Skip to main content

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சானியா மிர்சாவின் உதவி...

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவும் வகையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 1.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார். 

 

sania mirza raises 1.25 crore rupess to help needy in lockdown time

 

 

உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 35,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நிதியுதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஊரடங்கு காரணமாகப் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவும் வகையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 1.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவும் வகையில் கடந்த வாரம் நாங்கள் ஒரு குழுவாக இணைந்தோம். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இதுவரை உணவு வழங்கியுள்ளோம். மேலும், கடந்த ஒரு வாரத்தில் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ரூ. 1.25 கோடி நிதி திரட்டியுள்ளோம். அந்தத் தொகை 1 லட்சம் பேருக்கு உதவியாக இருக்கும். இந்தச் சேவை தொடரும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

டேட்டிங் செய்த நடிகையுடன் திருமணம் - சானியா மிர்சாவை பிரிந்த கிரிக்கெட் வீரர்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Sania Mirza divorce Shoaib Malik and Shoaib Malik marriage Pakistan actress

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக், 2006ஆம் ஆண்டு ஆயிஷா சித்திக் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்பு 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்து, அதே ஆண்டு டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2018ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

இதையடுத்து இருவரும் பிரிந்து விட்டதாக சமீப காலமாக தகவல் வெளியானது. ஆனால் இருவரின் தரப்பிலும் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் இருந்தனர். இதனிடையே சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்துடன் டேட்டிங் செய்துள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனிடையே சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா, கணவரை தன்னிச்சையாக விவாரத்து செய்யும் குலா என்ற இஸ்லாமிய முறைப்படி சோயிப் மாலிக்கை சானியா மிர்சா விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.