Skip to main content

அணி உரிமையாளர் கூறியதை ஒரு தந்தை கூறியதைப்போல எடுத்துக்கொள்கிறேன்.... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெய்னா

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

raina

 

 

சென்னை அணியின் நட்சத்திர வீரரான ரெய்னா சில தினங்களுக்கு முன்னால் இந்தியா திரும்புவதாகவும், அவர் இந்தாண்டு நடைபெறுகிற ஐபிஎல் தொடரில் பங்கெடுக்க மாட்டார் எனவும் தகவல் வெளியாகியது. பின்பு சென்னை அணி நிர்வாகவும் அதனை உறுதிபடுத்தியது. ரெய்னா தன்னுடைய சொந்த காரணங்களுக்காகவே இந்தியா திரும்பியுள்ளார் என முதலில் கூறப்பட்டது. பின்பு தோனிக்கு ஒதுக்கியதை போல பால்கனி வசதியுள்ள அறை ரெய்னாவிற்கு ஒதுக்கப்படவில்லை எனவும், அதில் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் தோனிக்கும், ரெய்னாவிற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது எனவும் தகவல் வெளியாகின. அதன் பின்பு இன்று வரை அது குறித்தான சர்ச்சை ஒயவில்லை. இந்நிலையில் ரெய்னா தற்போது இது குறித்து கருத்துக் கூறியுள்ளார்.

 

அதில் அவர், "எனக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே எந்த மோதலும் இல்லை. நான் இந்தியா திரும்பியது என்னுடைய தனிப்பட்ட முடிவே. சென்னை அணி என்பது எனக்கு மற்றொரு குடும்பம். தோனி என் வாழ்வில் மிக முக்கியமானவர். எனக்கு இது கடினமான காலமாக அமைந்தது. இங்கு நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த தொடரிலே கூட என்னை நீங்கள் அமீரகத்தில் காணவும் வாய்ப்புள்ளது" எனக் கூறினார்.

 

மேலும் சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் குறித்து பேசிய ரெய்னா, "அவர் எனக்கு ஒரு தந்தையைப் போன்றவர். பல நேரங்களில் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அவரும் என்னை அவரது குழந்தை போல தான் நடத்துவார். அவர் கூறிய விஷயம் முழுவதும் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது. தந்தைக்கு மகனைத்  திட்டுவதற்கு உரிமை உள்ளது. அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு சென்னை அணிக்காக விளையாட விரும்புகிறேன்" என்றார்.

 

ரெய்னா அளித்த இந்த விளக்கம் மூலம் கடந்த இரு நாட்களாக நீடித்து வந்த சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

இரண்டாவது முறையாக கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் ஷங்கர்

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

Shankar and cricketer raina received honorary doctorate

 

இயக்குநர் ஷங்கர், கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், விக்ரம் உள்ளிட்டோர்களை இயக்கி அப்படங்களை வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி படங்களாக்கியவர். இயக்குவது மட்டுமில்லாமல் 'காதல்', 'வெயில்', 'கல்லூரி' உள்ளிட்ட நல்ல படங்களை தயாரித்தும் உள்ளார். ரசிகர்களால் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஷங்கர் தற்போது ராம்சரணின் 'ஆர்சி 15' படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தையும் விரைவில் தொடங்கவுள்ளார்.

 

இந்நிலையில் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. ஆண்டு தோறும் துரை ரீதியாக சாதனை படைத்து வரும் நபர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இயக்குநர் ஷங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் ரெய்னா ஆகியோருக்கு வழங்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்நிலையில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் ஐசரி கணேஷ் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சியில் ஷங்கர் மற்றும் ரெய்னாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது வேல்ஸ் பல்கலைக்கழகம். 

 

இதன் மூலம் ஷங்கர் இரண்டாவது முறையாக கௌரவ டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கடந்த 2007-ஆம் ஆண்டு ஷங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

34 -வது பிறந்தநாள்... ரெய்னாவின் அறிவிப்பு! குவியும் பாராட்டுகள்!

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

raina

 

இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா வரும் 27 -ஆம் தேதி தன்னுடைய 34 -ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு உத்தரப்பிரதேசம், ஜம்மு, டெல்லி பகுதிகளில் உள்ள 34 அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை சுகாதார வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். ரெய்னா இந்த நலத்திட்ட உதவியைத் தன்னுடைய 'கிரேசியா ரெய்னா' அறக்கட்டளை மூலம் வழங்கவிருக்கிறார்.

 

இது குறித்தான ரெய்னா பதிவில், "என்னுடைய 34 -ஆவது பிறந்தநாளை, இவ்வகையிலான நகர்வுடன் கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்விபெரும் தகுதிக்குரியவரே. இதுதரமான குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பிட வசதிகளையும் உள்ளடக்கியது. இந்த உதவியை 'யுவா அன்ஸ்டாபபிள்' உடன் இணைந்து 'கிரேசியா ரெய்னா' அறக்கட்டளை மூலமாக வழங்குகிறோம். இதன்மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பயனடைவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது சிறந்த தொடக்கம். எதிர்வரும் காலங்களில் நிறைய பள்ளிகளை மேம்படுத்த எதிர்பார்த்து இருக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.