த நிலையில் இன்றைய டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளது.

Advertisment

அதே சமயம் டி20 உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவிடம் வெற்றி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இருப்பினும் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர்களே இப்போது வரை முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இன்று (27.06.2024) இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி நடைபெற உள்ளது.