Skip to main content

டி20 உலகக் கோப்பை; இங்கிலாந்திற்கு ஷாக் கொடுத்த அயர்லாந்து; த்ரில் வெற்றி

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

T20 World Cup; Ireland shocks England

 

அக்டோபர் 16ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன. 

 

சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வான அனைத்து அணிகளும் தங்களது முதல் போட்டியை விளையாடிவிட்ட நிலையில் இரண்டாவது ஆட்டத்திற்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இன்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. 

 

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டிர்லிங் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் கேப்டன் பால்பிரின் மற்றும் விக்கெட் கீப்பர் டக்கர் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களைச் சேர்த்தது. 19.2 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய லிவிங்ஸ்டன் மற்றும் மார்க் வுட் தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். 

 

158 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சி தந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்கள் சரிய மறுபுறம் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தார் மாலன். 35 ரன்களில் மாலன் அவுட்டாக மறுபுறம் மொயின் அலி அதிரடியாக ரன்களை சேர்த்தார். 14.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 105 ரன்களை எடுத்து இருந்தது. 

 

இடையே மழை குறுக்கிட அயர்லாந்து அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டநாயகனாக 47 பந்துகளில் 62 ரன்களை சேர்த்த அயர்லாந்து கேப்டன் பால்பிரின் தேர்வு செய்யப்பட்டார்.

 

“வீரர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படவில்லை” - பிசிசிஐ புகார்

 

 

 

Next Story

ஆண்டுக்கு ரூ. 50 கோடி; இங்கிலாந்து வீரர்களிடம் பேரம் பேசிய ஐபிஎல் உரிமையாளர்கள்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

50 crore per annum; IPL teams who negotiated with English players

 

ஐபிஎல் உரிமையாளர்கள், 6 இங்கிலாந்து கிரிகெட் வீரர்களிடம் தங்கள் அணிகளில் விளையாட ஆண்டுக்கு ரூ.50 கோடி பேரம் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

 

தற்போதைய ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 கிரிக்கெட் அணிகளை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், 6 இங்கிலாந்து வீரர்களை அணுகி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் கவுண்டி கிரிக்கெட்களில் இருந்து விலகி முழுவதுமாக தங்கள் ஐபிஎல்லில் சேர்ந்து விளையாட தொடக்க நிலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வீரர்களிடம் ஆண்டுக்கு ரூ.50 கோடி ஊதியமாக பேசியுள்ளதாகவும் லண்டன் டைம்ஸ் இதழ் கூறியுள்ளது.

 

இருப்பினும் எந்த அணிகளின் உரிமையாளர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டனர், அவர்கள் அணுகிய வீரர்கள் யார் என்பன போன்ற விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.  கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்), தென்னாப்பிரிக்காவின் டி20 லீக், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடைபெறும் குளோபல் டி20 லீக் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் மேஜர் லீக் டி20 போன்ற பல லீக்குகாள் உலகம் முழுதும் நடைபெறும் சூழலில் ஐபிஎல் அணிகள் இம்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு லீக்கிலும் தங்கள் அணிகளின் பலத்தினை உறுதி செய்யவும் வீரர்களின் இருப்பை உறுதி செய்யவும் இப்புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.

 

 

Next Story

உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தோல்வி; இந்தியக் கல்லூரி மாணவர்களிடையே மோதல்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

 World Cup Pakistan Defeat; Conflict among Indian college students

 

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது. இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் விளையாடி தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்றது. 

 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மற்றும் பிற மாநில மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

 

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள லாலா லஜபதிராய் மெமோரியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் இங்கிலாந்துடன் தோற்ற நிலையில் இந்தத் தோல்வியை சில மாணவர்கள் கொண்டாடியதால் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 

இரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒன்பது மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பீகார் மற்றும் பிற மாநில மாணவர்கள் மதரீதியாகக் கோஷம் எழுப்பியதால் சண்டை வந்ததாக காஷ்மீர் மாணவர்கள் கூறினர். ஆனால் காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர், இதைக் கேட்ட ஹாஸ்டல் வார்டன் அவர்களது அறைக்குச் சென்று எச்சரித்தார். வார்டனை அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்கள் அவரை மீட்கச் சென்றோம். அவர்கள் எங்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடிகளை வீசினர் என பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூறினர். 

 

இதனால் பதற்றமான சூழல் உருவானது. தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காவல்துறை மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.