Skip to main content

இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்! - ஸ்ரேயாஸி சிங் அசத்தல் 

Published on 11/04/2018 | Edited on 11/04/2018

காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.

 

shreya

 

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டு நகரில் நடைபெற்று வரும் 21ஆவது காமன்வெல்த் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஏற்கெனவே, பளுதூக்கும் போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடியிருந்த நிலையில், தற்போது துப்பாக்கி சுடும் போட்டியிலும் அது பிரதிபலித்துள்ளது.

 

ஏழாவது நாளான இன்று டபுள் ட்ராப் துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மொத்தம் நடந்த நான்கு சுற்றுகளில் 96+2 என்ற கணக்கில் அவர் முதலிடம் பிடித்தார். ஆதிரேலியாவின் எம்மா காக்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் லிண்டா பியர்சன் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். சிறப்பாக ஆடிய இந்தியாவின் வர்ஷா வர்மன் நான்காவது இடத்தையே பிடித்தார். 

 

இந்த ஆண்டு காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டிகளில் இந்தியவைச் சேர்ந்த வீரர்கள் 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளனர். 12 தங்கம், 2 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என இந்தியா ஒட்டுமொத்தமாக 23 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

Next Story

“என் மெடலை பார்க்க நீ இல்லையே அப்பா” - தந்தையின் கல்லறையில் கதறி அழுத தங்கமங்கை

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

Tribute Commonwealth gold medalist Lokapriya late father grave

 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நியூசிலாந்து நாட்டில் ஆக்லாண்ட் நகரில் நடைபெற்றது. இதில் பளுதூக்கும் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா உட்பட 13 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவால் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாததால் மற்ற 12 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கச் சென்றனர். தமிழக அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் டிசம்பர் 4 வரை நடந்து முடிந்தது. இதில் 12 பேரில் 11 வீரர், வீராங்கனைகள் மெடல் அடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். 

 

இவர்களுள் தஞ்சை மாவட்டத்திலிருந்து சென்ற இருவரில் மாஸ்டர் பிரிவில் 490 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார் பயிற்சியாளரான பட்டுக்கோட்டை ஜிம் ரவி. இவரிடம் பயிற்சி பெற்ற எம்.பி.ஏ முதுகலை பட்டதாரியான லோகப்பிரியா (வயது 22) 52 கிலோ எடைப் பிரிவில் 350 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

 

Tribute Commonwealth gold medalist Lokapriya late father grave

 

இந்த மகிழ்ச்சி 5 நிமிடம் கூட நீடிக்கவில்லை. லோகப்பிரியா வெற்றிக்கனி பறிக்கும் வரை காத்திருந்து அனைவரது பாராட்டையும் பெற்று தேசியக் கொடியோடு மெடல் வாங்கிக் கொண்டு கீழே இறங்கும் போது அவரிடம் சொன்ன தகவல் அப்படியே நொறுங்கிப் போக வைத்தது. உன் தந்தை காமன்வெல்த் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக உன் சித்தப்பா தகவல் சொல்கிறார் என்றதும் வெற்றியின் மகிழ்ச்சியைக் கொண்டாட நினைத்த வீராங்கனை தந்தையை இழந்த துக்கத்தில் நிலைகுலைந்து போனார். இந்த சாதனையை பார்க்க தானே இத்தனை காலம் உழைத்தார். என் மெடலை அவரிடம் காட்ட வேண்டும் என்று நினைக்கும் போது அவர் இல்லையே எனக் கதறி அழுதுள்ளார்.  அருகில் இருந்த சக பயிற்சியாளர்களும் வீரர், வீராங்கனைகளும் ஆறுதல் கூறி தேற்றியுள்ளனர்.

 

5 ஆம் தேதி காலை சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்று கூறிய போது, எப்போது வரும் 5 ஆம் தேதி எனக் காத்திருந்தவர், தான் வளர்ந்த பட்டுக்கோட்டை வந்த போது ஊரே திரண்டு நின்று பயிற்சியாளர் ரவி மற்றும் லோகப்பிரியா ஆகியோருக்கு மாலைகள் அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

 

Tribute Commonwealth gold medalist Lokapriya late father grave

 

அதன் பிறகு தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள கல்லுக்காரன்பட்டிக்கு சென்ற போதும் அங்கும் வரவேற்றனர். நேராக தன் தந்தை செல்வமுத்து புதைக்கப்பட்டுள்ள கல்லறைக்குச் சென்று, கதறி அழுது மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பிறகு, வீட்டிற்குச் சென்ற லோகப்பிரியாவை மொத்த உறவுகளும்  கட்டிப்பிடித்து கதறி அழுதனர். மீண்டும் ஒரு முறை தன் தந்தைக்கு அஞ்சலியாக தன் தந்தையின் நினைவோடு நாட்டுக்காக தொடர்ந்து சாதிப்பேன் என்றார். காமன்வெல்த் வெற்றியைக் கொண்டாட வேண்டிய நேரத்தில் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்தது.

 

 

Next Story

காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனை படைத்த தமிழக வீரர்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Tamil Nadu athlete r dhinesh sets new record Commonwealth Powerlifting Championship

 

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரம் அருகே வசிக்கும் ஆர். தினேஷ் சப்-ஜூனியர் 66 கிலோ உடல் எடைப் பிரிவில் புதிய சாதனை படைத்துள்ளார். இவர் டெட் லிஃப்ட் 218 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றதுடன் முந்தைய சாதனையான 217.5 கிலோ என்ற சாதனையை முறியடித்து காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். 

 

மேலும், ஸ்குவாட்டில் 200 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கி தங்கமும், மொத்தம் 538 கிலோ எடையைத் தூக்கியதற்காக தங்கம் என நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். இப்போட்டியின் இரண்டாவது அதிகபட்ச எடை தூக்கியவர் என்பதைப் பாராட்டி இவருக்கு “ஸ்டிராங்மேன்-2″ என்ற விருது வழங்கப்பட்டது.