Skip to main content

அவரின் சாதனைகளை ஒருபோதும் எங்களிடம் சொன்னது இல்லை – முன்னாள் வீரரை புகழும் சுப்மான் கில்

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

ஒரு வீரராக டிராவிட் சர்வதேச கிரிக்கெட் விளையாடியபோது மற்ற வீரர்களின் அணுகுமுறைக்கும், டிராவிட்டின் அணுகுமுறைக்கும் பல வேறுபாடுகள் இருந்தது. அதேபோல இன்று பயிற்சியாளராக உள்ள டிராவிட்டிற்கும், மற்ற பயிற்சியாளர்களுக்கும் நோக்கங்கள் வேறுபடுகின்றன. கடந்த வருடம் இந்திய அண்டர் 19 அணி உலகக்கோப்பையை வென்றபோது, டிராவிட் அந்த வெற்றியை  அணுகிய முறை மிகவும் பாராட்டத்தக்கது. 

 

shubman gill

 

வெற்றி பெற்ற இந்த அண்டர் 19 அணியிலிருந்து அதிகளவு வீரர்கள் இந்திய சீனியர் அணியில் இடம்பெற்று நன்றாக விளையாடி இந்திய அணியை உலகின் சிறந்த அணியாக முன்னிறுத்த வேண்டும். அண்டர் 19 அணியின் உலகக்கோப்பை வெற்றி அப்போதுதான் உண்மையான வெற்றியாக கருதப்படும் என்றளவில் கூறி வீரர்களை அடுத்த இலக்கை நோக்கி நகர்த்தினார் டிராவிட்.

 

ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ரிஷாப் பண்ட் என்று அவர்களின் வளர்ச்சிக்கு டிராவிட்டிற்கு கிரெடிட் கொடுக்கும் இளம் வீரர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். சமீபத்தில் இந்திய அணியில் இடம்பிடித்த விஜய் சங்கர், சுப்மான் கில் ஆகியோரும் டிராவிட்டின் பங்களிப்பை எடுத்து கூறினர். சுப்மான் கில், கடைசி ஒரு ஆண்டு சிறந்த காலகட்டம்.  இந்திய அண்டர்-19 அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் மூலம் எவ்வாறு பொறுமையாக விளையாட வேண்டும் என்று கற்றுக் கொண்டேன் என்பதைப் பற்றி இளம் நட்சத்திர வீரர் சுப்மான் கில் கூறியுள்ளார். 

 

ராகுல் டிராவிட் உடனான அனுபவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஒரு இளைஞனாக எப்போதும் தொலைக்காட்சியில் டிராவிட்டின் பேட்டிங்கை  பார்ப்பேன். அதை பற்றி எனது  தந்தையிடம்  விவாதிப்பேன். டிராவிட் ஒரு பயிற்சியாளராக எனது விளையாட்டை நன்கு புரிந்துகொள்கிறார். நீங்கள் டிராவிட்டிடம் எதையாவது விவாதிக்க விரும்பினால் அவர் எப்பொழுதும் தயாராக இருக்கிறார் என்று சுப்மான் கில் குறிப்பிட்டுள்ளார்.  

 

shubman gill

 

எனது குழந்தை பருவ நாட்களில் இருந்து வான்வழி ஷாட்களை பயிற்சி செய்திருக்கிறேன். இந்த மாதிரியான ஷாட்கள் விளையாடுவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். 2017-ஆம் ஆண்டில், மும்பையில் நடைபெற்ற 18 வயதினருக்குட்பட்ட போட்டியில்  இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் விளையாடியபோது, முதல் இரண்டு போட்டிகளில் நான் வான்வழி ஷாட்கள் விளையாடுவதை டிராவிட் பார்த்தார். அந்த போட்டிகளில்  35 மற்றும் 37 ரன்கள் மட்டுமே எடுத்தேன். ஆனால் ராகுல், வான்வழி ஷாட்கள் விளையாடும் போது மிகவும் சாதுரியமாகவும், தேவைக்கு ஏற்பவும் விளையாட வேண்டும் என்று சொன்னார். இது எனக்கு உதவியாக இருந்தது என்று ஒருமுறை கில் கூறினார். அடுத்த இரண்டு போட்டிகளில் கில் 138 மற்றும் 160 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நான் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது பொறுமையும், அமைதியும். விளையாடும்போது நாங்கள் செய்யும் தவறுகளை பார்த்தால் உடனடியாக அதுகுறித்து சில அறிவுரைகள் வழங்குவார். ஒருபோதும் டிராவிட் அவரின் சாதனைகளை பற்றி எங்களிடம் சொன்னது கிடையாது என்று கில் டிராவிட்டை பற்றி தெரிவித்துள்ளார். டிராவிட் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 24,208 ரன்கள் எடுத்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை சந்தித்துள்ளார். 

 

shubman gill

 

டிராவிட் இளம் வீரர்களுக்கு தனது அனுபவத்தின் மூலம் பயிற்சியளித்து இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி வருகிறார். நியூசிலாந்தில் நடந்த ஐ.சி.சி. அண்டர் 19 உலகக்கோப்பையை இந்தியா நான்காவது முறை வென்றபோது பயிற்சியாளராக டிராவிட் இருந்தார். இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் தொடர் நாயகன் விருதை பெற்றார். பின்னர் கில் ஐ.பி.எல்., இந்தியா ஏ அணி, ரஞ்சி போட்டிகளில் பஞ்சாப் அணி மற்றும் 2019-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் போட்டி என அடுத்தடுத்து முத்திரை பதித்து வருகிறார்.

 

 

 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

இங்கிலாந்தை வீழ்த்தி புதிய சாதனை படைத்த இந்தியா!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 Ind vs eng score update india registers record victory

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கு இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

தொடர்ந்து 192 ரன்கள் என்ற எளிதான இலக்கை இந்திய அணி துரத்தியது. இதில் கேப்டன் ரோஹித் சிறப்பான துவக்கம் தந்தார். 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் அரைசதம் கடந்தார். ரோஹித் 55 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பட்டிதார் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார்.

அடுத்து வந்த ஜடேஜா 4 ரன்களில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்பிராஸ்கான் கோல்டன் டக் ஆனார். பின்னர் வந்த ஜுரேல் முதல் இன்னிங்ஸைப் போல பொறுமையாக ஆடினார். கில், ஜுரேல் இணை இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.  61 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கில் 52 ரன்களும், ஜுரேல் 39 ரன்களும் எடுத்தனர்.

ஆட்ட நாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடிய ஜுரேல் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு 33 ஆவது முறையாக 200க்கும் குறைவான இலக்கு கிடைத்து, அதில் 30 ஆவது முறையாக சேஸ் செய்து சாதனை படைத்துள்ளது. 3 முறை டிரா செய்துள்ளது. ஒரு முறை கூட தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் 3-1 என வென்றுள்ளது. இந்த தொடரைக் கைப்பற்றியதன் மூலம் 2013இல் இருந்து தற்போது வரை சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 17 சீரிஸ்களை வென்று  சாதனை படைத்து, இந்த சாதனையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.