Skip to main content

பிக்பாஷ் தொடர்: சாதனை சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

smriti mandhana

 

மகளிருக்கான பிக்பாஷ் டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்றுவருகிறது, இந்தத் தொடரில் நேற்று (17.11.2021) நடைபெற்ற போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதின.

 

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 175 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் 81 ரன்களைக் குவித்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சிட்னி தண்டர் அணி, விரைவிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதமடித்தார்.

 

கடைசிவரை ஆட்டமிழக்காமல் 114 ரன்களைக் குவித்தாலும், மந்தனாவின் சதம் வெற்றிக்கு உதவவில்லை. சிட்னி தண்டர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், மகளிர் பிக்பாஷ் போட்டியில் சதமடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

 

அதேபோல் மந்தனா அடித்த 114 ரன்கள், மகளிர் பிக்பாஷில் ஒரு வீராங்கனை ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச ரன்களாகும். ஆஷ்லே கார்ட்னர் என்ற வீராங்கனையும் 114 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

மகளிர் (ஐ)பிஎல்; வீராங்கனைகள் ஏல விபரம்

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Women's (I)PL; Players auction details

 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. 

 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள பார்ப்ரோன் மைதானத்திலும், டி ஓய் பட்டேல் மைதானத்திலும் நடைபெறும். 

 

இந்த தொடரில் மும்பை, டெல்லி, பெங்களூர், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் விளையாடுகின்றன. 5 அணிகளுக்கும் சேர்த்து 30 வெளிநாட்டினர் உட்பட 90 வீராங்கனைகள் தேவைப்படும் நிலையில், 15 நாடுகளை சேர்ந்த 448 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கு பெறுகிறார்கள். இவர்களில் 269 இந்திய வீராங்கனைகளும் 179 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடக்கம்.

 

இந்நிலையில், ஏலத்தின் முதல் சுற்றில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.1.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். நியூசிலாந்து அணியின் கேப்டன் சோபி டிவைன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் 50 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.  ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரியை ரூ. 1.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அஸ்லேக் ஹார்டெனரை ரூ. 3.20 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

 

இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவை ரூ. 2.6 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்திய ஃபாஸ்ட் பவுலர் ரேணுகா தாகூர் சிங்கை ரூ. 1.5 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெத் மூனியை ரூ. 2 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நாட் ஸ்கைவர் பிரண்ட்-ஐ ரூ. 3.2 கோடி என்ற அதிகமான தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இந்த ஏலத்தில் இதுவரை இதுதான் 2வது அதிகபட்ச தொகை ஆகும். இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரூ. 2.2 கோடிக்கும், ஷஃபாலி வெர்மா ரூ. 2 கோடிக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணியால் வாங்கப்பட்டனர்.

 

 

Next Story

பிங்க் பால் டெஸ்ட்: சாதனை சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா.. நடுவர் அவுட் கொடுக்காமலே வெளியேறிய இந்திய வீராங்கனை!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021

 

mandhana

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தற்போது பகலிரவு கிரிக்கெட் போட்டியில் விளையாடிவருகிறது. இந்தியா மகளிர் அணி விளையாடும் முதல் பகலிரவு போட்டியான இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனாவும், ஷபாலி வெர்மாவும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். ஷபாலி வெர்மா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா அணி முதல்நாளில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.

 

இந்தநிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (01.10.2021) தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா, சதமடித்து அசத்தினார். இதன்மூலம் பகலிரவு ஆட்டத்தில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்தியா வீராங்கனை ஆகிய சாதனைகளை ஸ்மிருதி மந்தனா நிகழ்த்தினார்.

 

இதன்பின்னரும் சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா, 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பூனம் ரவுத் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நடுவர் அவுட் கொடுக்காதபோதும் பூனம் ரவுத் மைதானத்தைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

 

பூனம் ரவுத்தை தொடர்ந்து யஸ்திகா பாடியா 19 ரன்களிலும், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்தியா தற்போது ஐந்து விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ள நிலையில், ஆட்டம் மோசமான வானிலையாலும், மழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது.