Skip to main content

பரபரப்பான உலகக் கோப்பை 2023; யாருக்கு அரையிறுதிக்கு அதிக வாய்ப்பு?

Published on 02/11/2023 | Edited on 03/11/2023

 

semi final chance World Cup 2023 cricket score update

 

உலகக் கோப்பை 2023 லீக் போட்டிகள் 80 சதவீதம் முடிந்து விட்ட நிலையில், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரை இறுதிக்கு பத்து அணிகள் போட்டி போட்ட நிலையில் முதல் அணியாக வங்கதேச அணி போட்டியை விட்டு வெளியேறியது. மீதமுள்ள ஒன்பது அணிகளில் முதல் நான்கு இடங்களுக்கு போட்டி போட்டு வந்த நிலையில், இந்திய அணி முதல் அணியாக அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. இலங்கை  வீழ்த்தியதன் மூலம் தொடர்ச்சியாக 7 வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அரையிறுதிக்குள் முதல் அணியாக நுழைந்துள்ளது.

 

இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் அடுத்த மூன்று இடங்களுக்கு எட்டு அணிகள் போட்டி போடுகின்றன.  இதில் யார் யாருக்கு அரையிறுதிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. ஒவ்வொரு அணியும் இன்னும் எத்தனை போட்டிகள் வென்றால் அரையிறுதிக்குள் நுழையலாம். எவ்வளவு புள்ளிகள் எடுக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

 

தென்னாப்பிரிக்கா

 

இந்திய அணிக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்கா அணியே அதிக வெற்றி பெற்றுள்ளது. ரன் விகித அடிப்படையில் மற்ற எல்லா அணிகளையும் விட மிகச்சிறப்பான ரன் விகிதத்தில், ஏன் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியை விட அதிகமான ரன் விகிதத்தில், தென் ஆப்பிரிக்க அணி இருப்பதால், தென்னாப்பிரிக்கா அணியும் அரையிறுதிக்கு தகுதி பெறுவது 95% உறுதியாகிவிட்டது. இருப்பினும் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே 100 சதவீதம் தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற்றுவிட்டது என்று கூற முடியும். மீதமுள்ள எல்லா போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா தோற்றாலும் 12 புள்ளிகளுடன் சிறப்பான ரன் விகிதம் கொண்டிருக்கும் பட்சத்தில் தானாகவே அரையிறுதிக்கு தகுதி பெறும்.

 

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு தகுதிபெற மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் அல்லது இரண்டு போட்டிகளில் அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெற வேண்டும். மற்ற அணிகளும் 12 புள்ளிகள் பெறும் பட்சத்தில் ரன் விகித அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஒருவேளை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றால், மற்ற அணிகளும் 10 புள்ளியில் நிறைவு பெற்றால், மற்ற அணிகளை விட அதிகப்படியான ரன் விகிதம் பெற்றால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு தகுதி பெற முடியும்.

 

நியூசிலாந்து

மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெற்று மற்ற அணிகளும் 12 புள்ளிகளுடன் இருக்கும்போது, அரை இறுதி பந்தயத்தில் இருக்கும் மற்ற இரண்டு அணிகளை விடவும் ரன் விகிதம் அதிகம் இருந்தால், நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.ஒருவேளை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றால், மற்ற அணிகளும் 10 புள்ளியில் நிறைவு பெற்றால், அரை இறுதிக்கு தகுதிபெற ரன் விகிதமே ஆபத்பாந்தவனாக உதவும்.

 

பாகிஸ்தான்

மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெற வேண்டும். மற்ற அணிகளும் புள்ளிகளுடன் இருந்தால், மற்ற அணிகளை விட அதிகப்படியான ரன் விகிதம் பெற்றால் மட்டுமே  பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். மேலும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அவர்களுடைய அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற வேண்டும், ஆப்கானிஸ்தான அணி இரண்டு போட்டிகள் ஆவது தோல்வியுற வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் 8 புள்ளிகள் உடன் அதிகப்படியான ரன் விகிதம் இருந்தால், அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெறலாம்.

 

ஆப்கானிஸ்தான்

 

ஆப்கானிஸ்தான அணி மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை மற்ற அணிகள் 12 புள்ளிகளுடன் முடித்தால், ரன் விகிதத்திலும் அனைத்து அணிகளையும் விடவும் கூடுதலாக இருக்க வேண்டும். அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெறுவதே ஆப்கானிஸ்தான அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை கூட்டும். முக்கியமாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை விடவும் அதிகப்படியான ரன் விகிதம் பெற்றால், 12 புள்ளிகளுடன் அரை இறுதித் தகுதி பெற ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.

 

இலங்கை

இலங்கை அணி அரை இறுதிக்கு தகுதி பெற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டு போட்டிகளிலும் தோல்வி பெற வேண்டும். இந்தக் கணக்குகள் எல்லாம் சரியாக நடந்தால், அரை இறுதிக்கு தகுதி பெறும் மற்ற அணிகளில் ஏதாவது ஒரு அணி 8 புள்ளிகளை பெற்றால்  ரன் விகித அடிப்படையில் ஒரு இடத்தை பெறலாம். இந்தியாவுடனான போட்டியில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால், இலங்கை அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் மிக மிக குறைவு.

 

நெதர்லாந்து

 

நெதர்லாந்து அணி மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் அதிகப்படியான ரன் விகிதம் வெற்றி பெற்று 10 புள்ளிகளை பெற்றால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளில் ஏதாவது ஒரு அணி 10 புள்ளிகளைப் பெறும்போது அதிகப்படியான ரன் விகிதத்தின் அடிப்படையில் அரை இறுதியில் ஒரு வாய்ப்பைப் பெறலாம். இரண்டு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அவர்களுடைய இரண்டு போட்டிகளிலும் மோசமான ரன் விகிதத்தில் தோற்கும் பட்சத்தில், நெதர்லாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற ஒரு வாய்ப்பு அமையும்.

 

இங்கிலாந்து

நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெற மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெற்று, மீதமுள்ள அணிகளில் ஏதாவது ஒரு அணி அரை இறுதி வாய்ப்பை 8 புள்ளிகள் பெற்று தகுதி பெறும் பட்சத்தில் அதிகப்படியான ரன் விகிதம் இருந்தால் இங்கிலாந்து அணி தகுதி பெற முடியும். மேலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அவர்கள் பங்கு பெறும் அனைத்து போட்டிகளிலும் தோற்று இங்கிலாந்து அணி தன்னுடைய அனைத்து போட்டிகளிலும் அதிகப்படியான ரன் விகிதத்தில் வெற்றி பெற்றால் ஒரு வாய்ப்பு உண்டு.

 

மேலும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நெதர்லாந்து ஆகிய அணிகள் ஏதாவது இரு போட்டியில் தோற்று ஒரு அணி 8 புள்ளியுடன் இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அதிக ரன் விகிதம் பெற்று இருந்தால், அரை இறுதிக்கு தகுதி பெற முடியும். தற்போது உள்ள சூழ்நிலையில் இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.

 

மீதமுள்ள மூன்று அணிகளில் தென்னாபிரிக்க அணியே இரண்டாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இரு போட்டிகளிலும் தோற்றாலும் அதிகப்படியான ரன் விகிதம் பெற்றிருப்பதால் நான்காவது அணியாகவாவது தென்னாப்பிரிக்கா அணி இறுதிக்குள் நுழைந்து விடும். மீதமுள்ள இரு இடங்களுக்கு ஏழு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் கிட்டத்தட்ட வெளியேறிய நிலையில், இரண்டு இடங்களுக்கு 5 அணிகள் கடும் போட்டி போடும் என்று தற்போதைய ரன் விகித அடிப்படையில் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- வெ.அருண்குமார்

 

 

 

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.