Skip to main content

டையபர்ஸுடன் விளையாடிய சச்சினின் போராட்டமும்... டிராவிட்டின் அர்ப்பணிப்பும்...

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

கிரிக்கெட்டில் பல சாதனைகளை “முதன்முறை” படைத்த சச்சின், உலகக்கோப்பை தொடர்களிலும் சாதனை மன்னன் தான். அதிக ரன்கள், அதிக பவுண்டரிகள், அதிக சதங்கள், அதிக அரைசதங்கள் என உலகக்கோப்பையிலும் அவரின் ராஜ்ஜியம் தான்.  
 

sachin

 

 

பல கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட இந்தியா போன்றதொரு மிகப்பெரிய தேசத்தின் சார்பாக விளையாடிய 6 உலகக்கோப்பை தொடர்களிலும் லீடிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது இமாலய சாதனை தான். 
 

2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை வென்றது. ஆனால் அந்த போட்டியில் நெதர்லாந்தின் பந்து வீச்சில் இந்தியாவின் டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். 204 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது. சச்சின் மட்டுமே 52 ரன்கள் எடுத்தார். ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே ஆகியோரின் சிறப்பான பவுலிங் மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 
 

அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 41.1 ஓவர்களில் 125 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. அதிகபட்சமாக சச்சின் 36 ரன்கள் எடுத்தார்.  22.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வென்றது ஆஸ்திரேலியா. மோசமான ஆட்டத்தை எதிர்பார்க்காத ரசிகர்கள் இந்திய அணித் தலைவர் சவுரவ் கங்குலி உள்ளிட்ட சிலரது வீடுகளை கல் வீசித் தாக்கினார்கள். 
 

அந்த தாக்குதல்களுக்கு பிறகு நடைபெற்ற லீக் போட்டிகளில் அபாரமாக ஆடி இந்திய அணி வென்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக விளையாடிய சச்சின் 75 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். 
 

சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜோகன்ஸ்பர்க்கில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது வயிற்று வலி பிரச்சனையுடன் விளையாடினார் சச்சின்.  ஐசோடானிக் ட்ரிங்க்ஸ் அதிக அளவில் எடுத்துக்கொண்ட போதும் உடல்நிலை சரியாகவில்லை. பின்னர் உப்பு கலந்து குடித்தும் வயிறு பிரச்சனை குறையவில்லை. வேறு வழியின்றி உள்ளாடையில் டிஸ்யூ பேப்பரை வைத்துக்கொண்டு பேட்டிங் செய்ய சென்றேன் என தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்திருந்தார் சச்சின்.
 

பேட்டிங் செய்யும் போது மிகவும் சிரமமாக இருந்தது. ஆட்டத்தின் நடுவில் கிடைத்த ட்ரிங்க்ஸ் பிரேக்கில் ஓய்வறைக்கு செல்லும் கட்டாயம் ஏற்பட்டது. ஒரு மோசமான அனுபவத்தோடு விளையாடிய அந்த போட்டியில் 97 ரன்கள் எடுத்தது மறக்கமுடியாத சம்பவமாக அமைந்ததாக குறிப்பிட்டிருந்தார் சச்சின். அந்த போட்டியில் இந்திய அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.  
 

dravid

 

 

சச்சின் இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த லீக் போட்டியில் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். அதிலிருந்து ஓரளவு குணமாகி வந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது வயிற்று கோளாறு ஏற்பட்டது. சச்சினின் சாதனைகள் பல போராட்டங்களுக்கும், இன்னல்களுக்கும், பயிற்சிகளுக்கும், விடாமுயற்சிகளுக்கும் பிறகு படைக்கப்பட்டவை என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.    
 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான லீக் போட்டியையும், இறுதி போட்டியையும் தவிர வேறு எந்தப் போட்டியிலும் இந்தியா தோற்கவில்லை. 2003 இறுதிப் போட்டியில் இந்தியா தோற்றாலும், 1983 உலகக்கோப்பைக்கு பிறகு 2003 உலகக்கோப்பை இந்தியாவின் சிறந்த தொடராக அமைந்தது. அதற்கு காரணம் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது தான்.
 

2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணி சாதிக்க சச்சின், கங்குலி பேட்டிங்கில் முக்கிய காரணமாக இருந்தனர். மேலும், மற்றொரு காரணம் தியாக உள்ளம் கொண்ட டிராவிட் தான். உலகக்கோப்பை தொடரில் விக்கெட் கீப்பிங் செய்யவும் ஒப்புக்கொண்டிருந்தார். இதன் மூலம் இந்தியா மிடில் ஆர்டரில் மேலும் ஒரு வீரரை சேர்க்க முடிந்தது. அந்த வகையில் விளையாடிய தினேஷ் மோங்கியா சில போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
 

கீப்பிங் செய்து அதிக அனுபவம் இல்லாத டிராவிட் உலகக்கோப்பையில்  கீப்பிங் செய்ய முன்வந்தது அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. அணியின் தேவையே என் சேவை என்ற டிராவிட்டின் கொள்கை 2003 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பலம் சேர்த்தது.

 

 

Next Story

இஷான் கிஷன் மீது ஒழுங்கு நடவடிக்கையா? விளக்கமளித்த டிராவிட்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Disciplinary action against Ishan Kishan? Explained by Dravid

இந்திய அணியின் வளர்ந்து வரும் இளம் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் இஷான் கிஷன். உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர், பிறகு கில் வந்ததாலும், அணியின் விக்கெட் கீப்பராக ராகுல் செயல்பட்டதாலும் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், டெஸ்ட் போட்டிகளுக்கு முன் மனச்சோர்வு காரணமாக சிறிது காலம் ஓய்வு தேவைப்படுவதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்ததை அடுத்து, அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் ராகுல் கீப்பராக செயல்படுவதால் தனக்கு இடம் கிடைக்காது என்பதாலும், தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படாமல் ஓரம் கட்டப்பட்டு வருவதாலும் ஓய்வு எடுத்தார் என்று பரவலாக பேச்சுகள் எழுந்தது.

தற்போது, சஞ்சு சாம்சன் கீப்பராக அணிக்கு திரும்பி இருப்பதாலும், ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி கீப்பராக செயல்படுவதாலும், அடுத்து ரிஷாப் பண்ட் உடல் தகுதி பெற்று விட்டால் அவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதாலும், இனி அணிக்கு அணியில் தனக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பதால், அவர் கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெறப்போவதாக வதந்திகள் கிளம்பியது.

இந்நிலையில், நாளை இந்திய ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி மொகாலியில் தொடங்குகிறது. இதை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முதல் டி20 போட்டியில் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் எனவும், அடுத்த இரண்டு டி20 போட்டிகளில் விராட் கோலி களமிறங்குவார் எனவும் தெரிவித்தார். மேலும் ரிங்கு சிங் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய டிராவிட், ஸ்ரேயாஸ் அணியில் தேர்வு செய்யப்படாததற்கான காரணத்தையும் விளக்கினார். அணியில் பல பேட்ஸ்மேன்கள் இருப்பதால் ஸ்ரேயாஸை தேர்வு செய்ய முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.

அப்போது இஷான் கிஷன் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த பயிற்சியாளர் டிராவிட், இஷான் கிஷனே இந்த அணி தேர்வுக்கு தன்னை கருத்தில் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும், அவரேதான் தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்பு ஓய்வு கேட்டதால், அவரின் உணர்வுகளை மதித்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாகவும் விளக்கினார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னுடைய நிலைத்தன்மையை நிரூபித்தால், அவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அணியில் சேர்க்க கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கூறினார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். 

- வெ. அருண்குமார்  

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர்.