Skip to main content

உலகின் நம்பர் 2... அசத்தும் இந்திய கால்பந்து வீரர்... மெஸ்ஸியை விட பெஸ்ட்...

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு கிடைக்கும் ஆதரவில் மற்ற விளையாட்டிற்கு 100-ல் 5% அளவிலாவது இருக்கிறதா என்றால் இல்லை என்ற உண்மையே வெளிப்படும்.  வணிகம் முதல் பல காரணிகள் இந்தியாவில் கிரிக்கெட்டை விளையாட்டு என்பதை தாண்டி ஒரு எல்லையற்ற இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. அதேசமயம் அந்தக் காரணிகளாலே மற்ற விளையாட்டுகளும், மற்ற விளையாட்டு விளையாடும் வீரர்களும் அறியப்படாத அளவிற்கு மறைக்கப்பட்டு விட்டது. 

 

sunil

 

சர்வதேச அணிக்கோ அல்லது ஐ.பி.எல். அணிக்கோ கிரிக்கெட்டில் புதிதாக வரும் வீரரைப் பற்றி அறிய முற்படும் அளவிற்கு, டென்னிஸ், கால்பந்து, பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளில் புதிதாக வரும் ஒருவரைப் பற்றி அறிவதற்கு முற்படுவதில்லை. அவர் உலக சாதனை புரிந்த பிறகுதான் அவரை பற்றி கொஞ்சமாவது அறிந்துகொள்வதற்கு முற்படுகிறோம். இது நமது அமைப்பில் யதார்த்தம் என்றளவில் ஆகிவிட்டது. அப்படிப்பட்ட உலக சாதனையாளர், இந்திய அணியின் கால்பந்து ஹீரோ தான் சுனில் சேத்ரி. 
 

தற்போது விளையாடி வரும் வீரர்களில் சர்வதேச அரங்கில் அதிக கோல் போட்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் சுனில் சேத்ரி. தற்போது சர்வதேச கோல்கள் கணக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி முன்னேறி உள்ளார் சுனில் சேத்ரி. ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை விட இந்திய கேப்டன் சுனில் சேத்ரி சிறந்த கோல் விகிதத்தை கொண்டுள்ளார். இப்படிப்பட்ட ஒரு உலக சாதனையாளர் பிரபலப்படாமல் இருப்பது வேதனைக்குறிய ஒன்று. 
 

ஜனவரி மாதம் நடைபெற்ற ஏ.எப்.சி. ஆசியக்கோப்பை போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த போட்டியில் சுனில் சேத்ரி 2 கோல்கள் அடித்து மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்தார். 2005-ஆம் ஆண்டு முதல் இதுவரை 107 போட்டிகளில் 67 கோல்கள் அடித்து 0.63 கோல் வீதத்தை கொண்டுள்ளார். முதல் இடத்தில் உள்ள நட்சத்திர வீரர் ரொனால்டோ 0.55 கோல் வீதத்தை கொண்டுள்ளார். மெஸ்ஸி 0.51 கோல் வீதத்தை கொண்டுள்ளார். 
 

sunil

 

2018 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் இன்டர்கான்டினேன்டல் கோப்பை தொடரில் இந்திய கால்பந்து அணியை உற்சாகப்படுத்த சமூக வலைதளத்தில் சுனில் சேத்ரி வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் தங்களுக்கு பெரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு விராத் கோலி, சச்சின், அபிசேக் பச்சன் போன்ற பிரபலங்கள் மற்றும் 60,000-க்கும் மேற்பட்டோர்  ரீட்வீட் செய்து ஆதரவு தந்தனர். ஆனால் மைதானத்திற்கு 2569 பேர் மட்டுமே வந்தனர். சீன தைபேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது. சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.    
 

34 வயதான சுனில் சேத்ரி இந்திய கால்பந்து  உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். 2004-ஆம் ஆண்டு 20 வயதினருக்கு உட்பட்ட இந்திய அணியில் சுனில் சேத்ரி இடம்பெற்றார். 2005-ஆம் ஆண்டு சீனியர் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் கோலை அடித்தார். சேத்ரி 2007, 2011, 2013, 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஏ.ஐ.பி.எஃப். சிறந்த வீரருக்கான விருதை ஐந்து முறை பெற்றுள்ளார். 
 

சேத்ரி சிறுவயதாக இருக்கும்போதே பல்வேறு கால்பந்து தொடர்களில் பங்கேற்றுள்ளார். 2002-ஆம் ஆண்டு மொஹுன் பாகான் என்ற கிளப் அணிக்காக விளையாடத் தொடங்கினார். இந்தியன் சூப்பர் லீக் தொடரில் 2013-2015 வரை பெங்களூர் எப்.சி. அணிக்கு விளையாடி வந்தார். பின்னர்  மும்பை எப்.சி. அணி அந்த தொடரில் அதிக விலையான 1.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தற்போது மீண்டும் பெங்களூர் எப்.சி. அணிக்கு விளையாடி வருகிறார். 2012-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற  ஏ.எப்.சி. சேலன்ச்கோப்பை தகுதி போட்டியில் சேத்ரி இந்திய அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். 
 

சேத்ரியின் தந்தை இந்திய இராணுவத்தின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் கார்ப்ஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். சேத்ரியின் தந்தை இந்திய இராணுவத்தில் கால்பந்து அணிக்கு விளையாடியுள்ளார். அதேபோல இவரது தாயார் மற்றும் சகோதரிகள் நேபாள பெண்கள் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடியுள்ளனர். 
 

இந்திய கால்பந்து அணி ஃபிபா தரவரிசை பட்டியலில் 2015-ஆம் ஆண்டு 173-வது இடத்தில் இருந்தது. தற்போது 103-வது இடத்தில் உள்ளது. 1950-1960 காலகட்டங்கள் இந்திய கால்பந்துக்கு பொன்னான காலம் என்றே கூற வேண்டும். இந்திய அணி ஃபிபா உலகக்கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற்று இருந்தது. 1970-ஆம் ஆண்டுக்கு பிறகு சற்று  சோதனை காலமாக மாறிவிட்டது. தற்போது மீண்டும் புத்துணர்ச்சி பெற்று சிறந்த அணியாக மாறி வருகிறது. பெரும்பாலும் மேற்கு வங்காளம், வடகிழக்கு இந்தியா, கோவா மற்றும் கேரளாவில் அதிகமாக இந்திய கால்பந்து ரசிகர்கள் உள்ளனர். சேத்ரி 2011-ஆம் ஆண்டு அர்ஜுனா விருதை பெற்றார். 2019-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்றார்.

 

 

 

Next Story

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி; சாதனை படைத்த அண்ணாமலை பல்கலைக்கழக அணி 

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Annamalai University's record-setting team at khelo India Games

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ - இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து அணி 2வது முறையாக வெற்றிபெற்றுள்ளது.

அசாம் மாநிலம் கவுஹாத்தில் தேசிய அளவில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ-இந்தியா விளையாட்டுப் போட்டிகள், கடந்த பிப்ரவரி 19 முதல் 29 வரை நடைபெற்றது. இதில் 700க்கும் மேற்பட்ட  இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 8 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றனர். அந்த வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்பந்து பெண்கள் அணி, கால்பந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடியது.

இந்த கால்பந்து லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக அணி அரை இறுதிக்கு முன்னேறியது. அதில், அரையிறுதி போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணியை, அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி (2-0) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து. இறுதிப் போட்டியில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருநானக் தேவ்பல்கலைக்கழகம் அணியை (3-2) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. கேலோ-இந்தியா போட்டிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Annamalai University's record-setting team at khelo India Games

வெற்றி பெற்ற கால்பந்து அணி வீராங்கனைகள் இன்று (01-03-24) மதியம் ரயில் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு  திரும்பினார்கள். அப்போது, சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த வீராங்கனைகளை, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் அனைவருக்கும் மாலை அணிவித்து மேளதாளங்களுடன் வாழ்த்தி வரவேற்றார்.

இந்நிகழ்வில் உடற்கல்வித் துறை இயக்குநர் ராஜசேகரன், பொறியியல் புல முதன்மையர் கார்த்திகேயன், கல்வியியல் புல முதன்மையர் குலசேகர பெருமாள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், துணைவேந்தரின் நேர்முகச் செயலர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் ஊழியர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story

பெங்களூருவில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு கால்பந்து போட்டி!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Football match on MGR's birthday in Bengaluru

பெங்களூர் ஸ்ரீ ராமபுரம் டாக்டர் அம்பேத்கர் மைதானத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு கால்பந்து போட்டி மாநில அளவில் நடைபெற்றது. இந்த கால்பந்து போட்டியை சாந்தி நகர் சட்டமன்ற உறுப்பினர் ஹாரீஸ் துவக்கி வைத்தார்.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாநில செயலாளர் கே. குமார் தலைமையில் ஒளி வெள்ளத்தில் (Flood Light) நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற சி ராமாபுரம் கால்பந்து வீரர்கள் முதல் பரிசை தட்டிச் சென்றனர். முதல் பரிசாக இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. குக்ஸ் டவுனை சார்ந்த வீரர்கள் இரண்டாவது பரிசினை பெற்றனர். அவர்களுக்கு பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அணியினருக்கு கழக கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு கோப்பைகளையும் பரிசையும் வழங்கினார். எம்.எஸ்.வி. அஸ்வித் சவுத்ரி, சுரேஷ் சந்திரா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த கால்பந்து போட்டிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.