Skip to main content

பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை! - இலங்கை அணிக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை

Published on 17/06/2018 | Edited on 17/06/2018

பந்தை சேதப்படுத்தியதாக இலங்கை அணி வீரர்கள் மீது நடுவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டால், அந்த அணியின் வீரர்கள் விளையாட மறுத்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 

BallTampering

 

 

 

இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட மேற்கிந்தியத் தீவுகள் நாட்டிற்கு சென்றுள்ளது. தினேஷ் சண்டிமால் தலைமையிலான இலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுகள் உடன் மோதிய முதல் போட்டியில் 226 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், செயிண்ட் லூயிஸில் உள்ள டேரன் சமி மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணி, 253 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. அப்போது இலங்கையின் தனஞ்செயா டிசில்வா பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள் சந்தேகம் அடைந்தனர். 
 

இதையடுத்து, மூன்றாவது நாளின் தொடக்கத்தில் நடுவர்கள் பந்தை மாற்ற முடிவு செய்தபோது, இலங்கை அணி வீரர்கள் மைதானத்திற்கு வராமல் டிரெஸ்ஸிங் ரூமிலேயே இருந்தனர். இதையடுத்து, போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் உடன் இலங்கை கேப்டன், பயிற்சியாளர் ஆகியோர் சந்தித்துப் பேசி மீண்டும் களத்திற்கு வர சம்மதித்தனர். இதனால், போட்டி இரண்டு மணிநேரம் தாமதமாக தொடங்கியது. இதற்கு அபராதம் வழங்கும் விதமாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது. 
 

 

 

இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், இலங்கை வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக, ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த வீரர்கள் ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோர் தண்டனை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.