இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. தனது தனித்துவமான எண்ணங்களாலும், களத்தில் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதில் வல்லவருமான இவர், 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாகவும், சென்ற ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
இருந்தாலும், தற்போதைய கேப்டன் விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில், தோனி அவ்வப்போது உதவிகரமாக இருப்பது வழக்கம். கோலியும் தேவையான தருணங்களில் தோனியிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது வழக்கம். இந்தக் கூட்டணியால் பலமுறை இந்திய அணி இக்கட்டான சூழல்களில் வெற்றிபெற்றிருக்கிறது.
இந்நிலையில், பி.சி.சி.ஐ. இணையதளப்பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் விவரப் பட்டியலில், தோனியின் பெயருக்குக் கீழ் உள்ள கேப்டன் பதவி இன்னமும் நீக்கப்படவில்லை. அதேபோல், கேப்டன் விராட் கோலியின் பெயரில் எந்தப்பதவிகளும் குறிப்பிடப்படவில்லை. இதெல்லாம் ஒரு விஷயமா என்றாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் விவாதத்தைக் கிளப்பிவிட்டனர். பலர் இதுகுறித்து கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வுபெற வேண்டும் என்றும், நீடிக்கலாம் என்றும் விவாதம் ஓடிக்கொண்டிருந்த நிலையில், தற்போது புதிய விவாதம் கிளம்பியிருக்கிறது.