Skip to main content

கேப்டனாக ஷைன் ஆன சூர்யா! தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Surya shines as captain! India won the series!

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் சிறப்பான துவக்கம் தந்தனர். வழக்கம்போல அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த அனுபவ வீரரான ஸ்ரேயாஸ் 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமாரும் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

 

பின்னர் ருதுராஜ் உடன் இணைந்த ரிங்கு சிங் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் நன்றாக ஆடிக் கொண்டிருந்த ருதுராஜ் 32 ரன்களில் சங்கா பந்தில் ஆட்டம் இழந்தார். பின்பு ரிங்கு சிங்குடன் இணைந்த ஜித்தேஷ் சர்மா அதிரடியாக ஆடத் தொடங்கினார். ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, ஜித்தேஷ் ஷர்மா 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வீரர்களான அக்சர் பட்டேல் மற்றும் தீபக்சகர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. ஆஸி சார்பில் ட்வார்சுயிஸ் 3 விக்கெட்டுகளும், பெஹ்ரெண்டார்ஃப் மற்றும் சங்கா தலா 2 விக்கெட்டுகளும், ஹார்டி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

 

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பிலிப்பே நிதானம் காட்ட, டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். பந்துகளை பௌண்டரிகளாக பறக்க விட்டார். ஆனால் இவர்கள் இணையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி புஷ்னோய் பிரித்தார். இவரது வந்தில் பிலிப்பே 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து அதிரடியாக ஆடி வந்த ஹெட்டை அக்சர் பட்டேல் 31 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து வந்த வீரர்களின் பென் 19 ரன்களிலும், ஹார்டி 8 ரன்களிலும், டிம் டேவிட் 19 ரன்களிலும், ஷார்ட் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் கேப்டன் வேட் மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று 36 ரன்கள் எடுத்தார் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், தீபக் சகர் 2 விக்கெட்டுகளும், பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

 

சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே வெற்றி பெற்று சூரியகுமார், ஒரு சிறந்த கேப்டனாக தன்னை நிரூபித்துள்ளார். ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. 

- வெ.அருண்குமார்  

 

 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.