பந்துவீசுவதற்கு முன்பாக தன்மீது கவனம் செலுத்தாததால் கையில் இருந்த பந்தை சகவீரர் மேல் பந்துவீச்சாளர் வீசியெறிந்த சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் எனும் டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் லாகூர் குவாலண்டர்ஸ் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டியில் இரண்டாவதாக களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணி சேஸிங் செய்துகொண்டிருந்த சமயம், குவாலண்டர்ஸ் அணியின் சொகைல் கான் பந்துவீச தயாராக இருந்தார்.
அப்போது பவுண்டரி எல்லையில் நின்றுகொண்டிருந்த அதே அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் யஷீர் ஷா, சொகைல் கானின் மீது கவனம் செலுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சொகைல் கான் தன் கையில் இருந்த பந்தை யஷீர் ஷா மீது வீசியெறிந்தார். அதேபோல், நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன், நீ ஒழுங்காக பந்து வீசு என யஷீர் ஷாவும் பதிலுக்கு பந்தை வீசினார். ஒரே அணிக்குள் வார்த்தைப் போர் உருவாக இருந்த சூழலில், அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கலம் இருவீரர்களையும் சமாதானப்படுத்தினார்.
அப்போது எதிரணியின் சார்பாக களத்தில் இருந்த கெவின் பீட்டர்சன், ‘எனது இத்தனை வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வளவு வேடிக்கையான சம்பவத்தை பார்த்ததே இல்லை’ என தெரிவித்துள்ளார்.