Skip to main content

விடாது துரத்தும் துரதிருஷ்டம், மழை... விதியை வெல்லுமா தென் ஆப்பிரிக்கா?...

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

ஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போதிலும் ஏதேனும் ஒரு அதிர்ஷ்டம் இல்லாமல் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை வெல்ல முடியாமல் இருந்து வருகிறது.

முதன்முதலாக 1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அறிமுகமானது தென் ஆப்பிரிக்கா அணி. தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை சுலபமாக வென்றது. பின்னர் நியூசிலாந்து, இலங்கை அணிகளுடனான தோல்விகளுக்கு பிறகு ஹாட்ரிக் வெற்றி பெற்றது. 

 

south africa choking moments in worldcup

 

 

அரைஇறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது. மழை காரணமாக 45 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 252 ரன்கள் எடுத்தது. 6 விக்கெட்கள் இழந்து 231 ரன்கள் எடுத்திருந்த போது முக்கிய பேட்ஸ்மேன்களான பிரையன் மெக்மில்லன், டேவ் ரிச்சர்ட்சன் களத்தில் இருந்தனர். 43-வது ஓவரில் மழை குறுக்கிட்டது. வெற்றி பெற 2 ஓவரில் 22 ரன்கள் தேவைப்படும் நிலையில் புதிதாக விதிக்கப்பட விதிப்படி ஒரே பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற அதிர்ச்சி நடந்தது.  

வெற்றிக்கு சற்று அருகில் சென்று அதிர்ஷ்டம் இல்லாமல் இறுதிபோட்டிக்கு செல்ல முடியாமல் கோப்பை கனவை தவிடுபொடியாக்கியது மழை. தென் ஆப்பிரிக்கா வீரர் ரோட்ஸ் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பாக ரன் அவுட் ஒன்றை செய்தார். இன்சமாம் அடித்த பந்தை ஸ்கோயர் லெக் திசையிலிருந்து வந்து பந்தை எடுத்து புலிபாய்ச்சலில் ரன் அவுட் செய்து அனைவரையும் திக்குமுக்காட செய்தார். 

அடுத்து 1996-ஆம் ஆண்டு லீக் போட்டிகளில் நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் என பலமான அணிகளை எளிதாக வென்றது தென் ஆப்பிரிக்கா அணி. லீக் போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வியடையாமல் கால் இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்று ஏமாற்றமளித்தது. 

1999-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் கேரி கிர்ஸ்டன், ஹர்ஷல் கிப்ஸ், ஆலன் டொனால்ட், ஷான் பொல்லாக், காலிஸ், ஜாண்டி ரோட்ஸ், லான்ஸ் குளூஸ்னர் ஆகியோருடன் சிறந்த அணியாக வலம்வந்தது. சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 48 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தடுமாறிக்கொண்டு இருந்தது. ஸ்டீவ் வாக் 56 ரன்கள் எடுத்திருந்தபோது கிப்ஸ் அவரது கேட்ச்சை மிஸ் செய்தார். கிப்ஸிடம் "நீ தவற விட்டது கேட்ச் இல்லை, உலகக்கோப்பையை" என்று கூறினார் ஸ்டீவ் வாக். 120 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார் ஸ்டீவ் வாக். 

 

south africa choking moments in worldcup

 

 

தென் ஆப்பிரிக்கா அணி அரைஇறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நான்கு பந்துகள் இருக்கும் போது ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டொனால்ட் ரன் அவுட் ஆனார். ஆட்டம் டிராவில் முடிந்தது. 

சூப்பர் சிக்ஸ் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியை வென்று நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் இருந்தது. ஸ்டீவ் வாக் கூறியதை போல கிப்ஸ் அந்த கேட்ச் பிடித்திருந்தால் சூப்பர் சிக்ஸ் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். அரைஇறுதிப்போட்டி டிராவில் முடிந்ததால், சூப்பர் சிக்ஸ் போட்டியில் தோல்வி காரணமாக இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணியால் செல்ல முடியாமல் போனது.        

2003-ஆம் ஆண்டு சிறந்த ஒப்பனிங் பேட்ஸ்மேன்கள், அசத்தல் மிடில் ஆர்டர்கள், பெஸ்ட் ஆல்ரவுண்டர்கள், மின்னல் வேக பந்து வீச்சாளர்கள் என மிகச்சிறந்த அணியை கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடரை சொந்த நாட்டில் எதிர்கொண்டது. இலங்கை அணியுடன் கடைசி லீக் போட்டியில் 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் இழந்து இருந்தது. பௌச்சர் மற்றும் குளூஸ்னர் ஆகியோர் களத்தில் இருந்தனர். 

அப்போது மழை குறுக்கிட்டு ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெரும் நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கும். மழை மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணியின் கோப்பை கனவை தகர்த்தது. 

 

south africa choking moments in worldcup

 

 

2007-ஆம் ஆண்டு லீக் போட்டிகள், சூப்பர் 8 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி அரைஇறுதிப்போட்டியில் அசுர பலம் கொண்ட ஆஸ்திரேலியா அணியிடம் பரிதாபமாக தோற்றது. இந்த தொடரில் தான் தென் ஆப்பிரிக்கா அணியின் கிப்ஸ் நெதர்லாந்து அணியுடன் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார்.

2011-ஆம் ஆண்டு ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, வங்க தேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. ஆம்லா, ஸ்மித், காலிஸ், டி வில்லியர்ஸ், டு பிளெசிஸ், டேல் ஸ்டெயின், மோர்கல் ஆகிய சிறந்த வீரர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினர். இருந்தபோதிலும் கால் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் 221 என்ற எளிய இலக்கை அடைய முடியாமல் தோல்வியடைந்தது. 

2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகளில் இரண்டாவது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா அணி அரைஇறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. மழை காரணமாக ஆட்டம் 43 ஓவராக குறைக்கப்பட்டது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்படும் நிலையில் ஒரு பந்து மீதம் இருக்கையில் ஸ்டெயின் பவுலிங்கில் எலியட் சிக்ஸ் அடித்து நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றார்.

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியடைந்ததால் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கண்ணீருடன் மைதானத்தில் இருந்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது.

இந்த வருட உலகக்கோப்பை தொடரில் டூ பிளெசிஸ் தலைமையில் ஆம்லா, டி காக், டூமினி, மில்லர், மோரிஸ், தாஹிர், லுங்கி இங்கிடி, ராபாடா, ஸ்டெயின் என நட்சத்திர பட்டாளம் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி களம் காண்கிறது. இந்த முறை டூ பிளெசிஸ் தலைமையிலான அணி 27 வருடம் இருந்த துரதிருஷ்டம், மழை ஆகிய விதிகளை எதிர்கொண்டு கோப்பையை பெறும் என்று உலகம் முழுவதும் உள்ள தென் ஆப்பிரிக்கா அணியின் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

 


 

Next Story

12 வயது சிறுமியை சமய சடங்குகளோடு திருமணம் செய்த 63 வயது மதபோதகர்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A 63-year-old priest who married a 12-year-old girl with religious rituals in africa

ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மோசமான சாதனையில் யார் முதலிடம்? - போட்டி போட்ட இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகள்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Who on top for worst achievment India and South Africa team to compete

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று தொடங்கியது. முதல் டெஸ்ட் பொட்டியில் வெற்றி பெற்று 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. காயம் காரணமாக பவுமா விளையாடாத நிலையில், எல்கர் அணிக்கு தலைமை தாங்கினார். டாஸ் வென்ற எல்கர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மார்க்ரம் 2 ரன்னிலும், கேப்டன் எல்கர் 4 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த ஜொர்ஸி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில் பெடிங்காம் 12, வெர்ரெய்ன் 15 தவிர இரட்டை இலக்கத்தை தாண்டாமல் அனைத்து வீரர்களும் பெவிலியன் திரும்பினர்.

தென் ஆப்பிரிக்க அணி 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணிக்கு எதிராக குறைந்த ரன்கள் எடுத்த அணி என்கிற மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி மீண்டும் சொதப்பினார். கேப்டன் ரோஹித், கில் இணை ஓரளவு நிலைத்து ஆடியது. ரோஹித் 39 ரன்களும், கில் 36 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கோலி சிறப்பாக விளையாடிய நிலையில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் டக் அவுட் ஆக, ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தான் அதிர்ச்சி காத்திருந்தது. 153-4 என இருந்த இந்திய அணி 153 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஒரே ரன்னுக்கு (153) 6 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் இழந்த அணி எனும் மோசமான சாதனையைப் படைத்தது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா, இங்கிடி, பர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் எல்கர் 12 ரன்களுக்கும், ஜொர்ஸி ரன்னிலும், ஸ்டப்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மார்க்ரம் 36 ரன்களுடனும், பெடிங்காம் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

- வெ.அருண்குமார்